கர்ணனுக்காக ஒரு கேள்வி ! - பிச்சினிக்காடு இளங்கோ - (சிங்கப்பூர்)

.

pichi_ilango

பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு
துரோணர்

ஏகலைவனிடம்
கட்டைவிரல்வாங்கிய
காரியவாதி

நிழலைவணங்கி
நேர்மையாய் வளர்ந்த
ஏகலைவனுக்குத்
துரோகம்செய்த
துரோகி

வேடம்போடத்தெரியாத
வேடனுக்கு
துரோணர் குரு துரோகி
துரோகி குரு

அவரிடம் கற்ற
அரசகுமாரர்களில்
தனித்தும்
தினித்துவத்தோடும்
விளங்கினான் அர்ச்சுனன்



கற்றதில் கவனமும்
குரு பக்தியும்
நிறைந்தவன் அர்ச்சுனன்

குருவிடம் கற்ற
வித்தைகளை அரங்கேற்றும்
நிகழ்வு நடந்தது
மன்னர்கள்
மன்னர்கள் அறிஞர்கள் ஆசிரியர்கள் சான்றோர்கள்
படைக்கல வல்லவர்கள் வல்லுநர்கள் மற்றும்பலர்
முன்னிலையில்
அரங்கேற்றினர் வித்தைகளை

அனைவரும் வியக்க
அர்ச்சுனன்
வித்தைகள் காட்டினான்
வில்லால்

துரோகத்தின் வடிவம்
துரியோதனன்
அர்ச்சுனனின் ஆற்றலைக்கண்டு துடித்தான்
பொறாமையால்
பொங்கிவழிந்தான்

அர்ச்சுனனைக் கண்டு
திடீர்மின்னலாய்
கர்ஜித்தான் கர்ணன்

வில்லெடுத்து என்னோடு
வித்தைகாட்டென்றான்

சபையில் சலசலப்பு
துரியோதனனுக்கு
உள்ளத்தினுள்ளே
கிளுகிளுப்பு

கரடிபோல் கர்ணன்
வந்த்தாய் எண்ணி
முகவரி கேட்டார்கள்





மக்கள் முன்னிலையில்
திறன்காட்டவிடாமல்
தகுதிகேட்டும்
குலம்கேட்டும்
குற்றவாளியாக்கினார்கள்

சூரியனுக்குப் பிறந்தவனை
சூதகனுக்குப்பிறந்தவனா?
ஏளனம் செய்தார்கள்

தேரோட்டி மகனா?
எங்கள்முன் நிற்பது?
எங்களைப் போருக்கு அழைப்பது?
துள்ளிக்குதித்தார்கள்
எள்ளிநகைத்தார்கள்
கர்ணனை
மனம்குமையவைத்தார்கள்

குலம்கேட்ட கொடுமையால்
கர்ணன்
முகவரி சொல்லமுடியாமல்
முகம்வாடிப்போனான்

காலம்கருதி
ஞானமிகுக் கேள்விக்கணைகளைக்
கேட்டான் துரியோதனன்

பிறப்பில் இல்லை பெருமை
செய்யும் செயலில்தான்
உள்ளது பெருமை என்றான்

அங்கதேசத்து அரசகுமாரனாக்கி
அறிவித்தான்
அரவணைத்தான் துரியோதனன்


பகலவன் மறைந்ததால்
அரங்கேற்றம் முடிந்தது

எனினும்
கர்ணனுக்காக
தாய்க்குப்பிறக்காத குருவும்
தந்தைக்குப்பிறக்காத
தந்தைமுனிலையில்
பாண்டுக்குப்பிறக்காத
பாண்டவர்களுமா?
கர்ணனைக் குலம்கேட்பது? என
ஒருகேள்வி கேட்டிருந்தால்
என்னபதில் கிடைத்திருக்கும்?

(தமிழ்ப்பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்,பேராசிரியர் தி.வேங்கடகிருஷ்ணயங்கார்,
இலக்கியத்தென்றல் வ.ஜோதி எழுதிய ம்காபாரத உரைபடித்துக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சிந்தனையில் விளைந்த கவிதை. 20.05.2014)

Nantri: puthu.thinnai.com/