ஈழத்தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பிரபல நாடக கலைஞரின் ஆவணப்படம்

.

இன்றைய சினிமாவின் முன்னோடி என்றால் அது மேடை நாடகங்கள் தான். ஆனால் கூத்து நாடகங்களில் மிகவும் பிரபலமாக இருந்த பலரையும் இன்றைய சந்ததிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஈழத்து நாடகக் கலையில் பல புதுமைகளை புகுத்த்திய கலைக்குரிசில் நீ.வ அந்தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணபடமாக எடுத்துள்ளனர்.
இதில் பல கூத்து மேடை நாடகங்களில் நடித்த இவர் கிறிஸ்துவர்களின் புனித கதைகள் பலவற்றை அரங்கேற்றியுள்ளார். இவரைப்பற்றி அறிஞர்கள் சொன்ன விடயங்களையும், மூத்த நாடக நடிகர்களின் அனுபவங்களையும் இந்த படத்தில் கலைக்குரிசிலின் பேரன் சவரிமுத்து மிக்கேல்தாஸ் ஆவணப்படுத்தியுள்ளனர்.
தமிழரின் பாரம்பரிய கலை வடிவமாகவும் அணிகலனாகவும் கூத்துக்கள் திகழ்கின்றன. எமது தொன்மையான இக்கலைச்சொத்து மனித மனங்களை தொட்டுத்தூக்கி மகிழ்வூட்டி ஆற்றுகைப் படுத்துவதுடன் முன்னொரு காலத்தில் வாழ்வின் வலிமையையும் நம்பிக்கையையும் ஊட்டும் பரிமாண வடிவமாகவும் திகழ்ந்துள்ளது.
எமது தேசியச் சொத்தான கூத்திசைமிக்கதாக எழுதிப்பாடியும் ஆடியும் பயிற்றுவித்து வளர்த்த "கலைக்குரிசில் நீ வ அந்தோனி அண்ணாவியாரின் ஆரம்பகால வரலாற்றை நாடகமேடையில் நவரசங்களை சித்தரித்து கவியின் ஊடாக பாவங்களை வடித்துக் காட்டிய அந்த காவிய விற்பனர் கலை உலகில் கால்பதித்த 1928ம் ஆண்டிலான இன்றைக்கு 82 வருடங்களுக்கு முற்ப்பட்ட காலப்பகுதியின் சில பக்கங்களை பின்னோக்கி புரட்டுவோம்.


யாழ் நகரின் நெய்தல் நிலப்பரப்பில் 1902ம் ஆண்டு பங்குனி திங்கள் 4ம் நாள் நீ.வ அந்தோனி அண்ணாவியார் வயித்தியான்- மதலேனா தம்பதியருக்கு ஏகபோக வாரிசாக அவதரித்தார்.
1923ம் ஆண்டு கடல்-படுதிரவியத்தின் பால் ஈர்க்கப்பட்டு காவலூரின் தென்திசையில் மருதமும், நெய்தலும் சங்கமிக்கும் கரம்பொன் தெற்கு பகுதியில் தன் குடியிருப்பை அமைத்து தொழிலில் ஈடுபடலானார். இன்று இப்பகுதி மெலிஞ்சிமுனை என்னும் தனித்துவமிக்க கலைக்கிராமமாக கிறிஸ்து அரசர் ஆலயம் அமைத்து வளமுடன் திகழ்கின்றது.
மரபுவழி நாடக நடிகர்களுக்கு அவர்கள் அன்றாடம் மேற்க்கொள்ளும் தொழில்சார் பயிற்சியே வளர்ச்சியான்கிறது. கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் தண்டு வலிக்கும்போது மடி இழுக்கும் போதும் ஏல ஏலோம் அம்பாவகைப் பாடல் பாடுவது வழமையாகும். உப்புக்கடலின் உரமும் ஆழக்கடலில் மூச்சடக்கி முத்து சங்கு கடல்த்தாவரம் எடுக்கும் போது தசைநார்களின் விரிநிலையால் ஏற்படும் குரல் தெளிவும் சாரீர பயிற்சிக்கு மூலகாரணியாகிறது.
இயல்பாகவே இந்நிலையில் ஒன்றித்து குரல்வளம் பெற்றிருந்த அந்தோனி அண்ணாவியாருக்கு பாரம்பரியக்கலையாம் கூத்தின் மீது ஆர்வம் ஏற்படவே 1928ம் வருடம் தனது 26வது வயதில் கரம்பொன் செபஸ்தியார்கோவில்- மேடையேற்றப்பட்ட "மத்தேசு மகிறம்மா" என்னும் நாட்டுக்கூத்தில் மாமன்னனுக்குரிய வீறு நடையோடு கணீரென்று ஒலிக்கும் குரல்வளத்துடன் ஒலிவாங்கி இல்லாமலே தூரத்தில் இருக்கும் பார்வையாளருக்கு கேட்கும்படியாக தனது அறிமுக வரவுக் காட்சியிலேயே தன் தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தி பலதரப்பு நாடக ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதலை தன்வசப்படுத்திக் கொண்டார்.
இக்கூத்தின் மூலம் ஏற்ப்பட்ட பட்டறிவைக் கொண்டு தன் ஆளூமையை விரிவுபடுத்தி கோவில் திருவிழாக் காலங்களில் பாடப்படும் கவி தேவாரம் விருத்தம் அகவல் போன்றவற்றை எழுதிப்பழக்கி பாடிவித்து கத்தோலிக்க விசுவாசத்தை கட்டி வளர்த்தார்.
அண்ணாவியாராகும் திருப்பம் இரண்டாவது கூத்தான ஊசோன்பாலந்தை மூலம் ஏற்படுகிறது. ஊசோன்பாலந்தையை காட்சியமைப்புக்கு ஏற்றவாறு பல பாடல்களை புதிதாக எழுதி மீள் வடிவமிட்டு 1931ம் ஆண்டு கரம்பனில் மேடையேற்றியதுடன்
அக்கூத்தின் பிரதான பாத்திரமாகிய- பெப்பேனிய அரசராக வீரமிகு வேங்கையாக இரண்டு இரவுகள் தொடராக பாடல் நடிப்பு நெறியாள்கை என பன்முகத் தன்மையை ஒருமுகப்படுத்தி யாவரும் வியப்புறும் வண்ணம் போற்றிப் புகழப்பட்டார்.
ஊசோன்பாலந்தை நாடக வரலாற்றில் பெரிய மாறுதலை ஏற்ப்படுத்தவே- காலத்தின் அவசியம் கருதி ஓர் இரவுக்குரிய கூத்தாக சுருக்கி மாதகல் முல்லைத்தீவு பருத்தித்துறை மண்டைதீவு என பல்வேறு பிரதேச மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்று மேடையேற்றி மிகவும் பிரபலமானார்.
அண்ணாவியாரின் தனித்தன்மையின் சிறப்புக்கள்-
இராகங்களை இனிமையாகப்பாடிநடித்துக் காட்டுவதுடன் நடிக்கும்போது காட்சிக்கு ஏற்றவாறு பாவத்துடன் ஒன்றிப்பாடவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். எந்த மெட்டையும் சுருதியுடன் உடனுக்குடன் பாடும் அபரிமிதமான திறமை நாடகப்பிரியர்களை வியப்புற வைத்தது.
யாழ்நகரின் பட்டினத்தில் பல அண்ணாவிமார்கள் இருந்த போதும்- அன்றைய காலத்தில் தீவுப்பகுதிக்கு செல்ல பண்ணைப்பாலம் வரையுமே பிரையாண வசதி மட்டுப்படுத்தப்பட்ட சூழலிலும் அந்தோனி அண்ணாவியார் மீது கொண்ட அதீத பிடிப்பு நம்பிக்கை காரணமாக, பல இடத்து நாடக ஆர்வலர்கள் படகு மூலமாகவும் துவிச்சக்கர வண்டி மூலமும் பல மைல்கள் கால் நடையாகவும் சென்று தங்கள் இடத்துக்கு அழைத்துச் சென்று பல கூத்துக்களை பழக்கி மேடையேற்றியுள்ளனர்.
இதனை நோக்குகையில் நாடகவியல் தலைமக்கள் குறிப்புரையின்-
"பாத்திரங்கட்கெல்லாம் பகர் முகம் செய்து
வலம்புரி சூழ்ந்த சலஞ்சலமென்னக
காணப்படுபவர் தலை மக்களென்ப"
நாடக பாத்திரங்களுக்கெல்லாம் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலைமக்களாக பகர்மிகு வலம்புரிச்சங்கை ஆயிரம் இடம்புரிச்சங்கு சூழ்ந்தவாறாய்- உவமேய குறிப்பாய் அக்காலத்தில் நாடக அண்ணாவிமார்களான திரு.பொன்னுத்துரை திரு.பூந்தான்யோசேப்பு சில்லாலை-திரு.லூயிஸ், நாரந்தனை-திரு.சவிரிமுத்து போன்றோர் கலைக்குரிசிலை சூழ்ந்திருந்ததாக முன்னார் விதானையாரும் கரம்பனூர் பண்டிதருமாகிய சோ.தியாகராசபிள்ளை கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
தன் கற்பனை வளத்தால் செவிப்புலனிற்கும், மனதிற்கும் இன்பமும் அறிவும் ஊட்டும் வண்ணம்- அலசு நாடகத்தை தென்மோடிக்கூத்தாக, ஓர் செதுக்கிய ஓவியமாக வடித்து 1956ம் ஆண்டு கரம்பனில் அரங்கேற்றி மிகுந்த பாராட்டைப் பெற்றார்.
அலசு நாட்டுக்கூத்தில் அண்ணாவியாரால் எழுதப்பட்டு, பிரபல பாடகரான திரு.வைத்தியார் அவர்கள் பெமியான் பிரபு வேடத்தில் பாடிய "ஞானக்கலையுணர்ந்த" என்ற மிகவம் பிரபலமான பாடலும், திரு.இ.மத்தியாஸ் அவர்கள் அலசு பாத்திரத்தில் பாடிய "பிச்சை போடும் அண்ணாமாரே என்னும் சோகமிழையோடும் பாடல் வரிகளும் பல தலைமுறை கடந்தும் இன்றும் இளைஞர்களால் விருப்புடன் பாடப்படுகின்றது.
1960ம் ஆண்டு வடமாகாண கலைகலாச்சாரப் பிரிவால் நடாத்தப்பட்ட கலை கைப்பணி விழாவில் தீவுப்பகுதி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கரம்பன் விதானையார்- பண்டிதர் சோ.தியாகராசபிள்ளை தலைமையில் திரு.லுக்கேஸ், திரு.வைத்தியார் அடங்கிய கலைக்குழு அமைக்கப்பட்டு கலைக்குரிசில் அவர்களிடம் கலை நிகழ்வை கூத்துப்பாடல் மூலம் ஒப்படைத்தனர். கலைக்குரிசில் அவர்கள் சங்ககாலத்தில் தமிழன் கப்பல் மூலம் வணிகம் செய்த வரலாற்றை கப்பல் பாடலாக கூத்துமெட்டில் எழுதிக்கொடுத்தார்.
உழவுயந்திரத்தில் பாரிய கப்பலை வடிவமைத்து நடிகர்கள் அதில் மாலுமிகளாக பாடி ஆடி நடித்தனர். அந்நிகழ்வு அரசின் மிகுந்த பாராட்டை பெற்றது. யாழ் மாநகரிலிருந்து ஊர்காவற்றுறை வரை நடிகர்கள் கப்பல் ஊர்தியில் நின்றபடி
நடிக்க வீதி இருபக்கமெங்கும் மக்கள் குழுமி நின்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பார்வையிட்டமை அந்நாளில் பெரும் திருப்பத்தை ஏற்ப்படுத்தியது. கிடைத்த தரவுகளின்படி 1931ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை தான் எழுதிய கூத்துக்களையும் பல புலவர்கள் எழுதிய கூத்துக்களாகவும் 50 க்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை பல தரப்பு மக்களை நாடிச்சென்று பின்வரும் பிரதேசங்களில் கரம்பன், மானிப்பாய், ஊர்காவற்றுறை, நாரந்தனை, மண்டைதீவு, மாதகல், மன்னார், பருத்தித்தீவு, எழுவைதீவு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் மேடையேற்றியதுடன் களப்பயிற்ச்சியின் ஊடாக பல சிறந்த நடிகர்களை உருவாக்கியுள்ளார்.
1965ம் வருடம் கரம்பொன் சிறிய புஸ்பமகளீர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் கலைக்குரிசில் அவர்கள் தான் எழுதிய தாவீது கொலியாத்தெனும் நாட்டுக்கூத்தை இளம் தலைமுறை மாணவர்களை வைத்து நெறிப்படுத்தி முதன்மை விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.

*கலைக்குரிசில் அவர்களால் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்ட கூத்துக்கள்-*
  • 1. ஞானானந்தன்
  • 2. அலசு
  • 3. சகோதரவிரோதி
  • 4. புனித செபஸ்தியார்
  • 5. மதிவீரன்
  • 6. பிரதாபன்
  • 7. மந்திரிகுமாரன்
  • 8. இராஜ குமாரி
  • 9. தர்மசீலன்
  • 10. திரு ஞானதீபன்
  • 11. பிரளயத்தில் கண்ட பாலன்
  • 12. தொம்மையப்பர்
  • 13. பிரபாகரன்
  • 14. தாவீது கொலியாத்து
  • 15. ஆனந்தசீலன்
  • 16. புனித கிறிஸ்தோப்பர்
கூத்துக்கலையின் உயிரோட்டத்தை பல நிலைகளில் வெளிக்கொணர்ந்து ஆளூமைப்படுத்திய அண்ணாவியாரின் கலைப்பணியை இனங்கண்டு 1969ம் வருடம் மாசிமாதம் 3ம் நாள் நாடகத்தந்தை கலையரசு கே.சொர்ணலிங்கம் அவர்கள் புனித கிறிஸ்தோப்பர் நாடகவிழாவில் பண்டிதர் சோ.தியாகராசா கலைக்கவி நீ.எஸ்தாக்கி கவிஞர் நாகராஜன், அறிஞர்கள், பெருமக்கள் முன்னிலையில் "கலைக்குரிசில்" என்னும் பட்டமளித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் இவ்விழாவை மெலிஞ்சிமுனை கிராமமே திரண்டு ஒன்று கூடி பெருமைப்பட்டதுடன் அன்றிலிருந்து கலைக்குரிசில் கலாமன்றம் எனப்பெயர் கொண்டு கூத்துக்கள், நாடகங்கள், கலைஞர்கள் கௌரவிப்பு போன்ற கலை நிகழ்வுகளை நடாத்தி வருகிறது. தற்போது புலம் பெயர்ந்துள்ள நோர்வே, கனடா, பிரான்ஸ் ஆகி நாடுகளிலும் அவரின் வழித்தோன்றலாய் இளம் தலைமுறையினர்- அண்ணாவிமார்களாகளாகவும் முன்னணிக் கலைஞர்களாகவும்- கலைக்குரிசில் கலாமன்றம் அமைத்து கலை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.
கலைக்குரிசில் அவர்களின் கலைப்பணி பற்றி கலைஞர்கள், அறிஞர்கள், பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ் அவர்கள். கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களுடைய பெயர்- ஈழத்து நாட்டுக்கூத்து வரலாற்றில் இடம் பெற வேண்டியதொன்றாகும்.
பேராசிரியர் கலாநிதி அ.மௌனகுரு
இலங்கையின் வடபகுதியில் மெலிஞ்சிமுனையில் வாழ் இப்பெருமகன் ஈழத்து தமிழர் நாடகமென்ற வேர் ஆலமரத்தை தாங்கி நிற்கும் விழுதுகளில் ஒன்று- இத்தைகையோர் நமது இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யப்படவேண்டியவர்கள்!கௌரவிக்கப்படவேண்டியவர்கள்!
பேராசிரியர் கலாநிதி.பாலசுந்தரம்- மந்திரிகுமாரன் கூத்து விழாவில்
ஈழத்தமிழரின் பாரம்பரியத்தின் பண்பாகத் திகழ்வது நாட்டுக்கூத்தாகும், இக்கலைக்காக தன்னை அர்ப்பணித்து, வான்புகழ் பெற்ற கலைக்குரிசில் அந்தோனி அண்ணாவியாரின் கலை வடிவங்களை பாதுகாத்து, அவரின் கலைப்பணியை தொடரும் அவரின் மைந்தனான சவிரிமுத்து அண்ணாவியாரை பாராட்டுவதே- கலைக்குரிசில் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.
கலாநிதி வ.தீயோகுப்பிள்ளை ஆண்டகை- புனித கிறிஸ்தோப்பர் நாடகவிழாவில்
கலைக்குரிசில் அவர்கள் எழுதிய புனித கிறிஸ்தோப்பர் நாட்டுக்கூத்து எங்கள் பாரம்பரியத்தை பின்பற்றி எழுதிய தென்மோடிக் கூத்தாகும். 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புனிதரின் சரித்தரத்தை கலைக்குரிசில் அவர்கள் பக்தியூட்டும் காவியமாக சிறப்பாக எடுத்து கூறப்படுகிறது. கலைக்குரிசில் அவர்கள் எழுதிய வேறு பல நாடகங்களையும் கலைக்குரிசில் நாடக மன்றத்தினர் வெவ்வேறு இடங்களில் மேடையேற்ற முன்வரவேண்டும்.
கலாநிதி நீ.ம.சவிரிமுத்து அடிகள்- திருமறைக்கலாமன்றம்
கலை காலத்தை வென்றது கலைஞனும் அழிவைக்காணாத அமரன் இவற்றிக்கு எடுத்துக் காட்டாக மெலிஞ்சிமுனையில் ஊறியிருக்கும் நாட்டுக் கூத்துக் கலையை ஒரு காலகட்டத்தில் வளர்த்த கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவியாரை குறிப்பிடலாம்.
கவிஞர் தமயந்தி- கூத்துக்கலைஞர் நோர்வே
அன்னைத் தமிழின் அருஞ்சுவைச் சொல்லெடுத்து அழியாக் கலைக்கு ஆணிவேர் தந்தவனே அணையாது நீ தந்த அரும் பெரும் ஏடுகள் அழியாது நீயிட்ட அறுசுவைப் பாடல்கள் கரம்பனூர் பண்டிதர்- சோ.தியாகராசபிள்ளை அண்ணாவிமார்களில் சிலர் எழுதுவார்கள், சிலர் பாடலை சொல்லிக்கொடுப்பார்கள், சிலர் வளமான குரலுடன் பாடுவார்கள், கலைக்குரிசில் அந்தோனி அண்ணாவிய்யாரோ மேலே குறிப்பிடும் முழுத்திறமையும் வாய்ந்தவர்! இராசா பாத்திரமேற்று வேடம் போட்டாரென்றால் ஊர்காவற்றுறை வரை அவரின் குரலெட்டும். அந்தக்காலத்தில் மெலிஞ்சிமுனையில் சோடனை என்றால் யாழ்ப்பாணம் முழுவதும் வந்து நிறையும், பிரபல அண்ணாவிமார்களான பொன்னுத்துரை பூந்தான்யோசேப்பு சில்லாலை லூயிஸ், சவிரிமுத்து, நாரந்தனை அருளப்பு முதலியோர் நமது அண்ணாவியார் அருகே வந்து நிற்பார்கள்.
ஜோ.ஜோன்சன் ராஜ்குமார்- திருமறைக்கலாமன்றம்
காவலூரின் தென்பகுதியில் அமைந்துள்ளது மெலிஞ்சிமுனைக்கிராமம். இப்பிரதேசத்தில் ஒரு கலைமரபின் தொடக்கமாக இருந்துஇ கலையின் விளைநிலமாக்கியவர்- கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவியார் அவர்களாகும். இரண்டு இரவுக்கூத்தாகிய ஊசோன் பாலந்தையில் பெப்பேனிய மன்னராக- இவர் இரண்டு இரவும் நடித்து பெயர் பெற்றவர்.
மாதகல், எழுவைதீவு, மண்டைதீவு, இளவாலை, முல்லைத்தீவு, நாரந்தனை, கரம்பன் என பல இடங்களில் நாடகங்களை மேடையேற்றி பெருமை பெற்றவர்.
செ.எட்வேட்- முன்னாள் யாழ்மாவட்ட உறுப்பினர் ஊர்காவற்றுறை
மெலிஞ்சிமுனை நகரப்பகுதியில் அரை நூற்றாண்டுக்கு மேலாக கலைத்துறைக்கு சேவை செய்து மறைந்தவர் அமரர் கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்கள். இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன் இவர் மறைந்தபோதும் நாட்டுக்கூத்து என்ற மரபுக்கலை வேரூன்றிய இடங்களிலெல்லாம் அவர் நாமம் நினைவில் நிலைத்து நிற்குமென்பது திண்ணம்.
அ.லுக்கேஸ்- மெலிஞ்சிமுனை கிராம சமூக பொறுப்பாளர் எனது பால்ய நண்பன் கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்கள் அந்தக்காலத்தில் மத்தேசு-மகிறம்மா தொடக்கம் ஊசோன் பாலந்தை கூத்துவரை பாடல், நடிப்பில் புதிய யுக்திகளைக் கையாண்டு சிறப்பு பெற்றவர். பல தென்மோடி நாட்டுக்கூத்துக்களை எழுதி எமது மெலிஞ்சிமுனைக் கிராமம் நாட்டுக்கூத்தில் புகழ் பெற்று விளங்க வழிசமைத்ததுடன், கோவில்ப் பங்கிலும், ஆலய வளர்ச்சியிலும், குத்தகைப் பொறுப்பிலும் பலசேவையாற்றியதுடன் விஷக்கடி வைத்தியராக பலரின் உயிர்காத்து முதலுதவி புரிந்துள்ளார்.
ம.சிந்தாத்துரை அண்ணாவியார்- நாவாந்துறை
அலைகடல் சூல் மெலிஞ்சிமுனை நகரதனில் அருங்கவிப் புலவராய் அந்தோனிதான் திகழ்ந்தே கலைக்குரிசில் பட்டமும் தான் பெற்றே கலைஞனாய் வாழ்ந்தார் இத்தரையில் இ.சூசைப்பிள்ளை அண்ணாவியார்- எழுவைதீவு நாட்டுக்கூத்தின் பிதாமகன் என்னுமளவிற்குப் புகழ் பூத்திருந்த அமரர் அந்தோனி அண்ணாவியார்- 1942ம் ஆண்டு திரு ஞானதீபன் நாட்டுக்கூத்தையும் 1960ம் ஆண்டு தொம்மை அப்போஸ்தலர் நாட்டுக்கூத்தையும் பழக்கி அரங்கேற்றினார். அவருக்கு அக்காலத்திலேயே எம் மக்கால் மிகுந்த பாராட்டும் புகழ்மாலையும் சூட்டப்பட்டது.
அருட்தந்தை கிருபானந்தன்- முன்னாள் பங்குத்தந்தை ஊர்காவற்றுறை
காலம் சென்ற கலைக்குரிசில் அந்தோனி அண்ணாவியார் கூத்து மரபின் ஒளிர்விளக்காய் தன்னை அர்ப்பணித்த தனிப்பெரும் கலைச்சுடராவார். உறுதியான விசுவாசமும், ஆளுமை மிகு புலமையும், மக்களை நேசிக்கும் மனப்பான்மையும் கொண்டவர். அவரின் கூத்துக்கலைக்கான அர்ப்பணிப்பை மறந்துவிட முடியாது.
ஆ.சபாரெட்ணம்- முன்னாள் அதிபர் கரம்பொன் சண்முகநாதர் மகாவித்தியாலயம்
மிகப்பழைய காலத்திலிருந்தே நாடகத்தமிழ்- நம் மக்களை பண்பட்டவர்களாக்கி வந்துள்ளது. மெலிஞ்சிமுனை அதிஸ்ரம் மிக்க கிராமம். அந்தோனி அண்ணாவியார் மகளோடு மக்களாக வாழ்ந்து பல தசாப்தங்களாக கூத்துக் கலையை வளர்த்துள்ளார். அந்தக் காலத்தில் தீவுப்பகுதியில் கலையார்வம் உள்ள அனைவருக்கும் அண்ணாவியாரின் பெருமை தெரியும், ஆண்டாண்டு காலமாக பணம் தேடிக் குவிக்காது- நாளும் பொழுதும் கூத்துக்கலைக்கே தன் காலத்தை செலவிட்டார்.
சூசைமார்க்- முன்னாள் தலைவர் சென்மேரிஸ் ச.சமூக நிலையம்- நாவாந்துறை
கலைக்குரிசில் அவர்கள் எமது பாரம்பரிய மரபுக் கலைவடிவமாம் நாட்டுக்கூத்துடன் இரண்டறக்கலந்து தன்வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் கலைஞராவார்!
எந்தக் கலைஞனுக்கும் கிடைக்காத பெரும்பேறு- மறைந்த பின்பும் மறவாது வாழ்ந்த மண்ணிலும் புலம்பெயர் மண்ணிலும் இளையதலைமுறையினர் கலைக்குரிசில் கலாமன்றம் அமைத்து அவரின் கலைப்பணியை தொடர்ந்து வருகின்றார்கள்.
ஜே.எக்ஸ்.செல்வநாயகம்- உதவி அரசாங்க அதிபர் தீப வடக்கு- ஊர்காவற்றுறை
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ள கடலோரமான மெலிஞ்சிமுனைக்கிராமம் ஒரு கலைக் கிராமமாகும். பாரம்பரியமான தமிழர் கலைகளை பாதுகாத்தவர் கலைக்குரிசில் என்று குறிப்பிட்டால் மிகையாகாது! இந்த வகையில் நாட்டுக்கூத்து நாடகம் எனக் கலை வடிவங்கள் பேணப்பட்டு வரும் மெலிஞ்சிமுனையில் கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவியார் ஆற்றிய பணிகள் மெச்சத்தக்கவை.
அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை- பங்குத்தந்தை கரம்பொன் ஊர்காவற்றுறை
எமது தமிழ்ப்பிரதேசத்தில் பாரம்பரியமாக வளர்ந்து- பேணிக்காக்கப்படிகின்ற கலைகள் அழியாமல் பாதுகாத்தவர்கள் பெரும் தொண்டாற்றி உள்ளார்கள் என்றே கூறவேண்டும்! திரு.நீ.வ.அந்தோனி அண்ணாவி அவர்கள் மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் இருந்து தமது முயற்சியால் வளர்ந்து கலைத்துறைக்கு மட்டுமல்லாமல்- கிறிஸ்தவ துறைக்கும் அளப்பரிய பணியாற்றியுள்ளார்.
இ.நித்தியானந்தன்- பண்பாட்டு அலுவலர்- ஊர்காவற்றுறை காரைநகர்
ஊர்காவற்றுறைப் பிரசேசம் கலை பண்பாட்டு விழுமியங்களைப் பேணி வரும் பிரதேசம் அதிலும் குறிப்பாக மெலிஞ்சிமுனை சமயம், கலை ஆகிய இரண்டுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் பிரஜைகள் வசிக்கும் ஊர். அத்தகைய பெருமை மிகுந்த ஊரில் கலைக்காகவே தம்மை முழுமையாகவே அர்ப்பணித்து பணியாற்றியவர் கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவியார் ஆகும்.
nantri http://news.lankasri.com/