.

கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக நம் கோயில்கள் இருந்திருக்கின்றன.
பிரான்ஸில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை யும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கிழக்கு வாசல் கோபுரத்தைப் பார்த்தவுடனையே அவர்களின் பயணத் திட்டங்கள் மாறிப் போனது. இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்கத் திட்டமிட்டிருந்தோம். புதுச்சேரியில் இருந்த பணிகளையெல்லாம் உடனே தள்ளிப் போட்டுவிட்டு கேமராவை எடுத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். பின்னர் மனமே இல்லாமல்தான் நடராஜர் கோயிலில் இருந்து திரும்பிப் போனார்கள்.
அவர்களுடன் நானிருந்த ஒருவார காலமும் நம் வாழ்க்கை நிலையும் முறைகளும் சீரழிந்தது பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு என்னிடமிருந்து பதில்களே இல்லை. நந்தனார் பற்றிய கதையைச் சொன்னபோது, அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஏன் இவ்வளவு மோசமாகவும் வாழ்ந்தார்கள் என்கிற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள். எந்த சாதியைப் பற்றியோ, எந்த ஒரு மதத்தைப் பற்றியோ, எந்த ஒரு கடவுளைப் பற்றியோ குறிப்பிட்டு திருவள்ளுவர் எழுதாதபோது, எவ்வாறு இவை உள்ளே நுழைந்தன… என்கிற கேள்விகள் எனக்கு அதன்பின் எழுந்தன.


அன்று ஏழைகள்தான் ஒவ்வொரு கல்லாக, மண்ணாக, பாறைகளாகச் சுமந்து வெறும் சோற்றுக்காக மட்டுமே அத்தனை சிற்பங்களையும் வடிவமைத்து, கோபுரங்களையும், கோயில்களையும், குளங்களையும் கட்டி முடித்தார்கள். ஆனால், வானைத் தொட்டுக் கொண்டு நிற்கும் இந்தக் கோபுரங்களின் மீது ஒருமுறை ஏறச் சொன்னால் மயக்கம் போட்டு விழுந்துவிடுபவர்கள் எல்லாம், இன்று இந்தக் கோயிலுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்கள் ஒரே ஒரு கல்லையோ, ஒரு கைப்பிடி மண்ணையோ சுமந்திருப்பார்களா? எல்லாவற்றையும் அரும்பாடுபட்டு உருவாக்கி சிலையையும் செய்து முடித்து கருவறையில் வைத்தப் பின், அதற்குத் தண்ணீர்த் தெளித்து, அதற்கு ‘உயிர் உண்டாகிவிட்டது’ எனச் சொல்லி… அத்தனைப் பேரையும் வெளியில் நிற்கச் செய்துவிட்டார்கள். மற்றவர்களுக்கு சிலை வரைக்குமாவது சென்று தொலைவில் நின்று பார்க்க அனுமதி கிடைத்தது. ஆனால், கல்லையும் மண்ணையும் சுமந்த பரம்பரை யில் வந்த நந்தனாரைக் கூட வெளியில் நிறுத்திவிட்டார்களே!
இந்த மக்கள் தாழ்ந்த சாதிக்காரனாக, பிற்பட்ட சாதிக்காரனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்களா? தங்களை நல்ல நிலைக்குக் கடவுள் உயர்த்துவார் என நினைத்துத்தானே கல்லையும் மண்ணையும் சுமந்திருப்பார்கள்? அவர்களை எல்லாம் குடியிருக்க இடமில்லாமல் சாக்கடையிலும் கொசுக்கடியிலும் இருக்கச் செய்தவர்தான், கடவுளா?
இருக்கின்ற கோயில்களெல்லாம் போதா தென்று இன்னும் மூலைக்கு மூலை கோயிலைக் கட்டிக் கொண்டே போகிறோமே... எப்போது இதனைப் புரிந்துகொள்ளப் போகிறோம்? எங்களைக் கோயிலைக் கட்டவும், குளத்தை வெட்டவும் சொல்லிவிட்டு… சிலருக்கு மட்டும் கல்வியைக் கொடுத்தாயே! எங்கள் கண்களில் இப்போதுதானே எழுத்தைக் காட்டினாய். எங்கள் பிள்ளைகள் இந்த ஒரே தலைமுறையில் எல்லாவற்றையும் கற் றுக் கொண்டபோது… இந்தக் கல்வியை அவர்களுக்கும் கொடுத்தபோதே எங்களுக்கும் கொடுத்திருந்தால், நாங்கள் எங்கோ அல்லவா போயிருப்போம்? வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த என் அப்பாவுக்கும், அதுகூடத் தெரியாத அம்மாவுக்கும் பிறந்த நான் சிந்திக்கத் தொடங்கியிருக்கும்போது, இனி எங்கள் பிள்ளைகள் எப்படியெல்லாம் உன்னைக் கேள்வி கேட்பார்கள்… என்பது, கடவுளாகிய உனக்கு கட்டாயம் புரிந்திருக்கும்.
பிச்சைக்காரர்கள் இல்லாதக் கோயில்களை யும், உன்னைப் பார்க்கப் பணம் கேட்கும் பூசாரி கள் இல்லாத கோயில்களையும் எப்போது நாங்கள் பார்க்கப் போகிறோம்? ஆயிரம் ரூபாய் கொடுப்பவனை உன் பக்கத்திலேயும், ஒன்றும் கொடுக்காதவனை உன் கண்களுக்கே தெரி யாத தொலைவிலேயும் நிற்க வைக்கிறாயே… உனக்கு உண்மையிலேயே கண்கள் இருக்கிறதா? உன்னுடைய வேலைதான் என்ன? பாமர மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, ஏமாற்றி, ஏழை களின் வயிற்றெரிச்சலில் கொள்ளையடித்தப் பணத்தை எல்லாம் உன்னிடத்தில் கொண்டு வந்து கொட்டுகிறார்களே! அதானால்தான் அவர்களை எல்லாம் மேலும் மேலும் ஒரு வீட்டுக்குப் பத்து வீடாக, ஒரு காருக்குப் பத்து காராக, ஊரில் இருக்கிற எல்லா சொத்துக் களையும் அவர்களுடைய சொத்தாக மாற்றிக் கொண்டிருக்கிறாயா?
சரி, எப்படியாவது உன்னைப் பார்த்தால் போதும் என எல்லா வேலைகளையும் விட்டுவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தால்… அங்கே நடக்கிற கூத்தெல்லாம் உனக்குத் தெரியுமா? ஏகப்பட்ட சண்டை போட்டு, வழக்கெல் லாம் போட்டு, ‘தமிழ்க் கடவுளுக்கு… தமிழ் நாட்டில் தமிழில் வழிபாடு செய்யுங்கள்’ என ஆணை பிறப்பித்தால், அதாவது நடக்கிறதா? ‘தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என ஒரு மூலையில் எழுதி வைத்திருப்பதோடு சரி!
நான் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் தமிழில் வழிபாடு செய்யுங்கள் அதுதான் எனக்குப் புரியும். எங்கள் சாமிக்கும் புரியும் எனச் சொல்கிறேன். பெயருக்கு இரண்டு வரி தமிழில் சொல்லிவிட்டு மீதியை சமஸ்கிருதத்தில் சொல்லி முடித்துவிட்டு, என்னை எப்போது வெளியில் அனுப்பலாம் என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். சில பூசாரிகள் எங்களுக்கு தமிழில் மந்திரம் தெரியாது என்கிறார்கள். உண்மை யிலேயே தெரியவில்லையா? கற்றுக் கொள்ளப் பிடிக்கவில்லையா? அல்லது வேண்டாம் என நினைக்கிறீர்களா எனக் கேட்டால், இத்தனை பேர் பேசாமல் கும்பிட்டுவிட்டுப் போகும்போது உங் களுக்கு மட்டும் என்ன எனக் கேட்பவர்களும் உண்டு.
என்னுடன் அங்கு இருக்கிற ஒரே ஒருவர்கூட எனக்கு ஆதரவாகவோ, தங்களுக்கும் சமஸ்கிருதம் புரியவில்லை, தமிழில் மந்திரத் தைச் சொல்லுங்கள் என்றோ கேட்டதில்லை.
என்னைப் போன்ற பலருக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. எல்லாவற்றையும் போல் இதைப் பற்றியும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. எல்லாவற்றையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் என் மனைவியும், மற்றவர்களும் எதையும் கேட்காமல் கோயிலுக்குள் சென்று கொண்டிருக்கும் காட்சியைப் பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சட்டத்தைக் கரைத்துக் குடித்து மக்கள் நலனுக்காகவே செயல்படும் மனிதர்களில் எவராவது ஒருவர், ‘கடவுளுக்கு முன் எல்லோ ரும் சமம்’ எனும் சட்டத்தைக் கொண்டுவர மாட்டாரா?
- இன்னும் சொல்லத்தோணுது…
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

No comments: