வெடுக்கு நாறியில் அடக்கு முறை! - கவிஞர் த. நந்திவர்மன்

 .











வெடுக்கு நாறியில் வினையை விதைத்தனர்

அடக்கு முறையினை அவிழ்த்து விட்டனர்

தடுத்து நிறுத்திடச் சைவங் காத்திட 

எடுத்து நிறுவிட எவரும் இல்லையோ?                          1

 

கெடுதல் செய்வதே கீழோர் எண்ணமோ?

கொடுமை இவருடன் கூடப் பிறந்ததோ?

அடிமை வாழ்விதன் அவலந் தீருமோ?

விடிவின் கனவதும் வீணாய்ப் போகுமோ?             2

 

புத்தர் சொன்னதைப் புறத்தில் தள்ளியே 

பித்தர் செய்திடும் பிழைகள் பொறுப்பதோ?

சித்தஞ் சிவனிடம் வைத்த அடியரை 

நித்தம்  அன்பிலா நீசர் வதைப்பதோ?                    3

 

இறைவன் நினைவினில் இரவு முழுவதும்

மறைகள் ஓதிட மனது உருகிடக்

குறைகள் நீங்கிடக் கூடி னோர்களை 

கறைகள் படிந்தவர் கலைக்கக் காண்பதோ?            4

 

தேர்தல் வந்திடத் திட்டம் இட்டிவர்

சார்தல் இவ்வகைத் தாழ்ந்த செயலென

ஓர்தல் நன்றென உணர்ந்து நாமிதால்

சோர்தல் தவிர்த்தவர் சூழ்ச்சி தகர்ப்பமே!                        5

 

கடவுள் அருளினாற் காலம் மாறிடும்

இடர்கள் அழிந்திடும் இன்னல் தீர்ந்திடும்

தொடருந் தொல்லைகள் தொலைந்து போய்விடும்

திடமாய் நம்பியே தீர்வைக் காண்பமே!!                          6

 

ஓர்தல் – ஆராய்ந்து தெளிதல்

 


No comments: