பெரிய மனுஷியாகிவிட்டாளாம்...


பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டதாம்!
பெரிதாய்த்தான் அலட்டிக்கொள்கிறாள்! 
நேற்றைய நமைச்சல்கள் காற்றோடு போயினவாம்!
இன்றுமுதல் அவள் வகுத்த சட்டங்களே
ஏகமனதாய் அமலாக்கம் பெறுகின்றனவாம். 
சட்டப்படி பெரியமனுஷியாகிவிட்டாளாம்,
இட்டப்படி எதையும் செய்யலாமாம்,
கட்டப்பட்டு கட்டுக்குள் கிடக்கவேண்டாமாம்,

திட்டமிட்ட வாழ்க்கை தினப்படி அவளுடையதாம்! 
அறைக்குள் வர அன்னைக்கும் அனுமதியில்லையாம்,
குறைகள் சொல்ல ஒருவருக்கும் உரிமையில்லையாம்.
நியதி மீறினால் நீதிமன்றம் செல்லுவாளாம்,
தனிமனித உரிமை பறிக்கப்படுவதாய் முறையிடுவாளாம்! 
எதிர்பார்த்திருக்கவில்லை அவளிடம்!
அதிர்ந்து நின்றேன் நான்! 
என்னவென்று சொல்வது இதை?
என் வளர்ப்பில் எங்கோ குறை…
கர்மவினை
கலாச்சாரச் சீர்கேடு
காலத்தின் கோலம்
ஊழியின் கூத்து
தலையெழுத்து
பூர்வஜென்ம பலாபலன் 
அரற்றும் மனத்தை அமைதிப்படுத்த
இத்தனைப் பெயர்களில் ஏதொன்றும் அமையாதா என்ன?
ஆதங்கத்துடன் அலசிய வேளை,
அசரீரீ போல் அழைக்கிறாள், 
கலங்கிவிட்டாயா அன்னையே?
கல்லாக்கிக் கொள் மனத்தை,
அத்தனை எளிதில் விட்டுவிடமாட்டேன் உன்னை,
வாழ்நாள் முழுக்க வழிநடத்தவேண்டும் என்னை!
முரண் புரியாமல் முழித்தவளிடம்
இன்று ஏப்ரல் ஒன்று என்று
வெடித்துச் சிரிக்கிறாள் நிலா!
அதிர்ச்சி மீளாது அமர்ந்திருக்கிறேன் நான்! 
NANTRI:geethamanjari.blogspot.com.au

No comments: