மழை காரணமாக கடும் வாகன நெரிசல்
சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் பெற்றோலியம்இபார உலோகங்களினால் மாசடைந்தமைக்கு சான்றுகள் இல்லை
பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி
பொலிஸாரின் உதவியுடன் காணி ஆக்கிரமிப்பு : மட்டு.வில் மறியல் போராட்டம்
117 நீதிபதிகளுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்
கொழும்பில் மழையால் ஒருவர் பலி ; இளைஞரைக் காணவில்லை
வாஸ் உள்ளிட்ட அறுவர் மனுத் தாக்கல்
கோயில், மதுபான சாலையில் திருட்டு : மன்னாரில் சம்பவம்
மழை காரணமாக கடும் வாகன நெரிசல்
08/12/2015 தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக நாடலாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக கொழும்பு - தும்முல்ல சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக சில வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. நன்றி வீரகேசரி
08/12/2015 சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் பெற்றோலிய பொருட்களாலோ அல்லது பார உலோகங்களாலோ மாசடைந்துள்ளன என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனினும் இந்த ஆய்வு சுன்னாகம் முழுவதுமுள்ள நிலத்தடி நீரிற்கும் பொருந்தும் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது என வடமாகாண சபையால் சுன்னாகம் நிலத்தடி நீர் ஆய்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பில் வடமாகாண சபையால் நிபுணர்குழு நியமிக்கப்பட்டு அந்த நிபுணர்குழுவினால் சுன்னாகம் நிலத்தடி நீர் ஆய்வுக்குட்படுத்தி அதன் அறிக்கை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
கையளிக்கப்பட்ட அறிக்கையிலே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுன்னாகம் பகுதியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களான நொதர்ன் பவர், உதுரு ஜனனி என்பவை காரணமாக நிலத்தடிநீர், எண்ணெய் கலப்பினால் மாசடைந்திருக்கின்றதா என்பதை அறிவதற்காக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட பகுதிகளை நேரடியாகச்சென்று பார்வையிட்டு சம்பந்தப்பட்ட மக்கள் சமூக நீதிக்குழுக்கள் உட்பட பல தரப்பினருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் கிரமமாக செய்வதற்குரிய ஆய்வுகள் திட்டமிடப்பட்டன.
இதனிடையே பொது மக்களினால் தொடரப்பட்ட வழக்கையடுத்து நீதிமன்ற தடையுத்தரவின் படி நொதர்ன் பவர் மின் உற்பத்தி நிலையம் மின் உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தியது.
மின் உற்பத்தி நிலையங்களை மையமாகக் கொண்டு 200 மீற்றர் இடைவெளியில் ஒன்றுக்கு வெ ளியே இன்னொன்றாக அடுத்தடுத்து வரையப்பட்ட2 கிலோ மீற்றர் வரையிலான வட்டங்களை தொடர்புபடுத்தி எட்டுத்திசைகளிலும் நேர்கோடாக வரையப்பட்ட ஆரைகளில் வட்ட _ ஆரை சந்திகளில் கிணற்று நீர் மாதிரிகள் ஆய்வுகூட சோதனைகளுக்காக எடுக்கப்பட்டன. மேலும் மின்பிறப்பாக்கி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் சந்தேகிக்கப்பட்ட ஏழு இடங்களில் மண் மாதிரிகள் ஆராயப்பட்டன.
இம்மாதிரிகளில் கொழுப்புஇ எண்ணெய்இ திரள்கொழுப்பு (கிறீஸ்) ( FOG (Fat, Oil, Grease) முதலிய பதார்த்தங்கள் இருப்பதை அறிவதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலும் ஐ.ரி.ஐ. (ITI) நிறுவனத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பார உலோகங்கள் மற்றும் நீரின் தரத்தை வெளிப்படுத்தும் அளவீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக நீரின் மேல் பகுதிகளிலும் அடிப்பகுதியிலும் உள்ள பென்சீன், தொலியின், ஈதைல் பென்சீன் சைலீன் (BTEX பீரெக்ஸ்) இரசாயன பதார்த்தங்களைக் கண்டறிவதற்காக ப்றொக் _ 4000 (FROG _ 4000) எனும் கருவியும் இறக்குமதி செய்யப்பட்டது. நீரின் மாதிரிகள் முன்பு குறிப்பிட்ட வட்ட_ ஆரை சந்திகளில் இருக்கும் கிணறுகளிலிருந்தே எடுக்கப்பட்டன.
மேலும் தேசிய கட்டடஆய்வு நிறுவனத்தின் (NBRO) உதவியுடன் நிலக்கீழ் ஊடுருவும் கதிர் வீச்சு (GPR -_ Ground Penetrating Radar) ஆய்வுகள் மூலம் நிலப்பரப்பின் கீழ் மட்டங்களில் எண்ணெய்க் கலப்பு சாத்தியங்களைக் கண்டறியும் புவியின் பௌதீகத் தன்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் நிலத்திலும் நீரிலும் கண்டறியப்பட்ட எண்ணெய் தொகுதிகளுக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் பாவிக்கப்படும் உராய்வு எண்ணெய், எரிபொருள் மற்றும் வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் முதலியவற்றுக்கும் இடையேயான தொடர்பைக் கண்டறிவதற்காக ஐ.ரி.ஐ. (ITI) நிறுவனத்தால் வாயு நிறப்பகுவியல் (GC (GAS Chromatography) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்ப பரிசோதனைகளில் மிக அதிகளவில் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) காணப்பட்ட பன்னிரண்டு கிணறுகளில் நீர்மாதிரிகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களால் எடுத்துச் செல்லப்பட்டு மொத்த ஐதரோ காபன்கள் அடங்கிய நீரின் பல்வேறு தன்மைகள் ஆராயப்பட்டன.
ஐ.ரி.ஐ. (ITI) நிறுவன முடிவுகளின்படி ஆய்வு செய்யப்பட்ட 82 மாதிரிகளில் 13 மாதிரிகளில் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) அளவு ஆகக்கூடிய அனுமதிக்கப்பட்ட அளவான 2 மி.கி.ஃ லீட்டர் ஐ விட அதிகமாக காணப்பட்டது.
ஆனால் யாழ். பல்கலைக்கழக மற்றும் ஐ.ரி.ஐ. நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட கிணற்று நீர் மாதிரிகளை ஆய்வு செய்த அவுஸ்திரேலிய அமைப்பின் ஆய்வுகளின்படி எந்த மாதிரிகளிலும் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG)கண்டறியப்படவில்லை. யாழ். குடாவின் தென்மராட்சி, வடமராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளிலும் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) நியம அளவிலும் அதிகமாகக் காணப்பட்டதாக யாழ்ப்பாண ஆய்வில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இவ் கொழுப்பு, எண்ணெய்திரள் கொழுப்பு(கிறீஸ்) (FOG) பரிசோதனைகளில் அவுஸ்திரேலிய ஆய்வுமுறை மிகவும் துல்லியமானது.
எந்தவொரு மாதிரியிலும் பென்சீன், தொலியின், ஈதைல்பென்சீன், சைலீன் (BTEX) அனுமதிக்கப்பட்ட ஆகக்கூடிய அளவிலும் பார்க்க அதிகமாக காணப்படவில்லை. எனவே எந்த ஒரு கிணற்று நீர் மாதிரியிலும் தீங்கு விளைவிக்கக்கூடிய அளவில் பெற்றோலிய பொருட்கள் இல்லை என்பது புலனாகிறது. அவுஸ்திரேலிய அறிக்கையின் படி எந்த ஒரு நீர் மாதிரியிலும் பெற்றோலிய மொத்த ஐதரோகாபன்கள் கண்டறியப்படவில்லை. மேற்கூறப்பட்ட பரிசோதனை முடிவுகளில் இருந்து நீர் மாதிரிகளில் காணப்பட்ட கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) ஆனது பெற்றோலிய பொருட்களுடன் சம்பந்தமில்லாத வேறு மூலங்களில் இருந்து வந்திருக்கலாம் என்பது தெளிவாகின்றது.
பார உலோகங்களில் நாகம் மட்டுமே அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவிலும் பார்க்க மிகவும் குறைந்த அளவிலேயே ஒரே ஒரு நீர் மாதிரியில் கண்டறியப்பட்டது. ஐம்பது வீதமான நீர் மாதிரிகளில் நைத்திரேற்றுகள் அனுமதிக்கக் கூடிய அளவான 50 மி.கி.ஃ லீற்றர் அளவை விட அதிகமாக காணப்பட்டது. அவுஸ்திரேலிய ஆய்வுகளின் படி 100மூ நீர் மாதிரிகளிலும் கொலிபோம்இ ஈ.கோலை நுண்ணுயிர்கள் காணப்பட்டன. இது எல்லா கிணற்று நீரிலும் மலக் கழிவுகள் கலந்திருக்கலாமென குறிக்கின்றது.
நீரின் வன்மைத் தன்மையானது 100% மான கிணற்று நீர் மாதிரிகளிலும் நியம அளவை விட அதிகரித்துக் காணப்படுகின்றது. குடாநாட்டு புவியியல் தன்மையில் சுண்ணாம்புப் பாறைகள் செறிந்து காணப்படுவதால் இம்முடிவுகள் ஆச்சரியப்படக்கூடியதொன்றல்ல.
நிலக்கீழ் ஊடுருவும் கதிர்வீச்சு (GPR) ஆய்வின் படி நிலத்தின் கீழ் பெற்றோலிய மாசுகள் அண்மைக்காலங்களில் ஏற்பட்டதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாகவே காட்டுகின்றது. எனினும் விரிவான ஆய்வு தேவை என பரிந்துரைக்கப்படுகின்றது.
நொதர்ன் பவர் மின்நிலையத்தை அண்மித்த நில மேற்பரப்பில் கழிவு நீர் எண்ணெய் விடப்பட்டதால் அவ்விடத்தில் நிலம் எண்ணெயினால் மாசடைவதை வாயு நிறப்பகுவியல் (GC) ஆய்வுகளும் சுற்றாடல் கணக்காய்வுகளும் உறுதி செய்கின்றன. சில இடங்களில் மண் மாதிரிகளில் காணப்பட்ட எண்ணெயின் நிறப்பகுவியல் (GC) வரைவுகளும் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட எண்ணெய் மற்றும் உராய்வு எண்ணெய்களின் வாயு நிறப்பகுவியல் (GC) வரைவுகளும் ஒத்திருக்கின்றன. சந்தேகிக்கப்பட்ட ஒயில் குளம், எண்ணெய் சேமிப்பு தாங்கிகள் முதலான வேறு இடங்களிலும் 1- 2மீற்றர் வரை ஆழத்தில் நிலத்தில் எண்ணெய் கலந்து காணப்படுகின்றது. எனினும் ஆழமான பகுதிகளில் காணப்பட்ட எண்ணெய்க்கும் தற்போதைய மின்பிறப்பாக்கிகளில் இருந்து வெளிப்படும் எரிபொருள் எண்ணெய், உராய்வு காப்பு எண்ணெய்க்கும் இடையே ஒற்றுமை காணப்படவில்லை.
நில மட்டத்திலிருந்து 30 செ.மீ கீழ் மாசடைந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் எடுத்த மண் மாதிரிகளினதும் 2 மி.கி/ லீற்றர் அளவுக்கு அதிகமாக எண்ணெய் இருந்து கிணற்று நீர் மாதிரிகளினதும், ஜீ.சி. (G.C maps) வரைவுகளில் 24.5 நிமிட சோதனை நேரத்தில் ஒத்த உயர்வினை காட்டின. இது இரு இடங்களிலும் ஒரே பதார்த்தம் இருப்பதையோ அல்லது வெவ்வேறு மூலங்களில் இருந்து அதே பதார்த்தம் உருவாகியிருப்பதையோ குறிக்கலாம்.
எனினும் இவ்வுயர்வு (Peak) மின் பிறப்பாக்கிகளில் இருந்து வெளியேறிய எரிபொருள், உராய்வுக்காப்பு எண்ணெய், கழிவு எண்ணெய் என்பவற்றை ஒத்து காணப்படவில்லை.
இவற்றுக்கு உதுரு ஜனனியை அண்மித்த வெளிகளிலும் கிணற்று நீரிலும் காணப்பட்ட காபன் துகள்கள் ஒரு காரணியாக இருக்கலாம். இவை மின்பிறப்பாக்கிகளின் புகையுடன் வெளிவருகின்ற நோர்வே நிபுணர்களின் அறிக்கையில், கிணற்று நீர் பரப்புக்களில் மிதந்த மினுமினுப்பான படலம் சுண்ணாம்பு சார்ந்தது என கூறப்படுகின்றது.
சந்தேகப்பட்ட இடங்களிலிருந்து எடுத்த மண் மாதிரிகளில் எண்ணெய் உயர்ந்த அளவில் காணப்பட்டதோடு மின்பிறப்பாக்கிகளின் எண்ணெய் மாதிரிகளுடன் ஒத்திருந்தது. எனினும் இவற்றில் பென்சீன், தொலியின், ஈதைல்பென்சீன், சைலீன் (BTEX) மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. எனவே, ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தபடி பென்சீன், தொலியின், ஈதைல்பென்சீன் சைலீன் பீடெக்ஸ் (BTEX) ஆனது எளிதில் ஆவியாகுமென்றோ எமது காலநிலைகளில் வெகுவாக சிதைவிற்குட்படும் என்றோ ஏற்கவேண்டியுள்ளது.
இதிலிருந்து பீடெக்ஸ் (BTEX) மண்ணூடாக நிலத்தடி நீரை சென்றடையும் வாய்ப்புக்கள் அரிது என்பது தெளிவாகின்றது. வாயு நிறப்பகுவியல் (GC) மொத்த ஐதரோ கார்பன்கள், பார உலோகங்கள், பீடெக்ஸ் அனைத்தும் இணைந்த ஆய்வானதே நிலத்திலும் நீரிலும் பெற்றோலிய மாசை நிர்ணயிப்பதற்கு பொருத்தமானதெனக் கூறலாம்.
இவ்வாய்வுகள் சுன்னாகம் பகுதியில் கிணற்று நீர் பெற்றோலிய பொருட்களாலோ அல்லது பார உலோகங்களாலோ மாசடைந்துள்ளன என்பதற்கான சான்றுகள் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. எனினும் சுன்னாகம் நிலத்தடி நீரின் ஓட்டம் வேறுபட்ட தன்மைகள், பரப்பளவு என்பவற்றைக் கருத்தில் எடுக்கும் போது இந்த ஆய்வு சுன்னாகம் முழு நிலத்தடி நீரிற்கும் பொருந்தும் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது.
முழுக்குடாநாட்டிற்கும் நிலத்தடி நீர் நிலைகள் குறித்த ஒரு முழுமையான விரிவான ஆய்வு திட்டமிடப்பட வேண்டும் என்பது முன்மொழியப்படுகின்றது. தொடர்ச்சியான நீர் ஆய்வுகள் செய்யக்கூடிய ஆய்வு நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவேண்டியது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது. நிலம், நீர் மாசடைவதை தவிர்க்கும் வகையில் பொது மக்களினதும் அரசஇ தனியார் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் இருக்கவேண்டியது முறைமையான நீர்முகாமைத்துவத்திற்கு அவசியமாகும். விரைந்து வருகின்ற காலநிலை மாற்றங்களுக்கும் கடல் மட்ட உயர்விற்கும் முகம் கொடுக்கக் கூடிய விதமாக இன்னும் சிறப்பான நீர் முகாமைத்துவம் இன்றைய அவசியமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி
07/12/2015 பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்றைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம் பெற்றன. வீதி நாடகம், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல் என்பனவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஏ.என்.எச்.நிறுவனத்தின் அனுசரணையுடன் மெதடிஸ்த திருச்சபை புகலிடம் ஏற்பாடு செய்த இவ் ஆர்பாட்டம் மட்டக்களப்பு கோட்டைமுனையிலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.
அங்கு வீதி நாடகமும் இடம்பெற்றன. அத்துடன் வன்முறையற்ற சமுகத்தை உருவாக்க ஒன்றிணைவோம் என்பதை அடையாளப்படுத்தி கைகளில் பட்டிகள் அணிவிக்கப்பட்டதுடன் செம்மஞ்சள்நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன. நன்றி வீரகேசரி
பொலிஸாரின் உதவியுடன் காணி ஆக்கிரமிப்பு : மட்டு.வில் மறியல் போராட்டம்
09/12/2015 மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில் காணிகள் திட்டமிட்டு பொலிசாரின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை கண்டித்து பிரதேச வாசிகள் இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்னால் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கிராமத்திலிருந்து பஸ் வண்டி மூலம் மாவட்ட செயலகத்திற்கு வந்த கிராம வாசிகளை பொலிஸார் மாவட்ட செயலகத்தினுள் செல்லவிடாது பொலிஸார் தடுத்தபோது கதவிற்கு வெளியிலிருந்து அரசாங்க அதிபரை சந்திக்க சந்தர்ப்பம் தருமாறு கோரி போராட்டம் நடாத்தினர்.
இருப்பினும் பொலிஸார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தமையால் வெளியில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிசாரின் உதவியுடன் தங்களது காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் அவற்றை தடுத்து நிறுத்துமாறு கோரியுமே இப்போராட்டம் நடாத்தப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
பெரும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நன்றி வீரகேசரி
117 நீதிபதிகளுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்
09/12/2015 சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 18 நீதிபதிகள் உள்ளிட்ட 117 நீதிபதிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தல் நீதிச் சேவை ஆணைக்குழு ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களில் முக்கியமான பல வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவோரும் உள்ளடங்குகின்றனர்.
நீதிச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ள குறித்த இடமாற்றங்களின் பிரகாரம்,
தற்போது மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் டி.எல்.ஏ.மனாப் வவுனியா மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். கல்முனை மாவட்ட நீதிவான் எம்.பி.மொஹிதீன் மட்டக்களப்பு மாவட்ட நீதிவானாக இடமாற்றப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் திருகோணமலை மாவட்ட நீதிவானாகவும், பருத்தித் துறை மாவட்ட நீதிவான் கணேசராஜா மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியா மாவட்ட நீதிபதிவீ.ராமகமலன் கல்முனை மாவட்ட நீதிபதியாகவும், திருகோணமலை மாவட்ட நீதிபதி டி.ஜே.பிரபாகரன் கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாகவும், கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜூட்சன் மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதியாகவும் வாழைச்சேனை மாவட்ட நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவானாகவும், மல்லாகம் மாவட்ட நீதிபதி சதீஷ்தரன் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும், யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் பி. சிவகுமார் பருத்தித் துறை மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் மல்லாகம் மேலதிக மாவட்ட நீதிபதியாக உள்ள திருமதி ஜே.கருப்பையா யாழ். சிறுவர் நீதிமன்றின் நீதிபதியாகவும் பொத்துவில் மாவட்ட நீதிபதி ஐ.பி.ரஸாக் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் வவுனியா மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாகவும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எச்.எம்.எம்.பசீல் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி எம்.ஐ.நஹாப்தீன் பொத்துவில் மாவட்ட நீதிபதியாகவும் நீதிவான் பயிற்சிக் நிறுவனத்தின் நீதிபதி என். கந்தசாமி அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக 5 மாணவர் கடத்தல், வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் மற்றும் நிதிக் குற்றங்கள் தொடர்பிலான பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மேலதிக நீதிவான் நிரோஷா பெர்னாண்டோ கொழும்பு பிரதான நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போதைய கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கொழும்பு மேலதிக நீதிவான் ஏ.டி.என்.பெர்னாண்டோ நீர்கொழும்பு மாவட்ட நீதிவானாகவும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் மாத்தறை மாவட்ட நீதிபதியாகவும் கோட்டை மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே பாணந்துறை நீதிவானாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் யாவும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி கொழும்பில் மழையால் ஒருவர் பலி ; இளைஞரைக் காணவில்லை
10/12/2015 சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான மழை பெய்துவரும் நிலையில், கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடும் மழையினால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் மாதம்பிட்டி பகுதியில் வீடொன்றின் மதில் உடைந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் கிராண்ட்பாஸ் கெத்தாராம விளையாட்டு மைதானப் பகுதியில் உள்ள மெல்வத்த கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு 19 வயதான இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று மணி முதல் கொழும்பில் கடும் மழை பெய்தது. இதன் போது மாதம்பிட்டி பகுதியில் வீடொன்றின் மதில் உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது இடிபாடுகளுக்குள் சிக்குண்ட 57 வயதான பெண்ணொருவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அனுலாவதி எனப்படும் குறித்த பெண் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே கிராண்ட்பாஸ் கெத்தாராம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் மெல்வத்த கால்வாயில் விழுந்த பந்தினை எடுக்க முயற்சித்த 19 வயதான இளைஞர் ஒருவரும் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். சம்பவம் இடம்பெறும் போது மழையுடன் கூடிய காலநிலை இருந்துள்ளதுடன் கால்வாயின் நீர் மட்டமும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் அபீல்ட் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் நேற்று மாலை 5.00 மணியாகும் போதும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவரைத் தேடி பொலிஸ் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். நன்றி வீரகேசரி
வாஸ் உள்ளிட்ட அறுவர் மனுத் தாக்கல்
10/12/2015 வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி வர்த்தகர் முஹமட் சியாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கோயில், மதுபான சாலையில் திருட்டு : மன்னாரில் சம்பவம்
10/12/2015 தலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பேசாலையில் கோவில், மதுபானசாலை ஆகிய இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தலைமன்னார் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலையிலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானக் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் கோயில் மூலஸ்தானத்தில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சிலைகளில் இருந்த அம்மன் தாளி, இயந்திரங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
அத்துடன் மூலஸ்தான பகுதிக்குள் இருந்த அலுமாரியையும் உடைத்து அதற்குள் இருந்த பொருட்களையும் களவாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதி எவ்வளவு என்று கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு கோவில் குருக்கள் பூசை செய்ய சென்றவேளையிலே இவ் சம்பவத்தைக் கண்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதேவேளை, கோவிலுக்கு சற்றுத் தூரத்தில் இருக்கும் மதுபான விற்பனைசாலை ஒன்றில் முன் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் மதுபான போத்தல்கள் மற்றும் இருபதாயிரம் ரூபா பணத்தையும் களவாடிச் சென்றுள்ளதாகவும் களவாடப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தலைமன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தலைமன்னார் மற்றும் பேசாலை பொலிசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது விடயமாக இதுவரைக்கும் எவரையும் கைது செய்யல்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி