இலங்கை யாழ்ப்பாணத்தில் சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்குரிய வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.
ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா, மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012 ஆம் ஆண்டு வரையில் வெளியிட்டார். இதுவரையில் நானூறுக்கும் மேற்பட்ட
இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில்
பார்க்கமுடியும்.
டொமினிக் என்பது அவரது இயற்பெயர். தமிழகத்திலிருந்து பொதுவுடமை இயக்கத்தோழர் ஜீவானந்தம்
பிரித்தானியர் காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில்
அவரது கருத்துக்களினால் கவரப்பட்ட டொமினிக்,
தனது பெயருடன் ஜீவா என்ற எழுத்துக்களையும் இணைத்துக்கொண்டார்.
மல்லிகை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து சுயமுயற்சியோடு அதனை வெளியிடத்தொடங்கியதும், மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார்.
அவரது இந்த நாமம் இலங்கையெங்கும்
மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது.
இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின்
நூறுவயதையும் எட்டியிருப்பார்.
ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளரகவே
இலக்கிய உலகில் பிரவேசித்தவர். அவரது முதலாவது கதைத்தொகுதி தண்ணீரும் கண்ணீரும்.
அதற்கு இலங்கையின் தேசிய
சாகித்திய விருது கிடைத்தது. அதுவே இலங்கையில்
தமிழில் தேசிய மட்டத்தில் இலக்கியத்திற்காக
அவ்வாறு கிடைத்த முதல்விருதுமாகும்!
இலங்கையில் கலை, இலக்கியவாதிகளையும்
இலக்கிய விமர்சகர்களாகத்திகழ்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களையும்
ஆழமாக நேசித்து அவர்களது ஆக்கங்களுக்கும் சிறந்த களம் வழங்கினார்.
தமிழகத்து இலக்கியவாதிகளுக்கும் முன்னுதாரணமாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இலக்கியவாதிகள் இயங்கவேண்டும் என்பதற்கும் மல்லிகை ஜீவா முன்னுதாரணமாகியிருந்தார்.
சோவியத்நாட்டுக்கும் பிரான்ஸ், ஜெர்மனி, லண்டனுக்கும் சென்று அங்கிருக்கும் கலை, இலக்கியவாதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர்.
மல்லிகை ஜீவா எழுத்தாளர்,
இதழாசிரியர், சமூகப்போராளி, முதலான அடையாளங்களுடன் மறையவில்லை. வரலாறாகவே வாழ்ந்துகொண்டிருப்பார் !
அவரது மறைவையடுத்து இலங்கையிலும்
தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடர்ச்சியாக இணையவழி காணொளி நினைவேந்தல்களும் இடம்பெற்றுவருகின்றன.
இலங்கையில் மூவின இலக்கியவாதிகளினதும்
ஊடகங்களினதும் நன்மதிப்பினை பெற்றுள்ள மல்லிகை ஜீவா இலங்கையின் அதியுயர் விருதுகளான
சாகித்திய ரத்னா, தேசத்தின் கண் என்பவற்றையும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதையும்
பெற்றவர்.
இலங்கை அரசு அவருக்கு நினைவு
முத்திரை வெளியிடவேண்டும் எனவும், அவர் பிறந்த யாழ்ப்பாண மண்ணில் அவருக்கு நினைவு மண்டபம்
அமைக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரான
மல்லிகை ஜீவா அவர்களினால், 1972 ஆம் ஆண்டு ஈழத்து இலக்கிய உலகிற்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன்.
அவரது மல்லிகையில் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில் எனது
முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளியானது.
அதனையடுத்து எனது பல சிறுகதைகளும்,
கட்டுரைகளும் மல்லிகையில் தொடர்ந்து வெளிவந்தன.
எனது பாட்டி சொன்ன கதைகள்,
( சிறுவர் இலக்கியம் ) கங்கை மகள் ( சிறுகதைகள்
) ஆகியன மல்லிகைப்பந்தல் வெளியீடுகளாக வந்தன.
மல்லிகை ஜீவா நினைவுகள் என்ற
நூலையும் 2001 ஆம் ஆண்டு வெளியிட்டேன்.
இலங்கையில் சர்வதேச தமிழ்
எழுத்தாளர் மாநாட்டை நடத்தவேண்டும் என்ற அவரது நீண்டநாள் கனவையும் பலரதும் ஆதரவுடன்
2011 ஆம் ஆண்டு கொழும்பில் நான்கு நாட்கள் நடத்தி நனவாக்கியிருக்கின்றேன்.
ஈழத்தின் தர்மாவேசக்குரல் மல்லிகை ஜீவா, தனது
குரலை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28
ஆம் திகதி நிரந்தரமாக நிறுத்திக்கொண்டாலும், அதற்கு முன்னர் சில வருடங்களாகவே இலங்கை தலைப்பட்டினத்திற்கு
அப்பால் புறநகரமான மட்டக்குளியவில் அமைந்த
காக்கைதீவு என்ற இடத்தில் ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்திலிருந்தவாறு மௌனத்
தவமியற்றிக்கொண்டிருந்தார்.
மல்லிகை ஜீவாவுடன் எனக்கிருந்த உறவு நான்கரை
தசாப்தங்களுக்கும் மேற்பட்டது. 1971 முதல்
1987 தொடக்கம் வரையில் ஒவ்வொரு மாதமும் அவருடன் பல மணிநேரங்களை
செலவிட்டிருக்கின்றேன்.
அவருடன் இலங்கையில் பல பிரதேசங்களுக்கும்
இலக்கியப்பயணம் மேற்கொண்டேன். தலைநகரில் அவருடன் வீதிவீதியாக
சுற்றியலைந்தேன். அவருக்குப்பிடித்தமான
உணவகங்களில் பசியையும் போக்கினோம். அவருடனான பயணம் தமிழகம் வரையும் வியாபித்திருந்தது.
அவரது 93
வயது முதுமையில் அவரது உடல் நிலையை
கருதி, மறைவுச்செய்தி எந்தநிமிடத்திலும் வரலாம் என
எதிர்பார்க்கப்பட்டதாயிருந்தாலும்,
அச்செய்தி உறுதியானபோது உள்ளம் சமநிலையின்றி தவித்துப்போனது.
மின்னஞ்சல் ஊடாகவும் காணொளிகள் வாயிலாகவும்
வந்துகொண்டிருந்த பதிவுகளை கண்ணுற்றபோது,
மனம் பேதலித்து தொண்டை அடைத்தது.
விம்மலை அடக்க பிரயத்தனப்படவேண்டியிருந்தது.
உடன் பிறப்பினை இழந்துவிட்ட சோகம்தான் இற்றைவரையில்
மனதை அலைக்கழிக்கிறது.
அதிலிருந்து விடுபடுவதற்கு மல்லிகை ஜீவாவின் வாழ்வில்
நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களையும்
மறக்கமுடியாத நிகழ்வுகளையும்
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளத்
தொடங்கினேன்.
அவரது மறைவையடுத்து, அவர்
குறித்து நான் எழுதிய சில ஆக்கங்களின் தொகுப்பே
இந்நூல்.
இந்த ஆக்கங்களில் அவரது இலக்கிய
ஆளுமைக்கு அப்பாலிருந்த பல பக்கங்களையும் வாசகர்கள்
தரிசிக்கமுடியும்.
இதனை அவுஸ்திரேலியாவிலிருந்து
வெளியாகும் அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதினேன். இவ்விதழின்
ஆசிரியர்கள் யாழ். பாஸ்கர், கவிஞர் செ. பாஸ்கரன்
ஆகியோருக்கும் தமிழ்முரசு ஆசிரிய பீடத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இந்நூலுக்கான முகப்போவியம்
வரைந்துள்ள எமது இனிய நண்பர் கலைஞர் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களுக்கும் எனது
நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன்
letchumananm@gmail.com முருகபூபதி
No comments:
Post a Comment