வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டில் நாகர்கள் உருவாக்கிய கிணறு, நாகர்கல் கண்டுபிடிப்பு

.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாக அரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு மற்றும் நாகக்கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுத்துறை பேராசிரியருமான சி.பத்மநாதன், மற்றும் தொல்லியல் ஆய்வுக்குழுவினரால், வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய காணியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
   
இதுபற்றி பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகையில், இலங்கையின் பூர்வீக குடியினராக காணப்பட்ட தமிழர் மூதாதையரான ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாகவம்சத்தினர், தென்னிந்தியாவின் சோழ மண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற துறைமுகப் பட்டிணம் மூலமாக மட்டக்களப்பு தேசத்திற்கு கடல் வழிமார்க்கமாக குடியேறினர்.



இவ்வாறு கடல்மார்க்கமாக வந்த ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாக வம்சத்தினர், ஆற்று வழிமார்க்கமாகவும், தரைவழி மார்க்கமாகவும் தங்களது குடியேற்றங்களையும் குறுநில அரசுகளையும் நதிக்கரைக்கு அண்மையில் உள்ள உயர்வான இடங்களிலும், மலைச்சாரல்களிலும், காடுகளை எல்லைகளாக கொண்ட பிரதேசங்களிலும், வில்லு புல் நிலங்களிலும், வெட்டவெளி, சமவெளி நிலங்களிலும் நிறுவினர்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையாரடியில் நாகரால் நிறுவபட்ட குறுநில அரசானது கடல்வழி, ஆற்றுவழி, தரைவழி என்பவற்றோடு தொடர்வுடையதாகவும் காடுகளை எல்லையாகவும் சமவெளி நிலமாகவும் காணப்பட்டுள்ளது. இங்கு கண்டுபிடிக்கபட்ட கிணறானது 3அடி 3அடி பரப்பளவுடைய சதுரவடிவமும் 20அடி ஆழமுடைய கருங்கல் தூணினால் நிர்மாணிக்கப்படடுள்ளது. தூணின் வேள் நாகன் என்று தமிழ் பிராமி வரி வடிவம் காணப்படுகின்றது. 3அடி உயரமும் 2அடி அகலமுடைய நாக கல் காணப்படுகின்றது.


இதில் மணி நாகன் என்று தமிழ் பிராமி வரி வடிவம் காணப்படுகின்றது. கிணறுகள் மூலமாக நீரினை பெற்று பயன்படுத்தும் முறையுனையும் தோட்ட பயிர் செய்கையினையும் இங்கு குடியேறிய நாக வம்சத்தினர் உருவாக்கினர். இவ்விடம் நாகர்களின் வழிபாட்டு தலமாக காணப்பட்டதோடு கருங்கல தூணினால் ஆலயத்தை அமைத்துள்ளனர். ஆனால் பிற்காலத்தில் ஆலயத்தில் உள்ள தூண்களை எடுத்து மக்கள் இளைப்பாறும் அம்பலம் ஒன்று ஆலயத்திற்கு அண்மையில் அமைத்துள்ளனர்.
ஆனால் அம்பலத்தின் எச்சம் மட்டும் தற்போது காணப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கபட்ட சான்றுகள் கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவானவை எனவும் நாகரின் குறுநில அரசுப் பிராந்தியமாகவும் காணப்பட்டுள்ளது எனவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டார்.


nantri http://www.seithy.com/

No comments: