உலகச் செய்திகள்

 ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி

காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி

சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப் பரப்பு மூடல்

கட்டாரிலுள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : தாக்குதலை முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவிப்பு

ஈரான் ஏவுகணைதாக்குதல் - இஸ்ரேலில் மின்விநியோகம் பாதிப்பு



ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி

26 Jun, 2025 | 04:09 PM

ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை,ஈரான் வெற்றிபெற்றது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 



காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி

25 Jun, 2025 | 10:57 AM

காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவத்தினரின் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கவசவாகனம் தீப்பிடித்து எரிந்தது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ள   நன்றி வீரகேசரி 



சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப் பரப்பு மூடல்

Published By: Vishnu

24 Jun, 2025 | 12:25 AM

சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் வான்வௌிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, வணிக விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகி வருகின்றமை அல்லது திருப்பி விடப்படுகின்றமை இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 






கட்டாரிலுள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : தாக்குதலை முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவிப்பு

23 Jun, 2025 | 11:41 PM


கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை இன்று திங்கட்கிழமை (23) இரவு ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டார் தலைநகர் டோஹாவின் தென்மேற்கே 24 ஹெக்டேயர் (60 ஏக்கர்) இல் அமைந்துள்ள அல் உதெய்த் விமானத் தளமானது அமெரிக்க மத்திய கட்டளையின் முன்னோக்கிய தலைமையகமாகும்.

1996 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்த இராணுவத் தளம் நிறுவப்பட்டது.

இது, மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமாகும்,  

தற்போது இந்த விமானத்தளம் மீது ஈரான்  ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை   உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.

கட்டாரிலுள்ள இராணுவ தளம் சிறிய மற்றும் நீண்டதூர ஏவுகணையால் தாக்கப்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லையெனவும் பென்டகன் அறிவித்துள்ளது.

இதேவேளை, தமது பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கட்டார் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனத்தெரிவித்து இஸ்ரேல் கடந்த 13 ஆம் திகதி திடீரென ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தது.

இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகின்றது. கடந்த 11 நாட்களாக நடந்து வரும் இந்த மோதல்களால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. 

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை சுமார் 950 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 ஆயிரத்து 450 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வொஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலனில்லையெனக்கூறி ஈரான் ஒதுங்கி விட்டது.

இதை தொடர்ந்து அமெரிக்கா 'மிட்நைட் ஹாமர்' என்ற பெயரில் ஈரான் மீது நேரடியாக தாக்குதலைத் தொடுத்தது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது. 

அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள், 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தி உள்ளது. 

10 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 3 ஏவுகணைகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளன. இதுவரை பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. கட்டாரில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இதைப்போல கட்டார் தலைநகர் தோஹாவிலும் குண்டு சத்தங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளமாக இது உள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில், டிரம்ப் இதனை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள மோதலால் குறித்த பிராந்தியத்தை அண்மித்து பயணிக்கும் அனைத்து இலங்கையர்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தேவைப்பட்டால் தூதரக அலுவலகங்கள் ஊடாக இணைந்து தலையீடு செய்யப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 



ஈரான் ஏவுகணைதாக்குதல் - இஸ்ரேலில் மின்விநியோகம் பாதிப்பு

23 Jun, 2025 | 03:46 PM

ஈரான் இன்று மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 8000 இஸ்ரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய அதிகாரிகள் மின்நிலையங்கள் தாக்கப்படும் சாத்தியக்கூறுகளை எதிர்கொள்வதற்காக முன்கூட்டியே தயாராகயிருந்தனர்,பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு மூன்று மணிநேரத்திற்குள் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் தென்பகுதியில் ஒரு மூலோபாய உட்கட்டமைப்பு வசதிக்குஅருகில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலின் மின்சார கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் பல சமூகங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் மின்சார சபையின் பல குழுக்கள் களத்தில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 










No comments: