"ராஜகுரு சேனாதிபதி என்ற பெயரைப் பயன்படுத்த மயில்வாகனமே காரணம்...''

.

"என் தங்கச்சி பெயர் நோனம்மா. பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கை அதாவது சிவாஜி, சாவித்திரி மாதிரி தான் நாங்கள் இருவரும் வாழ்ந்தோம். என் தங்கச்சி மீது உயிரையே வைத்திருந்தேன். எங்கு சென்றாலும் தங்கையை அழைத்துச் செல்வேன். ஒரு நாள் என் அம்மாவை என் தங்கை திட்டினாள். நான் அதை கண்டுக்கொள்ளவில்லை. அப்போது என் அம்மா, "என்ன உன் தங்கச்சி திட்டுறத வேடிக்கை பார்க்கிறியா..?" என்றார் என்னிடம். உடனே எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. என் தங்கையை என் கோபம் தீருமட்டும் அடித்தேன். பாவம் என் தங்கை! துடித்துப் போய்விட்டாள். அந்த சம்பவத்திற்குப் பின் அவள் என்னோடு பேசுவதில்லை. நானும் கதைப்பதில்லை. வீட்டில் அவள் தான் சமையல் செய்வாள். சாப்பாட்டை தட்டில் போட்டு விட்டு நான் இருக்கும் அறைக்கு எதிரே இருக்கும் கதவு நிறையில் சாய்ந்து கொண்டிருப்பாள். அவள் அப்படி நின்றால் அவள் என்னை சாப்பிட கூப்பிடுகிறாள் என்று அர்த்தம். என் தங்கையை நான் அப்படி அடித்திருக்கக் கூடாது. அவசரப்பட்டுவிட்டேன்.

 என் தங்கையை அடித்ததை எண்ணி நான் என் மனசுக்குள் அழுத நாட்கள் அனேகம். பிறகு என் தங்கைக்கு பிடித்தவனையே அவளுக்கு திருமணமும் செய்து வைத்தேன். எல்லாமே பாசமலர் படத்தில் வருவது போல.... சில காலங்களுக்கு பிறகு என் தங்கையின் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் கிளம்ப ஆரம்பித்தன.

துரதிஷ்டவசமாக அவள் இறந்துவிட்டாள். என் தங்கையின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்றும் காலையில் அவள் படத்துக்கு முன்பாகத்தான் கண் விழிக்கிறேன்...” என்று தனது பாசத்துக்குரிய தங்கையின் நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்ட கனகரட்னத்திடம் அவரின் பூர்வீகம் பற்றி கேட்டோம்.

“நான் பிறந்தது சிலாபம் மருதங்குளத்தில். அப்பா பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருக்கும் அயோத்தியிலிருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது எங்கள் குடும்பத்தின் பரம்பரை பெயர்.

 ராஜாவுக்கு குருவாகவும், சேணைக்கு அதிபதியாகவும் இருப்பவர்கள் என்பதுதான் அதன் பொருள். மதுரங்குளம் முழுவதும் என் தாத்தாவுக்கு சொந்தமான இடம் தான். ஆனால் தாத்தாவுக்கு போகும் இடமெல்லாம் மனைவிகள் இருந்திருக்கிறார்கள். அதனால் அவர் அங்கெல்லாம் ஒரு வீட்டை கட்டி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். தாத்தாவின் அந்த வீடுகள் தாத்தாவுக்கு அந்தப்புரமாக இருந்திருக்கிறது. இப்போது அந்த இடங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் காணி தாத்தாவின் பெயரில் தான் இருக்கிறது.

“எங்கள் குடும்பத்தில் நான் ஏழாவது பிள்ளை. நான் பிறந்த வீட்டில் நாயக்கர் காலத்து தூண்கள் மாதிரி பெரிய பெரிய தூண்கள் இருக்கும். ஆனால் எனக்கு அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கக் கிடைக்கவில்லை. அப்பா அந்த வீட்டை அவரின் அண்ணணுக்கு எழுதி கொடுத்துவிட்டதால், நாங்கள் வேறு வீட்டிற்கு மாறி வந்து விட்டோம். ஆரம்பத்தில் என் பெயரை கனகரட்ணம் என்றுதான் எழுதி வந்தேன். ‘ராஜகுரு சேனாதிபதி என்று எழுதுவதை நான் விரும்பவில்லை.

 பிறகு நான் அறிவிப்பாளராக ரேடியோ சிலோனுக்கு பணியாற்ற வந்தபோது, அங்கே மயில்வாகனம் இருந்தார். அவர் என்னை சிலாபக்காரர், கரையர், மீன்பிடிக் கிராமத்தான் என்பதாக மதிப்பிட்டு அப்படியே வெளியே சொல்லியும் வந்தார். ரேடியோ சிலோனிலும் அப்படித்தான் ஏனையோரிடத்தில் அறிமுகம் செய்தும் வந்தார்.

“இவர் ஒரு கரையர் பையன்” என்று சொல்வது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. உண்மையில் நான் ஒரு பெரிய குடும்பத்து பையன் என்பது மயில்வாகனத்திற்கு தெரியாது. இவரது வாயை எப்படி மூடுவது? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பிறகு தான் என் பெயருக்கு முன்னால் ‘ராஜகுரு சேனாதிபதி என்பதை சேர்த்துக்கொண்டேன்” என்று தமது ஊரையும், பெயரையும் பற்றி விபரித்த கனகரட்னத்திடம் முதல் பாடசாலை பிரவேசம் பற்றிக் கேட்டோம்.

“மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. என் அம்மாதான் என்னை அங்கே அழைத்துச் சென்றாள். அங்கே நான் நாலாவது வரை கல்விக் கற்றேன்.

எனக்கு அகரம் கற்பித்தவர் யார் என்பது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் பாக்கியநாதன், திருமதி பாக்கியநாதன் ஆகியோர் அங்கே படிப்பித்தார்கள். அவர்கள் இருவருக்கும் என்மீது நல்ல பிரியம். நான் அரிவரி படித்த அந்தக் கட்டடத்தை இடித்து விட்டு இப்போது சமுர்த்தி நிலையத்தை அங்கே அமைத்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு சென் மேரீஸ் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே எஸ். எஸ். சி. வரைப் படித்தேன். அங்கே என்னோடு ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்த கந்தசாமி, மெளலானா, அபுல் ஹசன், டக்ளஸ் ஆகியோரை இன்றும் நினைக்கிறேன்” என்றவரிடம், பாடசாலை நாட்களில் நாடகங்கள் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“எனக்கு சின்ன வயசிலேயே கிரிக்கெட் விளையாடுவதென்றால் ரொம்பப் பிடிக்கும். ஐந்தாவது படிக்கும்போது ‘அமணனும் குமணனும்’ என்ற நாடகத்தில் புலவர் வேடத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு நான் நாடங்கள் நடிக்கவில்லை.”

வானொலி பிரவேசம் எப்படி அமைந்தது?
    
“எனக்கு சின்ன வயசிலேயே வானொலி என்றால் உயிர். அப்போ இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு வானொலி கிடையாது. எங்கேயோ ஒரு வீட்டில் தான் வானொலியைக் காண முடியும். ஒரு சில ஹோட்டல்களில் வானொலிகளை சத்தமாக போட்டிருப்பார்கள். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அந்த ஹோட்டல்களுக்கு அருகில் நின்று வானொலி ஒலிபரப்புகளை கேட்பேன். அப்போது என் குரலும் வானொலியில் ஒலிக்காதா என்ற ஆவல் எனக்குள் உருவாகி குதியாட்டம் போடும், நான் தனிமையில் இருக்கும்போது வானொலி அறிவிப்பாளர்கள் பேசுவது போல பேசி பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

இது இப்படி இருக்க அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் கருத்து முரண்பாடு வந்து கொண்டே தான் இருந்தது. அப்பா எனக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது என்று கூறி 'வீட்டை விட்டு வெளியே போ' என்று விரட்டினார். அப்போது வேறு ஒருவரின் உதவியுடன் வானொலிக்குள் பிரவேசம் செய்ய முயற்சி செய்தேன். வர்த்தமானியில் வெளியான அறிவிப்பாளர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு விண்ணப்பம் போட்டு விட்டு காத்திருந்தேன். பிறகு வரச் சொன்னார்கள்.

 அதற்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வானேன். முதல் நாள் ஒலிபரப்பிற்காக மைக் முன்னால் அமர்ந்தபோது எனக்கு நடுக்கமாக இருந்தது. எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் என் குரலைக் கேட்கப் போகிறார்களே என்ற பயமும் பரபரப்பும் தான் அந்த நடுக்கத்திற்குக் காரணம். அப்போது நமது வானொலி தமிழகத்திலும் தெளிவாக ஒலிபரப்பாகி வந்தது. அதனால் அவர்களும் கேட்க கோடிக்கணக்கான மக்களை எமது குரல் சென்றடைந்த காலம் அது. இலங்கை வானொலியில் நிறைய நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். பொதிகை தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானே பெயரும் சூட்டினேன்.”

நீங்கள் வானொலி நட்சத்திரமானப் பின்னர் தங்களின் முதல் ரசிகை? முதல் காதல்?

“நான் வானொலி நட்சத்திரமானப் பிறகு எத்தனையோ பெண்களின் காதல் ரசம் சொட்டும் கடிதங்களைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அந்தக் காதல் கடிதங்களை மட்டும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பெண்ணும் என் மனசிலும் பதியவில்லை.

வாழ்க்கையிலும் துணையாகவில்லை. அது ஏனோ தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணிலும் பிடிப்பு ஏற்படவில்லை. என்னை எத்தனையோ பெண்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். என் மீது உள்ள காதலை நேரிடையாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னமோ தெரியவில்லை எனக்குதான் காதல் உணர்வே வரவில்லை. ஒரு முறை பெங்களூரிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தப் பெண் என்னைப் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவள் எனது தீவிர ரசிகை என்றும் அவள் என்னை விரும்புவதாகவும் சொல்லி கெஞ்சினாள்.

ஆனால் நான்தான் அவளோடு வந்த குடும்பத்தார்களிடம் கைகொடுத்து கும்பிட்டு அவளை அழைத்துச் செல்லும்படி சொன்னேன். இப்படியொரு மக்கனாக அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்தப்பெண்களின் சாபம் தானோ என்னவோ நான் இன்று தனிமையில் கஷ்டப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது போலும்.

“ஒருமுறை நேரடியோ சிலோனில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்தபோது மறுபக்கத்தில் நந்தசேன என்பவர் ஒலிபரப்பிற்கு உதவியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் என்னை அழைத்த நந்தசேனை, மச்சான் உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? என்றார் நான் இல்லை என்றேன். தண்ணீ, பொண்ணு என்று கேட்க நான், இல்லவே இல்லை என்று மறுத்தேன்.

அப்போது நந்தசேன, நீயெல்லாம் ஏன்டா பூமியில பிறந்தாய்? என்று கேட்டார். நான் விக்கித்து நின்றேன்” என்று சொன்ன ராஜகுரு சேனாதிபதியிடம் அப்பாவிடம் அடிவாங்கி இருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“அப்பாவிற்கு என்னை பிடிக்காது. அதனால் எப்போதும் என்னை அடிப்பார். சில நேரங்களில் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திவிடுவார். நான் என் வீட்டுத் தோட்டத்திலுள்ள வாய்க்காலில் தென்னம் ஓலையை போட்டுப் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வருவேன். சில நாட்களில் மரத்தில் ஏறி அதன் உச்சியில் உள்ள கிளையில் அமர்ந்து அப்படியே தூங்கி விடுவேன்.

கீழே விழாமலிருக்க இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி மரத்தில் கட்டிவிட்டு தான் தூங்குவேன். ஒரு நாள் நானும் எனது நண்பர் பொன்னம்பலமும் மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிலாபத்திற்கு சென்று நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வரும்போது வழியில் நான் கீழே விழுந்து காலில் நல்ல அடிபட்டுவிட்டது. காயத்தோடு வீட்டுக்கு வந்தபோது அப்பா என்னை வீட்டிற்கு வெளியே நின்ற மரத்தில் கட்டி வைத்து அடித்தார். இன்றும் அந்த சம்பவம் என் மனதில் அப்படியே இருக்கிறது.”

தனிமை உங்களுக்கு கொடுமையாகத் தெரியவில்லையா?

“இல்லை. அது ஆண்டவன் கொடுத்த வரம். தனிமையை இனிமையானதாகவே கருதுகிறேன். நானே சமைத்து சாப்பிடுகிறேன். எனக்கு இதுவரையும் எந்த நோயும் வந்ததில்லை. கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நான் வானொலி, தொலைக்காட்சி கேட்பதும் பார்ப்பதும் கிடையாது. உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள திருச்சி வானொலியை மட்டும் தினமும் கேட்கிறேன்.”

மறக்க முடியாத நபர்கள்?

நண்பர் நமசிவாயம், பெர்ணான்டோ, நெவில் ஜயவீர உள்ளிட்டோரை மறக்கவே முடியாது.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“எங்கள் வீட்டுக்கு முன்னாடி இருந்த மதுரங்குளம் குளத்தில கரனம் போட்டு குதித்து, நீந்தி விளையாடிய அந்த நாட்கள்... இன்று அந்தக் குளத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் ஏக்கமாக இருக்கும். என்ன செய் வது இப்போது என்னால் கரணம் போட்டு அந்த குளத்தில் குதிக்கவோ, நீந்தவோ முடியாது. வீட்டு குளியலறையில் தான் குளிக்கிறேன்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி உங்கள் புரிதல் என்ன?

“நாம் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை; கொண்டு போவதும் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட சில காலங்கள் இங்கே கொஞ்சம் தங்கியிருந்து விட்டு போகிறோம். அவ்வளவு தான். என்னைப் பொருத்தவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை இனிமையானது என்றுதான் சொல்வேன்” என்று முடித்தார் கனகரட்ணம்.

1 comment:

திருநந்தகுமார் said...

சுவாரசியமான சம்பவங்கள். அவர் தனியாக வாழ்ந்தார் என்பது இப்போது தான் தெரிகிறது. தனிமை கொடுமை! முதுமையில் அதனினும் கொடுமை!!.அடக்கமான, ஆனால் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரான ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அரச வம்சத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குப் புதிய செய்தி. யார் இப்படிப் பெயர் வைத்திருப்பார்கள் என்று என் சிறிய வயதில் நான் நினைத்ததுண்டு. என் இளமைக்காலத்தில் அபிமான அறிவிப்பாளர்களில் அவரும் ஒருவர். அவர் நினைவுகள் வாழ்க.