இலங்கைச் செய்திகள்

யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்று இரு மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !

வடக்கில் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை !

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு மீதான விசாரணை செப்டெம்பர் மாதம்

பகிடிவதையால் பல்கலை மாணவன் உயிரிழப்பு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது

மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே புதிய வர்த்தமானியை வெளியிட்டிருக்கிறது அரசு - எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை 


யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்று இரு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் 

27 Jun, 2025 | 09:27 PM

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ( 27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது. 

இன்றைய  அகழ்வு பணிகளின் போது இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக, 45 நாட்கள் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் , 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் நடைபெற்று , பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 




சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது ! 

Published By: Digital Desk 3

28 Jun, 2025 | 09:11 AM

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.   
நன்றி வீரகேசரி 






வடக்கில் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை ! 

Published By: Digital Desk 3

27 Jun, 2025 | 12:34 PM

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளைய சனிக்கிழமை (28) காலக்கெடு முடிவடையும் இறுதி தறுவாயில் இந்த உத்தரவு, எம்.ஏ. சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கையடுத்து வழங்கப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.   நன்றி வீரகேசரி 






நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு மீதான விசாரணை செப்டெம்பர் மாதம் 

27 Jun, 2025 | 12:14 PM

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 மே் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை உத்தரவிட்டுள்ளது. 

றக்பி விளையாட்டை மேம்மபடுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 

அத்துடன், இந்த வழக்கின் முதலாவது சாட்சியாளர் வழங்கிய வாக்குமூலத்தில் பாதி மாத்திரமே தன்னிடம் உள்ளதாகவும் எனவே முதலாவது சாட்சியாரின் முழுமையான வாக்குமூலத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நாமல் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 





பகிடிவதையால் பல்கலை மாணவன் உயிரிழப்பு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு! 

27 Jun, 2025 | 10:40 AM

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 மாணவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 மாணவர்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த  23 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 





செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது 

மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது

Published By: Vishnu

26 Jun, 2025 | 07:28 PM

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள்  வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம்


அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.


அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றும் என்ற உத்தரவிற்கு அமைய  வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினத்துடன் இதுவரை 22 மனித சிதிலங்கள்


மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு  அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   








நன்றி வீரகேசரி 




மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே புதிய வர்த்தமானியை வெளியிட்டிருக்கிறது அரசு - எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை 

28 Jun, 2025 | 06:53 PM

(நா.தனுஜா)

காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட 2430 இலக்க வர்த்தமானி அறிவித்தல், அரசாங்கத்தினால் வெள்ளிக்கிழமை (27) இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுமந்திரனால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்தது.  

அதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 27.06.2025 ஆம் திகதியிடப்பட்ட 2443 இலக்க வர்த்தமானியில், 'இவ்வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்குப் போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேசரியிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன், காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதைக் கருத்திற்கொண்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கான கொள்கைத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதானது, மீண்டும் இவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பதையே காண்பிக்கிறது என சுமந்திரன் விசனம் வெளியிட்டார்.

மேலும் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்கீழ் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், ஆகவே எதிர்வருங்காலத்தில் அரசாங்கம் மீண்டும் இத்தகைய வர்த்தமானியை வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.     நன்றி வீரகேசரி 



No comments: