The Last Halt - கடைசித் தரிப்பிடம் - கானா பிரபா

.

தொண்ணூற்றஞ்சாம் ஆண்டு ஊரை விட்டு வெளிக்கிட்டு அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி கற்க வந்த போது இருப்பிடத்தில் இருந்து ககுதி நேர வேலை சகலதும் கிடைக்கும் என்ற வாக்குறுதியோடு வந்தவன் அடுத்த நாளே கூட வந்த மாணவர்கள் ஆளுக்கொரு பக்கம் கலைய, அந்நிய நிலத்தில் போக்கிடம் ஏது என்றதில் இருந்து அடுத்த வேளை வயித்தைக் கழுவ என்ன செய்யலாம், கூடப் படித்த சிங்கள மாணவர்கள் பள்ளியில் என்னை தீவிரவாதிகளின் இனம் என்று வெள்ளையருக்கு அடையாளப்படுத்தியது வரையான வாழ்வியல் சிக்கலகளை எதிர் நோக்கிய என்னுடைய அந்தக் காலத்தை நினைத்தால் ஒரு புத்தகம் போடுமளவுக்கு அனுபவங்கள். அந்த உலகத்துக்கு மீண்டும் போய் அங்கேயே தரை தட்டி நிற்கிறேன் இன்று காலை The Last Halt (கடைசித் தரிப்பிடம்) என்ற படத்தைப் பார்த்து முடித்ததில் இருந்து.
இலங்கையில் இருந்து தனியாளாக மேற்படிப்புக்காக லண்டனுக்கு வரும் நிலானி என்ற பெண், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கல்லூரி நிலையமே காலாவதியாகி விட்ட நிலையில் அது தொட்டு அவள் சந்திக்கும் ஒவ்வொரு முரண் தரும் அனுபவங்களுமே இந்த The Last Halt (கடைசித் தரிப்பிடம்) படம் மையப்படுத்தியிருக்கும் கதைக் களன். நிலானி என்ற பெண் எதிர் நோக்குகின்ற புலம் பெயர் வாழ்வியல் சிக்கல்கள் அவள் கொண்ட பாலினத்தால் இன்னும் தெரியாத பக்கங்களை, அல்லது எங்கோ கேள்விப்பட்ட விடயங்களையும் நாம் சந்தித்த அனுபவங்களைத் தாண்டி விதைக்கிறது விதைக்கிறது என்பதை விடத் தைக்கிறது எனலாம். ஏனெனில் இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே அபலைப் பெண்ணொருத்தி ஐரோப்பியத் தெருவொன்றிலோ கனேடிய மண்ணின் ஏதாவது ஒரு சந்திலோ நிலானி போன்றே தேடிக் கொண்டிருப்பாள் தான் தேடி வந்த வாழ்க்கையை.



"வழக்கமா வந்து போற, உலாவிய வீதியெல்லாம் இப்ப புதுசாக் கிடக்கிற மாதிரி இருக்குதண்ணா"என்று ஒவ்வொன்றாக இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்ட நிலானி சொல்லும் போது அந்த வலி சாதாரண காட்சியைத் தாண்டி உள்ளிழுக்கிறது.
நிலானியைத் தாண்டி, வருசக் கணக்காக வதிவிட உரிமைக்காக லோயரிடம் அல்லோலகல்லப்பட்ட அனுபவம் இருக்கிறதா? சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காசை விடக் குறைவாகத் தந்து மீதியைத் தானே ஏப்பம் விடும் சுத்திகரிப்பு ஒப்பந்தகாரர்களிடம் மாட்டிய அனுபவம் இருக்கிறதா? குழந்தைப் பேறில்லாதைக் குத்திக் காட்டும் எங்கட சமூகத்தோடு வாழத் தலைப்பட்டிருக்கிறீர்களா, பலவீனப்பட்டிருக்கும் தனியாளைக் குறி வைக்கும் பாலியல் பசி கொண்டவர்கள் பற்றிக் கேள்விப்ப்பட்டிருக்கிறீர்களா இந்த மாதிரியான புலம்பெயர் வாழ்வின் யதார்த்தங்கள் படத்தில் உலாவும் கதை மாந்தர்கள் வழியே குறியீடாக இருக்கின்றன.
நிலானி என்ற மூலப் பாத்திரம், படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலுமே தன்னை அடக்க வேண்டிய அந்தப் பொறுப்பு எவ்வளவு கஷ்டமான காரியம். அதுவும் தன்னுள் புழுங்கிக் கொண்டு மெள யாத்திரை கொள்ளும் அந்தப் பெண்ணாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் பிரியாஷா ஜெயநாயகம். இந்தப் படைப்பு இவ்வளவு தூரம் மெச்சப்பட வேண்டிய தேவை இருக்கிறதென்றால் அதற்குச் சறுக்காத நடிகர் தேர்வு தான் காரணம். அதில் முன்னணி இந்த பிரியாஷாவுக்கு. ஆனால் நீண்ட வசன ஒப்புவிப்பில் காட்டிக் கொடுக்கிறது புலம்பெயர் மண்ணில் பிறந்து வளர்ந்த ஆங்கிலப் பசை ஒடிய தமிழ்.
நிலானிக்கு ஒரு ஆறுதல் என்று நினைக்கும் அன்ரனி பாத்திரத்தில் மன்மதன் பாஸ்கி. மனுஷர் நடிக்காமல் வாழும் கலையை ஏற்கனவே பல படங்களில் நிகழ்த்திக் காட்டியவர் இங்கேயும் ஊதித் தள்ளி விடுகிறார் எந்த வித "நடிப்பு"ப் பிரயசையும் இன்றி இயல்பான அன்ரனியாக.
நிலானியோடு வம்பிழுக்கும் கொசப்புப் பெடியன் மட்டும் என்னவாம் என்று அவரையும் பாராட்டி இழுக்கிறது மனது.
நீண்ட படமோ என்று நினைத்தால் படம் முடிந்ததும் எதையெல்லாம் நீண்டது என்று நினைத்தோமோ அவற்றுக்கெல்லாம் நியாயமான காரணம் கூறி நிறைவாக்கும் உணர்வைக் கொடுக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் நண்பர் சுஜித் ஜி ஐப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்றால் மேலே சொன்னது எல்லாமே அவர் தானே? இப்படியானதொரு கதையை வைத்து அதைச் சேதாரமில்லாது சொல்ல வந்த சேதியை உணர்வால் கடத்தும் வித்தையைக் காட்டியிருக்கிறார்.
குறும் படம் என்றாலேயே தென்னிந்திய மூன்றாம் தரச் சரக்குகள் போல கறுவல், குத்தியன், வெளவால் என்று படத்தலைப்புகளை வைத்து கசூர்னா பீச்சிலும் பளைத் தென்னந்தோட்டத்திலும், கனடாவின் ஏதாவது ஒரு அருவிக்கு முன்னாலும் பாடிக் கொண்டும் சுட்டுக் கொண்டும் அடித்துக் கொண்டும் எடுக்கும் நம்மவர் பாடாவதிப் படைப்புகளை இந்த மாதிரிப் படைப்புகள் தான் கழுவ் வெளியேற்ற வேண்டும். புலம் பெயர் வாழ்வியலில் சொல்லப் படாத கதைகள் இன்னும் ஏராளம் திரையுருப் பெற வேண்டும். இந்தப் படங்களைப் பார்க்கும் தாயகத்தவர்களுக்கும் புலம் பெயர்ந்தவன் பாடு பெரும் பாடு என்பதைக் காட்டவொரு வாய்ப்பு.
The Last Halt (கடைசித் தரிப்பிடம்) படம் இப்போது YouTube இல் வாடகை முறைமையில் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம்மவர் படைப்புகளை இம்மாதிரியான முறைமையில் சந்தைபடுத்தினால் முதல் ஆளாகப் போய் அவற்றைப் பரப்பிப் பார்க்க உதவுவேன். நீங்களும் சென்று பாருங்கள் கணினி வழியாக இணைப்புக்குச் சென்று பணம் கட்டி விட்டால் பின் செல்போனின் YouTube வழியாகவும் காணலாம்.
ஆர்ப்பாட்டமில்லாது பயணித்து மனதை நெருடும் உணர்வோட்டம் இந்தக் கடைசித் தரிப்பிடம்.
26/05/17

No comments: