கடினமான சவால்களை இன்னமும் இலங்கை சந்திக்க
வேண்டியேற்படும் : அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிஷா
அத்தநாயக்க கைது : பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்...!
சவால்களை எதிர்கொள்வதற்கு இணைந்து பணியாற்ற தயார்
கே.பி. க்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை
கடினமான சவால்களை இன்னமும் இலங்கை சந்திக்க வேண்டியேற்படும் : அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிஷா
03/02/2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குறுகிய காலத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். ஆனால் இலங்கை இன்னும் செய்யவேண்டிய பல கடின மான நடவடிக்கைகள் உள்ளன. மீண்டு வருவதற்கு பல கடினமான சவால்கள் இன்னும் காணப்படுகின்றன என்பதனை நாம் அறிந்துள்ளோம் என்று மத்திய மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல், ஊழலை தடுத்தல் மற்றும் நல்லாட்சியை முன்னிறுத்தல், அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பங்கேற்பினை உறுதி செய்தல் என்பவற்றில் பங்காளராகவும் நண்பரா கவும் இருக்கும் அமெரிக்காவை நம்பலாம். இலங்கையுடன் அமெரிக்கா உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மத்திய மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடிதன் பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சு அலுவலகததில் நேற்றுக்காலை இந்த சந்திப்பு நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் நிஷா பிஷ்வாலும் இதன்போது சுமார் ஒரு மணிநேரம் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தினர்.
நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த நிஷா பிஷ்வால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அத்துடன் இன்றுகாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிஷா பிஷ்வால் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஷ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்
இலங்கையின் ஜனநாயகம் தொடர்பில் உலகை பேச வைத்த சக்தியை கண்கூடாக காண்பதற்கு இலங்கைக்கு வருகை தந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புடைய தேர்தல் மற்றும் அது திறந்துவிட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களுக்காக இலங்கை வாக்காளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் செயலாளர் கெர்ரியும் விடுத்த வாழ்த்துச் செய்திகளை மீண்டும் நினைவுப்படுத்துகின்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது 100 நாள் இலட்சிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்வைத்துள்ளதுடன்இ மிகவும் குறுகிய காலப்பகுதியில் அவற்றில் பலவற்றை நிறைவேற்றியுமுள்ளனர்.
ஆனால்இ இன்னும் புரிய வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. அத்துடன் எதிர்கொள்ள வேண்டிய சிக்கலான சவால்கள் பலதும் உள்ளதை நாம் அறிந்துள்ளோம்.
பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல். ஊழலை தடுத்தல் மற்றும் நல்லாட்சியை முன்னிறுத்தல். அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பங்கேற்பினை உறுதி செய்தல் என்பவற்றில் எம்மை பங்காளராகவும்இ நண்பராகவும் இலங்கையானது அமெரிக்காவை நம்பலாம். இலங்கையுடன் அமெரிக்கா உள்ளது.
எமது நட்பு பல தலைமுறைகளைக் கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் அமெரிக்காவானது. 2 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்காவைப் போன்று வேறு எந்த நாடுகளும் அதிகளவில் இலங்கை உற்பத்திகளை கொள்வனவு செய்வதில்லை. வர்த்தகம் மற்றும் முதலீட்டினை மேம்படுத்துவதில் எமது பங்காளித்துவத்தை வளர்ப்பதற்கும். வலுப்படுத்துவதற்கும். எமது மக்கள். அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகங்கள் வர்த்தகங்கள் ஆகியவற்றுக்கு இடையில் உறவை வளர்ப்பதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
வெளிநாட்டு விவகார அமைச்சருடனான சந்திப்பின் போது. எனது அரசாங்கத்தின் சார்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஆர்வம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கப்பூர்வமான வழிவகைகளை கண்டறிவதில் அவருடனும். அரசாங்கத்துடனும் பணியாற்றுவதற்கான எமது ஆர்வத்தை தெரிவித்தேன்.
அத்துடன், அடுத்த வாரம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்யும் போது உங்களை சந்திப்பதிலும். எமது இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொடர்பை மேம்படுத்துவதிலும்இ ஆழமாக்குவதிலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஆர்வமாக உள்ளார் என்றார். நன்றி வீரகேசரி
அத்தநாயக்க கைது : பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்...!
03/02/2015 திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.யை பொலிஸார் கைது செய்தமை தொடர்பாக நேற்று பாராளுமன்ற சபைக்கூட்டத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தரப்பினருக்கு இடையே கடும் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டது.
சபாநாயகரின் அனுமதியில்லாமல் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டமை பாராளுமன்ற சட்டங்களை மீறிய செயல் என்று எதிர்க்கட்சியினரும் குற்றம் செய்த சந்தேக நபரொருவரை எம்.பி.யை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என ஆளும் தரப்பினர் வாதிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக சபாநாயகர் ஆராய்ந்து தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டுமென்றும் இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டனர்.
இதனை செவிமடுத்த சபாநாயகர் சமல் ராஜபக்ச இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து சபையில் தீர்ப்பை வழங்குவதாகவும் அறிவித்தார்.
இந்த வாத பிரதிவாதங்களின் போது திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி சபாநாயகரின் அனுமதியில்லாமல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறிய செயலாகும் என தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எம்.பி.யை பொலிஸாரால் கைது செய்ய முடியும் அதற்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை.
பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார கருத்து தெரிவித்த போது குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட எம்.பி. யொருவரை கைது செய்ய முடியாது என எங்கும் கூறப்படவில்லை. திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி பொய்யான அறிக்கையை தயாரித்து கையெழுத்திட்டு வெளியிட்டதினாலேயே கைது செய்யப்பட்டார்.
கடந்த காலங்களில் பல தடவை நானும் கைது செய்யப்பட்டேன். ஆனால், அப்போது சபாநாயகரின் அனுமதி பெறப்படவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச உங்களை கைது செய்த போது நல்ல வேளை நான் உள்நாட்டில் இருக்கவில்லை. ஆனால் அத்தருணத்தில் பிரதி சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றார். இதன் போது பேசிய பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க இது விடயம் தொடர்பாக ஆளும் தரப்பினர் எதிர்த்தரப்பினர் மத்தியில் தெளிவற்ற நிலை தோன்றியிருப்பதால் இதனை ஆராய்ந்து சபாநாயகர் தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டுமென்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் கடந்த கால பாராளுமன்ற தீர்மானங்கள் நடவடிக்கைகளை ஆராய்ந்து தீர்ப்பை வழங்குவேன் என்றார். நன்றி வீரகேசரி
சவால்களை எதிர்கொள்வதற்கு இணைந்து பணியாற்ற தயார்
05/02/2015 இலங்கையில் உண்மையாக, நிறைவேற்ற வேண்டியவை இன்னும் அதிகமாகவே உள்ளன. சவால்களை எதிர்கொள்வதற்கும், இலங்கையர்கள் தமது உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள உதவுவதற்கும் இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடனான எனது உரையாடலின் போது, இலங்கைக்குள் தமது வாக்காளர்களின் அமைதியான, செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு நல்லிணக்கம் மற்றும் அரசியல் உள்ளடக்கம் சார்ந்த அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கான அவர்களது கண்ணோட்டத்தினையும் தெரிந்து கொண்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் தனது விஜயத்தின் முடிவில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஷா பிஷ்வால் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய ஆர்வத்தையும், நம்பிக்கையையும் நானாகவே கண்டுகொள்வதற்கு கொழும்புக்கு விஜயம் செய்தமை சிறப்பானதாக அமைந்தது.
அரசாங்கம், சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தினேன். இந்த சந்திப்புக்களின்போது அனைத்து இலங்கையர்களுக்கும் பிரகாசமான யதார்த்தமாக மாற்றுவதற்கான நம்பிக்கை என்ற செய்தியை அவர்கள் கொண்டிருந்ததை அறிந்து கொண்டேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோருடன் ஆக்கபூர்வமான உரையாடல்களில் நான் கலந்து கொண்டேன்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடனான எனது உரையாடலின் போது, இலங்கைக்குள் தமது வாக்காளர்களின் அமைதியான, செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு நல்லிணக்கம் மற்றும் அரசியல் உள்ளடக்கம் சார்ந்த அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கான அவர்களது கண்ணோட்டத்தினையும் தெரிந்து கொண்டேன்.
ஏனைய அரசியல், சிவில் சமூக, மத மற்றும் வர்த்தக பிரமுகர்களையயும் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இந்த சந்திப்புக்கள் அனைத்திலும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமெரிக்க- – இலங்கை உறவுகள் வளர்வதனை காண்பதற்கான எமது ஆவலை நான் மீண்டும் வலியுறுத்தினேன்.
ஜனாதிபதி சிறிசேன அடைந்த வெற்றிக்காக எனது வாழ்த்தினை பரிமாறிக் கொண்டதுடன், அமைதியான, உள்ளடக்கமான மற்றும் செழிப்பான இலங்கையின் எதிர்காலத்திற்காக முன்னோக்கிச் செல்லும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தையும் வெளிப்படுத்தினேன்.
உண்மையாக, நிறைவேற்ற வேண்டியன இன்னும் நிறையவே உள்ளன. சவால்களை எதிர்கொள்வதற்கும், இலங்கையர்கள் தமது உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள உதவுவதற்கும் இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. நன்றி வீரகேசரி
கே.பி. க்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை
05/02/2015
கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment