உலகச் செய்திகள்

வடகொரிய தலைவர் மாரடைப்பால் மரணம்


ஈராக்கில் 12 தொடர் குண்டு வெடிப்புகள்: 57 பேர் பலி


பிலிப்பைன்சில் சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு


சோமாலியாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏழரை இலட்சம் பேர் சாவின் விளிம்பில்

வடகொரிய தலைவர் மாரடைப்பால் மரணம்

19/12/2011

டகொரியா தலைவர் ஹிம் ஜொங் II (வயது-69) மாரடைப்பினால் மரணமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1941 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி, பிறந்த இவர் தனது தந்தையான கிம்இல்-சுங் இறந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு வடகொரியாவின் தலைவராகப் பதவியேற்றார்.


நன்றி வீரகேசரி

ஈராக்கில் 12 தொடர் குண்டு வெடிப்புகள்: 57 பேர் பலி


22/12/2011

ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான 12 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 57 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஜன நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களைக் குறிவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பக்தாத்தின் அலாவி, பாப் அல் முஹாதம், கராடா, அதாமையா, சுஹாலா, ஷாப், ஜத்ரியா, கஸாலியா, அல் அமில் மற்றும் தூரா ஆகிய பகுதிகளிலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வாபஸ் பெற்றுள்ளதுடன், அங்கு தற்போது அரசியல் ஸ்திரமற்ற நிலையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

பிலிப்பைன்சில் சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு


21/12/2011

பிலிப்பைன்சில், வாஷி சூறாவளிக்குப் பலியானோர் மற்றும் காணாமல் போனோர் எண்ணிக்கை, 1,000 ஆக அதிகரித்துள்ளது.பிலிப்பைன்சில், கடந்த வாரம், வாஷி சூறாவளி கடுமையாகத் தாக்கியது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 957 பேர் பலியாகியுள்ளதாகவும், 49 பேர் காணாமல் போனதாகவும், அந்நாட்டு பேரிடர் மேலாண்மைக் கவுன்சில் அறிவித்துள்ளது.

நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானா தீவின் ககயான் டி ஓரோ மற்றும் இலிகான் ஆகிய துறைமுக நகரங்கள், பெருத்த சேதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.
நன்றி வீரகேசரி


சோமாலியாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏழரை இலட்சம் பேர் சாவின் விளிம்பில்


ஐ.நா.அறிக்கை

ஆபிரிக்காவின் சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பஞ்சத்தால் ஏழரை இலட்சம் பேர் சாவின் விளிம்பில் உள்ளனர். 40 இலட்சம் மக்கள் உலக நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள எதியோப்பியா, சோமாலியா மற்றும் கென்யா ஆகிய மூன்று நாடுகளில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் சோமாலியாவில் 1991 இல் இருந்து நிலையான அரசியல் சூழல் இல்லை. நாட்டின் பெரும்பான்மையான தெற்குப்பகுதி அல்­ பாப் பயங்கரவாத அமைப்பிடம் சிக்கியுள்ளது.

இந்நிலையில் ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு ஆராய்ச்சிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது, சோமாலியாவில் மொத்தம் 40 இலட்சம் பேர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. பஞ்சம் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் ஏழரை இலட்சம் பேர் இறந்து விடுவார்கள். ஏற்கனவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறந்து விட்டனர்.

இந்த 40 இலட்சம் பேரில் 30 இலட்சம் பேர் நாட்டின் தென்பகுதியில் தான் உள் ளனர். ஒட்டுமொத்தமாக கிழக்கு ஆபிரிக்காவில் மட்டும் ஒரு கோடியே 20 இலட்சம் மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு மழையே இல்லாததால் சோமாலியா, எதியோப்பியா கென்யா ஆகிய நாடுகள் பஞ்சத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ஜிபவுட்டி, எரித்திரியா மற்றும் உகண்டா நாடுகளிலும் மழையின்மையால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.



No comments: