.
இயற்கை அழகின் ஆதி அந்தம் - இலங்கை மண்ணே என்றிடலாம்!
ஈழ மண்ணின் கலை வளமோ - இமயம் வரை என்றிடலாம்!
என்ன வளம் இல்லை எங்கள் மண்ணில்?
சுற்றிலும் கடல் - உப்பிற்கு பஞ்சமில்லை!
காடுகள் மலைகள் - ஆறுகள் அருவிகள்! - நீருக்கும் பஞ்சமில்லை!
திக்கெட்டும் தோட்டம்! - உணவிற்குப் பஞ்சமில்லை!
வைரம் வைதூரியம் - முத்து பவளம் என்று!
செல்வம் செழித்துக் கொழித்த பூமி அது! - இவை இருந்து என்ன பயன்?
சிறப்பாய் சிரித்துக் களித்த காலங்களோ - நினைவுகளாய் மட்டும் - நெஞ்சில் இன்று!
தார் உருக்கித் தெரு போடும் வீதிகளில்
கறுப்பு வெள்ளைப் பூக்களாய் - வெள்ளைச் சீருடையில் - எங்கள் சின்னஞ்சிறார்கள்!
கதைகள் சில பேசி - பாக்கள் பல பாடி - பூக்கள் பறித்து - சிரித்துக் களித்து வரும்
அந்த வெள்ளைப்பூக்களில் - பூத்துக்குலுங்கும் செம்பருத்திப் பூச்சாயம்!
அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்! - வயல் வரம்பில் நடக்கையிலே - வணக்கம் கூறும்!
கோயில் மேள இசை ஒலியும் - கூவித்திரியும் குயில் இசையும் - காதுக்கு விருந்தளிக்கும்!
தெருவோரங்களில் தென்னைகள் - வீழ்ந்து கிடக்கும் தேங்காய்கள் - இவர்களுக்கு கால்ப் பந்து!
காய்த்துக் குலுங்கும் மாங்கனிகள்! - கொத்துக் கொத்தாய் புளியம்பழம்!
கனிந்து விழுந்த பனம் பழத்தை - சுட்டுப் புளியிட்டு புசித்து,
பின் விதையிட்டு கிழங்கெடுத்து - அவித்து ரசித்து உண்ட சுவை
என்று வரும் மீண்டுமென்று - ஏங்கிக் கிடக்கும் நெஞ்சங்கள்!
படித்துப் பட்டம் பெற்று - பதவிகளில் தமிழர்கள்!
உயர்ந்தது துறைகள்! - வியந்து நெளிந்தது புருவம் - அண்டைய நாட்டவர்க்கு!
பொறுக்கவில்லை சிங்களம்! - வெடித்தது மொழித்திணிப்பாய்!
பணி இழந்து! - மனை இழந்து! - உறவிழந்து! - உரிமை இழந்து! - இறுதியில் நாடிழந்து!
பதறிப் பதைத்து தவித்து ஓடினோம்! - ஓடினோம்! ஓடினோம்! - ஓடி ஒளிந்தோம்!
திரும்பிப் பார்த்தோரோ - வெட்டுண்டு வீழ்ந்தனர்!
எதிர்த்து நின்றோரோ - விழித்தனர் புலிகளாய்!
ஒளி நிறைந்த நம் வாழ்வில் - காரிருளாய் கறுப்பு ஆடி! 1983…..
சிதைக்கப் பட்டது தமிழினம்! - வதைக்கப் பட்டனர் தமிழர்கள்!
வெட்டிக் குவிக்கப் பட்டனர்! - குவித்து எரிக்கப் பட்டனர்!
ஈழத்துத் தெருக்கள் எல்லாம் - சுடலைச் சுவாலைகள்!
அழிக்கப்பட்டது அந்த அழகிய தேசம்! - கதறலாய் மாறியது கலை வடிவம்!
தெருவோரம் கொதித்த தார் - வீதிகளில் விழவில்லை,
தமிழ் பேசும் பாலர்களை தோய்த்தெடுத்து - கரியாக சாய்த்தது!
அறுவடை செய்யப்பட்டது கதிர்களல்ல - தமிழரின் தலைகள்!
கேட்டது குயில் கானம் அல்ல - தெருக்களில் கற்பிழந்த தமிழ் மங்கையரின் அலறல் சத்தம்!
மரங்களில் குலுங்கியது கனிகள் அல்ல - தமிழரின் பிணங்கள்!
சிந்திய இரத்தம் தெறித்து செந்நிறமானது - சிகப்பு சாயம் தரும் செம்பருத்தி!
இசை கேட்ட காதுகளில் விழுந்ததெல்லாம்,
இடித்து நொறுக்கப்பட்ட தமிழரின் உடைமைகள் வெடித்து சிதறும் ஒலி!
துண்டித்த கால்களுடன் தமிழர் - நடக்க வழியின்றி!
சிங்களவர் உதைத்து விளையாட - தமிழர் தலைகள்!
குருதி வெள்ளத்தில் - சிவந்த சீருடையில் - மிதந்தன எமது மழலைகள்!
தாகம் கொண்ட வீரர்களின் - ஈழ
தேசம் காண துடித்த கண்கள் - தோண்டி எடுக்கப்பட்டு
கால்களால் தரையில் கசக்கப்பட்ட கோரங்கள்!
கட்டி வைத்து கணவன் முன் - மனைவியை கற்பழித்த கொடூரங்கள்!
ஒரு பிள்ளை உயிரெடுத்து - மறு பிள்ளை கழுத்தினில் கத்தி வைத்து
அன்னையின் மடி கேட்ட காடையர்கள்!
அப்பப்பா… - எண்ணில் அடங்கா வெறி ஆட்டங்கள்!
மாண்டு! மாண்டு! - மீண்டும் மீண்டும் முளைத்தெழுந்து, - ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து – பின்
பல நாடு ஒன்று கூடி அழிக்கப்பட்ட - 2009 ஈழத்து இன அழிப்பு! - தமிழ் இன அழிப்பு!
இமயம் வரை கதறி அழுதோம் - அமையும் ஒரு வழி என்றெண்ணி
அனாதைகளாய் - வழியின்றி அழிக்கப் பட்டோம்!
ஓடினோம்! ஓடினோம்! - தரை வழி ஓடினோம்! - கடல் வழி ஓடினோம்! - வான்வழி ஓடினோம்!
ஓடினோம்! ஓடினோம்! - ஓடிக்கொண்டே இருக்கின்றோம்! - நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம்!
பிரிந்த உறவுகளைத் தேடி - நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம்!
இழந்த வாழ்வைத் தேடி - நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம்!
சிதறிச் சிதறி ஓடிக்கொண்டே இருக்கின்றோம்!
விடி வெள்ளி வரும் நாளை நோக்கி - நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம்!
உலகே உனக்கு கண் இல்லையா?
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
No comments:
Post a Comment