முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாட்டிலே நடைபெற்ற கவி அரங்கம்



முதலாவது உலகச் சிலப்பதிகார மகாநாடு அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில்  வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்திலே நடைபெற்றது. அதன் கடைசி நாளன்று ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற்ற கவியரங்கத்தை பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். கவிஞர் திரு நந்திவர்மன் கவிஞர் திரு பாஸ்கரன் கவிஞர் சௌந்தரி கனேசன்  கவிஞர்  ஜெயராம சர்மா ஆகியோர் பங்கேற்றனர். சென்ற திங்கள் இதழிலே கவிஞர் ஜெயராம சர்மா அவர்களின் கவிதை பிரசுரமாகியது. இன்றைய இதழிலே பல்வைத்திய கலாநிதி  இளமுருகனார் பாரதி அவர்களின் கவிதை பிரசுரமாகிறது.


கலைமகள்வாழ்த்து  

நாவினிக்கத் தேமதுரச் செம்மொழித் தமிழை
    நாவமர்ந்து அளித்தருளும் வெண்க மலத்துப்
பூவினிக்க உறைசெல்வி பூங்க ழல்கள்
    போற்றிநின்று ஏத்திடுவேன் புதுமைப் பொருளில்
தேனினிக்கும் கவிதைகளைக்  கவிய ரங்கம்
   செவியினிக்க வழங்கவரும் இந்த நல்ல
நாளினிக்கத் தமிழ்முருகன் திருப்பொற் பாதம்
   நானிருகை கூப்பிநின்று வணங்கு வேனே! 




அவையோர் வாழ்த்து

கவிப்புலமை சுவைசொட்டக் கனிவாய்ப் படைத்துக்
  காதலொடு கவிஞர்தருஞ் செஞ்சொல் அமுதைச்
செவிப்புலத்தால் ஏற்றுங்கள் சிந்தை தேக்கித்
  திறமைக்குக் கைதட்டி ஊக்கம் ஊட்டத்
தவிப்புடனே இன்றிங்கு வருகை தந்த
  தமிழன்பர் அனைவருக்கும் என்க ரங்கள்
குவித்துநின்று அன்பொடுநல் வணக்கஞ் செய்யக்
  குதூகலமாய் வரவேற்பேன் அமைதி காப்பீர்!.
 

அவையடக்கம்

ஊனக் குழந்தையைத் தாய் ஒதுக்கி விடுவ துண்டோ?
வுனின்று மழைபொழிந்தால் மண் அதனை ஏற்காதோ?
ஏன்;? என்றன் கருத்துகளில் இசைவின்மை இருக்காதோ?
இன்முகத்தீர சிந்தித்துச் சரியென்றால் ஏற்றிடுவீர்!.

புலம்பெயர் வாழ்விற் சிலம்பு

புலம்பெயர்  வாழ்விற் சிலம்பு என்னும்
புதியதோர் பொருளிலே கவிபடைப் பீரெனக்
கலந்தெனை நந்தி ஐயாவும் கேட்டனர்
காப்பியப் பாத்திரம் சிலம்புக் காதையிற்
காட்டிய நெறிகள் புலம்பெயர் வாழ்வில்
காப்பாற் றப்பட வேண்டிய தொன்றோ?
காணவும் முடியுமோ? கனவாய் விட்;டதோ?
கவிதையி;ற் பதில்களைப் பகிர்ந்திடும் நோக்கில்
எண்ணியென் மனதினில் எழுந்த ஒருசில
நுண்ணிய கருத்தினை நுவலவந் தனனே!
நெஞ்சை அள்ளும் காப்பிய மாக
நினைந்து வடிக்க விழைந்த இளங்கோ
சீரிய காவியம் படைத்து மகிழ்ந்தார்.
செந்தமிழ் அன்னையின் பாததா மரைக்குப்
பூரிப் பொடுபொற்; சிலம்பினை அணிந்தார்
பொதுளி அதனுள் பொருத்திய அணிகளோ
பூம்புகார் நகர அமைப்ப்pன் சிறப்பு
பூவையர் ஆடிடும் அரங்கின் அமைப்பு
புலவோர் போற்றிடும் இலக்கியச் செழுமை
பூத்து விரிந்திடும் புதுவகை உவமை
பணத்திற்(கு) ஏங்கும்  பரத்தைளர் பெருமை
பாரே வியக்கும் வாணிப வனப்பு
கட்டிடக் கலையின்  கவின்மிகு விரிப்பு
செஞ்சொல் அமுதாய்த் திரண்ட தேறலாய்
கொஞ்சமோ தந்தார் சிலம்புக் காதையில்!
பலபல சிறப்பெலாம் சிரித்திடக் கண்டேன்
பாரதி போற்றிய பாங்கினை அறிவேன்
ஏற்புடை யதாக இவ்வள விருந்தும்
ஏந்திழை கண்ணகி இயல்பினில் மலர்ந்த
கற்பினிற் கிளங்கோ கொடுத்த இலக்கணம்
காலம் கடந்து புலம்பெயர்  வாழும்
கன்னியர் கட்;கு ஒத்திடா வெனச்சிலர்
கதைப்பது காதிலே ஓலமாய்க கேட்குது!

காப்பியத் தொடக்க முதலில்  இளங்கோ
கற்புக் கிட்ட இலக்கணம் இதுவே!
'கங்கை தன்னைப் புணர்ந் தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற் பென்று
அறிந்தேன் வாழி காவேரி'
புலம்பெயர் வாழ்வில் இந்த இலக்கணம்
பொருந்தா இலக்கணம் தெரிந்திடு வீரே!
அன்றைய சூழலில் இளங்கோ வடித்த
அத்தனை யும்மிகப் பொருத்தமா யிருந்தது
அறியாப் பருவம்; திருமணம் கண்டது
அடிமை வாழ்க்கை மனைவியர்க் கன்று
நெறியெனக் கற்பெனும் விலங்கை இட்டது
நீதி கோராது வாயினை அடைத்தது
மாபெருந் தவறுகள் கணவன் இழைத்தால்;
வந்தவன் தெய்வமே செய்தவன் தெய்வமே
என்று மனைவியர் மகிழ்வுடன் ஏற்றனர்
ஈடிலாச் சகிப்புடன் ஊடா திருந்தனர்
வெறுங்கை யுடனே வீடுவந்த கோவலன்
மனைவி யிடமவள் ; நகைகளைக் கேட்டதும்
'நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிக்
குடும்ப நகையெலாம் கொடுத்தாள் பத்தினி.
என்னே! என்னே! கற்பின் மாட்சி!
கோவலன் எத்துணை காமுகன் என்பதை
'குரல்வாய்ப் பாணரொடும் நகரப் பரத்தரொடும்
திரிதரு மரபிற் கோவலன் போல்'என
இளங்கோ விளம்பிய குணநலம் அறிவீர்
கொடுப்பக் கொள்வது கற்பெனப் கொள்ளும்
ஆண்டாள் அடிமைத் திறனையும் அறிவீர்;!ஷ;
அது மட்டுமா?
கணவன் பரத்தையர் உடன்வாழ்ந்த பின்னர்
காதல் மனைவியை நாடிய போழ்தெலாம்
கணவனின் மனமோ துன்புறா வண்ணம்
கற்பிது வென்று ஊடா திருத்தலும்
கணவனின் பரத்தையைப் புகழ்ந்து போற்றலும்
பேசா மடந்தையாய் கணவன் செய்வதைக்
கடவுளே செய்கிறார் என்று இருத்தலும்
இளங்கோ காட்டிய அன்றைநா கரிகம்
புலம்பெயர் எமக்கிது ஒவ்வாத தொன்றே!
புரிந்துணர் வோடெம் பெண்கள் வாழ்கிறார்.
கண்ணகிக்கு!
இழந்த வாழ்வு கொடுக்காக் கவலையை
எதுதான் கொடுத்தது சொல்லு வீர்களா?
இளங்கோ பதிலை இதமாய்த் தருகிறார்!
'அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க(கு); எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்' மிக விழந் தனளே!
என்னே இந்த விழுமியச் சிறப்பு!.

;கொடிய துன்பமாம் கொழுனனின் பரத்தமை
கணவன் எத்துணை தீங்கி ழைத்தாலும்
ஏற்றவள் பொறுமையைக் காப்பது கற்பு
இந்தக் கூற்றை ஏற்றுக் கண்ணகி
தெய்வம் ஆகிய  காலம்  பழையது
எதிர்த்துப் பேசாது பொறுமை காத்து
ஆறிய கற்பை கண்ணகி காட்டினாள்!
புலம்பெயர் நாட்டில் இதைநாம் சொன்னால்
பொங்கி எழுந்து எமது பெண்களோ
'என்ன சொன்னாய் இனியுன் னோடு
இம்மியும் வாழேன்'; எனச்சூ ழுரைப்பர்!

மாநா யகனவன் பாசப் பெண்மகள்
காதலன் பின்போந்த பொற்றொடி நங்கையாம்
கண்ணகி காட்டிய ஆறிய கற்பு
கவுந்தி அடிகளைச் சிலிர்க்க வைத்து
'கற்புக் கடம் பூண்ட இத் தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்'
என அங்கீ காரம் வழங்க வைத்தது!
அன்றைய கற்பு நிலைதனைக் கண்டீர்
புலம்பெயர் நாட்டிலோ....
பலநற் சலுகைகள் பெற்றுத் தமிழர்
புலம்பெயர் நாட்டிற் புகழுடன் வாழ்கிறார்
சிலம்புக் காலம் போல் அல்லாது
சிறந்த சுதந்திரம் பெண்களுக்(கு) உண்டு
எனவே
கண்ணகி காட்டிய ஆறிய கற்பு
புலம்பெயர் வாழ்வில் ஏற்புடைத் தன்று

புலம்பெயர் நாட்டின் சட்டமும் ஒழுங்கும்
வளமொடு வாழ வழிவகுத் துள்ளது
இதன் காரணமாகப் புலம்பெயர் வாழ்வில்
இசைந்து வாழ்ந்திடல் கண்கூ டானது
அடக்கும் பெண்களுக்(கு) அஞ்சிச் சிலரோ
அடங்கிப் பெட்டிப் பாம்பென வாழ்கிறார்
ஒத்துப் போக  முடியாதோர் விவாக
ரத்துச் செய்து நிம்மதி காண்கிறார்
தலைபோகும் வன்முறை எதுவென் றாலும்
தொலைபேசி தீர்வைச் சுகமாய்த் தந்திடும்
பெண்ணோ ஆணோ பிள்ளையோ குட்டியோ
எண்ணி மூன்று சைவரை அழுத்தினால்
கண்ணிய மாகத் தீர்வைத் தந்திடக்
காவலர் வீடு தேடி வருவரே!
எனவே இங்கு சமத்துவ நீதி
இருபாலர் களுக்  ஏற்புடை யானது.
புலம்பெயர் வாழ்வின் சிறப்பிது கண்டிர்!

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிட
ஆருயிர்த் கோவலன் கொலைசெயப் பட்டதும்
அனலிடை ;வீழ்ந்த புழப்போல் துடித்தாள்
'பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த்
திங்கள் முகிலோடும் சேணிலங் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள் தன் கேழ்வனை
எங்கணா அ என்னா இனைந்தேங்கி மாழ்கினாள்'
காரணம் கேட்டுக் களங்கம் போக்கிக்
கணவன் கள்வன் இலையெனக் காட்டச்
சீறி எழுந்தாள் அரசவை சென்று
;;நீதி கேட்டுக் கறைதனைத் துடைத்தாள்
அரசியல் பிழைத்தோர்க்(கு)  அறம்கூற் றென்பதை
விரிகுழற்; கண்ணகி நிருபணம் செய்தாள்!
சீறிய கற்பின் திண்மையள் கூற்றினைத்
தீக்கட வுளும்நிறை வேற்றி அமைந்தது
மதுரைமா மக்களும் வானில் மறைந்தவள்
வம்பல்  தெய்வமென் றன்றோ வணங்கினர்!
மண்ணக மாதர்க் கணியான கண்ணகி
விண்ணக மாதற்கு விருந்தெனப் போற்றினர!;
உரைசால் பத்தினிக்(கு); உயர்ந்தோர் எத்திட
உத்தமி இறைநிலை எய்;திநின் றனளே!
கற்புக் கரசியின் சீறிய கற்பு
புலம்பெயர் வாழ்விற் குகந்த தொன்றே!

இரண்டு ஆயிரம் ஆண்டிற்கு முன்னர்
எழுந்த சிலம்புக் காவியத் தாலே
ஏது பயன்எனக் கேட்கும் இளைஞர்க்(குப்
போதும்போது மென வாழ்விற்(கு) உகந்த
விழுமியற் கருத்தெலாம் விருந்தாய்  இளங்கோ
விஞ்சித் தந்த படிப்பினை கொஞ்சமோ?
ஆனால்
புலம்பெயர் நாட்டில் தொலைத்தவை அதிகம்
பொறுமையை விட்டதால்  பாசம் அங்கெலாம்
வறுமையில் வாடிட ஊடலுங் கூடுது
சட்டம் நாடி விவாக ரத்தைக்
கெட்டித் தனமாயப் பெற்றிடு வோர்சிலர்
வருவிருந் தோம்பி மனையறம் முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் எங்கோ மறைந்தனர்
காலில் விழுந்து வணங்கித் தினமும்
கணவனைத் தெய்வமாய்க் கொள்ளும் பண்பு
காற்றில் ஊச லாடி மறைந்தது
கணவனைப் பெயரால் அழைக்கும் பண்புடன்
கற்பித் தோரையும் மூத்தபெரி யோரையும்
கனஞ்செயும் பண்பை அடகுவைத் திட்டார்
கனிவொடு அத்தான் என்றழைக் காது
'காய்டா' 'டார்லிங்க்' 'சுவீற்றி'யென்  றொலிக்குது
இதுபோற் பண்பெலாம் இழந்து வருகையில்
இளங்கோ விளம்பும் பொன்மொழி கேட்பீர்!
 
செல்வமும் இளமையும் யாக்கையும் என்றும்
நிலையா தென்பதைக் பாத்திரம் பலதால்
நிலமிசை வாழ்க்கை நிலையா தென்பதை
சிலம்புக் காப்பியம் தெளிவுறக் காட்டியும்
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கவும்
தெய்வந் தெளியவும் தெளிந்தோர் பேணவும்
பொய்யுரை அஞ்சவும் புறஞ்சொலல் தவிர்க்கவும்

உயிர்க்கொலை தன்னை நினையா திருக்கவும்;
உண்மையை என்றும் உயிரென மதிக்கவும்
தானம் செய்யவும் தவம்பல புரியவும்
செய்நன்றி எனறும் மறவா திருக்கவும்
.தீய நட்பினைத்; தேடா திருக்கவும்
வாயில்; பொய்யுரை வாரா திருக்கவும
பிறர்மனை அஞ்சவும் பிழைஉயிர் ஓம்பவும்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக்; கோட்டியும் விரகினில் ஒழியவும்
அருந்தமிழப்; பண்பெலாம் அழகுற விளம்பும்
பெரும்புகழ்க் காவியம் சிலப்பதி காரமே

வழிவழி வந்த புலம்பெயர் தமிழரே
செல்வமும் இளமையும் யாக்கையும் என்றும்
எல்லா உயிர்க்கும் நிலையா தொன்றே!
ஊழ்;வினை உருத்துவந் துஊட்டா  வண்ணம்
வாழ்வினில் திருத்தக வாழ்ந்திட இளங்கோ
வழங்கிய நல்லுரை  ஓம்பி
இம்மையில் நன்மைகள் ஆற்றி வாழ்வீரே!

நிறைவு
சீரிலங்கச் செழுமைபொங்கத் தெளிவுடன்பொ ருள்பொங்கச்
    சிந்தனைகள் பலவிரிந்து சிந்தைக்கு விருந்தாக
வாரிநீவிர் இறைத்திட்டீர்! வண்டமிழ்க் கவிதைவளம்
    வற்றாது மென்மேலும் வளர்கவென வாழ்த்துகிறேன்
பாரிலெம்மவர் மனத்துறையும் சிறுமைக்க ருத்தெல்லாம்
     பரிதிகண்டு  உருகும்பனி போல்மறைய ஒன்றிணைவோம்
சூரியர்கள் காலுமொளிச் சோதிநிகர் மலரடிகொள்
     சுந்தரமாம் அந்திவண்ணன் அருளருள வாழ்த்துகிறேன்.

               ஆக்கம் - பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

















No comments: