வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம் !

 


























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா



ஆதியந்த மில்லா அருருளான சோதியை
அதிமதுரத் தமிழினில் அமர்த்தினார் வாசகர்
தேசமே வியந்தேற்ற திவ்ய திருவாசகமாய்
மலர்ந்துமே வந்து மனமமர்ந்து நிற்கிறது

வாதவூர் பிறந்தார் மனமெல்லாம் இறையே 
சோதனையை வாதவூரர் சுகமாகக் கண்டார்
காதலுடன் கடவுளை கைகூப்பி நின்றார்
கையணைத்துக் கடவுளும் கரையேற்றி விட்டார் 

மந்திரியாய் இருந்தார் மனமெல்லாம் சிவனே
மாணிக்கம் வைரம் மனமேற்க வில்லை
பார்க்கு மிடமெங்கும் பரமனே தெரிந்தார்
பாடினார் வாசகத்தைப் பரமனுமே ஏற்றார்

அதிகாரம் வாதவூரர் அகம் ஏறவில்லை
ஆணவம் அவரிடத்து அணுகிடவும் இல்லை
அகமுழுக்க அரனே அமர்ந்துமே இருந்தார்
ஆசையில்லா நிலையினிலே வாதவூரர் வாழ்ந்தார்

பக்தியின் பக்குவத்தைப் பலவாறு பாடினார்
பாடிய அத்தனையும் பசுந்தமிழின் சொத்தே 
தத்துவம் இருந்தது தர்க்கமும் இருந்தது
இத்தரையில் யாவர்க்கும் ஏற்றதாய் அமைந்தது

மதங்கடந்து பலபேரும் மனமேற்றி நின்றார்
மாபெரும் தத்துவத்தை வாசகரே மொழிந்தார்
தேனாகாத் தித்திக்க திரு வாசகத்தை 
ஊனுருக உவந்தளித்தார் உளமுருகி வாதவூரர் 

வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படித்தால்
மனமாசு அகன்றோடும் மாவெளிச்சம் வந்துவிடும்
சித்தம் தெளியும் சிவனருளும் கிடைக்கும்
நித்தம் படிப்போம் நிம்மதியைப் பெற்றிடுவோம் 

No comments: