“உலகின் பழமையான மொழி தமிழ்..!” - பிரதமர் மோடி புகழாரம்
வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புதிதாக ஏவுகணையை ஏவிப்பரிசோதனை
எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன- இளவரசர் ஹரி உருக்கம்
ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முதல்தடவை துப்பாக்கிபிரயோகம் - ஒருவர் படுகாயம்- வீடியோ இணைப்பு
மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்தினம் உட்பட 49 பேரிற்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை-
ஹொங்கொங்கில் பொலிஸார் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் (காணொளி இணைப்பு)
“உலகின் பழமையான மொழி தமிழ்..!” - பிரதமர் மோடி புகழாரம்
30/09/2019 “உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழியைக் கொண்ட மாநிலம் தமிழகம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம்” என்று, ,இந்தியாவில் சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசினார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மாணவர்கள் வேட்டி - சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை மற்றும் சுடிதார் அணிந்தும் வந்து பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பேசிய மோடி, “இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம் அளிக்கிறது. சாதித்த மாணவர்களின் பெற்றோர்களை பாராட்டுகிறேன். அவர்களின் தியாகம் உங்களை வளர்த்துள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்களின் வெற்றியில் பெற்றோர்களின் உழைப்பு உள்ளது. உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உங்கள் வெற்றியில் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களை நாம் உற்சாகப்படுத்துவோம். ஒருவரின் வெற்றியில் பலரின் பங்களிப்பு உள்ளது. எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்களின் கண்களில் பார்க்கிறேன்.
உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம். நீங்கள் ஒரு சிறந்த கல்வி சாலையில் இருந்து வெளியேறி இருக்கிறீர்கள். உலகமே உற்றுநோக்கும் கல்விச்சாலை இது. இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள் மீது உலகமே எதிர்பார்ப்பில் உள்ளது. உங்களுடைய ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர்.
இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கையைக் கண்டு உலகமே வியக்கிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியர்கள் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள்தான். உலகம் முழுவதும் இந்திய சமுதாயம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.ஐ.டி. மாணவர்கள் நாட்டின் தூண்களாக திகழ்கிறார்கள். பொதுவான சவால்களை சந்திப்பதற்கு இந்தியாவும், சிங்கப்பூரும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்திய இளைய சமுதாயத்தின் தன்னம்பிக்கையைக் கண்டு உலக தலைவர்கள் வியக்கிறார்கள். இந்தியா, தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் தனித்துவமான கண்டுபிடிப்புக்கள் உலக சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும். 21ம் நூற்றாண்டின் தேவையை புரிந்து மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகள்.
இதுவரை, 200 ஸ்டாட்அப் தொழில்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பசி, தூக்கம் பாராமல் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். ரோபோடிக் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் சென்னை ஐ.ஐ.டி. முதன்மை இடம்பிடிக்கிறது. கடின உழைப்பால், முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் இந்திய மாணவர்களுக்கு உள்ளது. உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்புக்கள் இந்தியாவினுடையது” என்று மோடி பேசினார். நன்றி வீரகேசரி
வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புதிதாக ஏவுகணையை ஏவிப்பரிசோதனை
03/10/2019 வடகொரியாவானது நேற்று அதிகாலை ஏவுகணையொன்றை ஏவிப் பரிசோதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் புதிதாக அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்து ஒரு சில மணி நேரத்தில் இந்த ஏவுகணைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பான தகவல்கள் ஜப்பானிய மற்றும் தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிராந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஏவுகணைப் பரிசோதனை குறித்து அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது.
வொன்ஸன் துறைமுகத்துக்கு அருகில் நீர்மூழ்கிக் கப்பலொன்றிலிருந்து ஏவப்பட்ட இந்த புக்குக்சோங் வகையைச் சேர்ந்த ஏவுகணை சுமார் 450 கிலோமீற்றர் தூரத்துக்கு 910 கிலோமீற்றர் உயரம்வரை பயணித்து ஜப்பானிய கடலில் விழுந்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கையோங் டூ தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் செயற்படு மட்ட பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 5 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக வடகொரியா அறிவித்து ஒரு நாளில் இந்த ஏவுகணைப் பரிசோதனை இடம்பெற்றுள்ளமை குறித்து தென்கொரிய தேசிய பாதுகாப்புச் சபை கவலையடைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையான நீல மாளிகையால் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது.
அந்த ஏவுகணை ஏவப்பட்டு இரண்டாகப் பிளவடைந்து கடலில் விழுந்ததாகத் தோன்றுவதாக ஜப்பானிய அமைச்சரவை தலைமைச் செயலாளர் யொஷ் ஹைட் தெரிவித்தார்.
வடகொரியாவானது கடந்த ஜூலை மாதத்திலிருந்து குறைந்தது 7 ஏவுகணைகளை ஜப்பானிய கடலுக்குள் ஏவிப் பரிசோதித்துள்ளது. நன்றி வீரகேசரி
எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன- இளவரசர் ஹரி உருக்கம்
02/10/2019 எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன என பிரிட்டிஸ் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலேயின் தனிப்பட்ட கடிதமொன்றை மெயில் ஞாயிறுபதிப்பில் வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஹரி இதனை தெரிவித்துள்ளார்.
ஹரி மெயிலிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளார்.

மெயிலின் ; இந்த நடவடிக்கையை ஹரி தனது மனைவிக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
தனது தாய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதேநடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளைவுகள் குறித்து சிந்திக்காமல் தனிப்பட்டவர்களை குறிவைக்கும் பிரிட்டனின் டபிளொய்ட் பத்திரிகைகளினால் பாதிக்கப்பட்டவராக தனது மனைவியும் மாறியுள்ளார் என ஹரி தெரிவித்துள்ளார்.

நான் நேசிக்கின்றவர்கள் வர்த்தக நோக்கங்களிற்காக பயன்படுத்தபடுகின்ற போது அவர்கள் உண்மையான நபர்களாக கருதப்படாத போது என்ன நடக்கும் என்பதை நான் அனுபவித்திருக்கின்றேன் என ஹரி தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாக நாங்கள் கருதுகின்றோம்,நாங்கள் ஊடக சுதந்திரத்திலும் பக்கசார்பில்லாத உண்மையான செய்தியறிக்கையிடலிலும் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முதல்தடவை துப்பாக்கிபிரயோகம் - ஒருவர் படுகாயம்- வீடியோ இணைப்பு
01/10/2019 ஹொங்கொங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதில் முதல் தடவையாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தாய் ஹா வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நபர் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் காணப்படுவதையும் அவரிற்கு மருத்துவகிசிச்சை வழங்கப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகம் செய்வதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்குதலிற்கு உள்ளானதால் காவல்துறையை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்,அவ்வேளை ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோவை ஹொங்கொங் பல்கலைகழக மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.
கறுப்பு உடையணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இரும்புதடிகளால் காவல்துறையினரை தாக்குவதை வீடியோ காண்பித்துள்ளது.
நபர் ஒருவர் காவல்துறையை சேர்ந்த ஒருவரை தாக்குவதையும் அவ்வேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.
சீனா மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு எழுபது வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகள் சீனாவில் இடம்பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றும் ஹொங்கொங்கில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அதேவேளை கண்ணீர்புகை பிரயோகத்தையும் துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை ஆர்டிஎச்கே ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை சேகரித்துக்கொண்டிருந்தவேளை இனந்தெரியாத பொருளினால் தாக்கப்பட்டுள்ளார்.
வன்முறைகளுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தவேளை அவரது கண்ணில் இனந்தெரியாத பொருளொன்று தாக்கியுள்ளது.
நன்றி வீரகேசரி
மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்தினம் உட்பட 49 பேரிற்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை-
05/10/2019 சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டு இந்திய பிரதமருக்குகடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்தினம் நடிகை ரேவதி உட்பட 49 பேருக்கு எதிராக பீகார் காவல்துறையினர் தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் இடம்பெறும் கும்பல்வன்முறைகளை கண்டித்தும் இதில் தலையிடக்கோரியும் இந்தியாவின் 49 பிரபலங்கள் யூலை 23 ம் திகதி இந்திய பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர்.
வரலாற்று ஆய்வாளர் ராமசந்திரா குகா சமூகவியலாளர் அசீஸ் நந்தி நடிகர்கள் இயக்குநர்கள் உட்பட 49 பேர் இ;ந்தக்கடிதத்தை அனுப்பிவைத்திருந்தனர்.
முஸ்லீம்கள் தலித்துக்கள் அடித்துக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் ,என தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அவர்கள் ஜெயஸ்ரீராம் என்பதைனை ஆயுதமாக்கி சிறுபான்மையினத்தவர்களிற்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுகின்றன இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த கடிதத்தி;ற்கு எதிராக பீகாரை சேர்ந்த சட்டத்தரணியொருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவின் 49 பிரபலங்கள் மோடிக்கு எழுதிய கடிதம் இந்தியாவின் தோற்றத்திற்கு அவமானப்படுத்துவது போல உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து 49 பிரபலங்களிற்கும் எதிராக பீகார் காவல்துறையினர் தேசத்துரோகம், மத உணர்வை புண்படுத்துதல் உட்பட பல குற்றச்சாட்டுகளை தொடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
ஹொங்கொங்கில் பொலிஸார் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் (காணொளி இணைப்பு)
05/10/2019 ஹொங்கொங்கில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹொங்கொங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளுடன் நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் தங்கள் அடையாளங்களை பொலிஸார் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக முகங்களில் முகமூடி அணிந்துகொண்டு போராடி வருகின்றனர்.
இதற்கிடையில், ஹொங்கொங்கில் முகமூடி அணிந்து போராடுவதை தடைவிதிக்கும் வகையில் அவசர சட்டதை நகர தலைமை நிர்வாகி நேற்று அமுல்படுத்தினார்.
இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் சீனாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக செயற்பட்டுவந்த கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தையையும் அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர்.
பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர். இதையடுத்து ஹொங்கொங்கில் ரயில் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் கார் ஒன்றை நிறுத்தி அதில் பயணித்த சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை திடீரென தாக்கினர். மேலும், அவரை தீயிட்டு கொளுத்தவும் முற்பட்டனர்.
இதில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பொலிஸ் அதிகாரி போராட்டக்காரர்களை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 14-வயது நிரம்பிய சிறுவன் படுகாயமடைந்ததாகவும் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment