மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை

மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 11 

நோர்வே நக்கீரா (திலீபன் திருச்செல்வம்)நோர்வே


வரலாற்றுச் செதுக்கலில் நாளை
வரமாய் எம்பெயர் செப்பப்படும் – மொழிக்கலப்பில்
குறளாறாய் தமிழ் குறுமாயின் குறுகுமாலை
குவலயத்தில் பெயர் கருக்கப்படும்
மலரும் முகம் பார்க்கும் காலம் – வரலாற்றில்
புலரும் புதுத்தமிழ் என்று கூறும்
வரவு வைத்து ஓடும் ஆறே வரலாறு – தமிழில்
உறவு வைத்து ஓடுவதே எம் பேறு
பொதிகையிலே புதுமையுடன் பிறந்த மகள் – பூவுலகில்
பதிகையென தன்பாதம் பதித்த இவள்
அகத்தியன் கரம்பிடித்து கைவீசி ஒளிர்ந்த அகல் – அன்னிய மொழி
தரித்திரியன் தாழ்பணிய மறுத்திடுவாள் மங்கையிவள்
கங்கைமுதல் கடாரம் வரை வெற்றிவாகை சூடினாள்
இமயம்முதல் குமரிவரை முத்தமிழாய் ஆடினாள்
இதயமெங்கும் இன்னுயிராய் உணர்வுகளில் ஏறினாள் – புது
கமலமுகம் மலருமொரு காலமதைத் தேடுவாள்
சங்கம் வைத்து சாகரமாய் வளர்ந்தவளே
சங்காரம் சகயமென சமயமனம் சமைத்தவளே
ஓங்காரப் பொருளாய் „ஓம்’ என்று ஒலித்தவளே – எதிரிமொழிகள்
அகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே
நோர்வே நக்கீரா (திலீபன் திருச்செல்வம்)நோர்வே.

மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 10 

செல்வி.சறீகா சிவநாதன், ஜேர்மனி


ஒவ்வொரு கனவும் மெய்யாகும்
இந்த விதைகள் உறங்கப் போவதில்லை
நோடி நேரம்கூட இவை
சாத்தியமற்றதாக இருக்கப் போவதில்லை
சூழ்நிலைகள் நமக்கு எதிராய் இருக்கையிலும்
சுழலும் சிந்தனையில் புது வழிகள் பிறந்திடட்டும்
தன்மேல் உள்ள நம்பிக்கையில் தானே
மலைகள்கூட இங்கு நகர்ந்திருக்கு
வலிதாண்டி விதி மாற்றும் விடியலுக்கு மட்டும்
வடிகட்டி திறமையை தேர்ந்தெடுக்க முடியும்
கற்களை மிதித்து மற்றவரை மதிப்பவர்க்கு மட்டும்
நிமிர்ந்து நின்று பணிவோடு வெற்றி ஏந்த முடியும்
மலரும் முகம் பார்க்கும் காலம்
சிதறுண்டு போகும் நம் வழித் தடைகள்
விழிவழியே இரசித்திடும் பரிணாமம்
இனி கையசைவிலே வசமாகும் காலம்
கீழே விழுகின்ற நொடிகள் யாவும்
மேலே காணும் இமயத்துக்காய் இருக்க வேண்டும்
இணைந்தே உலகில் சாதனைகளை செதுக்கிச் செல்வோம்
வரலாற்றின்; செதுக்கலில் நம் பெயர் நாளை செப்பப்படும்.
செல்வி.சறீகா சிவநாதன், ஜேர்மனி

மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 9 

மாலினி மாலா,ஜேர்மனி


இனவழியறிவோடு
சிகரத்துக் கேகுவோம்
முகவரிகள் நாம் பதிக்க
முகமூடிகள் அகற்றிய
முழுமனித பாதைகளின்
முதல் வழியில்
தடம் பதிப்போம்.
கனவுகள் வரைந்த
காட்சிகளின் பாதைகளில்
உணர்வுகளை வழிநடத்தி
உள்ளங்களை வென்றெடுத்து
ஒன்றிணைந்த வேள்விகளால்
உயிர் கொடுத்தேனும்
உச்சங்கள் நாம் தொடுவோம் .
வாழ வந்த பூமியிலே
வாதங்களை வளர்த்து நிற்கும்
பேதங்களை களைந்து விட்டு
வந்து வாழ்ந்த காரணத்தை
சென்ற பின்னும்
சிறப்பில் வைக்கும்
சிகரங்களாய்
செதுக்கிச் செல்வோம்.
மாலினி மாலா,ஜேர்மனி


மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 8 

திருமதி.வேதா இலங்காதிலகம்


வர வழி விடு தாயே
ஈர முத்தங்களாக இன்பங்களை இனியாவது
அரங்கேறிய துன்பங்கள் எமது வாரிசுகளை
உரசியரசகட்டில் ஏற வேண்டாம்
தாய் மொழியைப் பேணி ஊட்டி
தீய்ந்திடாது நம் பண்பாடு காட்டி
வாய்மையாய் வாழத் திடம் ஊட்டி
சேய்களைத் தரவைரமாக வளர்க்கலாம்
தாயகப் பெருமை, சிறுமைகள் அனைத்தையும்
சேயகத்தில் ஊட்டித் தேசியம் வளர்த்தும்
நாயகனாக (நாயகியாக) முளைவிடும் முல்லை அரும்புகளையும்
வையகம் போற்றும் விருட்ச வேராக்கலாம்
மனிதனை மனிதனாக மதித்து உண்மையில்
மனிதநேயம் பேணக் கற்றுக் கொடுத்தால்
வனப்பான வாழ்வொழுக்கம் சீராக உயரும்
இனிதான சுவாசம் வானவிற் கனவுகளாயுயரும்
தனமான தன் வார்த்தை செயலில்
கன துணிவு கொண்டு துன்ப
மனவிருட்டின் தடமழித்து உற்சாகம் மொண்டு
இன வழியறிவோடு சிகரத்திற்கேகுவோம்.
திருமதி.வேதா இலங்காதிலகம்


மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 7 

ஆதவன் கதிரேசர்பிள்ளை, டென்மார்க்

இனம் புரியாத ஏக்கம்
இறுதிவரை தொடருமா
கண்ணின் இமையான தாயவளை
பணிவிடைகள் செய்யாமல்
பாதி வழியில் விட்டு வந்தோம்
ஓடாய் உழைத்த தந்தைக்கு
கடைசிவரை கடமையே செய்யாமல்
பாசத்தை கொட்டி வளர்த்த பாட்டன் பாட்டிக்கு
பயணமே சொல்லாமல் ஓடி வந்தோம்
எங்கிருந்தோ என்னை மனைவியாக்கி
இறுதிவரை இணையான கணவனுக்கும்
முடிந்தவரை கடமையை செய்யும் பாக்கியம்
இல்லாமல் செய்யமால் போகும்படி
காலதேவன் இடையில் கதையை முடிப்பானோ
இல்லை தேடி வந்து தடுப்பானோ
தேடித் தேடி செய்தவர்களும்
பார்த்துப் பார்த்து செய்தவர்களும்
போலியாக கூட ஒரு நன்றி
சொல்லாமல் போன வருத்தம்
என்றும் வலியாய் இதயத்துக்கு
வலி இல்லாத வசந்தங்களை
வர வழி விடு தாயே
திருமதி. பாமா இதயகுமார், வன்கூவர், கனடா

மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 6  

ஆதவன் கதிரேசர்பிள்ளை, டென்மார்க்


மணம் வீசுமே மகிழம்பூவாய் எனினும்
தினமொரு காலநிலை
தினமொரு சலிப்பு நிலை
இனம்புரியா ஏக்கங்கள்
சூளு(ழு)மிப் புலப்பெயர் வாழ்வில்
கனவொன்று கண்டேனடி சகியே
கனவொன்று கண்டேன்.
ஓவியங்கள் சுவரெங்கும் கண் சிமிட்ட
ஓர் கூடம் கலைக்கூடம்
பாரிலெங்கும் நான் பார்த்தறியா
பசுங்கம்பளம் மீதில்
ஆண்களும் சரிநிகர்த்த பெண்களும்
சமமாய்
மனமொத்த காதலெனின்
வாழ முடியுமெனும்
சாதிப்பேயழித்து
அல்லா யேசு சிவன் விஸ்ணு
மேலும் இன்னோரன்ன சின்னச்சிறு
செப்படிவித்தைக் கடவுளரும்
மதவெறியகற்றி
மூட நம்பிக்கைகளை
மூலையில் கொளுத்தி
வீற்றிருந்த நேரமதில்
தேவதையொத்த பெண் உருவொன்று
‘இன்று முதல் இலங்கையில்
சோசலிஸ சமவாழ்வு மலரும்’என
வாழ்த்துச் சொன்ன
அந்தக் கனவிருக்கே
அதை இப்போ நினைத்தாலும்
இனம் புரியா ஏக்கங்கள்
ஆதவன் கதிரேசர்பிள்ளை, டென்மார்க்

  • மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 5 திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி

தொடுகை இல்லாத் தீண்டலாக
எதுகை மோனை இதமாய் சேர்த்து
உவமை உருவக அணிகள் கோர்த்து
அடுக்கு மொழியும் எடுப்பு நடையும்
அழகாய் கோர்ப்பதே அற்புதக்கவி
கருவிற்கு உயிர் கொடுத்து
கற்பனை தேன் கலந்து
ஒப்பனை வளம் சேர்த்து
ஓசையோடு நயமும் தென்றலாகி
ஓலித்து வருமே அழகியகவி
ஏண்ண அலைகளை எழுத்தில் வடிக்க
வண்ண சொற்களை வளமாக்கி
திண்ணமாய் தீட்டும் ஓவியம்
சந்தங்கள் சங்கதிகள் சேர்ந்து
சந்தோசக் கவியாகிப் படையலாகும்
முத்துச் சரங்கள் அட்சரமாகி
முல்லைப் பூக்கள் அச்சாரமாகி
மனதிற்கு மத்தாப்பாய்
மலரும் நினைவுகளாய்-கவி
மணம் வீசுமே மகிழம்பூவாய்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம்.
1.திரு.பொலிகை ஜெயா - சுவிஸ்
2.திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி
3.திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு
4.திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்
5.திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி
6.திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க்
7.திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா 
8.திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க்
9.திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி
10.செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி
11.திரு. நோர்வே நக்கீரா – நோர்வே
12.திருமதி.நர்மதா சஞ்சீபன் - யாழ்ப்பாணம்
13.டாக்டர் எழில்வேந்தன் - தமிழகம், இந்தியா
14.திரு. எஸ் தேவராஜா – டெனமார்க்
15.திருமதி. ரதி சிறீமோன் - டென்மார்க்
16.திருமதி. நிவேதா உதயராயன் - லணடன்
17.மருத்துவர். மதுராகன் செல்வராஜா – வவுனியா, இலங்கை
18.மருத்துவர். அகிலன் நடேசன் - காரைதீவு(மட்டக்களப்பு)இலங்கை 
19.திரு.இணுவையூர் சக்திதாசன் - டென்மார்க்
20.திரு. இணுவையூர் மயூரன் - சுவிஸ்
21.திரு.வண்ணை தெய்வம் - பிரான்ஸ்
22.திரு.சசிகரன் பசுபதி – லண்டன்
23.திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் - கைதராபாத், இந்தியா
24.திருமதி. கவிதாயினி நிலா – புத்தளம், இலங்கை
25.திரு.பார்த்தீபன் பத்மநாதன் - பிரான்ஸ்
26.திரு.வன்னியூர் செந்தூரன் - வன்னி, இலங்கை
27.திரு.நயினை விஜயன் - ஜேர்மனி
28.திரு.பகீரதன் அரியபுத்திரன் - கனடா
29திரு.மண் சிவராஜா – ஜேர்மனி
30.திரு. மட்டுவில் ஞானகுமாரன் - கனடா
31.திருமதி. சிவமேனகை – சுவிஸ்
32.திரு. ஆவூரான் - அவுஸ்திரேலியா
33.திரு.பசுபதிராஜா – ஜேர்மனி
34.திரு. தமிழ்முரசு பாஸ்கரன் - அவுஸ்திரேலியா
35.திருமதி. நகுலா சிவநாதன் - ஜேர்மனி
36.திரு. வேலனையூர் பொன்னண்ணா – டென்மார்க்
37.திரு. அம்பலவன் புவனேந்திரன் - ஜேர்மனி
38.திரு. சரவணன் - மலேசியா
39.திரு.ராஜ்கவி ராகில் - சிசில்தீவுகள்

திரு . கந்தையா முருகதாசன் - யேர்மனி 
திரு.இக.கிருஷ்ணமூர்த்தி  - யேர்மனி 

(இத்திட்டத்தில் இன்னும் பல படைப்பாளிகளின் பெயர்களையும் இணைக்கவிருக்கின்றோம்)
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
Tamil Writers Net Portal
Edited  by நிழலி 
தலைப்பு சுமேயின் விருப்பிற்கேற்றவாறு மாற்றப்பட்டுள்ளது
2 people like this

No comments: