கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு

.

ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.
இலங்கை வானொலியிலும்  அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும்  நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான  அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் - தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.
தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.
இவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது.
இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1970 களில் ஈழத்து இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அறிமுகமான இவர் - பின்னாளில்மத்திய கிழக்கிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருப்பவர்.
1989  இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தொடர்ந்து கலை - இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்டவர்.
 மெல்பன் வானமுதம் வானொலியின் சார்பில் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தினால்  அருண். விஜயராணி இதுவரைகாலமும் மேற்கொண்ட வானொலி ஊடகசேவைக்காக   அண்மையில்  பாராட்டி கௌரவிக்கப்பட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்: முருகபூபதி
அவுஸ்திரேலியா