திரும்பிப்பார்க்கின்றேன். - முருகபூபதி

.
முற்போக்கு    இலக்கிய  இயக்கத்தின்  தீர்க்கதரிசி  பிரேம்ஜி
 முதலாவது நினைவு தினம்
                                                                                            



                    இலங்கை     முற்போக்கு      எழுத்தாளர்     சங்கத்தின்      மூத்த    உறுப்பினரும்  நீண்டகாலமாக     அந்த     அமைப்பின்     செயலாளராகவும்    பணியாற்றிய  எழுத்தாளரும்      ஊடகவியலாளருமான    பிரேம்ஜி  ஞானசுந்தரன்    அச்சுவேலியில்   17-11-1930   ஆம்    திகதி    பிறந்தார்.   இலக்கிய உலகில்  பிரேம்ஜி  என்ற புனைபெயருடன்  பரவலாக  அறியப்பட்டவரின் இயற்பெயரைக்கேட்டால்  ஆச்சரியப்படுவீர்கள்.
ஸ்ரீ கதிர்காம தேவஞானசுந்தரம்   என்பதே   அவரது  பெற்றவர்கள் இட்ட பெயர்.   ஆனால், அவர்   எவ்வாறு  பிரேம்ஜியானார்  என்பதும் அவரது  இலக்கிய  மற்றும்  பொதுவாழ்வில்  ஆச்சரியம்தான். பெயரில்  மட்டுமல்ல   தனது   பணிகளின்  ஊடாகவும்   ஆச்சரியங்களை ஏற்படுத்தியவர்.    தமது    ஆரம்பக்கல்வியை   அச்சுவேலி    கிறீஸ்தவ     கல்லூரியிலும்   பின்னர்     யாழ். பரமேஸ்வராக்கல்லூரியிலும்    கற்றார்.    1947 இல்   தமது  17 வயதிலேயே     சுதந்திர     இளைஞர்    சங்கம்    என்ற   அமைப்பை உருவாக்கினார்.     அன்றிலிருந்து   பிரேம்ஜி    ஞானசுந்தரன்     தீவிரமான     வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும்    ஈடுபடத்தொடங்கினார்.
அவரது  பெற்றோர்கள்  தமது  மகன்  ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும்   என்றுதான்   எதிர்பார்த்து,  கொழும்பில்  மேற்படிப்பை தொடர    அனுப்பிவைத்தார்கள்.   ஆனால்,  நடந்ததோ  வேறு. சிறிதுகாலம்   கொழும்பில்  கற்றுவிட்டு  பின்னர்
தமிழகம்சென்று     மூத்த    அறிஞர்கள்     நாமக்கல்     கவிஞர்  - வி.க.  வா.ரா-  சுவாமிநாத சர்மா  -   பேராசிரியர்    ராமகிருஷ்ணன்  - தமிழ் ஒளி   முதலானோரின்    தொடர்பினால்     இடதுசாரிக்கருத்துக்களை     உள்வாங்கி   இடதுசாரியாகவும்     முற்போக்கு     எழுத்தாளராகவும்   மாறினார்.




                      அங்கு      கம்யூனிஸ்ட்    கட்சியின்    முன்னணி    இதழிலிலும் பணியாற்றினார்.    தாயகம்     திரும்பியதும்         கே.கணேஷ்    மற்றும் கே. ராமநாதன்     ஆகியோரின்     தொடர்புகளினால்     இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சியின்     தேசாபிமானி    -   மற்றும்   சுதந்திரன்     முதலான     இதழ்களிலும்   ஆசிரியர் குழுவில்     இணைந்தார்.
தேசாபிமானியில்     அவர்     அக்காலப்பகுதியில்     எழுதிய    தேசபக்தன் கண்ணோட்டம்    என்ற    பத்தி    எழுத்து     வாசகர்களை    பெரிதும்   ஈர்த்தது. 1954    இல்  இலங்கை    முற்போக்கு    எழுத்தாளர்     சங்கத்தில்    இணைந்து   அதன்     வளர்ச்சிக்கு    அள்ளும்பகலும்     தொண்டாற்றினார்.
சுயநலமற்ற     தன்முனைப்பு     உணர்வுகளற்ற     பொது    நோக்குடன்    அவர்   இயங்கியதனால்     மாற்றுக்கருத்துள்ளவர்களும்     அவரை      நேசித்தனர்.   அந்த    நேசிப்பே    அவரை     தொடர்ந்தும்    பல    வருடகாலமாக   சங்கத்தின்    பொதுச்செயலாளர்     பதவியில்    நீடிக்கச்செய்தது.
பிரேம்ஜி      என்ற     புனைபெயரில்    அவர்    எழுதத்   தொடங்கியது    முதல்   பிரேம்ஜி     ஞானசுந்தரன்    என்ற    பெயரிலேயே   அவர்    அழைக்கப்பட்டார்.
சங்கத்தின்     கிளை     அமைப்புகளான     எழுத்தாளர்    கூட்டுறவுப்பதிப்பகம் , அறிவுவட்டம்     முதலானவற்றையும்    உருவாக்குவதில்     முன்னின்று   உழைத்தார்.



அவர் 1948 முதல்  ஊடகத்துறை   மற்றும்  இலக்கிய  இதழ்களிலும் எழுதத்தொடங்கியிருந்தாலும்  தனது  படைப்புகளை   நூலுருவாக்கி  வரவாக்குவதில்  அவருக்கு  அக்கறை   இருந்ததில்லை.  ஆனால்,  சக எழுத்தாளர்களின்   நூல்கள்  வெளியாகவேண்டும்  என்பதில் தீவிரமான   அக்கறை  செலுத்தினார்.  அதற்காக   அவரது முயற்சியினால்    இலங்கையில்    உருவானது   எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம்.
இந்தியாவில்   கேரள  மாநிலத்தில்  அமைந்துள்ள கூட்டுறவுப்பதிப்பகத்தை    முன்மாதிரியாகக்கொண்டு    இலங்கையில் எம்மவர்களுக்காக    கூட்டுறவு  அமைப்பைத்தோற்றுவித்தார். அவருக்கு    அந்தச்சிந்தனை   தலைநகரில்  உருவானபோதிலும் இலங்கையில்    ஏனைய    பாகங்களிலும்    அதன்    நோக்கத்தை தெளிவுபடுத்தும்    இலக்கிய    சந்திப்புகளுக்கும்    ஏற்பாடு  செய்தார்.
அதற்காக   அவர்  செலவிட்ட  நேரம்  மிகவும்  பெறுமதியானது. எழுத்தாளர்களையும்   வாசகர்களையும்  வீடு தேடிச்சென்று  குறிப்பிட்ட    கூட்டுறவு   அமைப்புக்கு   ஆதரவு    திரட்டினார்.    எனினும்    மூன்று    நூல்களையே    அந்த    அமைப்பின்  ஊடாக அவரால்   வெளிக்கொணர   முடிந்தது.
இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  என்ற  பேரியக்கத்தின் வரலாற்றில்   அவரது  வாழ்வும்  பணிகளும்  ஆழமாக பதிவாகியிருக்கிறது.
தேசிய    இனப்பிரச்சினைக்கு    நிரந்தர      தீர்வு தரக்கூடிய    திட்டங்கள் - மற்றும்     தமிழகத்தின்     வணிக     இதழ்கள்     மற்றும்     தரக்குறைவான இதழ்களை     இலங்கைக்கு    தருவிப்பதில்     கட்டுப்பாடுகள்     விதிக்கும் நடைமுறைகளை     அமுல்படுத்துவதிலும்     யாழ். பல்கலைக்கழக   வளாகம்   உருவாக்கப்பட்டபொழுது    அதன்    முதல்    தலைவராக     பேராசிரியர்   கைலாசபதியை    நியமித்தல்    தொடர்பான    ஆலோசனைகளிலும்   பிரேம்ஜி    மிக   முக்கிய    பங்காற்றியுள்ளார்.
இலங்கையில்   1972   உருவான   புதிய  அரசியல்  அமைப்பு  தேசிய சிறுபான்மை   இனத்தவர்களை   பெரிதும்  பாதித்தமையினால்   அந்த அரசில்    அங்கம்   வகித்த    இலங்கை    கம்யூனிஸ்ட்   கட்சியில் உறுப்புரிமை    பெற்றிருந்தவாறே    தேசிய   சிறுபான்மை இனங்களுக்காக    பிரேம்ஜி   குரல்  கொடுத்தார்.
அந்தக்குரல்   காற்றோடு   மாத்திரம்  ஒலித்து கரைந்து போய்விடாமலிருப்பதற்காக   அவர்    மேற்கொண்ட    தீவிர முயற்சியினால்    நடந்த  எழுச்சியான   நிகழ்வுதான்   தேசிய ஒருமைப்பாடு    மாநாடு.   
அதனை   கொச்சைப்படுத்துவதற்கும்   சங்கத்தின்    நோக்கங்களை முறியடிக்கவும்    வெளியிலிருந்து    பலர்    பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டபோதிலும்   உடன்  இணைந்து  செயலாற்றக்கூடிய முற்போக்கு   எழுத்தாளர்கள்   அனைவரையும்  தனிப்பட்ட  விருப்பு வெறுப்புக்கு  அப்பால்  அரவணைத்து  ஒன்றிணைத்து  மாநாட்டை இரண்டு    நாட்கள்   கொழும்பில்     வெற்றிகரமாக   நடத்தி  முடித்தார்.
மாநாட்டிற்கு    முன்னரும்   பின்னரும்   சங்கம்    தேசிய இனப்பிரச்சினைக்குத்தீர்வாக   முன்வைத்த   12   அம்சக்கோரிக்கைகளை    அனைத்து  அரசியல் கட்சித்தலைவர்களிடமும்   நேரில்  எடுத்துச்சென்று  முன்வைத்து கலந்துரையாடினார்.
எதிர்காலத்தில்  நேரக்கூடிய  இன  நெருக்கடிக்குள்  அந்நிய ஏகாதிபத்திய   சக்திகளின்   ஊடுறுவல்   எங்கள்   தேசத்தில் நிகழ்வதற்கு    வாய்ப்பிருக்கிறது   என்பதையும்    அவர்   குறிப்பிட்ட சந்திப்புகளில்    அரசியல்     தலைவர்களிடம்   தீர்க்கதரிசனமாக எடுத்துரைத்தார்.


அவரது   எண்ணங்கள்  பல  நிறைவேறவில்லை   என்ற  ஏக்கமும் ஏமாற்றமும்    அவருடைய    அந்திம  காலம்   வரையில்   அவருடனேயே தொடர்ந்தது.
வெற்றுப்புகழாரங்களை   அவர்  புறக்கணித்தார்.    குறுகிய சிந்தனைகளுக்கு  முற்றிலும்   அந்நியமாகவே    வாழ்ந்தவர்.  அதனால்,  தேசியவாதியாகவும்    சர்வதேசியவாதியாகவும்    மிளிர்ந்தார்.    மாற்றுக்கருத்துக்கொண்டவர்களையும்    அரவனைக்கும் ஆளுமைப்பண்பு    அவரது    இயல்பு.   அதுவே   அவரது  ஆன்ம பலம்.
ஒரு   சந்தர்ப்பத்தில்  கண்டியில்   நடந்த  எழுத்தாளர்  மாநாட்டில் அத்துமீறி   நுழைந்து  பேரினவாதம்  கக்கிய  சக்திகளை   எதிர்த்து உடனடியாகவே    அவர்களின்    மொழியிலேயே   பேசி  தமிழ் பேசும் மக்களினது   அடிப்படை   உரிமைகளுக்கு  குரல்  கொடுத்தார்  என்று அந்த  நிகழ்வில்  கலந்துகொண்ட  பல  முற்போக்கு  எழுத்தாளர்கள் பல்வேறு    சந்தர்ப்பங்களில்    நினைவுபடுத்தியுள்ளனர்.
துணிவும்   தன்னம்பிக்கையும்   அவரிடமிருந்த     அசைக்க   முடியாத பலம்    என்றும்   கருதலாம்.
சோவியத்     தூதரகத்தின்    சோவியத் நாடு    சோஷலிஸமும்   தத்துவமும்  -   சக்தி  -   முதலான     இதழ் களிலும்     முற்போக்கு    எழுத்தாளர்   சங்கத்தின்    புதுமை  இலக்கியம்     இதழிலும்   ஆசிரியராக   பணியாற்றினார்.
 சிறந்த   பத்திரிகையாளருக்கான    சோவியத்தின்   லெனின்   விருதும் அவருக்கு     கிடைத்துள்ளது.    இலங்கையில்     பாரதி   நூற்றாண்டு    விழா    உட்பட    பல    இலக்கியம்    மற்றும்    தேசிய    ஒருமைப்பாடு   மாநாடு  முதலானவற்றில்    பிரேம்ஜியின்    கடுமையான   உழைப்பு குறிப்பிடத்தகுந்தது.
1971   முதல்   1975  வரையில்     இலங்கை    தமிழ் ஆலோசனைச்சபையிலும்    யாழ். பல்கலைக்கழக அமைப்புக்குழுச்செயலாளராகவும்  -     இலங்கை  பத்திரிகைக்குழுவில் உறுப்பினராகவும்    இலங்கை    ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஆலோசனைச்சபையின்     உறுப்பினராகவும்    இயங்கிய    கால   கட்டத்தில்   பல    ஆக்கபூர்வமான     பணிகளை    முன்னெடுத்தார்.    சில   உலகநாடுகளில்  நடந்த    இலக்கிய     மாநாடுகளிலும்     பங்கேற்றுள்ளார்.
அவரது     பிரேம்ஜி கட்டுரைகள்     நூல்    2008    இல்   வெளியாகியது.
கனடாவுக்குச்சென்ற     தமது    இரண்டு    பெண்    பிள்ளைகளின் வேண்டுகோளை    ஏற்று     அங்கு     புலம்பெயர்ந்தாலும்    ஈழத்து    இலக்கிய     வளர்ச்சிக்கு   தம்மாலியன்ற  ஆதரவையும்     அவர்    வழங்கத்தவறவில்லை.
அவரது     எழுத்துலகப்பிரவேச    பொன்னாண்டை     முன்னிட்டு    அவரது இலக்கிய     நண்பர்கள்  1998 இல்     கனதியான     தொகுப்பு நூலையும்  வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில்     சில   மூத்த   முற்போக்கு எழுத்தாளர்களை    பாராட்டி    கௌரவிக்கும்    நிகழ்வை     இலங்கை   முற்போக்கு    கலை    இலக்கிய     அமைப்பு    நடத்தியபொழுது    பிரேம்ஜியும்   பாராட்டப்பட்டார்.
ஆனால் அந்த நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. கனடாவுக்கு புலம்பெயர்ந்திருந்தபோதிலும்   அவரது  நினைவுகள் அனைத்தும்  தாயக  மண்ணிலேயே   தரிந்து   நின்றன.
கனடாவிலிருந்தவாறே    தம்மாலியன்ற   வழிகளில்   இலங்கையின் தேசிய   இனப்பிரச்சினைக்கு    தீர்வுகாண   பல  முனைகளிலும் அழுத்தம்   கொடுத்தவாறு    இருந்தார்.
அவரது    தீர்க்கதரிசனமான   எண்ணங்களை  அவரது   ஒரே  ஒரு நூலான   பிரேம்ஜி   கட்டுரைகளில்   காணலாம்.
        அவர்   தொடர்பான    நினைவுகளை    எம்மிடம்    தந்துவிட்டு   08-02-2014 ஆம்    திகதி   கனடாவிலிருந்து    எங்கள்    அனைவரிடமிருந்தும்    நிரந்தரமாக   விடைபெற்றார்.
தமிழ்நாட்டில்    நீண்ட  காலமாக  குமரன்  பதிப்பகத்தை  நடத்திவரும் மூத்த    எழுத்தாளர்  திரு. செ. கணேசலிங்கன்    மொழி பெயர்த்த  மார்க்ஸ் - ஏங்கல்ஸ்  கம்யூனிஸ்ட்   அறிக்கை  நூலை  பிரேம்ஜி அவர்களுக்கு   சமர்ப்பித்துள்ளார்.    இந்நூல்  சமீபத்தில்   வெளியானது. இந்நூலின்    பிரதியை    சமீபத்தில்    எனக்கு   அனுப்பியிருந்த கணேசலிங்கன்   இலங்கைக்கு   சர்வதேச  புகழ்பெற்ற  கவிஞர்   பாப்லே    நெருடா  வருகைதந்தபொழுது    அவரை   வரவேற்கும் கூட்டத்துக்கு  தன்னைத்  தலைமைதாங்க   அழைத்து  இன்ப  அதிர்ச்சி வழங்கியவர்    பிரேம்ஜி    என்ற   தகவலையும் நினைவுபடுத்தியிருந்தார்.
  பெப்ரவரி  8   ஆம்  திகதி  அவர்  மறைந்து   ஒரு வருட காலமாகிறது.
letchumananm@gmail.com


                             ---0---




No comments: