சிட்னியிலே நடைபெற்ற வீணை - மிருதங்க அரங்கேற்றம்!

.

சிட்னியிலே நடைபெற்ற வீணை - மிருதங்க அற்புத அரங்கேற்றம்!
திரு இரவீந்திரன் கலாநிதி சாந்தினி இரவீந்திரன் தம்பதியினரின் பிள்ளைகளான செல்வி விஷ்ணி அவர்களின் வீணை அரங்கேற்றமும்  செல்வன் ஹரிஷ் கோபிகன்  அவர்களின் மிருதங்க அரங்கேற்றமும் பங்குனி மாதம் சனிக்கிழமை நாலாம் திகதி பரமற்றாவில் அமைந்துள்ள 'றிவர்சைட்'அரங்கிலே மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.. அரங்கின் அலங்காரம் பிரமாதமாகக் காணப்பட்டது. ஐங்கரத்து விநாயக விக்கிரகத்தி;ன் அருளொளி எல்லோரையும் ஈர்க்க,   மாலை ஆறு மணிக்கு அரங்கு  , வீணை - மிருதங்க இசை இரசிகர்களாலும் உறவினர்களாலும் நண்பர்களாலும் நிரம்பிக் காணப்பட்டது.  குறிப்பிட்ட நேரத்திற்குத் திருமதி சுகந்தினி சிவா சுவாமிநாதனின் சுருக்கமான வரவேற்புரையுடன் அரங்கேற்ற விழா ஆரம்பமாகியது.  புன்னகை ததும்பும் முகத்துடன் மேடையின் நடுவிலே வீணையை இலாவகமாக ஏந்தியவண்ணம் விழாவின் கதாநாயகி செல்வி விஷ்ணி அமர்ந்திருக்க செல்வன் ஹரிஷ் கோபிகனும்; ஏனைய பக்கவாத்தியக் குழுவினரும் சூழஅமர்ந்திருந்து அரங்கை அலங்கரித்தனர்.






கானடா இராகத்திலே தனது வீணாகானத்தை ஆரம்பித்த செல்வி விஷ்ணி தொடக்கத்திலேயே தனது ஆழுமைமிக்க திறனைப் புலப்படுத்திவிட்டார் என்றே சொல்லவேண்டும். "நெர நம் மிதி" என்ற அட தாளத்தில் அமைந்த வர்ணத்தில் தனது இசையை ஆரம்பித்ததைத் தொடர்ந்து 'சண்முகப்பிரியா' இராகத்திலே அமைந்த "சித்தி விநாயகம் அனிஷம்" என்ற கீர்த்தனையை  வீணையிலே மீட்டினார்.



அவர் அளித்த 'சண்முகப்பிரியா' இராக ஆலாபனை அற்புதமாக அமைந்து அனைவரின் கரகோசத்தைப் பெற்றது. இந்த இராகத்திற்குரிய அனைத்துப் பிரயோகங்களையும் முதலில் வாசித்ததைத் தொடர்ந்து கற்பனாசுரங்களை அவரின் சிவந்த விரல்கள் இலாவகமாக வாசித்து எல்லோரையும் மகிழ்வித்தன. வீணையிசைக்கு ஏற்றாற்போல மாறி மாறி  வயலின் இசையை வயலின் வித்துவானும் திறம்பட வழங்கினார். இதற்கு ஈடுகொடுத்தாற்போலக் கம்பீரமாக அமர்ந்தவண்ணம்  செல்வன் ஹரிஷ் கோபிகன் மிருதங்கததை இசைத்தார்.


அடுத்ததாகச் "சிறீ" இராகத்திலே அமைந்த தியாகராஜ சுவாமிகளின்  "எந்தரோ மஹனு பாவுலு" என்ற பஞ்சரத்ன கீர்த்தனையையும் அதனைத் தொடர்ந்து  ரீதி கௌளை இராகத்தில் அமைந்த "ஜனனி நினுவினா" என்ற முத்துசுவாமி தீட்சதர் அவர்கள் இயற்றிய கீர்த்தனையையும்  வீணையிலே வாசித்தபொழுது ஹரிஷ் மிருதங்கத்திலே  லயமாரி பொழிந்து அவையோரை மகிழ்வித்தார்.
தொடர்ந்து "ரகுவம்ச சுதா"என்ற கதனகுதூகலத்தில் அமைந்த பாடலுக்கு அற்புதமாக வீணையிலே விஷ்ணி மீட்டிட, ஹரிஷ் அதற்குச் தரத்திலே சவாலாக வாசித்த மிருதங்கம் இசை அரங்கை நிறைத்தது.


அடுத்து முத்துசுவாமி தீட்சதர் அவர்கள்  அருளிய 'பாலகோபாலா" என்ற கீர்த்தனை இசைவடிவம் பெற்றது. பைரவி இராகம் ஆதி தாளத்தைக் கொண்ட இக் கீர்த்தனை அரங்கேற்ற நிகழ்ச்சியில் முக்கிய பாடலாக இடம் பெற்றதுடன்  இரட்டைக் களையில் அமைந்திருந்தது. மிகவும் அழகாக இராக ஆலாபனையுடன் தானத்துடன் ஆரம்பித்த விஷ்ணி பாடல் முடியும்வiரைக்கும் அவரது விரல்கள் வீணையின் நரம்புகளிலே சற்றும் தொய்யாது விறுவிறுப்புடன் நர்த்தனம் ஆடின. வீணையின் இன்னிசைக்கு நிகராகத் துரித களையுடன் வாசித்த மிருதங்கம் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. நிரவல் மற்றும் கற்பனா சுரங்களை அலை அலையாக இருவரும் அற்புதமாக அளித்து அவையோரின் கரகோசத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தனது தனிப்பட்ட ஆவர்த்தனத்தில் ஹரிஷ் கோபிகன் திஸ்ரம் சதுஸ்ரம் கண்டம் மிஸ்ரம் ஆகிய நான்குனு நடையிலும் வெகு சிறப்பாக வாசித்ததுடன் கடம் வழங்கிக்கொண்டிருந்த சர்வதேசப் புகழ் பெற்ற கலைஞருக்கு  இயைபாக மாறி மாறி இசைவழங்கி அரங்கை அதிர வைத்தார்.அருமையான பைரவி இராகத்தில் அமைந்த பாடலுக்கு வழங்கிய இசையுடன் ஒரு சிறிய இடைவேளை விடப்பட்டது.


இடைவேளையைத் தெடர்ந்து "சுத்த தன்யாசி இராகத்தில் அமைந்த ஹிமகிரி தனயே" என்ற பாடலுக்கு வழங்கப்பட்ட இசையைத் தொடர்ந்து இராகம் தானம் பல்லவி ஆரம்பமானது.
விஷ்ணியின் குருவாகிய புதுக்கோட்டை சிறீ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தொகுத்து வழங்கிய 'கரகரப்பிரியா' இராகத்திலும்   கண்ட ஜாதி  திரிபுடை தாளத்திலும் அமைந்த பல்லவியை மூன்று காலத்திலும் திஸ்ரத்திலும் வாசித்ததுமட்டுமல்லாமல் கீழ்க்கால மேற்காலச் சேர்க்கையாகவும் மத்திம காலத் திஸ்ரச் சேர்க்கையாகவும் திறம்பட வாசித்து அதற்கு நிரவல் சஞ்சாரம் செய்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.பல்லவியின் ஆரம்பத்தில் நீண்ட நேரமாகக் கரகரப்பிரியா' இராக ஆலாபனையுடன் 'இராகமாலிகா' தானமும் வாசித்துத் தன் திறமையால்  எல்லோரையும் மெய்மறக்கச் செய்தார். இறுதியாக கற்பனாசுரத்தை வீணையில் விஷ்ணி மீட்டிட இசைக்கு ஏற்ப வயலின் இசைத்த வித்துவான்  முல்லைவாசல்  சிறீ சந்திரமௌலி சரமாரியாக வாசித்துச்   சாதனை படைத்துச் சபையோரை ஆச்சரியத்தில் திணறவைத்தார்கள். இவர்களுக்கு விட்டுக்கொடுக்காது ஹரிஷ் கோபிகன் லயமாரி பொழிந்து எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார். இறுதியாகக் கண்ட ஜாதி திரிபுடை தாளத்தில் அமைந்த மோரா கோர்வையுடன் பல்லவி நிறைவுற்றது.


இதைத் தொடர்ந்து  "குறையொன்றும் இல்லை...." "புரோசேவாரெவருரா-------    "போன்ற பிரசித்திபெற்ற பாடல்களுக்கு இனிமையாக இசை பொழிந்தார்கள். இறுதிக் கட்டத்தை அடைந்த அரங்கேற்றத்தில் பிருந்தாவனி இராகத்தில் அமைந்த தில்லானா மிகவும் விறுவிறுப்பாகவும் சிறந்த தாள அமைப்புடனும் காணப்பட்டது. இந்தத் தில்லானைவை வடிவமைத்தவரும்  அண்மையிலே இறையடி சேர்ந்தவருமாகிய சங்கீதகலா மேதை பாலமுரளிகிருஷ்ணாவிற்கு இந்தத் தில்லானாவை அர்ப்பணஞ்செய்வதாகச் செல்வி விஷ்ணி அறிவித்தமை அவரின் சங்கீதத்துடன் மருவிய பண்பாட்டை எடுத்துக்காட்டியதுடன் இவ்வறிவிப்பை எல்லோரும் வரவேற்றார்கள். இதனைத் தொடர்ந்து திருப்புகழ் நாதுபை  என்ற மத்தியமாவதி பாடல் மற்றும் மங்களத்துடன் அரங்கேற்றம் வெகு சிறப்பாக நிறைவுபெற்றது.

அரங்கேற்றத்திற்குப் பக்கவாத்திய கலைஞர்களாகப் பங்கேற்றுச் சிறப்புச் செய்த வயலின் வித்துவான்  முல்லைவாசல்  சிறீ சந்திரமௌலி அவர்களும்; கடம் வித்துவான் சிறீ சந்திரசேகர சர்மா அவர்களும் மிகவும் பாராட்டத்தக்க விதத்தில் அரங்கேற்றம் செய்த சகோதரர்களுக்கு மிகுந்த உறுதுணையாக வாசித்து அரங்கேற்றத்திற்கு மெருகூட்டினார்கள். தம்புரா மீட்டிய செல்வன் அபிஷயனும் சிறப்பாக வாசித்துச் சபையோரைக் கவர்ந்தான்.

இந்த அரங்கேற்றத்தைச் சிறப்பிக்க வருகைதந்திருந்தவர் செல்வன் ஹரிஷ் கோபிகனின் முதலாவது மிருதங்கக் குருவான கலாநிதி  சுரேஷ் இராமச்சந்திரா ஆவார். இவர் தனது மாணவனின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு நியூசிலாந்தின் ஓக்லாந்து நகரில் இருந்து வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது. அரங்கேற்றத்திற்கு மகுடம் வைத்தாற்போல அவரின் அற்புதமான  உரை பொருட்செறிவுள்ளதாகவும் தெளிந்த நடையுடனும் காணப்பட்டது. அவரின் உரையைத் தொடர்ந்து பக்கவாத்தியக் கலைஞர்கள் முறையாகக் கௌரவிக்கப்பட்டனர்.


இவற்றைத் தொடர்ந்து ஹரிஷ் கோபிகனின் பிரதம குருவான கலைமாமணி தஞ்சாவூர் ஸ்ரீ முருகபூபதி அவர்கள் தனது உரையைக் கச்சிதமாகவும் பொருத்தமானதாகவும் அழகாக ஆற்றினார். செல்வி விஷ்ணியும் செல்வன் ஹரிஷ் கோபிகனினும் இணைந்து நன்றியுரையை மிகவும் அருமையாகக் கூறினார்கள். அரங்கேற்றத்தின் தொகுப்பாளர்களாகத் தங்களின் திறமையை வெளிப்படுத்திய  திருமதி சுகி சிவா மற்றும் செல்வி  நீஷா பாலா ஆகியோர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறிமாறிச் சிறப்பாக நிகழ்ச்சிகளை  அறிவித்தார்கள். அரங்கு நிறைந்த அவையோர்கள் அமைதி காத்து நல்லதொரு இசைக் கச்சேரியைக் கண்டுகளித்த மனத் திருப்தியுடன் சென்றார்கள்.
விமர்சனம் எழுதியவர்- பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.