ஆண்டவனே வழிகாட்டு !

 
































மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்   …..  அவுஸ்திரேலியா 



அதிகாரம் என்றும் ஆகாது உடலுக்கு
அதிகாரம் உலக அழிவுக்கு வித்தே
இதிகாசம் புராணம் எடுத்துமே சொன்னது
எதையுமே கேளா எழுந்தது அதிகாரம்

அதிகாரம் அரச கட்டிலில் அமர்கிறது
எதையுமே பாரா எக்காள மிடுகிறது
ஊதிப் பெருக்க ஒன்றாக இணையும்
பாதகர் பலரும் பக்கமாய் வருகின்றார்

நீதியை மிதிக்கின்றார் நிட்டூரம் செய்கிறார்
போதனை போதனை பொய்யாய் விரிக்கிறார்
பாதகத்தை செய்ய பக்குவமாய் சொல்கிறார்
பாரிருப்பா ரெல்லாம்  பதறித் துடிக்கின்றார் 

அநியாயம் அங்கே அதிரசமாய் ஆகிறது
ஆலவட்டம் பிடிப்பார் அகமகிழ்ந்து நிற்கின்றார்
அதிகார அரக்கன் அஹிம்சையை மறந்து
அதிகார வெறியால் ஆடியே நிற்கின்றான்

காவலர்க ளெல்லாம் கடிநாயாய் மாறுகிறார்
கடித்துக் குதறி கடுவிஷமாய் ஆகின்றார்
நீதிமான்கள் யாவருமே நினைவிழந்து நிற்கின்றார்
அதிகாரம் அங்கே அதிர்ந்துமே சிரிக்கிறது

வள்ளுவர் கண்ணீர் கடலினுள் மூழ்கின்றார்
வள்ளலார் மனமொடிந்து வாடியே நிற்கின்றார்
தெள்ளுதமிழ் பாரதியார் உள்ளம் ஒடிகின்றார்
தேசபிதா காந்திமகான் தனைமறந்து அழுகின்றார்

அறமுடையார் அனைவருமே ஆண்டவனை நாடுகிறார்
அவலங்கள் போக்கிடவே அனைவருமே வேண்டுகிறார்
அமைதியொடு அன்புயர அதிகார வெறியழிய 
அனைத்துமாய் இருப்பவனே ஆண்டவனே வழிகாட்டு 

No comments: