வவுணதீவில் கைக்குண்டுகள் மீட்பு
பதுளையில் கைக்குண்டு மீட்பு
புங்குடுதீவு மாணவி படுகொலை: கைதானவர்களை வைத்திய பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது பொது மக்கள் தாக்குதல்..!
முள்ளிவாய்க்காலில் சிவில் உடை தரித்த இனந்தெரியாதோர் நடமாட்டம் அதிகம்
தொழினுட்ப ஆய்வு கூடம்: திறப்பு விழாவில் ஏற்பட்ட சிக்கல்
புங்குடுதீவு கொலையாளிகளுக்கு மரண தண்டணை வழங்குங்கள்: கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
கயவர்களை கைது செய்யுமாறு கோரி ஆரையம்பதியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வித்தியா கூட்டுப்பாலியல் படுகொலை : போர்க்களமானது யாழ் நீதிமன்ற வளாகம்
யாழ் ஆர்ப்பாட்டம் தொடர்பில் 50 பேர் கைது
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து கண்டன ஊர்வலம்
புங்குடுதீவு சம்பவம்: மட்டு.வில் பாரிய ஆர்ப்பாட்டம்: பல்லாயிரம் பெண்களின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர்
யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் : கைதுசெய்யப்பட்ட 128 பேருக்கும் விளக்கமறியல்
வவுணதீவில் கைக்குண்டுகள் மீட்பு
18/05/2015 மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூழாவடிச்சேனை பகுதியிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.நஸீர் தெரிவித்தார்.
குறித்த இடத்திலுள்ள செங்கல் வெட்டுமிடத்தில் மண்ணைத்தோண்டிய போதே இக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குறித்த இடத்தில் மேற்படி கைக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
குறித்த பிரதேசம் முன்னர் விடுதலை புலிகளின்பூரண கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்தமையால் அவர்களால் புதைக்கப்பட்டதாக இருக்கலாமென நம்பப்படுகின்றது.
வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
பதுளையில் கைக்குண்டு மீட்பு
18/05/2015 பதுளை - போக்கடமுல்ல பகுதியிலுள்ள ஓடையிலிருந்து கைக்குண்டு ஒன்றினை பதுளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் மாட்டுக்கு புற்கள் அறுக்க சென்ற நபர் ஒருவர் இதனை கண்டு 119 என்ற விசேட இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி இத்தகவலை வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று கைக்குண்டை மீட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கைக்குண்டு எவ்வாறு இப்பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பதினை அறிந்து கொள்ளும் வகையில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
புங்குடுதீவு மாணவி படுகொலை: கைதானவர்களை வைத்திய பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது பொது மக்கள் தாக்குதல்..!
18/05/2015 புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது வைத்தியசாலை அருகில் கூடிய குறித்த நபர்களை தாக்கியுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்த சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்ட போது பொது மக்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி
முள்ளிவாய்க்காலில் சிவில் உடை தரித்த இனந்தெரியாதோர் நடமாட்டம் அதிகம்
19/05/2015 யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் ஆறாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் முள்ளி வாய்க்கால் கிழக்கு அ.த.க. பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம் பெருந்தொகையானவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது.
இதன்போது சிவில் உடைதரித்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இப்பகுதியெங்கும் அதிகமாக காணப்பட்டது. இந்நபர்கள் குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் வாகனங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு ஒளிப்பதிவும் செய்துகொண்டனர்.
இதனால் குறித்த நிகழ்வுக்கு வருகைதந்த பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டதோடு பலர் நிகழ்வில் கலந்துகொள்ளாது திரும்பிச் சென்றதாகவும் மக்கள் பிரதிநிதி கள் தெரிவித்தனர்.
அதேநேரம் இப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக பாது காப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப் பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தொழினுட்ப ஆய்வு கூடம்: திறப்பு விழாவில் ஏற்பட்ட சிக்கல்
19/05/2015 அங்கும்புறையில் அமைக்கப்பட்ட தொழினுட்ப ஆய்வுகூடம் இன்று அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமால் திறந்து வைக்கப்பட இருந்த நிலையில் மற்றுமொரு குழுவினர் முந்திகொண்டு குறித்த ஆய்வு கூடத்தை திறந்து வைத்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த ஆய்வு கூட நிலையத்தை இரண்டு மணித்தியாலத்திற்கு பின்னர் அமைச்சர் மீண்டும் திறந்து வைத்தார்.
கண்டி அங்கும்புறை தேசிய பாடசாலைக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்க திட்ட
மிடப்பட்ட நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மத்திய மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்
குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனுர மடலுஸ்ஸ, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் உள்ளிட்ட குழுவினர் பலவந்தமாக அங்கு சமூகமளித்து பலவந்தமாகவே அதனை திறந்தும் வைத்ததோடு ஊடக சந்திப்பொன்றையும் நடாத்தியுள்ளனர்.
இங்கு கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் குனதிலக்க ராஜபக்ஷ,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்தங்கிய பாடசாலைகளை முன்னேற்றும் நோக்குடன் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் பலவற்றை அமைத்ததாகவும், அந்த வரிசையில் அங்கும்புறை பாடசாலைக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் இககட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்த தொழில் தொழில்நுற்ப ஆய்வுகூடத்தை திறந்து வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த எந்த ஒரு உறுப்பினருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
அதே நேரம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரசேன பெயரையாவது பெயர் பலகையில் உள்ளடக்காததையும் தாம் வண்மையாக கண்டிக்கிறோம். அதனை எதிர்த்தே இன்று நாங்கள் இவ் ஆய்வு கூடத்தை முன் கூட்டியே திறந்து வைத்த்தாகவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
புங்குடுதீவு கொலையாளிகளுக்கு மரண தண்டணை வழங்குங்கள்: கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
19/05/2015 புங்குடுதீவில் மாணவி வித்தியா கடந்த வாரம் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு பின் கொலை செய்யப்பட்டதனை கண்டித்து கிளிநொச்சியில் இன்று சந்தை வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.
இன்று காலை ஒன்பது மணிக்கு வியாபார நிலையங்களை மூடி வீதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் புங்குடுதீவில் மாணவி வித்தியாவின் கொலையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு மரணதண்டணை வழங்குங்கள், கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்டதரணிகள் ஆஜராக கூடாது, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வனமுறைகள் நிறுத்தப்பட வேண்டும், உள்ளிட்ட பல கோசங்களையும் எழுப்பியதோடு பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
நல்லாட்சியில் பெண்கள் நாசமாக்கப்படுகின்றார்கள் சட்டமே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு அரசே உரிய நடவடிக்கையை மேற்கொள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
ஆர்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜர் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுபதிகாரி அவர்களிடமும், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கும் மகஜர்கள் வழங்கப்பட்டன. நன்றி வீரகேசரி
கயவர்களை கைது செய்யுமாறு கோரி ஆரையம்பதியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
20/05/2015 புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
பாடசாலைக்கு முன்பாகவுள்ள ஆரையம்பதி பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன் போது கயவர்களை கைது செய், வித்தியாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம், நல்லாட்சியில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?, போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாங்கியிருந்தனர்.
இதன் போது பாடசாலை அதிபர் மற்றும் ஆசியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
வித்தியா கூட்டுப்பாலியல் படுகொலை : போர்க்களமானது யாழ் நீதிமன்ற வளாகம்
20/05/2015 புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியலில் ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் அல்லது தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி யாழில் மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சுவிஸ் நபர் மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற போது அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டு நீதிமன்ற வளாகம் போர்க்களமானது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைமீறி சென்று நீதிமன்ற கட்டடத்தின் மீது கற்கள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டுமென்ற கோசத்துடன் மக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் வாகனங்கள், நீதிமன்ற கட்டிட தொகுதி என்பன சேதமடைந்துள்ளன.
அத்துடன் பொலிசார் இருவரும் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி பொலிசார் தடியடி நடத்தியபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் நீதிமன்ற வளாகமே போர்க்களமானது.
நன்றி வீரகேசரி
யாழ் ஆர்ப்பாட்டம் தொடர்பில் 50 பேர் கைது
20/05/2015 புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியலில் ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று யாழ் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது 36 மோட்டார் சைக்கிள்கள், 27 சைக்கிள்கள், 2 முச்சக்கரவண்டிகள் ஆகியனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து கண்டன ஊர்வலம்
20/05/2015 யாழ். புங்குடுதீவு மாணவி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை முஸ்லிம் பெண்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தலைமையில் அதன் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அங்கத்;தவர்கள் மற்றும் பெண்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது யாழ். புங்குடுதீவு மாணவி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்;.
ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்றி வீரகேசரி
புங்குடுதீவு சம்பவம்: மட்டு.வில் பாரிய ஆர்ப்பாட்டம்: பல்லாயிரம் பெண்களின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர்
21/05/2015 யாழ். புங்குடுதீவு மாணவி வித்யா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றது. மேலும் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்லாயிரம் பெண்கள் கையெழுத்திட்ட மகஜரும் அனுப்பி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பெண்கள் மாவட்ட பெண்கள் வலையமைப்பான சமாசம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
'சட்டமும் நீதியும் யாரை பாதுகாக்கும், சிறுவர் துஸ்பிரயோகத்தை உடன் நிறுத்துங்கள்' என வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நன்றி வீரகேசரி
யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் : கைதுசெய்யப்பட்ட 128 பேருக்கும் விளக்கமறியல்
21/05/2015 யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 128 பேரையும் இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரி நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றம், பொலிஸ் நிலையம், பொலிஸார் மீது தாக்குதல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 128 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 128 பேரையும் இன்று யாழ் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே அவர்களை இரண்டு வாரகாலம் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, 128 பேரையும் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு இடவசதியின்மையால் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து உடனயடியாக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment