அமெ.புளோரிடா மாநிலத்தின் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 50 பேர் பலி; 53 பேர் படுகாயம்
புளோரிடா மாநிலத்தின் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு ; ஐ எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
பங்களாதேஷில் 8,559 பேர் கைது
பிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்குள் பிரவேசித்து அவரையும் மனைவியையும் படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதி
பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிதாரி ஒரு தன்னினச்சேர்க்கையாளர் -முன்னாள் மனைவி தெரிவிப்பு
கச்சதீவை மீட்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் கோரிக்கை
பங்களாதேஷில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது
பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; நண்பியைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த 18 வயது யுவதி
எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்திய தரைக்கடலில் கண்டுபிடிப்பு
முதலையிடம் சிக்கிய குழந்தையின் சடலம் மீட்பு
பெண் எம்.பி. சுட்டு கொலை : பிரித்தானியாவில் பரபரப்பு சம்பவம்
அமெ.புளோரிடா மாநிலத்தின் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 50 பேர் பலி; 53 பேர் படுகாயம்
13/06/2016 அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 53 பேர் படுகாயமடைந்த நிலை யில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், ஓர்லிண்டோ நகரில் பல்ஸ் ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை வேளையில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த போது, அங்கு திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளார். எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு தாக்குதலையடுத்து விடுதிக்குள் இருந்தவர்களும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களும் அலறியடித்து அங்குமிங்கும் ஓடத்தொடங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக விடுதிக்கு விரைந்துள்ளனர். இதன்போது பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி மோதலில், அதிகாலை 7 மணியளவில், மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். மேலும் 53 பேர்வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவு விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய சந்தேக நபரின் பெயர் ஓமர் மடீன் என்பது தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்தத் தாக்குதலை தீவிரவாத சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்குள் அங்கு நடைபெறும் இரண்டாவது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இதுவாகும். பாடகி கிறிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். மேலும் அவர், மர்ம நபர் விடாமல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதாகவும் இதனால், அங்கிருந்த பலர் ஓடத்துவங்கியதாகவும் பலர் இதில் காயமடைந்திருக்கக்கூடும் எனவும் கூறினார்.

துப்பாக்கிதாரி ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் மிக மோசமான சம்பவமாக இது பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமையன்று 22 வயதான பாடகி கிறிஸ்டியானா கிரிம்மி சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவரை புளோரிடாவின் 27 வயது இளைஞர் சுட்டுக் கொன்றார். அந்த இளைஞரும் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே நகரிலேயே தற்போது இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவமும் நடந்துள்ளது. அந்த சம்பவத்திற்கும் தற்போதைய துப்பாக்கிச்சூட்டிற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆர்லாண்டோவின் தீயணைப்புத்துறையினரின் வெடி குண்டு செயலிழப்பு குழுவினரும் ஆபத்தான ஆயுதங்களை கையாளும் குழுவினரும் விரைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


நன்றி வீரகேசரி
புளோரிடா மாநிலத்தின் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு ; ஐ எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
13/06/2016 அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், ஓர்லிண்டோ நகரில் பல்ஸ் ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐ எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நேற்று அதிகாலை வேளையில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த போது, அங்கு திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளார். எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு தாக்குதலையடுத்து விடுதிக்குள் இருந்தவர்களும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களும் அலறியடித்து அங்குமிங்கும் ஓடத்தொடங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக விடுதிக்கு விரைந்துள்ளனர். இதன்போது பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி மோதலில், அதிகாலை 7 மணியளவில், மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். மேலும் 53 பேர்வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இருப்பினும் தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஆப்கான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான உமர் மடீனே கொலையாளி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் ஓரின சேர்க்கைக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் பரப்பி வரும் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டவராக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுகின்றது. நன்றி வீரகேசரி
பங்களாதேஷில் 8,559 பேர் கைது
14/06/2016 பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சார்ந்த 119 பேர் உட்பட சந்தேகத்தின் பேரில் 8,559 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற மரணங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாரிய தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தடை செய்யப்பட்ட அமைப்பானது, கடந்த காலங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அந்நாட்டிலுள்ள இந்து பூசகர்களை தாக்கிய சம்பவங்களில் தொடர்புப்பட்டவர்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் 1500 மோட்டார் சைக்கிள் ஆகியன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்குள் பிரவேசித்து அவரையும் மனைவியையும் படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதி

15/06/2016 பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு அண்மையில் பொலிஸ் கட்டளைத் தளபதியொருவரும் அவரது மனைவியும் ஐ.எஸ். தீவிரவாதியொருவரால் திங்கட்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் அதிரடி நடவடிக்கையொன்றை முன்னெடுத்து அந்தத் தீவிரவாதியை சுட்டுக் கொன்று அவரால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 3 வயது குழந்தையை மீட்டுள்ளனர்.
பாரிஸின் வடக்கே யவெலெயின்ஸ் பிராந்தியத்தில் மக்னவில்லே எனும் இடத்திலுள்ள அந்தப் பொலிஸ் கட்டளைத் தளபதியின் வீட்டினுள் துணிகரமாக பிரவேசித்து ஐ.எஸ். தீவிரவாதியொருவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமை முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சந்தேகத்துக்கிடமற்ற தீவிரவாத தாக்குதல் என அந்நாட்டு ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் கலந்துரையாட செவ்வாய்க்கிழமை அவசர பாதுகாப்புக் கூட்டமொன்றைக் கூட்டினார்.
லரோஸி அபல்லா (25 வயது) என்ற தீவிரவாதியே பொலிஸ் அதிகாரியான ஜீன் பப்டிஸ்ட் சல்வெயிங் (42 வயது) மற்றும் அவரது மனைவி ஜெஸ்க்கா எஸ். ஆகியோரை படுகொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த அவர்களின் 3 வயது குழந்தையை பணயக்கைதியாக பிடித்து வைத்துக்கொண்ட லரோஸி அபல்லா, ' இந்தப் பாலகனை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை' என தனது பேஸ்புக் இணையத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஜீன் பப்டிஸ்ட் சல்வெயிங் வயிற்றில் 9 தடவைகள் கத்தியால் குத்தியுள்ளார். ஜெஸ்க்கா எஸ். மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து செயற்படுவதாக பேஸ்புக் இணையத்தளத்தில் 13 நிமிட காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டதையடுத்தே அவர் இந்தப் படுகொலைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டிலிருந்து லரோஸி அபல்லாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2013 ஆம் ஆண்டு தீவிரவாத செயற்பாடுகளுக்கு தயாராகியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
அதன்போது பாகிஸ்தானிலுள்ள ஜிஹாதிகளுக்காக ஆட்சேர்ப்பதில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அதில் 6 மாத சிறைத்தண்டனை இரத்துச் செய்யப்பட்டது.
அவர் முதலில் கையில் கத்தியுடன் குறிப்பிட்ட இராணுவக் கட்டளைத் தளபதியின் வீட்டிற்கு வெளியிலிருந்து கடவுள் மகா பெரியர் என்று கூறிக் கோஷம் எழுப்பியதாகவும் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். அவர் அதன் பின் அந்த வீட்டினுள் பிரவேசித்து பொலிஸ் கட்டளைத் தளபதியின் வாழ்க்கைத் துணையையும் அவர்களது குழந்தையையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அமாக் செய்தி முகவர் நிலையம் தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக உரிமைகோரியுள்ளது.மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாரிஸ் நகரில் 130 பேர் பலியாவதற்கு காரணமான தாக்குதலையடுத்து அந்நதட்டில் அவசரகால நிலைமையோன்று பிறப்பிக்கப்பட்டது.
பிரான்ஸுக்கு முக்கிய அச்சுறுத்தலாகவுள்ள 100 க்கு மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கஸினியவ் தெரிவித்துள்ள நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லரோஸி அபல்லாவிடமிருந்து பயணக்கைதிகளை விடுவிக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியிருந்தது. நன்றி வீரகேசரி
பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிதாரி ஒரு தன்னினச்சேர்க்கையாளர் -முன்னாள் மனைவி தெரிவிப்பு
15/06/2016 அமெரிக்க ஒர்லான்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஓமர் மதீன் ஒரு தன்னிசேர்க்கையாளர் எனவும் அவர் பல தடவைகள் அந்த விடுதிக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவரது முன்னாள் மனைவி சிதோரா தெரிவித்தார்.

அவர் தன்னினசேர்க்கையாளர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியமை தீவிரவாத மத நோக்கிலான தாக்குதலாக நோக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு சிதோரா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டிலிருந்து பல்ஸ் விடுதிக்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டடிருந்த ஓமர் மதீன் இரட்டை வாழ்க்கை வாழும் நிலைக்குள்ளானதாக அவர் கூறினார்.
அவர் த்னினசேர்க்கையாளர்களுக்கு காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவும் கிறின்டர் மற்றும் ஜக்ட் இணையத்தளங்கள் மூலம் தன்னிசேர்க்கையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி அரட்டையடித்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

கச்சதீவை மீட்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் கோரிக்கை
15/06/2016 இலங்கை தமிழர்களின் நலன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் இலங்கை வசமுள்ள கச்சதீவை விரைந்து மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று டில்லிக்கு விஜயம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை அவரது டில்லி ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே 50 நிமிடங்கள் வரை நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழக நலன் அடங்கிய 29 அம்சங்கள் கொண்ட 96 பக்கக் கோரிக்கை மனுவை முதல்வர் பிரதமரிடம் வழங்கினார்.
அம் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும், தற்போது இலங்கை வசம் உள்ள 21 மீனவர்களையும் 92 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும் இந்தியா மீட்க வேண்டும். கச்சதீவில் தற்போது கட்டப்பட உள்ள அந்தோனியார் தேவாலயம் தமிழக மீனவர்களின் பங்களிப்போடு அமைக்கப்பட வேண்டும்.
மேலும் காவிரியம் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், பறக்கும் ரயிலையும், மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், முல்லைப்பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும், மாநில அரசு பரிந்துரைக்கும் இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண் டும், மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க வேண்டும், ஜி.எஸ்.டி. மசோதாவில் அ.தி.மு.க. கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், உணவு தானியங்கள் வழங்குவதை குறைக்க கூடாது, மருத்துவ நுழைவுத்தேர்வை அமுல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக்கூடாது. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்க எடுக்க வேண்டும், தமிழக கேபிள் டிவிக்குடிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கான மண் ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக் கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் உள்ளடக்கப் பட்டுள்ளன. நன்றி வீரகேசரி
பங்களாதேஷில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது
16/06/2016 பங்களாதேஷில் பயங்கரவாத சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 145 பேர் பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பங்களாதேஷில் தடைச்செய்யப்பட்ட ஜமாதுல் முஜாகிடீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த கைது செய்யும் நடவடிக்கைகளில் போதைபொருள் கடத்தல்,களவு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; நண்பியைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த 18 வயது யுவதி

அகிரா முர்ரே (18 வயது) என்ற யுவதியே தனது நண்பியான பதியன்ஸ் கார்ட்டரை (20 வயது) காப்பாற்றும் முகமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினம் அந்த இரவு விடுதிக்கு பதியன்ஸ் கார்ட்டர் தனது நண்பிகளான அகிரா முர்ரேயுடனும் தியரா பார்க்கருடனும் சென்றுள்ளார். அகிராவும் தியராவும் ஒருவருக்கொருவர் மைத்துனி உறவு முறையானவர்களாவர்.
ஓமர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய போது அகிராவும் தியராவும் அங்கிருந்து தப்பி இரவு விடுதியை விட்டு தப்பியோடியுள்ளனர். ஆனால் காரட்டரோ துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்கும் முகமாக ஏனைய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய ஏனையவர்களுடன் நிலத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

இந்நிலையில் இரவு விடுதியை விட்டு தப்பியோடிய அகிரா பார்க்கரைக் காணாததால் திகைப்படைந்து அவரைத் தேடும் முகமாக இரவு விடுதிக்கு திரும்பவும் வந்துள்ளார்.
இந்நிலையில் ஓமர் பார்க்கரையும் அகிராவையும் துப்பாக்கியால் சுட்டு சுமார் 3 மணித்தியாலங்களாக பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அகிரா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அதேசமயம் பார்க்கரும் தியராவும் காயமடைந்த நிலையில் உயிர் தப்பியுள்ளனர்.
தன்னைக் காப்பாற்ற வந்து தனது நண்பி உயிரிழந்தமை தன்னை பெரிதும் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பார்க்கர் தெரிவித்தார்.


எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்திய தரைக்கடலில் கண்டுபிடிப்பு
16/06/2016 பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து எகிப்திய கெய்ரோ நகருக்கு 66 பேருடன் பயணித்த எகிப்துஎயார் எம்.எஸ்.804 என்ற விமானம் கடந்த மாதம் 19 ஆம் திகதி காணாமல் போனது.
குறித்த விமானம் மத்தியத்தரைக்கடலில் சிதறி வீழ்ந்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் உறுதிப்படுத்த நிலையில், அதன் பாகங்கள் சில தற்போது மத்திய தரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாயமான எம்.எஸ்.804 விமானத்தில் சம்பவம் இடம்பெற்ற போது இரு குழந்தைகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 56 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் 3 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இருந்தாக எகிப்துஎயார் விமானசேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
குறித்த விமானத்தின் சில பாகங்கள் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




முதலையிடம் சிக்கிய குழந்தையின் சடலம் மீட்பு
16/06/2016 அமெரிக்கா-புளொரிடாவிலுள்ள டிஸ்னிலேன்டிற்கு (Disney Land) சுற்றுலாச் சென்றிருந்த போது முதலையொன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட 2 வயது குழந்தையின் சடலமானது இன்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
லேன் கிரேவ்ஸ் என்னும் குறித்த குழந்தை நேற்று தனது தந்தையுடன் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த போது குளத்தருகே இருந்த முதலையொன்று குழந்தையை நீரினுள் இழுத்துச் சென்றுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தை முதலையிடமிருந்து குழந்தையை காப்பாற்ற கடுமையாக முயற்சித்த போது குழந்தையை காப்பாற்ற முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பெண் எம்.பி. சுட்டு கொலை : பிரித்தானியாவில் பரபரப்பு சம்பவம்
17/06/2016 பிரித்தானியாவில் பெண் எம்.பி. ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியின் 41 வயதுடைய ஜோ காக்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுட்டப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரசாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டுமா - வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கான மக்களிடம் பொது வாக்கெடுப்பு, எதிர்வரும் 23-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்கவேண்டும் என்று குரல் கொடுத்துவந்த தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி. ஜோ காக்ஸ் (வயது 41) பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுட்டப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
ஒரு பெண் எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது.
பிரித்தானியா முழுவதும் அசாதாரணச் சூழல் நிலவி உள்ளநிலையில் வாக்கெடுப்பு பிரச்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜோ காக்ஸ் தனது மேற்கு யாக்ஷைரில், பிரிஸ்டோல் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலை ஜோ காக்ஸ் விலக்க முயன்ற போதே மேற்படி விபரீதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மோதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் ஜோ காக்ஸை சரமாரியாக சுட்டுள்ளார். பின்னர், தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நபரையும் சுட்டுவிட்டு அவர் தப்பியோடினார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஜோ காக்ஸ் உள்ளிட்ட இருவரை பொலிஸார் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி ஜோ காக்ஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 52 வயதுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர் கருத்து தெரிவிக்கையில், “குற்றவாளி ஜோ காக்ஸை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கத்தியால் தாக்கினார்,”
இதற்கிடையே பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தன்னுடைய பிரசார நிகழ்வுகளை ஒத்திவைத்துள்ளார். இதுபோன்று பிறதலைவர்களும், மக்களும் ஜோ காக்ஸ் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நன்றி வீரகேசரி