எனது இலங்கைப் பயணம்

.
                                                                                         செ.பாஸ்கரன்

எல்லோரும் போய் வருகின்றார்கள் பல ஆண்டுகளுக்குப்பின்பு வடக்கு நோக்கி செல்லும் பயணம் என் மனதிலும் துளிர் விட்டது. அரசியல் கட்சிகளும் அதன்பின் ஆயுதக் குழுக்களும் ஆட்சிபுரிந்த பிரதேசம் இன்று ஆமிக்காரர்கள்கையில். ஆனையிறவில் இலங்காபுரியை ஆமிக்காரர்கள் தாங்கி நிற்கும் சிலை காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருப்பதை பத்திரிகைகளில் பார்த்தபோது. ராணுவத்தின் கைக்குள்தான் இலங்கை போகப்போகின்றது என்பதற்கான தீர்க்க தரிசனம்தானோ என என் மனம் ஒரு போது எண்ணியதுண்டு அது நடவாது என்பதற்கு இன்னும் எந்த உத்தரவாதமும் யாரும் தரவில்லை. இந்த நிலையில் ஏதாவது நடப்பதற்கு முன்பு ஒருமுறை போய்விட்டு வந்து விடலாம் என்று தொடங்கிவிட்டேன் எனது பயணத்தை.



கொழும்பை அடைந்தவுடன் விமானநிலையத்தை விட்டு வெளியே போகும்போது எங்கிருந்துதான் வந்து ஒட்டிக்கொண்டதோ தெரியாது ஒருவித மருட்சி சுற்றும் முற்றும் பார்த்தபடி நடக்கிறேன். எவரும் என் அருகே வரக்காணோம். கடத்திக்கொண்டு போய்விடுவார்களோ, அதை இதைக் கேட்டு வெருட்டுவார்ககோ என்ற எண்ணம் அடிமனதில் இருந்த இடம் தெரியாது ஒதுக்கிக் கொண்டது. மாறாக துப்பாக்கியை தூக்கமுடியாது தூக்கிக் கொண்டுநிற்கும் மீசை அரும்புகின்ற வயதுடைய கிராமத்து வறுமை முகத்தில் தெரியும் இராணுவ சிப்பாய்கள் ஆங்காங்கு நிற்கிறார்கள். வெளியே சென்றதும் எம் உறவுகள் எமக்காக காத்திருந்து இரவு 12.30 ற்கு அழைத்துச் செல்கின்றார்கள.; வாகனத்தை செலுத்துபவர் பெரிய சத்தமாக தமிழ்ப்பாட்டை போட்டுக்கொண்டு விரைகின்றார். எங்கும் இராணுவத்தினர் மறிப்பதாக தெரிவில்லை தெருவோரங்களில் இடையிடையே அவர்கள் நின்றபோதும் எந்த தடுப்புமின்றி வீடுவந்து சேர்ந்தது சற்று உற்சாகத்தை தந்தது. மறு நாள் கொழும்பை சுற்றி ஒரு அலசல். கொழும்பு நகரம் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது எதையோ பிடித்துவிடும் அவசரம் இங்குபோலவே அங்கும் தெரிகிறது. சுற்றி சுற்றிச் பார்க்கிறேன் என்கண்களில் தட்டுப்படவே இல்லை, இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் போட்டிருந்ததைப்போல ஜனாதிபதியின் கட்அவுட்டுக்களை காணவில்லை களட்டி வைத்துவிட்டார்கள் போல என்று மனம் சொல்கிறது. இடையிடையே வீதியின் ஓரத்தில்; காவல் அரண்கள் இருக்கும் அதன் முன் ஒரு இராணுவத்தினன் நிறுத்துக என்ற ஆங்கில வாசகம் கொண்ட மட்டையை கையில் வைத்துக் கொண்டு நிற்பார் எதாவது ஞாபகம் வந்ததுபோல் மட்டையை நீட்டுவார் அப்படி நீட்டினால் சாரதி வாகனத்தை நிறுத்தி ஜடி யை காட்டவேண்டும் ஓகே சேர் என்ற வார்த்தையோடு விடை கிடைக்கும். எங்கும் வீதிகள் திருத்தப்படுவதும் கட்டிடங்கள் கட்டப்படுவதுமாக கொழும்பு சுறுசுறுப்பாக இருந்தது. பிச்சைகாரர்களும் பேமென்ற் வியாபாரிகளும் இல்லாததும் வீதிகளில் குப்பைகள் போடமுடியாது இருப்பதும் நகர் அழகாகத் தெரிகின்றது. ஆனால் கை வண்டியில் மூட்டை இழுக்கும் தொழிலாளிகளும், பசை வாளிககோடு போஸ்டர் ஒட்டும் சிறுவர்களும் இன்னும் மறையாத நகரமாகவே இருக்கிறது.


அழுத்மாவத்தையில் நிற்கின்றேன் பெரிய சத்தமாக முருகன் பாடலுடன் நாதஸ்வரம் மேளம் சேமக்கலம் சங்கு எல்லாம் சேர்ந்து லவுட்ஸ்பீக்கரில் ஒலித்து அந்த பிரதேசத்தையே ஆக்கிரமித்த வண்ணம் திறந்த றக் வாகனத்தில் பெண்களும் ஆண்களும் சேர்ந்திருக்க சூரன் பவனி வருகின்றார். ஒருவர் நின்று கொண்டு சூரனின் தலையை எல்லாப் பக்கமும் திருப்பிக் கொண்டு நிற்கின்றார். சில தமிழ்க் கடைகளுக்கு முன்னால் நிற்பாட்டி நிற்ப்பாட்டி பூசை போன்று ஏதோ செய்கின்றார்கள். என்ன இது என்று நண்பரிடம் கேட்கின்றேன்ரூபவ் இன்று இரவு சூரன் போர்தானே சூரனை உலாகொண்டு செல்கின்றார்கள்ரூபவ் புறக்கோட்டை வழியாக சுற்றிக்கொண்டு முகத்துவாரம் சிவன் கோயிலுக்கு போகப்போகின்றார்கள் என்ற விடை கிடைத்தது. என்னை அறியாது சிரித்துக்கொண்டேன் போர் நடந்த நாட்டில் போரால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் ஒரு பகுதியினர் போர் ஒத்திகை பார்க்கிறார்கள் அசுரனை அழிக்கப் போகின்றார்களாம். இந்த சூரனிடம் ஆமிக்காரர்கள் எந்த ஜடி காட்டையும் கேட்டு பார்க்கவில்லை.
மறுநாள் அதிகாலை 4 மணிக்கு காரை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி விரைகின்றோம் விடியும் வேளையில் வவுனியா வந்து விட்டதில் ஒரு திருப்தி வாகன நெரிசல் அதிகம் இல்லாவிட்டாலும் யாழ் கொழும்பு பஸ் வண்டிகள் எம்மைக்கடந்து போய்க்கொண்டிருக்கிறது பெரும்பாலும் சொகுசு வண்டிகள். ஏதோ ஒரு உந்துதலால் எண்ணிக்கொண்டு போகின்றேன் சிலவற்றை தவறவிட்ட கணக்கின்படி 26 பஸ் வண்டிகள் ஒரு இரவில் கொழும்பை நோக்கி ஓடியிருக்கிறது. வவுனியா மாங்குளம் வீதி காப்பெற் வீதியாக மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் ஓரங்களில் ஏறக்குறைய 300 மீற்றருக்கு ஒரு சென்றி பொயின்ற் காணப்படுகின்றது அதில் இரண்டு இராணுவத்தினர் நிற்கின்றார்கள் மீசை அரும்பும் வயதும் கிராமத்து தோற்றமும் கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள். என்ன காவல் புரிகின்றார்களோ தெரியாது பெரும் பாலும் எல்லோரும் கையில் மொபைல் போனை வைத்துக்கொண்டு ஏதோ செய்த வண்ணமே இருக்கின்றார்கள்.காட்டு வெய்யிலில் பொழுது போவதற்கு கண்டு பிடித்திருக்கும் உத்தியோ என்று எண்ணத் தோன்றியது. ஏ9 வீதியின் இரு பக்கங்களும் பற்றைகள் ஏறக்குறைய பதினைந்து பதினைந்து மீற்ரர் அகலத்திற்கு வெட்டப்பட்டு வெளியாக்கி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீளக் குடியமர்வு செய்யப்பட்ட மக்கள் UNHCR கொடுத்த சின்னஞ் சிறு குடிலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதே போல் சின்னஞ் சிறு பெட்டிக்கடைகளும் ஏ9 வீதியோரம் காணப்படுகின்றது.


கண்ணுக்கெட்டிய தூரம்வரை மக்களைக் காணக்கிடைக்கவில்லை அப்படியிருக்க இந்த கடைகளில் யார் பொருட்கள் வாங்குவார்கள் என்ற எண்ணம் என் தலையை குடைய ஆரம்பித்தது. காரை நிற்பாட்டி இறங்கி உரையாடுவோம் என்ற எண்ணத்தை தெரிவித்தவுடன் காரிலிருந்த உறவுகள் MOD இல்லாம இருக்கிறீங்கள் ஆக்களோடு கதைக்க ஆமிக்காரன் விடமாட்டான் வேண்டாம் என்ற தடை வந்தது ஒருவாறு சமாதானம் செய்து ஒரு முறை இறங்கிதான் பார்ப்போமே என்று ஒரு சிறு கடையின் முன்பாக காரை நிறுத்தி விட்டு இறங்கி கடையை நோக்கி சென்றேன்.
கண் மட்டும் முன்னால் இருந்த சென்றியின் மேல் இருந்தது. கடையில் சோடா ஒன்று கேட்பதற்கு என்ன பாசையை பாவிப்பதென்று ஒரு கணம் யோசிக்க வேண்டியதாக இருந்தது. இவர்கள் தமிழரா சிங்களவரா? ஆமி சென்றியின் பக்கத்திலேயே கடை இருப்பதால் என்னுள் எழுந்த சந்தேகம்தான் இது. தமிழ் முறையில் சேலை அணிந்து கொண்டு ஒரு 45 வயது மதிக்கத்தக்க மாது கல்லாப்பெட்டியில் இருக்க அருகில் இருந்த வாங்கில் சேட் அணியாது சாரம் மட்டும் உடுத்திய ஒருவர் இருக்கின்றார். மதியம் தொடங்குமுன்னரே அந்த தகரக் கொட்டகைக் கடைக்குள் வெக்கையின் அகோரம் தெரிகிறது. வாங்கிலின் பக்கத்தில் ஒருவயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிள்ளை வெறும் பாயில் கிடத்தப்பட்டிருக்கிறது. உடையின்றி கிடந்ததால் ஆண்பிள்ளை என்பது தெரிந்தது. சுதாகரித்துக்கொண்டு ஒரு சோடா தருவீங்களா? என்று கேட்டேன் என்ன சோடா ஜயா வேணும் பெண்ணே கேக்கிறார். தமிழர்கள்தான் என்று தெரிந்தாலும் அவர்களைப் பற்றிக் கேட்பதற்கு சற்று தயக்கமாக இருந்தது. மீண்டும் இராணுவத்தினரை பார்வையிடுகிறேன் அவர்கள் மொபைல் போனுடன் மல்லுக்கட்டியவண்ணமே இருக்கின்றார்கள் எங்களைப்பற்றிய கரிசனை அவர்களிடம் இல்லை. மெதுவாக கதையை தொடங்குகிறேன் அவர்களும் பதில் கூறுகின்றார்கள். மாங்குளத்தில் இதே இடமான ஏ9 வீதிக்கு அண்மையில் இருந்து நந்திக்கடல்வரை சென்று ஒரு மகனை இழந்து குடும்பத் தலைவர் ( வாங்கிலில் இருந்தவர்) காலில் ஊனப்பட்டு நடக்கமுடியாதவராகவும் ஆகி மருமகனையும் இழந்து ( படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையின் தந்தை) இன்ணொருமகன் காணாமல் போய்விட வவுனியா அகதி முகாமில் இருந்து மீள் குடிறேற்றப்பட்டிருக்கும் சோகக் கதையை கண்ணீர் மல்க கூறிமுடித்தார். ஏதோ ஒரு NGO  இந்த கடையை கட்டிதந்து ஜயாயிரம் ருபாவுக்கு சாமான் போட்டுத் தந்திருக்கினம் ஏதோ இதை வச்சு காலத்த ஓட்டிறம் இதுக்குள்ளதான் இருப்பு குளிப்பு எல்லாம் காணிய அடைக்கிறதுக்கு கம்பிக் கட்டையில்ல மரம் வெட்ட எனக்கு ஆக்களுமில்ல ஆமிக்காரன் மரம் வெட்ட விடவும்மாட்டான் காசு குடுத்து வாங்கிறதுக்கு காசுக்கெங்க போறது வயல் விதைச்சா ஏதாவது முன்னேறலாம் உழுகிறதுக்கு மிசினில்ல வித தானியமில்ல என்ன செய்யிற தெண்டு தெரியேல்ல என்று கூறியபடி இரண்டு கைகளையும் விரித்து மேலே வானத்தைப்பார்து கண்ணீர் வடித்தார் அந்தப் பெரியவர். என்ன சொல்வது எப்படித் தேற்றுவது இதற்கெல்லாம் யார்காரணம்? அவரின் வாழ்வு போலவே விடையேயில்லாத கேள்விகளாக இருந்தது. ஆக்களைக் காணயில்ல எப்பிடி யாவாரம் நடக்கும் என்ற கேள்விக்கு. எங்களப்போலத்தான் கொஞ்ச சனம் இருக்கு அதுகள் ஏதேனும் வாங்குங்கள் ஆமிக்காறங்கள் அடிக்கடி ஏதாவது வாங்குவாங்கள் அவ்வளவுதான் என்று சலித்துக் கொண்டார் அந்த பெரியவர். ஆமிக்காரர்களைப்பற்றியும் புலிகளைப்பற்றியும் பல கதைகளைக் கூறி அழுதார்கள். முடிவில் மத்தளமாக வாழ்ந்து வந்திருக்கிறம் இனி எண்டாலும் ஆண்டவன் கருணை காட்டட்டும் என்றார் அந்த பெரியவர்.
 

இந்தக் குழந்தை என்று இழுத்தேன். என்ர பிள்ளையின்ர பிள்ளை அப்பா போய்ச் சேந்திட்டேர் மகள் இந்த பாலன விட்டுப்போட்டு கிளினொச்சியில போய் தொட்டாட்டு வேலை செய்யுது. வயுறிருக்கே சாப்பிட வேணாமே ஜயா. விரக்தியின் முனகலாக வார்த்தைகள் வெளிவந்தது.




கடையின் ஒரு பக்கத்தில் பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் படம் ஒட்டியிருந்தது. அது என்ர கடசிப்பிள்ள கடைசியா நந்திக்கடலால ஓடேக்க தவறவிட்டுட்டன் எல்லா இடமும் விசாரிச்சுப் பார்த்துப்போட்டன் ஒர இடத்திலையும் இல்லையாம். ஆனா என்ர குஞ்சன் சாகயில்ல எங்கயோ இருப்பான் வருவான் கண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அம்மா நான் ஒரு படமெடுக்கட்டா என்று கேட்டு அவரின் அனுமதியுடன் அந்த போட்டோவை போட்டோ எடுத்தேன். அரசியலோடு சம்பந்தமான தெரிந்த சிலரிடம் அதை கொடுத்தால் ஏதாவது பலன் கிடைக்குமா என்ற ஆதங்கத்தோடு. கடலில் விழுந்த மழைத்துளியை கண்டுபிடிக்க முடியுமா?


செளித்து வாழ்ந்த வன்னி மக்கள் கண்ணீரோடு கையேந்தி நிற்கும் காட்சிக்கு இந்த ஒரு குடும்பம் உதாரணமாகிறது.


இடத்தை விட்டு நகர்ந்து ஏ9 பாதையில் செல்லும்போது இன்னுமொரு குடிசையின் முன் நிறுத்துகின்றேன்.


தொடரும்



4 comments:

kalai said...

இலங்கைக்கு சுற்றுலா செலபவர்கள் பலர் அங்கு மக்கள் சந்தோசமாக இருக்கினம் என்று பதிவுகள் இட்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்களின் சோகக்கதைகளை அவர்கள் எழுதுவதில்லை. ஆனால் செ.பாஸ்கரனின் இப்பதிவு அங்குள்ள அகதிகளின் அவல நிலையை வெளிச்சம் காட்டியிருக்கிறது. பதிவுக்கு நன்றிகள்.

kirrukan said...

[quote]kalai said...
இலங்கைக்கு சுற்றுலா செலபவர்கள் பலர் அங்கு மக்கள் சந்தோசமாக இருக்கினம் என்று பதிவுகள் இட்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்களின் சோகக்கதைகளை அவர்கள் எழுதுவதில்லை.[/quote]
கலை ,,அவர்கள் நேராக யவ்னாவுக்கு சென்று யவ்னா டமிழ்ஸின் நிலையை எழுதினவர்கள் ...இவர் யவ்னாவுக்கு போகும் வழியில் வன்னித்தமிழனை பார்த்து கேட்டு அவர்களின் அவலங்களை எழுதியுள்ளார்.கட்டுரையாளர் தான் ஒரு நடுநிலையானவன் என்று காட்டுவதற்காக வன்னித்தமிழனின் மத்தள நிலையை சொல்லத்தவறவில்லை......[quote]அந்த பெரியவர். ஆமிக்காரர்களைப்பற்றியும் புலிகளைப்பற்றியும் பல கதைகளைக் கூறி அழுதார்கள். முடிவில் மத்தளமாக வாழ்ந்து வந்திருக்கிறம் இனி எண்டாலும் ஆண்டவன் கருணை காட்டட்டும் என்றார் அந்த பெரியவர்[/quote](புலியும் பிழை ஆர்மிக்காரனும் பிழை என்றால் யார்தான் சரி)

பாராட்டுக்கள் ...தொடர்ந்து உங்கள் ஆக்கங்கள் வெளிவரட்டும்.....

Kiri said...

கலை என்பவருக்கு முழு நேரத் தொழிலே எங்கேயாவது நொள்ளை சொள்ளை சொல்லிக் கொண்டு திரியலாம் என்று தெரிகிறது. சாய்பாபா பற்றிப் போட்டால் அங்கேயும் எச்சம் இடுகிறார், அவுசி வானொலி பற்றி எழுதினால் அங்கேயும் குதர்க்கம். யாழ் பயணம் பற்றி யார் என்ன எழுதினாலும் அங்கேயும் வந்து ஒரு ஞானி மாதிரி கருத்தை உதிர்க்கிறார், என்ன கொடுமை ஐயா

Anonymous said...

நல்லதொரு பதிவு தொடர்ச்சியை ஆவலுடன் எதிர் பார்கிறேன்
பாராட்டுக்கள்