கும்பிடப் போன தெய்வம் (சிறுகதை) - கானா பிரபா

.

"என்னப்பா இன்னும் ரெடி ஆகேல்லையோ? ஏழுமணிப்பூசை தொடங்கப்போகுது. இப்பவே வெளிக்கிட்டால் தான் கார் பார்க் பண்ண இடம் கிடைக்கும் கெதியா வெளிக்கிடுமன்" நாகநாதனின் அலாரக் குரல் அது.

"இந்த மனுசன் ஒழுங்கா ஒரு சீரியல் பார்க்க விடாது, பழஞ்சீலை கிழிஞ்சது மாதிரி இனிக் கோயிலுக்கு வெளிக்கிடும் வரை புறுபுறுத்துக் கொண்டு வரப்போகுது" வீடியோக்கடையில் இருந்து எடுத்து வந்த திருமதி செல்வம் சன் டிவி சீரியலில் செல்வத்தின் நடிப்பை உச்சுக் கொட்டிக்கொண்டிருந்த நாகநாதன் பெஞ்சாதி சுந்தரி தன் தவ நிஷ்டை கலைந்த கோபத்தில் முணுமுணுத்தவாறே ஹோல் பக்கம் வந்தாள்.


"டோய் இன்னும் உந்த ப்ளே ஸ்ரேசனைக் (play station) கட்டிப் பிடிச்சுக் கொண்டிருக்கிறியே? கொப்பரைப் போல நீயும் கால் வயிறுச் சம்பளம் உழைக்கப் போறாய் போல, ஹோம் வேர்க் எல்லாம் செஞ்சாச்சோ செம்மரி, போய் குளிச்சு வெளிக்கிடு கோயிலுக்குப் போகோணும்" புருஷன் மேல் இருந்த கோபத்தை அப்படியே இலாவகமாகத் தன் ஏக புத்திரன் லவனிடம் இடம் மாற்றி விட்டு இன்றைய திருவிழா நாளுக்கு ஏற்ற சாறியைத் தேர்ந்தெடுக்கும் முனைப்போடு அலுமாரிப்பக்கம் போனாள் சுந்தரி.

கோயில் திருவிழா தொடங்கிவிட்டது. இனிப் பத்து நாள் சிட்னியே களைகட்டப்போகிறது. திருவிழாக் காலத்தில் வேலைக்கு விடுப்பெடுத்தோர் ஒருபக்கம், கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் எட்டத்து உறவினர்கள், தொலைந்து போன நண்பர்களைத் தேடிப் பிடித்து நட்பைப் புதுப்பித்து கார் பார்க் தேடத் துடிக்கும் அடியவர் ஒருபக்கம், லிவர்பூல் பக்கம் போய் சேலைக் கடை தேடி பத்து நாளுக்கும் விதவிதமான சாறி தேடி வாங்கி பக்காவாகாத் தயார் ஆகியிருக்கும் மாதர் கூட்டம் ஒருபக்கம் எனக் களை கட்டப் போகிறது திருவிழா.
 
"நீர் என்ன சினிமா சூட்டிங்குக்கோ போறீர்" காருக்குள் ஏறிய சுந்தரியைப் பார்த்து எள்ளல் தொனியில் நாகநாதன்.

"இஞ்சை உந்த நக்கல் நளினங்களை உங்கட சொந்தக்காரருக்குக் சொல்லுங்கோ, உங்கட வேலாயுதம் அம்மானின் பெட்டை நளினா, இந்தியா போய் எல்லோ கோயில் திருவிழாவுக்குச் சாறி எடுத்து வந்தவ தெரியுமோ" சைக்கிள் கேப்பில் சுந்தரியின் தாக்குதலால் நாகநாதனின் நிலை அமைதி ஒப்பந்தத்துக்குத் தாவியது.

கோயிலுக்குப் போகும் கார்ப்பயணத்தில் நாகநாதன் இளையராஜாவைப் போட, பக்கத்தில் இருந்த சுந்தரி ஹாரிஸ் ஜெயராஜுக்குத் தாவ ஒரு மாதிரி ரீமிக்ஸ் கலவையாகப் பயணித்தது. பின்னால் இருந்த லவன் விட்ட இடத்தில் இருந்து ப்ளே ஸ்ரேசனில் எதிரிகளைத் தாக்கிக் கொண்டிருந்தான்.

"இப்பதான் ஞாபகம் வருகுது, பொன்னம்பலத்தாற்ற மகன் ராசன் வெஸ்ட் மீட்டில் வீடு வாங்கியிருக்கிறான், போன கிழமை பிளமிங்டன் மார்க்கற்றில கண்டனான், திருவிழா நேரம் எங்கட வீட்டுப்பக்கம் கார் விடலாம் அண்ணை எண்டவன்" என்றவாறே நாகநாதன் ராசன் வீட்டுப் பக்கமாகத் திருப்பினான்.

"என்னப்பா பதினஞ்சு நிமிச நடை, பேசாமல் ட்ரெயினில் வந்திருக்கலாம்" சுந்தரி வியர்வையை நோகாமல் ஒற்றியவாறே.

"நடக்கிறது நல்லது கொலஸ்ட்ரோல் குறையும், பேசாமல் நடவும், டோய் உந்த அறுந்து போன ப்ளே ஸ்ரேசனை நிப்பாட்டடா" இது நாகநாதன்.

"நல்ல சனமப்பா, சுவாமி வெளிவீதி வர வெளிக்கிட்டுது, கொஞ்சம் இஞ்சால் பக்கம் நிப்பம்" வேகமாகப் பாய்ந்த நாகநாதனுக்கு சுந்தரியின் ஐடியா சரியாகப் படவே கோயில் முகப்புப் பக்கமாக ஒதுங்கினான்.

லவன் தன் கூட்டாளிப் பெடியன் ஒருத்தனைக் கண்டு விட்டான், "ஹாய்" என்று சிரித்துக் கொண்டே தொடர்ந்து தங்கள் தேசிய பாஷை ஆங்கிலத்தில் அளவளாவிக் கொண்டே அடுத்து வரப்போகும் புது வீடியோ கேம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்கள், தகப்பன்மாருக்கு அடுத்த ஆப்பு ரெடி.

"என்ன நாகநாதன் ஒளிச்சுக்கொண்டு நிக்கிறீர் இஞ்சால வாருமன்" ரக்ஸ் ஒபிசில் வேலை செய்யும் செல்வம் அது.

"இல்லை ஐசே ஒரே கூட்டமா இருக்கு அதான்"

"இஞ்சால வாரும் எங்கட கூட்டத்தில் வந்து ஐக்கியமாகும்" செல்வம் அழைக்கவே படியேறிக் கோயிலின் வளாகப் பக்கமாகச் செல்வத்தோடு சோடி சேர்ந்திருக்கும் நாலைஞ்சு பேருடன் ஐக்கியமானான் நாகநாதன்.
"இந்த மனுஷன் இப்பிடித்தான், போற போற இடத்திலை தனிய விட்டுட்டு ஓடிப்போயிடும்" சுந்தரியின் புறுபுறு புராணம் இந்த முறை மனதுக்குள்.

"எட சுந்தரி அக்கா! எப்பிடி இருக்கிறியள், கனகாலம் கண்டு, போன திருவிழாவுக்குப் பிறகு இப்பதான் காணுறம் என்ன" சுந்தரியைச் சுறண்டிய அந்தக் குரல் சந்திராவினுடையது. ஒரே ஊர்க்காரர்.

"ஓம் சந்திரா, ஒரே வேலை என்ன, திங்கள் தொடங்கினா வெள்ளிக்கிழமை வரை வெள்ளைக்காறனுக்குச் சேவகம் செய்யோணும், வீக் எண்டில் கூட வீட்டுக்காரருக்கு அவிச்சுக் கொட்டோணும் என்ன" சிரித்துச் சமாளித்துக் கொண்டே சமாவைத் தொடங்கினாள் சுந்தரி.

"உம்மட மரூன் கலர் சாறி உமக்கு நல்ல எடுப்பா இருக்கு, அவையவை தங்கட நிறத்துக்குத் தக்க உடுக்கோணும், சுந்தரத்தாற்ற மனுசி கொடியேத்தத்துக்குக் கட்டிக்கொண்டு வந்துதே ஒரு கலர்.." சுந்தரம் போக்கம் ஹில்ஸ் இல் பெரிய அப்ஸ்ரெயர்ஸ் வீடு கட்டின கடுப்பு சுந்தரிக்கு இருந்ததை சந்திரா கண்டுணரமாட்டாள் என்பதை அவளின் ஆமோதிப்பே காட்டிக் கொடுத்து விட்டது.

"நாங்கள் யாழ்ப்பாணம் போனாங்கள், எங்கட ஊர்ப்பக்கமெல்லாம் வேற குடிகள் வந்திட்டுது, ஒருகாலத்தில எப்படியெல்லாம் இருந்தனாங்கள் அக்கா, வெளியானுக்கு ரம்ப்ளரில் பச்சத்தண்ணி தன்னும் கொடுத்திருப்பமோ" சந்திரா தன் தேசிய உணர்ச்சியைக் கக்கினாள். இதை மாதிரி வெள்ளைக்காரனும் நினைச்சிருந்தால் மூன்று நாலு வீடு இந்த நாட்டில் வாங்கியிருப்போமோ என்று சொல்ல அந்த நேரத்தில் ஆருமில்லை. ஒருபக்கம் சுவாமி வெளிவீதியின் அரைச்சுற்றைத் தாண்டிப் பயணிக்கையில் சந்திராவும் சுந்தரியும் ஹோம் மினிஸ்ட்ரியை கவனிக்க கோயிலின் தெற்குப் பக்கமாக நாகநாதனும் பின்னே செல்வம் கூட்டணியும் வெளிநாட்டு அரசியலைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள். இடைக்கிடை எதிர்ப்படும் தெரிந்தவர்களைக் கண்டு ஒரு சில வார்த்தைகள் குசலம் விசாரித்து விட்டுத் தொடர்ந்தது பேச்சுக் கச்சேரி. பின்வீதியில் இருந்த தண்ணீர்ப்பந்தலில் சர்பத் வாங்கியும் வயிற்றுக்கு நிரப்பியாச்சு, கியூவில் நின்று தோசை வாங்கிச் சாப்பிட்டாச்சு. நேற்று அன்னதானத்தில் என்ன மெனு என்றும் பேசி முடிச்சாச்சு, ஜப்பானில் வந்த சுனாமி வரைக்கும் அரசியலையும் உலக நடப்பையும் அக்குவேறு ஆணிவேறாக அலசியாச்சு. மணி ஒன்பதைத் தொட்டாலும் கூட்டத்துக்குக் குறைவில்லை.

தெற்கு வீதியில் தன்னோடு படித்த கூட்டாளி சுபாவோடு கடலை போட்டுக் கொண்டிருந்த சுந்தரியிடம் வந்து

"என்னப்பா வீட்டுக்கு வெளிக்கிடுவோமோ" நாகநாதன்.

"சரி சுபா நாங்கள் வரப்போறம் நாளைக்கு வேலை எல்லோ" சுபா வீட்டில் இருக்கிறதைக் குத்திக் காட்ட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய திருப்தியில் சுந்தரி.

"என்ன நாகநாதன் அண்ணை இப்பிடி உழைச்சு என்னத்தைக் கண்டியள், பெடியனுக்கு சீதனம் கொடுத்தோ கட்டி வைக்கப்போறியள்" தன் பிள்ளை செலக்டிவ் ஸ்கூலில் தெரிவானதை பொடி போட்டுக் காட்டிய பரமதிருப்தியில் சுபா.

அசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு நாகநாதன்,சுந்தரி, லவன் சகிதம் அடுத்த பதினைந்து நிமிட நடைக்குத் தயார் படுத்தினான்.
 
"ஐயய்யோ, இரண்டு மணித்தியாலமா அங்கை இருந்தனாங்கள் கோயிலுக்கு உள்ளை போய் சுவாமி கும்பிடோணும் எண்டு யாருக்காவது உறைச்சதா" சுந்தரி

யாவும் கற்பனையே (என்று நம்புவோமாக)
எச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)

5 comments:

kirrukan said...

[quote]வெளியானுக்கு ரம்ப்ளரில் பச்சத்தண்ணி தன்னும் கொடுத்திருப்பமோ" சந்திரா தன் தேசிய உணர்ச்சியைக் கக்கினாள். இதை மாதிரி வெள்ளைக்காரனும் நினைச்சிருந்தால் மூன்று நாலு வீடு இந்த நாட்டில் வாங்கியிருப்போமோ என்று சொல்ல அந்த நேரத்தில் ஆருமில்லை.[/quote]


நல்ல சிறுகதை தந்த கானா பிரபாவுக்கு நன்றிகள்,உங்கள் முதல் கதையே நல்லாக உள்ளது. தொடர்ந்து பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

கோவிலில் முன் உள்ள ஒரு வீட்டில் கார் பார்க் பண்ணி போட்டு வரும் பொழுது ஒருத்தர் சொன்னார் கோயிலை சுற்றி இருக்கும் எல்லா வீடுகளையும் கோவில் காரர்(நாங்கள் )வாங்கிபோட்டோம் ,ஒரு வீட்டை மட்டும் உவன் வெள்ளை விக்கமாட்டான் என்று அடம் பிடிக்கிறான் ,முருகன் அவனையும் வெகுவிரைவில் வெளியேற்றிப்போடுவார் நீர் இருந்து பாரும்....உந்த முருகன் சக்தி வாய்ந்தவர் .....

Anonymous said...

[quote]சுந்தரத்தாற்ற மனுசி கொடியேத்தத்துக்குக் கட்டிக்கொண்டு வந்துதே ஒரு கலர்.." சுந்தரம் போக்கம் ஹில்ஸ் இல் பெரிய அப்ஸ்ரெயர்ஸ் வீடு கட்டின [quote]

Temple wise president Suntharam lives in Baulkham hills in upstairs. Do you mean his wife's saree?

கானா பிரபா said...

இல்லை நண்பரே, கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் யாவும் கற்பனையே

Ramesh said...

கானா உங்கள் சிறுகதை வாசித்தேன் பரவாயில்லை இது முதல்கதை யென்று நீங்களே சொல்லியுள்ளீர்கள். நன்றாக உள்ளது என்று பொய்சொல்லி உங்களைப் பப்பாவில் ஏற்ற நான் விரும்பவில்லை. உங்கள் எழுத்துக்களை விரும்பி படிக்கின்ற ஒருபயல் நான் அந்த எழுத்துக்களில் இருந்த உங்களுக்கேயான பாணியை கைவிட்டுவிட்டீர்கள் இந்த சிறுகதையில். அதனால் தான் இயல்பான ஓட்டத்தைக் காணமுடியவில்லை போல் தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். வாழ்த்துக்கள்.

Keetha said...

"எட சுந்தரி அக்கா! எப்பிடி இருக்கிறியள், கனகாலம் கண்டு, போன திருவிழாவுக்குப் பிறகு இப்பதான் காணுறம் என்ன" சுந்தரியைச் சுறண்டிய அந்தக் குரல் சந்திராவினுடையது. ஒரே ஊர்க்காரர்.

ஒரே ஊர்க்காரர் எண்டா என்ன பக்கத்து வீட்டுக்காரர் எண்டா என்ன பாக்கிறதுக்கே நேரம் கிடைக்கிறது இங்கு அரிது. அதை மிக நன்றாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அடுத்த திருவிழாவில் சந்திப்போம்.
அன்புடன்
கீதா