ஈழத்து வில்லிசைக் கலைஞர் "கலா விநோதன்" சின்னமணி - ஓய்ந்த வில்லுப்பாட்டுக்கார் - கானா பிரபா

.


 ஈழத்து வில்லிசைக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட "சின்னமணி" ஐயா அவர்களின் இறப்புச் செய்தியை நண்பன் விசாகன் மூலம் அறிந்தேன்.

கோயில்கள் தோறும் வளர்த்தெடுக்கப்பட்ட இசை நாடக மரபில் வில்லுப்பாட்டு தனக்கெனத் தனியிடம் கொண்டு விளங்கி வருகின்றது.

இந்த வில்லுப்பாட்டுக் கலையானது ஆலயங்களிலே நெறிப்படுத்தப்பட்ட அனுபவம் வாய்ந்த வில்லிசைக் கலைஞர்களால் மட்டுமன்றி பள்ளிகள் தொடங்கித் தனியார் கல்வி நிலையங்கள் ஈறாக மாணவர்களும் இந்தக் கலை வடிவத்தை உள்வாங்கி வளர்த்தெடுத்து வந்தனர். எண்பதுகள் தொண்ணூறுகளிலே என் சம காலத்து மாணவருக்கு வில்லிசைக் கலையின் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் அமரர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சின்னமணி அவர்கள். புராண இதிகாசப் படைப்புகளை எடுத்துக் கொண்டு அவற்றை நகைச்சுவை என்ற தேன் தடவி ஆழ்ந்த இறையியல் கருத்துகளை வில்லிசையில் பாட்டும் கதையுமாகச் சொல்வதில் சின்னமணி சூரர். அது மட்டுமன்றி சமுதாய வாழ்வியல் குறித்த வில்லுப்பாட்டு நிகழ்வுகளையும் தன் பாணியில் சுவைபட வழங்கியவர். இதனாலேயே வயது வேறுபாடின்றி அவருக்கான ரசிகர் வட்டம் ஈழத்தைக் கடந்து இன்றும் இருக்கிறது.

ஈழத்தின் கலை மரபுகளின் வாழ்வியல் வடிவமாக சின்னமணி அவர்கள் விளங்குகின்றார். ஈழ மண்ணின் நினைவுகளை அசை போடும் போது தவிர்க்க முடியாது நம் எல்லோரது நினைவிலும் தங்கியிருப்பவர் இவர்.

ஈழத்தில் காலத்துக்குக் காலம்  பல வில்லுப்பாட்டுக் கலைஞர்களை உருவாக்கியிருந்தாலும் எங்கள் காலத்துக்கு முன்பிருந்தே சின்னமணி அவர்கள். நீண்ட நெடிய வில்லுப்பாட்டுக் கலை வரலாற்றின் விரூட்சமாக விளங்கியவர்.
அமரர் சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டு இசைப்பகிர்வின் ஒரு பகுதி காணொளியாக யாழ் சிந்து சாது கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இறுவட்டில் இருந்து
https://www.youtube.com/watch?v=Zr2zGGjcZ4M

கலா விநோதன் சின்னமணி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
நன்றி: அனலை எக்ஸ்பிறஸ் http://analaiexpress.ca/
அச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் அச்சூர்க்குரிசில் விருது பெறும் சான்றோன்.
சின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936 இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்ததன் வாயிலாக அச்சுவேலியை தனது வாழ்பதியாக்கிக் கொண்டார்.
சின்னமணி கணபதிப்பிள்ளை அரச சேவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1957 இல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ் பெற்ற நாடக மேதைகளான ரீ.கே.எஸ். சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடக நிகழ்வுகளில் பங்கு கொண்டார். கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட இவர் வண்ணை. கலைவாணர் நாடக மன்றத்தின் உருவாக்க உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் வில்லிசைத்துறையில் புகழ்பெற்றிருந்த திருப்பூங்குடி ஆறுமுகத்துக்குப் பக்கப்பாட்டுக் கலைஞராகவும் நகைச்சுவையாளராகவம் பணியாற்றிப் பின் அவரது ஆசீர்வாதத்துடன் 02.02.1968 இல் செல்வச்சந்நிதி சந்நிதானத்தில் தான் தலைமையேற்று முதல் வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தினார். தான் அமைத்த வில்லிசைக் குழுவுக்குத் தனது ஆதர்சக் கலைஞராகிய கலைவாணரின் பெயரைச் சூட்டினார்.

வில்லிசை என்றால் சின்னமணி என்னும் அளவிற்கு இவரது புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. தமிழ்ப் புராண, இதிகாச, காப்பியங்களில் இருந்து சமூகம் கற்க வேண்டிய செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புக்களில் மேற்கொண்டுள்ளார். வில்லிசையின் ஊடாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டிருக்கிறார். படித்தவர்களும் பாமரர்களும் இரசிக்கும் படியாக வில்லிசை மூலம் கதை சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது இவரது பலம் ஆகும்.
வில்லிசையில் மாத்திரமன்றி மரபு வழி நாடகத்துறையிலும் ஆளுகை பெற்றுள்ளார். காத்தவராயன் கூத்து மற்றும் இசை நாடகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் இவர் ஏற்கும் இயமன் வேடத்தைக் கண்டு சபையோர் கலங்குவர். அவ்வளவிற்குத் தன்னை மறந்து கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கும் சுபாவம் கொண்டவராகச் சின்னமணியை இனங்காட்டலாம்.

சின்னமணி நா.கணபதிப்பிள்ளையின் கலைச்சேவைகளுக்காகக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும் எண்ணிலடங்காதவை. வில்லிசை வேந்தன், வில்லிசை மன்னன், வில்லிசைப் புலவர், முத்தமிழ் மாமணி, வில்லிசை அரசன், வில்லிசைக் கலைஞானசோதி, பல்கலைவேந்தன், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், ஜனரஞ்சக நாயகன், கலாவினோதன் என்பன அவற்றுட் சிலவாகும். இவரது பெயரின் அடையாகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் கலாவினோதன் என்ற பட்டம் 30.06.2002இல் கனடாவில் வழங்கப்பட்டதாகும். 1998 இல் இலங்கை அரசின் கலாபூஷண விருதையும் 2003 இல் வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். சின்னமணியின் வாரிசுகள் இன்று எம்மண்ணில் வில்லிசைக் கலையை வளர்த்து வருகின்றனர். அச்சுவேலியின் கலை அடையாளம் சின்னமணி என்றால் மிகைப்படாது.

 ஈழத்து வில்லிசைக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட "சின்னமணி" ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைட்டும்.
நன்றி:

சின்னமணி அவர்களின் புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு : அனலை எக்ஸ்பிறஸ் இணையம்
 http://analaiexpress.ca/

வில்லுப்பாட்டுக் காணொளிப் பகிர்வு
Tamil Journalism



No comments: