இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது


.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பாரதி விருதும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்;
கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோன்று


 அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள்,இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் இயல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாரதி விருது, இசைத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது,நாட்டியக் கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாலசரஸ்வதி விருது என மூன்று விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி முதன்முறையாக இந்த ஆண்டில் இயல்துறையில் சிறந்த எழுத்தாளராகிய ஜெயகாந்தனுக்கு பாரதி விருதும் திரை இசைக் கலையில் தனி முத்திரை பதித்துள்ள இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் நாட்டியக் கலையில் புகழுடன் விளங்கும் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்துக்கு பாலசரஸ்வதி விருதும் வழங்கப்படும்.
இந்த விருதுகளைப் பெறும் ஒவ்வொருவக்கும் தலா விருதுக்குரிய பொற்கிழியாக தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

No comments: