இஸ்ரேலா ? ஈரானா ? : எந்நேரத்திலும் போர் வெடிக்கலாம் : யாருக்கு இராணுவ பலம் அதிகம்

 

28 Jun, 2025 | 12:22 PM


எம்.டி. லூசியஸ்

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரானது உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், ஏதோ ஒரு வகையில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என கூறினாலும் கூட, மீண்டும் எந்நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு நாடுகளின் இராணுவ கட்டமைப்பு மற்றும் ஆயுதபலம் தொடர்பில் இந்த கட்டுரையில் நாம் விரிவாக ஆராய உள்ளோம்.

உலகில் அதிக ராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 15-ஆவது இடத்திலும் ஈரான் 16-ஆவது இடத்திலும் உள்ளன.

இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரான் இராணுவத்தில் அதிக ராணுவ வீரர்கள் உள்ளனர். ஆனால் ஆயுதங்களை ஒப்பிடும்போது ஈரான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

ரஷ்யாவின் பழங்கால டி-72, ஜுல்பிகர், காரர் ஆகிய டாங்கிகளை மாத்திரமே ஈரான் பயன்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் இராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இராணுவ தொழில்நுட்பத்தில் அந்த நாடு முன்னிலையில் இருக்கிறது.

எம்கே5, எம்5 ஷெர்மன், எம்22 லூகாஸ்ட் ஆகிய அதிநவீன டாங்கிகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்துகிறது.

ஈரான் விமானப் படையில் மிக் 29, எப்4 பான்டம், எப்14டோம்காட் ஆகிய போர் விமானங்கள் உள்ளன.

இவை 1979ஆம் ஆண்டு ரஷ்ய போர் விமானங்கள் ஆகும். எனினும் ஈரான் விமானப் படையில் ஷாகத் 136, மொகாஜர் 6 என்ற அதி நவீன ட்ரோன்கள் உள்ளன. இவை இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக உள்ளன.

இஸ்ரேல் விமான படையில் அமெரிக்க தயாரிப்பான எப்15, எப்16, எப்35 ஆகிய அதிநவீன போர் விமானங்கள் உள்ளன.

இதேபோன்று ஹெரோன், ஹெர்மஸ் ஆகிய அதிநவீன ட்ரோன்களும் உள்ளன. விமானப் படையை பொறுத்தவரை இஸ்ரேல் மிகவும் வலுவாக இருக்கிறது.

இஸ்ரேல் இராணுவம், அயர்ன் டோம் என்ற அதிநவீன வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி உள்ளது. சுமார் 70 கி.மீ. தொலைவில் வரும் எதிரிகளின் ஏவுகணைகள், போர்விமானங்கள், ட்ரோன்களை, அயர்ன் டோமில் இருந்து புறப்படும் ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழித்துவிடும்.

மேலும் அமெரிக்க இராணுவத்தின் தரப்பில் தோட் என்ற வான் பாதுகாப்பு கவசமும் இஸ்ரேலில் நிறுவப்பட்டு இருக்கிறது.

இது 3,000 கி.மீ. தொலைவில் வரும் எதிரிகளின் ஏவுகணைகள், போர் விமானங்களை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

இந்த தோட் வான் பாதுகாப்பு கவசத்தை அமெரிக்க வீரர்களே இயக்கி வருகின்றனர்.

இஸ்ரேலின் அயர்ன் டோம், அமெரிக்காவின் தோட் ஆகிய வான் பாதுகாப்பு கவசங்கள் 90 சதவீதம் துல்லியமாக செயல்படும் திறன் கொண்டவை.








இவற்றை தாண்டி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது ஈரானுக்கு பெரும் சவாலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனையும் தகர்த்து ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது.

ஈரான் ராணுவத்தில் சுமார் 20,000 அதிநவீன ஏவுகணைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. அந்த நாட்டின் சாகப் 3, சாஜில் 2, ஃபத்தா 1, இமாத் 3 ஆகிய ஏவுகணைகள் உலகின் மிகச் சிறந்த ஏவுகணைகளாக கருதப்படுகிறன.

இந்த ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலை குறிவைத்து நாள்தோறும் சுமார் 100 ஏவுகணைகள் வீசப்பட்டன. இவற்றில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் நடுவானில் அழித்துவிடுகிறது. ஆனால் சில ஏவுகணைகள் இஸ்ரேலில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

இஸ்ரேல் ராணுவத்திடம் ஜெரிசோ3, லோரா, ராம்பேஜ், ரோக்ஸ், ஸ்பைஸ் 200 ஆகிய அதிநவீன ஏவுகணைகள் உள்ளன.

இவற்றின் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

குறிப்பாக ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல், ஈரான் இடையே 2,100 கி.மீ. தொலைவு உள்ளது. இரு நாடுகளும் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிர வான் வழி போரை நடத்தின.

 ஈரான் கடற்படையில் 7 போர்க்கப்பல்களும் 25 நீர்மூழ்கிகளும் உள்ளன. இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரானின் கடற்படை வலுவாகவே இருக்கிறது.

ஆனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நிமிட்ஸ், கார்ல் வின்சன், பிரின்ஸ்டன், மிலியஸ், வெய்ஸி இ மேயர் ஆகிய அதிநவீன போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் முகாமிட்டிருந்தன.  

இஸ்ரேல் கடற்படையை பொறுத்தவரை பெரிய போர்க்கப்பல்கள் இல்லை. ஆனால் ஜெர்மன் தயாரிப்பான சார் 6 ரகத்தை சேர்ந்த 7 சிறிய போர்க்கப்பல்கள் உள்ளன. மேலும் டோல்பின் வகையை சேர்ந்த 5 நீர்மூழ்கிகள் உள்ளன. இவை உலகின் மிகச் சிறந்த நீர்மூழ்கி போர்க்கப்பலாக கருதப்படுகிறது.

எது என்னவாக இருந்தாலும் இரு நாடுகளும் ஒவ்வொரு கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பெரும்பாலும் இருநாடுகளும் இராணுவ மற்றும் ஆயுத பலத்தில் ஏதோ ஒருவகையில் பலம் பொருந்தியவையாக காணப்படுகின்றன.

நன்றி வீரகேசரி 

No comments: