29 Jun, 2025 | 03:15 PM
லத்தீப் பாரூக்
இவ்வாறு செய்ததன் மூலம் தமது இருப்புக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நம்பியுள்ள அரபு சர்வாதிகாரிகளுக்கு ஈரான் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. அவர்களது ஆட்சிகள் ஒடுக்குமுறை, ஊழல் மற்றும் மதச்சார்பற்றவை. இந்த ஆட்சிமுறை அவர்களின் அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தங்கள் மக்களை கல்வியறிவற்றவர்களாகவும் வறுமையுடனும் வாழ வைத்திருக்கிறது.
இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ், துறைமுக நகரமான ஜாஃபா மற்றும் பல நகரங்களுக்கு ஈரான் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை எரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை தெருக்களில் தள்ளியுள்ளது. உயரமான கட்டிடங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளதால் அவை அழிவுக்குப் பிறகு காஸா போல தோற்றமளிக்கின்றன.
சில நாட்களுக்குள் ஈரான் மத்திய கிழக்கின் அரசியல் காட்சியை முற்றாக மாற்றியுள்ளது, அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலின் அகண்ட இஸ்ரேல் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் ஆட்சிகளை இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் வகையில் அகண்ட இஸ்ரேலை உருவாக்கி மத்திய கிழக்கின் வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா கொண்டிருந்த திட்டமும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.
அவர்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று இஸ்லாம் நசுக்கப்படுவதை உறுதி செய்வதாகும்.
காஸாவில் தங்கள் அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாத நூறாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் இன்று குண்டுவீச்சை நிறுத்துமாறு ஈரானிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடத் தொடங்கி உள்ளனர். ஈரான் மீது தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி குண்டு வீச்சுக்களை நிறுத்த ஈரானை வற்புறுத்தும் படி பாகிஸ்தானிடமும் இஸ்ரேலிய மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 1940 களில் இருந்து பலஸ்தீனர்கள் மற்றும் அரேபியர்கள் மீது செய்யப்பட்ட குற்றங்களுக்காக சிலர் முஸ்லிம்களிடம் உரத்த குரலில் மன்னிப்பும் கேட்டு வருகின்றனர்.
பிராந்தியத்திற்கும் மக்களுக்கும் எதிராக சூழவுள்ள அரபு நாடுகள் செய்த பல குற்றங்கள் இருந்தபோதிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நட்புறவு கொண்ட அரபு சர்வாதிகாரிகளுக்கு ஈரானின் பதில் ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்பியுள்ளது.
ஈரானின் தாக்குதல் குறித்து விரைவாக பதிலளித்த பல உலக நாடுகள், அமெரிக்க-இஸ்ரேலிய படையெடுப்புக்கு எதிராக ஈரானுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளன. இதில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் அடங்கும்.
எவ்வாறாயினும், முழு மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலும் உள்ள தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளும் எந்த ஒரு அரபு ஆட்சியாளரும், அமெரிக்க-இஸ்ரேலிய, ஐரோப்பாவால் திணிக்கப்பட்ட, முஸ்லிம் ஈரானின் தற்காப்புப் போருக்கு தங்கள் உண்மையான ஆதரவை இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஏறக்குறைய அனைத்து ஆட்சியாளர்களும் சர்வாதிகாரிகளும், தங்கள் ஆட்சிகளின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மட்டுமே நம்பியுள்ளனர். அதற்காக அவர்கள் தங்கள் மக்களை அடக்கி ஒடுக்கியும் மிருகத்தனமாகவும் வைத்திருக்கின்றனர்.
மறுபுறம், அவர்களால் தங்களது சொந்த நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சூறையாடப்பட்ட செல்வம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் அவர்கள் காஸாவில் பலஸ்தீனர்கள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இனப் படுகொலைகளையும் கண்டும் காணாமல் அதற்கு ஆதரவாக நின்றனர்.
இதில் மிகவும் வெட்கக்கேடான நிலைமை என்னவென்றால், காஸாவில் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளான மற்றும் பட்டினியால் வாடும் பலஸ்தீனர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு போத்தல் தண்ணீரையோ அல்லது உணவுப் பொட்டலத்தையோ கூட வழங்கத் தவறிய இஸ்லாத்தின் புனித பூமியான சவூதி அரேபியா கூட, இதே காலப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பில்லியன் டொலர் ஒப்பந்தங்களை தான் செய்து கொண்டது, காரணம் தமது இருப்புக்காக அவர்கள் முழுமையாக அமெரிக்காவையே நம்பியுள்ளனர். அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் சவூதி அரசு இரண்டு வாரங்கள் கூட ஆட்சியில் இருக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னர் ஒருமுறை கூறினார்.
மத்திய கிழக்கில் முஸ்லி்ம விவகாரங்களின் அபத்தமான நிலை என்னவென்றால், 7500 ஆண்டுகளுக்கும் மேலான வளமான வரலாற்றைக் கொண்ட எகிப்து கூட ஒரு காலத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் முன்னணியில் இருந்தது. ஆனால் இன்று அதுவும் கூட அரேபியர்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான தனது நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் இஸ்ரேலின் அடிமையாக மாறியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தபோது, ஜூன் 22 ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களில் நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்” என்றார்.
ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலுக்கு விரைவாக பதிலளித்தது. இதனால் அதன் நகரங்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டது. மக்கள் தற்போது பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சில ஈரானிய அதிகாரிகள், தெஹ்ரான் ஏற்கெனவே ஒரு "முழு அளவிலான திணிக்கப்பட்ட போருக்கு" தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். அது பின்னர் ட்ரம்பின் ஜனாதிபதி பதவியில் ஆதிக்கம் செலுத்தும். எவ்வாறாயினும், அமெரிக்காவின் ஈடுபாடு ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமெய்னியின் ஆத்திரத்தை இரட்டிப்பாக்கி அணு குண்டுகளை உற்பத்தி செய்யத் தொடங்கலாம். ஒருவேளை அதை பயன்படுத்தவும் கூடும்.
இதற்கிடையில் வர்ணனையாளர்கள், "அமெரிக்காவின் தாக்குதல் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு எதிராக ஈரானியர்களின் முழு அளவிலான தாக்குதலுக்கு வழிவகுக்கும்" என்று கூறியுள்ளனர். இந்த அமெரிக்க தளங்கள் இஸ்ரேலில் தாக்க முயற்சிக்கும் இலக்குகளை விட ஈரானின் எளிதான ஏவுகணை வீச்சுக்குள் உள்ளன. அமெரிக்கர்கள் கொல்லப்பட்டால், அல்லது காயமடைந்தாலும் கூட, அமெரிக்க ஜனாதிபதி சரியான பழிவாங்கலுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் போர் குறித்து கருத்துவியிட்ட உஸ்பெகிஸ்தான் மற்றும் துருக்கிக்கான முன்னாள் இந்திய தூதர் எம்.கே. பத்ரகுமார், இஸ்ரேல்-ஈரான் போரின் கவனிக்கப்படாத ஒரு உட்பொருள் என்னவென்றால், ஐரோப்பாவில் உள்ள மூன்று கிறிஸ்தவ நாடுகள். பிரிட்டன்., பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி- என்பன இஸ்ரேலின் பக்கத்தில் ஆர்வத்துடன் களத்தில் இணைந்துள்ளமையாகும் என்றார். ஈ-3 என்று அழைக்கப்படுவதை உள்ளடக்கிய இந்த ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் நன்கு நிறுவப்பட்ட பிரத்தியேக உரையாடல் வழியை கொண்டுள்ளன. ஆனால் அவை இஸ்ரேலின் போர் பாதையில் இணைகின்றன என்பது விசித்திரமானது அல்லவா? இது ஒரு சிலுவைப் போர் என்றார்.
இருப்பினும், ஈரான் சரணடையாது. ஒரு நாகரிக அரசாக ஈரானின் தேசிய பெருமையும் மரியாதையும் அதற்கு இடமளிக்காது. தன்னை சுற்றி வளைத்துள்ள சக்திகளை வெற்றி பெறும் வரை ஒரு நீண்ட போரை நடத்தவே ஈரான் தூண்டப்படும் என அவர் மேலும் விளக்கினார்.
இதற்கிடையில், ஈரானின் எழுச்சி தவிர்க்க முடியாதது. இஸ்ரேலை விட 10 மடங்கு பெரிய மக்கள் தொகை, பரந்த கனிம வளங்கள், தன்னிறைவு அடைந்த விவசாயத் துறை மற்றும் பரந்த அடிப்படையிலான தொழில் வாய்ப்புகள் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க புதுமையான முன்னேற்றம், பெரிய உள்நாட்டு சந்தை, அதிக மூலோபாய இருப்பிடம் மற்றும் பயிற்சி பெற்ற மனிதவளம். இவை எல்லாம் ஈரானிய பொருளாதாரத்தின் அசைக்க முடியாத அம்சங்கள்.
மறுபுறத்தில் ஈரானுடன் ஒரு நீடித்த போரில் இஸ்ரேலுக்கு எதிர்காலமே இல்லை. இந்த போருக்கு ஒரு முடிவற்ற தீர்வாக இஸ்ரேலில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான தொடர்ச்சியான கோரிக்கை நெதன்யாஹுவுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். அதிகார இழப்பு என்பது நெதன்யாஹுவுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சாவு மணி அடிக்கக் கூடியது. அவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகளிலிருந்து இதுவரை அனுபவித்த வந்த பாராளுமன்ற விடுபாட்டுரிமையை அவர்கள் இழக்கவேண்டி ஏற்படும். அது அவர்களை சிறையில் தள்ளலாம். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment