புலிகளை தவறாக நடத்தினாரா வைகோ


.

இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது என நோர்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். நோர்வே அரசின் உத்தரவின் பேரில் இலங்கைப் போர் குறித்து தயாரிக்கப்பட்ட அமைதிக்கான அடைமானங்கள் என்ற தலைப் பிலான 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை அண்மையில் ஒஸ்லோ வில் வெளியிடப்பட்டது அதில்,

இலங்கையில் சமாதான முயற்சிகள் 2003-2004 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய போது இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் கவனித் தது. ஆனால், 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் சோனியாகாந்தி இந்தியாவின் சக்தி வாய்ந்த நபராக மாறினார். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண் டியவர்கள் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல் குறித்து இலங்கை கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தோற்றால் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என இலங்கை நினைத்தது என நீளும் அந்த அறிக்கை வைகோ குறித்து கூறும் வரிகள் தமிழகத்தில் பரப ரப்பை பற்ற வைத்துள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தொடர்பு கொண்டு, ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அறிக்கையை ஏற்று ஆயுதங் களைக் கீழே போடுமாறு ஆலோசனை வழங்கினார். அதைத் தெரிந்து கொண்ட வைகோ புலிகளிடம் இது காங்கிரஸின் சதி இதற்கு உடன்பட வேண்டாம். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா ஆட்சியைப்பிடிக்கும். அவர்கள் புலிகளுக்கு உதவி செய்வார்கள் என்று சொன்னார் என்று நோர்வே அறிக்கை தெரிவிக்கிறது.இது குறித்து விளக்கம் கேட்க வைகோவைத் தொடர்பு கொண்டோம். அவர் சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகி பதிலளித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குமரன் பத்மநாதன் ஓர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும் இதே குற்றச் சாட்டைச் சொல்லியிருந்தார்.

அதற்குப் பதிலளித்து வைகோ அன்றைக்கே அறிக்கை வெளியிட்டார். இலங்கையின் போரை நிறுத்த தி.மு.க தரப்பில் முயற்சித்ததாகவும் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதற்கான ஓர் அறிக்கையைத் தயாரித்ததாகவும் சொல்லப் படுகின்றது. அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயு தங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடை வோம் என்று அறிவிக்க வேண்டும். சுதந்திர தமிழீழம் என்கிற குறிக்கோளைக் கைவிட்டு மாற்று அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்று இருப்பதாக குமரன் பத்மநாதன் கூறியிருந்தார். இந்தத்திட்டம் குறித்து வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிவிக்கக்கூடாது என்றும் தேர்தல் காலம் ஆதலால் போர்நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ், தி.மு.கவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால் அவர்கள் தடுத்து விடுவார்கள் என்றும் அரசியல் பிரிவுச் செயலர் நடேசனிடம் சிதம்பரம் தெரிவித்த தாக குமரன் பத்மநாதன் கூறியிருந்தார்.



ஆனால் அந்தத் தகவலை நடேசன் வைகோவிடம் கூறி விட்டதாகவும் வைகோ அதை அலட்சி யப்படுத்தச் சொன்னதாகவும் தொடர்ந்து சொல்கிறார்கள். இது அப்பட்டமான பொய். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்து எந்தக் காலத்திலும் வைகோ ஆலோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கேற்ப, மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை பிரபாகரன் தான் மேற்கொள்வார். இலங்கை போர் உச்சத்தில் இருந்த போது எந்த வகையிலாவது போர்நிறுத்தம் ஏற்பட்டு விடாதா? என்று வைகோ துடித்ததை நாங்கள் அருகில் இருந்து பார்த்தோம்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் வைகோ வைத் தொடர்பு கொண்டு தேர்தலில் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதா?எனக் கேட்டார். தேர்தலில் அணிமாற விருப்பமில்லை போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கலாமா என யோசிக்கிறேன் என வைகோ சொன்னார். ம.தி. மு.க விற்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டதை அறிந்த நடேசன் நீங்கள் ஒருவர் பாராளுமன்றம் சென்றால் எங்களுக்காக 500 எம்.பிக்கள் சென்றதாக நினைத்துக் கொள்வோம். அதனால் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்று சொன்னார். அன்று இரவு வைகோவை நடேசன் மீண்டும் தொடர்பு கொண்டார். இங்கு பலத்த சண்டை நடக்கிறது. மிகவும் சிரமப்பட்டு சற்றலைற் போனில் பேசுகிறேன். நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று பிரபாகரன் விரும்புகிறார் என்று வைகோவிடம் தெரிவித்தார். எனவே, அவர்கள் வைகோ மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். குமரன் பத்மநாதன் பேச்சோ நோர்வே அறிக்கையில் வைகோ பற்றிக் குறிப்பிட்டிருப்பதோ உண்மை கிடையாது.

துரோகிகளும் எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார். இன்றைக்கு வைகோ மீதும் நெடுமாறன் மீதும் இதுபோன்ற அவதூறுகள் தூற்றுகின்ற போதிலும் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள் என்று தெளிவாக விளக்கம் அளித்தார்.


nantri:valampuri.com

No comments: