இலங்கையில் பாரதி - அங்கம் 32 - முருகபூபதி

.


இனிவரும் நூற்றாண்டில் அழியும் உலகமொழிகளில் தமிழும் ஒன்று என சில காலமாக சொல்லிவருகிறார்கள்.
கடந்த காலங்களில் உலகமொழிகள் பல பேச்சு, எழுத்துவழக்கில்லாமல்போனதனால் மறைந்துவிட்டன. சில மொழிகளுக்கு வரிவடிவம் இல்லை.
ஆனால், தொன்மையான தமிழ்மொழிக்கு வரிவடிவம் இருக்கிறது. ஈழத்தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்து வாழத்தலைப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்க மற்றும் மத்தியகிழக்கு, ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் பேசப்படுகிறது.
எனினும் அண்மைக்காலங்களில், எதிர்காலத்தில் அழியும் மொழிகளில் தமிழும் ஒன்றென்று பேசப்பட்டதற்கு காரணம் என்ன..?
இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வெளிநாடுகளுக்குச்சென்றவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதாது, பேசாது என்ற பொதுவான காரணம் சொல்லப்படுகிறது. இந்த அச்சத்தினால் வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகள், தமிழ்ப்பாடசாலைகள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழை வாழ வைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.
" தமிழினி மெல்லச்சாகும்" என்று பாரதியும் உரைத்திருக்கிறார் என்று பலரும் மேடைகளில் பிதற்றிவருவதையும் அவதானிக்கமுடிகிறது.
பாரதி அப்படிச்சொன்னாரா...? என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு அவர்கள் தயாரில்லை. மேடைகளில் முழங்கும்போது பாரதியே சொல்லியிருக்கிறார் " தமிழினி மெல்லச்சாகும்" என்று மேலோட்டாகச் சொல்கிறார்கள்.
ஆனால், பாரதி என்ன சொன்னார் என்பதை இங்கு கவனிப்போம்.




பாரதி இயற்றியிருக்கும் தமிழ்த்தாய் என்ற கவிதையில் வரும் வரிகள் இவை:
" புத்தம் புதிய கலைகள் - பஞ்ச  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்,
மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை,
சொல்லவும் கூடுவதில்லை- அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை,
மெல்லத்தமிழினிச்சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்"
என்றந்தப்பேதை உரைத்தான் - ஆ !
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
தந்தை அருள்வலியாலும் - இன்று
 சார்ந்த புலவர் தவவலியாலும்,
இந்தப்பெரும் பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
----இதுவே பாரதி எழுதியிருக்கும் கவிதை.
இதனை சரியாகப்படித்துப்புரிந்துகொள்ளாமல்," தமிழினி மெல்லச்சாகும்" என்று சொல்லி, தமது வாதத்திற்கு பாரதியையும் துணைகழைத்துக்கொள்கிறார்கள்.
பாரதி தமிழுக்காக தான் என்ன செய்வேன் என்றுரைத்ததுடன் நிற்கவில்லை. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும்" என்றும் அறைகூவல் விடுத்து "கலைச்செல்வங்களை கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


அவர் அத்துடன் நிறுத்தவில்லை. பேதைகளுக்கு மேலும் ஒரு விடயத்தை வலியுறுத்துகிறார்.
" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரனெக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர் !
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்."
இலங்கையின் மூத்த தமிழ் அறிஞராகவும்  சிறந்த கல்விமானாகவும் விளங்கிய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ( 1902 - 1968) அவர்கள் வாழ்ந்த காலத்திலும்," தமிழினி மெல்லச்சாகும்"  என்ற பிதற்றல்கள் ஒலித்திருக்கின்றன.
பருத்தித்துறை, புலோலி கிழக்கில் 1902 ஆம் ஆண்டில் பிறந்திருக்கும் கணபதிப்பிள்ளை அவர்கள் பற்றி விரிவான கட்டுரையை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி (2017 ஆனி)  இதழில் ஈழக்கவி எழுதியுள்ளார்.
பன்மொழிப்புலமைமிக்கவரான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, 1936 இல் இலங்கைப் பல்க்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் நியமனமாகி, 1947 இல் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டவர்.  பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்.
  இவரது முயற்சியால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத் தேர்வையும் தொடங்கி வைத்த பெருமையும் இவரைச்சாரும்.
 பாரதியின்பால் அபிமானம்கொண்டிருந்த மூத்த அறிஞராகவும் பேராசிரியர் அறியப்பட்டிருப்பதாக ஈழக்கவி எழுதியுள்ளார்.
சிறுவர் இலக்கியத்திலும்  ஈடுபாடுகொண்டிருந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள், பாரதியாரின் பாப்பாப் பாடல்களுக்கும் அருமையான விளக்கம் கொடுத்திருப்பதாக ஈழக்கவி பதிவுசெய்கின்றார்.
அவர் வாழ்ந்த காலத்திலும், "மெல்லத்தமிழ் இனிச்சாகும் " என்று யாராவது பேசினால் பேராசிரியர் கணபதிப்பிள்ளை பொங்கி எழுந்துவிடுவார். புதிய துறையில் எல்லாம் தமிழ் வளரவேண்டும் என்பதும் பேராசிரியரின் இலட்சிய வெறி. ஆங்கிலேயரின் சிறந்த படைப்புகளை யாராவது அவ்வப்போது மொழிபெயர்த்து வெளியிட்டால் அந்த முயற்சியை அவர் பாராட்டுவார். ஆங்கில மொழியில் உள்ள இலக்கிய நூல்களைப்போல ஐரோப்பிய மொழிகளில் உள்ள படைப்புகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்பதை வற்புறுத்துவார் பேராசிரியர்" என்று ஈழக்கவி பதிவுசெய்திருக்கிறார். அதற்கு ஆதாரமாக  முன்னாள் மகாஜனாக்கல்லூரி அதிபரும் தமிழ் அறிஞருமான எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் எழுதியிருக்கும் கலையருவி கணபதிப்பிள்ளை என்ற நூலையும் சுட்டிக்காண்பிக்கின்றார் ஈழக்கவி.
இதிலிருந்து எமக்கு பாரதியின் சிந்தனைகள் இலங்கையில் எவ்வாறு எத்தகைய தாக்கத்தினையும் செல்வாக்கினையும் கொண்டிருந்தன என்பதை  அவதானிக்க முடிகிறது.


தமிழ்நாட்டில் பாரதி வாழ்ந்த காலத்திலேயே இலங்கையில் வாழ்ந்த அறிஞர்தான் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. இவரும் சுவாமி விபுலானந்த அடிகளைப்போன்று இலங்கையில் பாரதியின் சிந்தனைகளை பரப்பிய முன்னோடியாவார்.
இலங்கையில் பாரதியின் வாரிசுகள் பலர் தொடர்ந்தும் பாரதியின் சிந்தனைகளை தமது வாழ்வோடு பிணைத்துக்கொண்டே வாழ்ந்திருக்கின்றனர்.
இந்திய தமிழ் சினிமா, இந்தியத்தமிழ்த்தொலைக்காட்சிகளில் உச்சரிக்கப்படும் தமிழைப்பார்த்துவிட்டு,  " தமிழைக்கொல்கிறார்கள்" என எம்மவர் விமர்சிப்பதையும் அவதானிக்கின்றோம். இத்தகைய ஊடகங்களில் நல்ல தமிழைத் தேடவேண்டிய துர்ப்பாக்கியம் நீடிப்பதனாலும், "தமிழினி மெல்லச்சாகும்" என்று பேசத்தலைப்படுகின்றனர்.
தமிழர் புகலிடம் பெற்ற  அந்நிய நாடுகளில் ஆங்கிலமும் ஐரோப்பிய மொழிகளும் பிரதான மொழியாகவிருப்பதனால், தமிழில் எழுதுவதும் பேசுவதும் அருகிவருகிறது. அதனால் புகலிடத்தில் தமிழ்ப்பாடசாலைகள் தோன்றுகின்றன.
அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் பாரதி பள்ளி என்ற பாடசாலை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இயங்குகிறது.  சில வருடங்களுக்கு முன்னர் பாப்பா பாரதி என்னும் பாலகர்களுக்கான நிகழ்ச்சிகள் அடங்கிய இறுவட்டும் மூன்று பாகங்களில் வெளியிடப்பட்டது.
பாரதி பள்ளியை மெல்பனின் உருவாக்கிய எழுத்தாளரும் கலைஞரும் சமூகப்பணியாளருமான மாவை நித்தியானந்தன்,  அதன் முதல் வளாகத்தை மெல்பனில் ஆரம்பித்தவேளையில், தமது ஆசானாக விளங்கிய மூத்த கவிஞரும் தமிழ் அறிஞருமான அம்பி அவர்களையே அழைத்துப் பேசவைத்தார்.
ஈழத்து இலக்கிய உலகில் கவிதைக்கு வளம்சேர்த்த கவிஞர்களில் அம்பி அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர்.
பாரதியின் சிந்தனைகளின் தொடர்ச்சியாக அவரும் புலம்பெயர்ந்து வந்திருக்கும் எமது தமிழ் மக்களுக்காக பின்வரும் கவிதையை இயற்றியிருக்கிறார்.
ஓடிடும்  தமிழா  நில்,  நீ  ஒரு  கணம்  மனதைத்தட்டு
 வீடு நின்னூருள்  சொந்தம்,  விளைநிலம்  நாடு  விட்டாய்
தேடியதெல்லாம்   விட்டுத்திசைபல  செல்லும்  வேளை
 பாடிய   தமிழை  மட்டும்  பாதையில்  விட்டிடாதே
ஓர்தலைமுறையின்  பின்னே  உன்னடி  உறவென்றேனும்
 ஊரிலே   அறியாப்பிள்ளை   உலகரங்கினில்  யாரோ
தாரணி மீதில்  நானோர்  தமிழனென்றுறுதி  செய்யின்
 ஊர்பெயர்   உடைகள்  அல்ல  ஒண்டமிழ்  மொழியே  சாட்சி



சாட்சியாய்  அமையுஞ்  சொந்தச்  செந்தமிழ்  மொழியே  முன்னோர்
 ஈட்டிய   செல்வம்  எங்கள்  இனவழிச் சீட்டாம்
ஏந்த  நாட்டிலே  வாழ்ந்தபோதும்  நடைமுறைவாழ்வில்  என்றும்
 வீட்டிலே   தமிழைப்பேணும்  விதிசெயல்  கடமை  ஐய !
வீட்டிலே  தமிழைப்பேசும்  விதி  செயல்  கடமை  ஆமாம்
 பாட்டனாய்  வந்து  பேரன்  பரம்பரை  திரிதல்  கண்டே
ஈட்டிய   செல்வம்  போச்சே,   இனவழி  போச்சே   என்று
 வாட்டு   நெஞ்சுணர்வை  வெல்ல  வழி   பிறிதொன்றுமில்லை.
                                                                                                      --   கவிஞர்  அம்பி
இவ்வாறு பாரதியின் கனவுகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் தொடருகின்றன.
(தொடரும்)

No comments: