யுத்தம் முடிந்து 17 மாதங்கள் கடந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களின் பரிதாபநிலை

.
கௌரவ எஸ். ஏம். கிருஷ்ணா அவர்கள்,
இந்திய வெளிவிவகார அமைச்சர்
புதுடில்லி.

அன்புள்ள ஐயா,

யுத்தம் முடிந்து 17 மாதங்கள் கடந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களின் பரிதாபநிலை



இலங்கை பாராளுமன்றத்தில 17 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையாகவோ அன்றி பகுதியாகவோ கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் அரை நூற்றாண்டுக்கு காலத்துக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய அரசியல்வாதிகளிலும் பார்க்க அம்மக்களின் அவலநிலையில் நான் அதிக கரிசனையை கொண்டுள்ளேன். இலங்கையில் இன்று பொதுவாக காணப்படும் நிலைமையையும் முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் குறிப்பிடத்தக்கதான களநிலைமைகளை தங்களுக்கும் தங்கள் ஊடாக இந்திய அரசுக்கும் தெரியப்படுத்த வேண்டிய தார்மீக கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கின்றது. இலங்கை அரசின் நிலைப்பாடு பல விடயங்களில் மாறுப்பட்டதாக இருப்பினும் ஓர் சிரேஷ்ட அரசியல்வாதி என்ற முறையில், 1956ம் ஆண்டு தொடக்கம் மிகக் கடினமான காலங்களையெல்லாம் கடந்து வந்துள்ள நான் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் நிலை என்பவை தொடர்பான விடயங்களில் மாறுபட்ட கருத்தினை கொண்டுள்ளேன். விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அடிபணிந்து காலத்துக்கு காலம் இடம்பெயர்ந்து சென்ற அம்மக்கள் சகல உடைமைகளையும் இழந்து அவர்கள் பரம ஏழைகளாக மாறியுள்ளனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், ஆபரணங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்தோரில் பத்து வீதத்திற்கு மேற்பட்டோர் ஏதோவொரு வகையில் அங்கவீனர்களாகவும், 95,000 இற்கு மேற்பட்ட பெண்கள் விதவைகளாகவும், பெருமளவிலாள சிறுவர்கள் அநாதைகளாகியும் உள்ளனர். இதனை விட மேலும் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களும் கூட இழக்கப்பட்டுள்ளன. சிலர் தமது அங்க உறுப்புக்களையும் மற்றும் கண் பார்வையையும் இழந்துள்ளனர். 1,50,000 இற்கு மேற்பட்டோர் தங்கள் செயற்கை கால்களுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் சிலர் தமது இரு கால்களையும் கூட இழந்துள்ளனர்.

அரசாங்கம் செயற்படும் முறையை கவனிக்கும போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எந்தளவுக்கு விரைவாக சுமூக நிலையை தோற்றுவிக்க முடியுமென்பது சந்தேகத்துக்குரியதாகும். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சமாதானம், அமைதி, இயல்பு நிலையை மீள நிலை நிறுத்துவதில் அரசாங்கத்திற்கு உண்மையான கரிசனை இருக்குமெனில் மீள் இணக்கம், அபிவிருத்தி, மற்றும் புனர்வாழ்வு போன்ற விடயங்களில் அரசு எதனை செய்ய வேண்டுமென்பதை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு முன்மொழிய விழைகின்றேன். இதன் பயனாகப் பாரபட்சம், பயம், பாதுகாப்பின்மை போன்ற எத்தகைய மனநிலைகளுக்கும் உட்படாது மக்கள் மீளக்குடியேற்றத்திற்கு சாத்தியமாக இருக்கும். இதற்காக அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்குவது தொடர்பான தார்மீகக் கடமை நன்கொடை வழங்கும் நாடுகளுக்கு இருக்கின்றது.

தங்களது மேலான உடனடி பரிசீலனைக்கு:-

ஏனைய விடயங்களைவிட முதன்மையானதும், முன்னுரிமையளிக்க வேண்டியதுமான முதல் விடயம் யாதெனில் அரை நூற்றாண்டுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சனைக்கு சகல மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஓர் தீர்வை காண வேண்டும். ஒருவரை விடவும் ஏனையவர் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்றில்லாது எத்தகைய தீர்வும் சமத்துவம், நீதியின் அடிப்படையில் அமைந்ததாக அமைய வேண்டும். ஏனைய துறையினர் முன்வைத்த பல ஆலோசனைகள் இருப்பினும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய(மாதிரி)முறையை பின்பற்றலாமென்ற எனது ஆலோசனையை ஒரு திருப்தி நிறைந்த தீர்வாகவும் பரிசீலிக்கப்படலாம்.

வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தாம் ஏற்கனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உட்பட்டிருந்த அடிமை வாழ்க்கையை மேலும் தொடர தயாரில்லை. அவர்கள் விளையாட்டு பொம்மைகள் விற்கும் கடைகளில் ஒரு விளையாட்டு துப்பாக்கியை யேனும் பார்க்க விரும்பவில்லை. ஆனால் அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவம், கடற்படை முகாம்களை அமைக்கின்றது. இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மட்டுமன்றி இலங்கை அரசின் இந் நடவடிக்கை மிகக்கண்டிக்கப்பட வேண்டியதொன்று. பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இராணுவ, கடற்படை முகாம்களை அமைப்பது தேவையற்ற செயலாகும் என்பதே எனது கருத்தாகும். இச் செயல் எதிர்மறை விளைவுகளை தோற்றுவிக்கும். எதிர்பார்த்த பயன் கிட்டாது போகும். கடந்த 25 ஆண்டுகளாக இராணுவ ஆட்சி முறையில் வெறுப்படைந்துள்ள மக்கள் தற்போது சிவில் நிர்வாகத்திற்கான எதிர்பார்ப்பில் உள்ளனர்.

.எவ்வித விசாரணைகளுமின்றி சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்று;க்கணக்கான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்

.மிகக்குறுகிய காலத்தினுள் விடுதலை செய்யப்படுவர் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியை ஏற்று தாமாக சரணடைந்த ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட வர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தி ஏனைய ஆயிரக்கணக்கான அப்பாவிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும்.

.உள் நாட்டில் இடம் பெயர்ந்த ஒவ்வொரு நபரும் உரிமை கோரும் அவரவரது காணிகளுக்குள் உட்செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே காணிக்கு உரிமைகோரும் பிரச்சினைகள் எழும்போது மட்டுமே அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காணலாம். இச்செயல்முறை தற்போது உயர் பாதுகாப்பு வலயங்களாக கருதப்படும் இராணுவத்தினரின் ஆதிக்கத்திற்குட்பட்ட காணிகளுக்கும், மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக கொடுப்பனவு செய்து அல்லது கொடுப்பனவு செய்யாது தமது அதிகாரத்திற்குட்படுத்திய காணிகளுக்கும், பொருந்தக்கூடியதாய் இருக்க வேண்டும்.

.தற்போதும் கூட அரசாங்கம் இறந்து போனவர்களினதும், காணாமற் போனவர்களினதும் அசையும், அசையாச் சொத்துக்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை.

.கிளிநொச்சி அல்லது வடக்கு கிழக்கில் எந்தப் பிரதேசத்திலும் இராணுவத்திற்கு வீடுகள் நிர்மாணிக்கும் நடவடிக்கைகளினால் ஏற்படும் புதிதாக தோன்றும் பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு அத்தகைய எண்ணத்தை கைவிடுமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். ஏனெனில் இந் நடவடிக்கை தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக உட்படுத்தும் அரசாங்கத்தின் ஓர் முயற்சியென்றே கருதப்படும். இதற்கு ஈடாக யுத்தத்தின் போது முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளை மீளமைத்து கொடுப்பதுடன் தாமாகவே முன்வந்து தமது வீடுகளைக் கட்ட விரும்புவர்களுக்கு நிதி உதவியும் அத்தோடு கட்டிட நிர்மாண பொருள்களையும் வழங்க முடியும். இராணுவத்திற்கு ஏற்கனவே நிர்மாணித்த வீடுகளை, உள்நாட்டில் இடம்பெயர்நத மக்களின் வீடுகளை மீளக்கட்டி முடியும் காலம்வரை, அம் மக்களின் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தலாம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தமது காணிகளை அவர்களுக்கு விற்ற அல்லது வழங்கிய காணி உரிமையாளர்களை அரசாங்கம் தண்டிக்கக்கூடாது. கிளிநொச்சி சந்தைப் பிரதேசத்திலுள்ள கட்டிடங்கள் மற்றும் கிளிநொச்சி நகரத்தின் பரவிபாஞ்சான் உட்பட வடக்கின் ஏனைய பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் எனக்கூறி தற்போது முட்கம்பி வேலியடைத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சகல இடங்களையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆயிரக்கணக்கான லொறிகள், கார்கள், உழவு இயந்திரங்கள், இழுவைப் பெட்டிகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பன திருத்த முடியாதபடி அழிக்கப்பட்டுவிட்டன. சில காணாமற்போயுள்ளன. புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அல்லது அதற்கான நட்டஈடு வழங்கு வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

.தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகளில் உள்ளுர் பொதுமக்களின் பங்களிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளில் உள்ளுர் மக்களின் பங்களிப்பு ஓர் நிபந்தனையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஏனைய தொண்டர் நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்த பலர், அதே பதவி நிலையில் தொடர்ந்து இருப்பதன் விளைவாக நன்கொடை வழங்கும் நாடுகளிடமிருந்து கிடைக்கும் உதவிகள் ஒழுங்கீனமான முறையில் பகிர்ந்தளிக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே இதில் நன்கொடையாளர்கள் தலையிடுவதற்கான உரிமை இருக்க வேண்டும்.

அரசாங்கம் காணிகளுக்கு உறுதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது சொந்த வீடுகளில் இன்னமும் குடியமர்த்தப்படாத நிலையில் உறுதிகளை வழங்குவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். உறுதிகள் வழங்க வேண்டுமாயின் உரிமையானர்கள் தத்தமது காணிகளை அடையாளம் காட்டி அதில் மீளக்குடியேறும் வரை அரசாங்கம் பொறுத்திருக்க வேண்டும்.

இனங்காண முடியாத நபர்களுக்கு பெறுமதிமிக்க காணிகள் மனம் போனவாறு வழங்கப்படுகின்றன. இதன் நோக்கம் தெரியவில்லையென்பதால் இவை வெளிப்படையானதாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள பெறுமதிமிக்க காணிகள் பல நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது உள்ளுர் மக்களுடன் புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால் இந் நடைமுறை ஓர் ஒழுங்கற்ற செயலாக கருதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

யுத்தத்தின் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் இழந்த உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும்;; நட்டஈடு வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்படவேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமென்ற உறுதிமொழியை ஜனாதிபதி ஏற்கனவே வழங்கியுள்ளார்.

மீளக ;குடியேற்றப்பட்ட மக்களின் பரிதாப நிலையை நேரில் கண்டு, அம்மக்களின் வாழவில் சகஜ நிலை ஏற்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு இம்மகஜர் தயாரிக்கப்பட்டது.

மீளக்குடியேறிய மக்களுக்காக மட்டுமல்லாமல், கால்நூற்றாண்டுக்கு மேல் அமைதியான, சமாதான வாழ்விற்காக ஏங்கித்தவிக்கும், இந்நாட்டின் சகல மக்களின் விடிவிற்காக இவ்வேண்டுகோள் விடுக்கப்படுகின்றதேயன்றி, யாரையேனும் புண்படுத்துவதற்காகவோ அன்றேல் சங்கடப்படுத்துவதற்காகவோ அல்ல என்பதை பணிவுடன் அறியத்தருகின்றேன். இயல்பு வாழ்க்கை மீண்டும் ஏற்படுவதற்கு முன்னர் அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை அமுல்;படுத்த முயற்சிப்பதன் மூலம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது என்பதை இலங்கை அரசின் மனதில் பதிய வைக்க வேண்டுமென்று மிக நேர்மையான முறையில் தங்களை வற்புறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.

மக்கள் பார்க்குமிடம் எங்கும் அந்நியர்களும், புதிய சுற்றாடலும் அமைந்த, புதிய பிரதேசத்திலுள்ள அந்நியர் நிலத்தில் வாழ்கின்றோம் என்றில்லாது, தாம் இடம் பெயர் வதற்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களுக்கு, எவ்வித அமைப்பு மாற்றமுமின்றி தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் வந்துள்ளோமென்ற, உணர்வு அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.



நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

No comments: