கவியெழுதி வடியும் - பிச்சினிக்காடு இளங்கோ




.
    
Image result for beautiful bird on a tree at early morning  இலையிருளில் இருந்தவண்ணம்
  எனையழைத்து ஒருபறவை பேசும்
  இதயத்தின் கனத்தையெல்லாம்
  இதமாகச் செவியறையில் பூசும்
  குரலொலியில் மனவெளியைத்
  தூண்டிலென ஆவலுடன் தூவும்
  குரலினிமை குழலினிமை
  கொஞ்சும்மொழித் தேனாக மேவும்
  
  துயில்கின்ற மனமானோ
  துள்ளலுடன் கனவாடை கலையும்
  கனவாடை கலைந்தாலும்
  கவிவாடை தானாக விளையும்
  பொருள்புரியா  மொழிகேட்டு
  புலர்காலை ஏக்கமுடன் விடியும்
  புள்ளினத்தின் மனமறியாப்
  பொங்குமனம் கவியெழுதி வடியும்


 (அதிகாலையில் ஒருபறவையொலிகேட்டு எழுதியது. தொடங்கியது 26.02.2017 முடித்தது 1.03.2017)