சுவாமி விவேகானந்தர் 150-வது பிறந்தநாள்

.









          தத்தை அபின் என்று வர்ணித்தார் கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ். பிறப்பிலிருந்தே அந்த போதை ஒவ்வொரு மனிதனுக்கும் ஊட்டப்படுவதால், இறப்பு வரை அது நீடிக்கிறது. மரபணுக்களிலேயே மதஉணர்வுகள் படிந்திருக்கின்றனவோ என்று மருத்துவர்கள் ஆய்வு செய்யவும் கூடும். சில நேரங்களில் போதையும் கூட குறிப்பிட்ட அளவில் மருந்தாகவும் உணவாகவும் பயன் படுத்தப்படுவது உண்டு. அலோபதி மருந்துகள் பலவற்றில் சிறிதளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது. கிராமப்புறங் களில், ஆப்பம் தயாரிப்பதற்கான மாவில் சிறிதளவு கள் சேர்ப்பார்கள். உணவு சுவையாக இருக்கும் என்பதால்.

போதை வஸ்தை மருந்தாகவும் உணவாகவும் கையாளத் தெரிந்தவர்கள் மிகக் குறைவானவர்களே. மதத்தையும் அப்படித்தான். அதிலும், தொடக்கம் எது என்றே தெரியாத இந்துமதத்தைக் காலத்திற்கேற்ற மாற்றங் களுடன் கையாள்வது என்பது மிகப்பெரும் சவால். பழமையில் ஊறிய சனாதனிகளும், சாதிபேதத்தை வளர்க்கின்ற மதவெறியர்களும் நிறைந்த ஒரு மதத்தில் புதுமைக் கருத்து களைச் சொல்வதும் நடைமுறைப் படுத்துவதும் சவாலான செயல்பாடுகளாகும். அத்தகைய செயல்பாடுகளை மேற்கொண்டவர் தான் சுவாமி விவேகானந்தர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் 1863 ஜனவரி 12-ஆம் நாள் அவர் பிறந்தார். நரேந்திரநாத் தத்தா என்பதுதான் அவரது இயற்பெயர். ஆன்மீகத்தில் அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார். குருவின் புகழ் பரப்பும் வகையில் செயல்பட்டார். இந்து மதத்தின் கோட்பாடுகளைக் கற்றதுடன் அதனை ஒரு புதுப்பார்வையில் நோக்கினார் விவேகானந்தர். 





வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. அவர்களின் பழக்கவழக்கங்களும், அவர்களுடைய மதக் கோட்பாடு களும் இங்கே திணிக்கப்படுவதாக இந்து மதத்தின் பாதுகாவலர்கள் எனப்பட்டவர்கள் கருதினார்கள். வெள்ளையர்களுக்கு எதிரான ஓர் இந்து இளைஞர் படை தேவைப்பட்டது. விவேகானந்தருக்கும் இந்த எண்ணம் இருந்தது. நூறு இளைஞர்களைத் தாருங்கள். நான் மாற்றிக் காட்டுகிறேன் என்றார் அவர். எனினும், இந்து மதம் எவருடைய ஆதிக்கத்தில் இருக்கிறது. அந்த மதத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் நிலை என்ன என்பது பற்றியெல்லாம் அவர் சிந்திக்கத் தொடங்கினார். 

இந்து மதத்தில் பிராமணர்களின் ஆதிக்கத்தையும் அதன் காரணமாக சூத்திரர்களும் பஞ்சமர்களும் ஒடுக்கப்படுவதையும் அவர் வெறுத்தார். இவற்றில் மாற்றங்கள் செய்யாமல் இந்து மதத்தின் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை என்பதில் விவேகானந்தர் உறுதியாக இருந்தார். பவுத்தம், சமணம் ஆகிய மதங்கள் இந்தியாவில் தோன்றி வளர்ந்தபோது அது இந்து மதத்திற்கு பெரும் சவாலாக விளங்கின. அதனால், ஆதிசங்கரர் போன்றவர்கள் இந்து மதத்தில் சீர்திருத்தங்களை உருவாக்கி, புதிய பாதைக்குத் திருப்பும் முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போதும்கூட சாதி ஒடுக்குமுறையான வர்ணாசிரமும் அதன் காரணமாக பிராமண ஆதிக்கமும் மேலோங்கியே இருந்தது.

வரலாற்றுப் பார்வையில் இதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்த விவேகானந்தர், இந்தக் கட்டமைப்புகளைத் தகர்க்க வேண்டும் என விரும்பி னார். ஆதிசங்கரரின் வழிமுறைகளை விமர்சித்த விவேகானந்தர், ""மதக் கருத்துகள் குறித்து வாக்குவாதம் செய்து தோல்வியடைந்த புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கிய சங்கரன் இதயத்தை என்னவென்று சொல்வது? இது மூடப் பிடிவாதமின்றி வேறு என்ன? சிறு ஆட்டுக்குட்டியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்த  புத்த தேவருடைய இதயத்தை இதனுடன் ஒப்பு வைத்து நோக்கினால், புத்ததேவரே உயர்ந்தவராக இருக்கிறார்'' என்றார். பவுத்தர்களைப் போலவே, அந்தக் காலத்தில் சமணர்களையும் கழுவில் ஏற்றிக் கொன்றனர் இந்துமதவாதிகள். இத்தகையக் கொடூரங்களை விவேகானந்தர் கண்டிக்கத் தவறவில்லை.

பிற மதத்தாரைத் துன்பத்தில் ஆழ்த்திய அதே நேரத்தில், தன் மதத்தில் உள்ள மக்களையே ஒதுக்கிப் புறக்கணிக்கும் இந்து மதத்தின் போக்கை மாற்றியே ஆக வேண்டும் என்பதில் விவேகானந்தர் உறுதியாக இருந்தார். விதி என்ற பெயரில் இந்த ஒடுக்குமுறை தொடர்வதை அவர் ஏற்கவில்லை. மனிதன் தனது விதியைத் தானே நிர்ணயித்துக்கொள்கிறான் என்று  அழுத்தமாகக் குறிப்பிட்டார் விவேகானந்தர். 

""எவ்வளவு முயன்று பார்ப்பினும், உயர்ந்த வகுப்பார் எவ்வளவு முயன்று பார்ப்பினும், தாழ்ந்த இந்நாள்களில் தாழ்ந்த வகுப்பார் வேலை நிறுத்தம் செய்யும் இயக்கம் எவ்விடத்திலும் பரவிவருவது இதற்கு சான்றாகும். தாழ்ந்த வகுப்பாரை இனி அடக்கி வைக்க முடியாது.  தாழ்ந்த வகுப்பாருக்கு உரிமையாகிய நலன்களை அவர்கள் அடையச் செய்வதே  உயர்ந்த வகுப்பார் தாமும் நன்மையடைவதற்குத் தகுந்த நெறியாகும்'' என்பது விவேகானந்தரின் அழுத்தமான கருத்தாகும்.

இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்கள் பலவற்றையும், வேதம்-உபநிடதம்- புராணம்- இதிகாசம் ஆகியவற்றில் சேர்க்கப்பட்ட இடைச் செருகல்களையும் விவேகானந்தர் கண்டித்தார். குறிப்பாக, மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் குருச்சேத்திர போரின்போது, அர்ஜூனனுக்கு கண்ணன் வழங்கிய அறிவுரையாகக் கூறப்படும் பகவத்கீதையின் தன்மை பற்றி  விவேகானந்தர் கேள்விக்குட்படுத்தவும் தயங்கவில்லை. அதில் உள்ள கருத்துகள் குறித்து அவர் சாதகமான விளக்கங்களை அளித்திருந்தாலும் ""யுத்தக் களத்தில் இப்படியொரு அறிவுரை சாத்தியமா, அதை அப்படியே பதிவு செய்திருக்க முடியுமா'' என்ற கேள்விகள் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளன.


பிராமணர்களின் ஆதிக்கத்தினால்தான் இந்து மதத்திற்குரிய பாரம்பரிய ஞானம் மற்ற சமுதாயத்தினரிடம் பரவவில்லை என்றும், அதன் காரணமாகத்தான் முகமதியர் படையெடுப்பு உள்ளிட்ட பல படையெடுப்புகளும் இந்தியாவில் வெற்றிபெற்றன என வெளிப்படையாகவே தெரிவித்தவர் விவேகானந்தர். பஞ்சமர்களைத் தொடக் கூடாது என்றும், அவர்கள் உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் நடக்கக்கூடாது என்றும் இந்துமதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையையும் அவர் கண்டித்தார். 

இந்து மதத்தை சீர்திருத்தி, அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்து, அதை அரசியல்மயப்படுத்தி வெள்ளையர் அரசுக்கு எதிராக எழச் செய்யவேண்டும் என்ற நோக்கம் விவேகானந்தரிடம் இருந்தது. 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் பங்கேற்று, "சகோதர... சகோதரிகளே...' என்று மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை அழைத்து, இந்துமதத்தின் பெருமைகள் குறித்து அவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாகும். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஜப்பான், அமெரிக்கா, இலங்கை, ஐரோப்பிய நாடுகள் என பலவற்றிற்கும் அவர் கப்பலில் பயணம் மேற்கொண்டு அங்கு இந்துமதக் கருத்துகளைப் பரப்பினார். தனது குருநாதரான ராமகிருஷ்ணர் பெயரில் மடம் நிறுவினார். இந்து  மதத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்டவராக விளங்கிய விவேகானந்தர் தனது இளம் வயதிலேயே 1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் காலமானார்.  

இந்த ஆண்டு (2013), விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிற ஆண்டாகும். அவருடைய கருத்துகளையும் எண்ணங்களையும் பரப்பும் வகையில் மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதுதவிர, பல அமைப்பினரும் அவரது 150-வது பிறந்தநாளைக் கொண்டாடத் தயாராகியுள்ளனர். அவருடைய பிறந்த நாளான ஜனவரி 12-ஆம் நாள் தேசிய இளைஞர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

உடலாலும் உள்ளத்தாலும் தெம்பும் துணிவும் கொண்ட இளைஞர்களால்தான் மாற்றங்களை உருவாக்க முடியும் என்பது விவேகானந்தரின் கொள்கை. ""எழுமின்.. விழிமின்.. இலக்கை அடையும்வரை ஓயாதிருமின்'' என அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார். இந்து மதம் கடைப்பிடிக்கும் வர்ணாசிரமம் எனும் சாதி ஒடுக்குமுறையை ஒழிக்கவேண்டும் என்பதுதான் விவே கானந்தரின் எண்ணமாக இருந்தது. அப்போதுதான், இந்துமதம் உண்மையாக வளரும் என அவர் நம்பினார். அவருடைய எண்ணமும் நம்பிக்கையும் இன்றும் கனவாகவே இருக்கின்றன.   

நன்றி:nakkheeran.in

No comments: