குழந்தையும் தெய்வமும் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 படத்தின் தயாரிப்பாளர் பெங்களூரில் ஆங்கிலப் படம் ஒன்றை


காட்டி இந்தக் கதையை கருவாக வைத்து தமிழுக்கு ஏற்றாற் போல் திரைக் கதையை எழுதித் தாருங்கள் என்று சொல்லி விட்டார். ஆங்கிலப் படத்தின் கதையோ சற்று ஏடகூடமானது. அதை எவ்வாறு தமிழ் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றுவது என்று எண்ணியபடி சென்னை திரும்ப விமானத்தில் ஏறினார் கதாசிரியர். விமானத்தில் ஒரு பழைய நடிகையை கண்டார். அவ்வளவுதான், தமிழ் படத்தின் கதை அவர் மனத்துக்குள் உதித்து விட்டது. அவ்வாறு உருவான படம்தான் குழந்தையும் தெய்வமும். 



ஆங்கிலப் படத்தின் கதையை சொன்னவர் ஏவி. எம் . குமரன்.

தமிழுக்கு எழுதவிருந்தவர் ஜாவர் சீதாராமன். விமானத்தில் அவர் கண்ட நடிகை ஜி . வரலஷ்மி. வரலஷ்மியை கண்டவுடன் இவருக்கு ஏற்றாற் போல் ஒரு கதாப் பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழ் படத்துக்கான திரைக் கதையை எழுதி விடலாம் என்ற ஐடியா ஜாவருக்கு உடனே தோன்றி விட்டது. ஒரு சிக்கலின் காரணமாக கணவனும், மனைவியும் விவாகரத்தாகின்றனர். அவர்களின் இரு குழந்தைகளும் ஆளுக்கொருவராய் தாயுடனும், தந்தையுடனும் வளர்கின்றனர். இப்படி அமைந்த ஆங்கிலப் படத்தை குமரன் முதலில் டைரக்டர் ஏ. சி. திருலோகச்சந்தருக்கு காட்டி அபிப்பிராயம் கேட்டார்.

ஆங்கில படத்தைப் பார்த்த திருலோகசந்தர் தமிழ் பட ரசிகர்கள் ஏற்க முடியாத சப்ஜெக்ட் இது என்று கூறி ஒதுங்கி விட்டார். அதன் பின் ஜாவருக்கு படம் காட்டப்பட்டது. படம் பார்த்து விட்டு அரை மனதோடு விமானம் ஏறிய ஜாவர் வரலஷ்மியை பார்த்ததும் கதையை தீர்மானித்து விட்டார். மாமியாரின் அவமரியாதைகளை பொறுத்துக்க கொள்ள முடியாத தன்மானமுள்ள மருமகன் ஒரு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். மற்றைய குழந்தை தாயுடன் தங்கி விடுகிறது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இரு குழந்தைகளும் சேர்ந்து முயற்சி செய்து பெற்றோரை சேர்த்து வைக்கிறார்கள். 


விமானத்தில் வரலஷ்மியை பார்த்தவுடன் ஆங்கிலப் படத்தில்

இல்லாத மாமியார் பாத்திரத்தை உருவாக்கி , அதில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று ஜாவருக்கு தோன்றி விட்டது. கதையும் முழுமை பெற்றது. படமும் தயாரானது, ஜனாதிபதி விருதும் கிடைத்தது. எம் . ஏ . படித்து விட்டு , பி. எல் பட்டத்துடன் வக்கீலாக தயாரான ஜாவர் திரையில் செய்த மாஜிக் இது. படத்துக்கான வசனங்களையும் அவரே எழுதினார். இரண்டிலும் குறை வைக்கவில்லை அவர். 


இளம் நடிகரான ஜெய்சங்கருக்கு கிடைத்த அதிர்ஷ்ட சீட்டு இந்தப் படம். ஆரம்பத்தில் சான்ஸ் கேட்டு சென்ற போது உன் கண்கள் சிறியவை , அதில் உணர்ச்சிகளை காட்ட முடியாது, சோ சாரி என்று இயக்குனர் கிருஷ்ணனால் நிராகரிக்கப் பட்டவர் ஜெய்சங்கர். இப்போது அவரே பஞ்சுவுடன் சேர்ந்து படத்தை இயக்கினார். அனுபவப்பட்ட இயக்குனர்கள் என்பதையும் நிரூபிக்கத் தவறவில்லை அவர்கள் .

படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடி ஜமுனா. ஜெய்யை விட இரண்டு

வயது மூத்தவர். அதனால் என்ன பாத்திரத்துடன் ஒன்றி விட்டார் அவர். கணவரை பிரிந்து தவிக்கும் போது அவர் நடிப்பு சோபிக்கிறது. ஜெய் ஆடிப் பாடி நடிக்கிறார், அவ்வப்போது ஆவேசப் படுகிறார். நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. ஜி . வரலஷ்மியின் பாத்திரம் சூப்பர். செல்வச் செருக்குள்ள மாது. கணவர் பாதம் தொட்டு குனிந்து வணங்குவார், அவரையே துச்சமென எண்ணி ஓரம் கட்டவும் தயங்க மாட்டார். பாத்திரத்துக்கு ஏற்ற தேர்வு வரலஷ்மி. நாகேஷ் இதில் ஜோடி இல்லாமல் தனி ஆவர்த்தனம் வாசித்து கவருகிறார். இவர்களுடன் சுந்தரராஜன், சாந்தா , நம்பிராஜன், எம் .எஸ் .எஸ் . பாக்கியம் ஆகியோரும் நடித்தனர்.


ஆனாலும் படத்தின் ஜீவநாடி அதில் குழந்தையாக நடித்த குட்டி பத்மினி தான். இரட்டை வேடத்தில் தோன்றும் அவர் காட்சிக்கு காட்சி ரசிகர்களை கவருகிறார். அவரின் பார்வை, பேச்சு எல்லாமே எக்ஸலண்ட். 



படத்தை ஒளிப்பதிவு செய்த எஸ். மாருதிராவ் தன் திறமையால் அசத்தி விட்டார். ஒரு குட்டி பத்மினிக்கு மற்றைய குட்டி பத்மினி முத்தம் கொடுக்கும் காட்சியில் அவர் கமரா ஜாலம் புரிந்தது . ஏ . கே சேகரின் அரங்க அமைப்பிலும் குறையில்லை.


எம் எஸ் விசுவநாதன் இசையில் பாடல்கள் எல்லாமே வெல்லம் . வாலியின் அன்புள்ள மான் விழியே , என்ன வேகம் நில்லு பாமா, நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு, கண்ணதாசனின் , குழந்தையும்

தெய்வமும் குணத்தால் ஒன்று , கோழி ஒரு கூட்டிலேயே பாடல்கள் காட்சிகளுடன் சேர்ந்து பரிணமிக்கின்றன. 


கிருஷ்ணன், பஞ்சு இயக்கி நூறு நாள் ஓடி வெற்றி பெற்ற குழந்தையும் தெய்வமும் ஜனாதிபதி விருது வாங்கி , பின்னர் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி வெற்றி கண்டது. அன்று தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராக பணியாற்றிய இந்திரா காந்தி கரங்களால் குட்டி பத்மினிக்கு விருது வழங்கப்பட்டது.

No comments: