மன்னார்குடியில் மருதமுத்துக்கு குழந்தை பிறந்தது !

-


சங்கர சுப்பிரமணியன்.





பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் முதல் அடியையே மனிதர்கள் இன்னும் சரியாக உள்வாங்கவில்லை. ஆதலால் இரண்டாவது அடியான சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையானை தற்போது தள்ளி வைப்போம். ஏனெனில் இப்போது நம் கதைக்கு அது தேவையில்லை.

எவ்வளவுதான் படித்து முன்னேறி இருந்தாலும் இன்னும் மக்கள் மனதில் ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்ற பேதம் நிலைத்து வேறூன்றியுள்ளது. முற்றாக அழிந்தபாடில்லை.
சான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை என்று பழமொழியே இதை வலியுறுத்துகிறது. தமிழில் பழமொழிக்கு பஞ்சமா என்ன? ஏன் பெண்பிள்ளையானாலும் பொன்பிள்ளை என்று ஒரு பழமொழி உருவாகவில்லை?

ஏனென்றால் பெண்ணடிமைச் சமுதாயம் என்று தோன்றியதோ அன்றிலிருந்து பெண்ணை சரிசமமாகப் பார்க்கும் வழக்கொழிந்தது. ஔவையார் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் போன்று பெண்பால் புலவர்கள் தமிழ் மண்ணில் தோன்றியதை எல்லாம் தமிழ்கூறும் நல்லுலகம் மறந்தே போயிற்று.

பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணுக்கு தங்க நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் கார் ரொக்கப் பணம் துடைப்பக்கட்டை போன்றவற்றை மாப்பிள்ளைக்கு கொடுக்கும் வழக்கம் தோன்றியது. இந்த லட்சணத்தில் தரமான திருமண சீர்வரிசைப் பொருட்கள் வாங்க சிறந்த இடம் என்று விளம்பரம் வேறு.
வரதட்சணையை ஒழிக்க பாடுபடும்போது இதுபோன்ற விளம்பரங்களால் சான் ஏற முழம் சரிவது போல் ஆகிறது.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பெண்குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொடுமை இருந்ததை எண்ணிப் பார்த்தால் நிலைமை புரியும்.
இதுபோன்ற சமயத்தில்தான் மாதவன் மன்னார்குடி செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு வந்த மணியரசனைப் பார்த்து,

“என்ன மாப்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஊருக்கு எங்கயும் போறீரா?” என்று தன் தூரத்து  உறவான மணியரசனைப் பார்த்துக் கேட்டார்.

“என்ன மச்சான் கேள்வி இது? பேருந்து நிலையத்துக்கு எதுக்கு வருவாங்க கோழி பிடிக்கவா வருவாங்க என்றார் நக்கலுடன்.

“யோவ் சோக்காலி, நீரு கோழியைப் புடியும் இல்ல ஆட்டை வேணுமுன்னாலும் புடியும். நம்ம மன்னார்குடி மருதமுத்து அண்ணனுக்கு குழந்தை புறந்திருக்குய்யா. ரொம்ப சிறப்பா கொண்டாடுறாங்களாம். அதுக்குத்தான் போறேன். உமக்கும் சேதிவந்து போறீரான்னுதான் கேட்டேன்” என்றார் மாதவன்.

“அதுக்குத்தான் நானும் போறன். மச்சான் கிட்ட கிண்டல் பண்ணாம வேற யாருகிட்ட பண்ணுவாங்கலாம்” என்றவர் பேருந்து வரவே இருவரும் பேருந்தில் ஏறிக் கொண்டனர்.

பேருந்தில் ஏறியதும் இருவரும் பேச்சை தொடங்கினர். இருந்தாலும் நம்ம மருதமுத்து அண்ணனை சும்மா சொல்லக்கூடாது. விடாமுயற்சி வெற்றிதரும் என்பதற்கேற்ப குழந்தை பெற்று சாதித்துவிட்டாரே என்று ஒருவர் சொல்ல மற்றவரும் அதை ஆமோதித்தார்.

ஆமோதித்ததோடல்லாமல் தசரதனைப்பற்றியும் சொன்னார். அறுபதனாயிரம் மனைவியை மணந்த அவருக்கு ரிஷ்யசிருங்க முனிவர் நடத்திய வேள்வியின் பயனாக அதன் பின்
குழந்தைகள் பெறவில்லையா? எதுவும் நம் கையில் இல்லை எல்லாம் பகவான் கொடுப்பதுதான் என்றார்.

இவ்வாறு பலவாறு பேசிக்கொண்டே பயணித்ததால் மன்னார்குடி வந்ததே தெரியவில்லை. பேருந்திலிருந்து இறங்கியவர்கள் மருதமுத்து வீட்டுக்கு செல்லுமுன்னே இரண்டு மூன்று இடங்களில் பெரிய பதாகைகள் வைக்கப்பட்டு மன்னார்குடி மருதமுத்துவின் குழந்தை தொட்டிலிடும் திருவிழா என்று விளம்பரப்படுத்தியிருந்தனர்.

எது எதற்குத்தான் விளம்பரம் என்று வரைமுறை இல்லாமல் போயிற்று. கோவில்பட்டி கோதண்டராமன் இல்லத் திருமணம் என்று விளம்பரப் பலகை வந்தது. அப்புறம் பிச்சாண்டிபுரம் பிரம்மநாயகம் பிறந்தநாள் விழா என்று விளம்பரப்பலகை வைத்தனர். அப்புறம் காரியாப்பட்டி கன்னியம்மாவுக்கு பூப்பனித நீராட்டுவிழா கல்லிடைக்குறிச்சி காளிமுத்துக்கு காதணி விழா என்றெல்லாம் வைத்ததெல்லாம் பாரத்திருக்கிறோம்.

இதெல்லாம் காலக்கொடுமையப்பா விளம்பரப் படுத்திதான் பெருமை வரவேண்டும் என்றால் அது பெருமையல்ல. என்று பேசியபடியே வந்தவர்கள் மருதமுத்துவின் வீடிருந்த தெரு முனைக்கே வந்துவிட்டனர்.
தெரு முனையில் வைக்கப் பட்டிருந்த பெரிய பதாகையில் மன்னார்குடி மருதமுத்துவின் குழந்தை தொட்டிலில் இடும் விழா என்று எழுதியிருந்தது. மருதமுத்து தன் குழந்தையோடு சாதனைப் புன்னகையடன் பெருமிதமாக போட்டோவில் நின்றிருந்தார்.

வீட்டை நெருங்க நெருங்க ஒலிபெருக்கியில்
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியின்றி வாழ்க என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. வீட்டை நெருங்கியதும் பந்தல் தோரணங்கள் என்று வீடே அலங்காரமாக காட்டுயளிக்க ஒலிபெருக்கியில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற பாடல் ஒலித்தது.

மருதமுத்துவும் அவன் மனைவியும் வந்தவர்களை வரவேற்றனர். ஒருபுறம் தடபுடலாக விருந்து நடந்து கொண்டிருந்தது.
விருந்தை வயிறாற உண்ட உறவினர் குழந்தையை வாழ்த்திவிட்டு ஊருக்கு திரும்ப பேருந்து நிலையத்துக்கு வந்தனர்.

பேருந்துக்கு காத்திருந்தவர்கள் பொழுதுபோக்க மருதமுத்து என்ற அவலை வாயில்போட்டு மென்றனர். மருதமுத்து என்ன அவ்வளவு பெரிய ஆளா? நம்ம உறவினர் என்றாலும் நியாயத்தை பேசித்தானே ஆகவேண்டும். அந்த ஊரில் அவரை எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த தெருவில் உள்ளவர்களுக்கு கூட எல்லோருக்கும் தெரிந்திருக்காது.

அப்படியிருக்க இந்த மாதிரி அலப்பறை
பண்ணுகிறார்களோ அவர்களை என்ன சொல்வது? அலப்பறை பண்ணுகின்றவரை விட அதற்கு பதாகை வைத்து பரபரப்பாக்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது? சரி, அவர்களுக்கும் பொழுதுபோக்கு வேண்டாமா? என்று பேசிக்கொண்டே வந்தபோது மாதவன் குறுக்கிட்டு,

“அது ஒன்னும் இல்லவே, ஐந்து பெண்குழந்தைக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தையல்லவா? என்றார்.

“அது எனக்கும் தெரியும் ஊரில் நடக்காத அதிசயத்தையா இவர் நிகழ்த்தி விட்டார்?” என்று மணியரசன் சொன்னதும் மாதவன் விழுந்து விழுந்து சிரித்தார்.

“என்ன மச்சான் இப்ப என்ன ஜோக்கா சொல்லிப்புட்டன் இப்பிடிக் கிடந்து சிரிக்கிறீரு?”

அதற்கு மாதவன் அந்த காலத்தில் நடந்த ஜோக்கைத்தான் நினைத்து சிரிச்சன். ஒரு பிரபலமான பத்திரிகையில் நாட்டில் எவ்வளவோ சிறப்பான செய்திகள் இருக்க ஒரு பிரமலமான நடிகைக்கு பெண் குழந்தை பிறந்ததை தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்தில் போட்டிருந்ததை இப்ப எண்ணிப் பார்த்தேன் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றார்.

அதைக் கேட்ட மணியரசனும் உண்மைதான் மச்சான் எவ்வளவோ நாட்டில் பிரச்சனைகள் இருக்க மன்னார்குடி மருதமுத்து ஆண்குழந்தை பிறந்தது பாஞ்சாலங்குறிச்சி பரந்தாமன் வீட்டில் பசு கன்றை ஈன்றது என்று ஏதாவதொன்றைக் கையிலெடுத்து கொண்டாடுவதே இப்போது ஒரு வேலையாய்ப் போய்விட்டது என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே பேருந்து வர இருவரும் பேருந்தில் ஏறினர்.

பேருந்தில் கூட்டம் அதிமிருந்ததால் இருவருக்கும் ஒரே இடத்தில் இடம் கிடைக்காததால் ஓட்டுனர் அருகே ஒருவருக்கும் பேருந்தின் பின் இருக்கையில் ஒருவருக்கும் இடம் கிடைத்ததோ என்னவோ மன்னார்குடி மருதமுத்து அவர்களது வாயிலிருந்து விடுபட்டார்.


No comments: