அரசியல் சீர்குலைவை சரி செய்வதே முதன்மையானது

 December 13, 2023


உலகத் தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் முயற்சியை பல்வேறு புலம்பெயர் அமைப்புகளும் விமர்சித்திருக்கின்றன.

அவர்கள் புலம் பெயர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றை வெளியிட்டிருப்பதை பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் வரவேற்றதாகத் தெரியவில்லை.
தென்னிலங்கையை பொறுத்தவரையில் புலம் பெயர் சமூகத்தோடு அரசாங்கம் உரையாடி வருவதான ஒரு தோற்றம் ஏற்பட் டிருக்கின்றது.
உலகத் தமிழர் பேரவையினர் இலங்கையில் தங்கியிருக்கும் சூழலில் சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க அரசின் விசேட பிரதிநிதியான – டீசிரி கோமியர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியிருகின்றது.
இதேவேளை, தமிழத் தேசிய அரசியல் பரப்பின் பிரதான கூட்டணியான தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ரெலோ, ”தனிநபர்கள் தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களை கையாள முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’, என்று தெரிவித்திருக்கின்றது.
இதிலுள்ள அடிப்படையான பிரச்னை வேறு.
அதாவது, தமிழ் மக்களின் அரசியலை எவர் வேண்டுமனாலும் கையாளலாம் என்னும் நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைகள் இருக்கின்றபோதும் அவர்கள் மத்தியில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் இல்லை – தென்னிலங்கையோடு விடயங்களை கூட்டாகக் கலந்துரையாடும் போக்கு இல்லை.
இந்த இடை வெளியாலேயே உலகத் தமிழர் பேரவை என்னும் பெயரில் புலம்பெயர் சமூக உறுப்பினர்கள் சாதாரணமாக விடயங்களில் தலையீடு செய்ய முடிகின்றது.
இது தொடர்பில் ‘ஈழநாடு’ தொடர்ந்தும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டி வந்திருக்கின்றது.
அதாவது, தாயக அரசியலை வேறு தரப்புகள் கையாள அனுமதிக்கக்கூடாது. புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெற வேண்டும் – அவர்களது ஆதரவு முக்கியமானது. ஆனால், தாயக அரசியலை தீர்மானிக்கும் உரிமையை அவர்கள் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. 2009வரையில் புலம்பெயர் அமைப்புகளும் தனிநபர்களும் வெறுமனே நிதியளிக்கும் கருவிகளாகவே இருந்தனர்.
ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர்தான் ஆளுக்கொரு கடை என்னும் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் அரசியலில் தலையீடு செய்ய முற்பட்டனர்.
2009இற்கு பின்னரான தாயக அரசியல் தலைமைகளை மதித்து நடக்கும் போக்கு புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் பெரியளவில் இல்லை.
தாங்கள் கூறுவதை இங்குள்ளவர்கள் கேட்க வேண்டும் என்னும் அடிப்படையிலேயே அவர்களது அணுகுமுறை இருந்தது.
இந்தப் போக்கின் விளைவாக – விடுதலைப் புலிகளுக்கு அதிகம் உரிமை கோருவது யார் என்னும் அரசியல் போக்கொன்றும் உருவாகியது.
அந்த உரிமையை அதிகம் தங்கள் வசப்ப டுத்துவதை ஓர் அரசியல் போக்காகவே கைக்கொண்டிருப்பவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினர்தான்.
அதேவேளை கிளிநொச்சியில் அந்த உரிமையை தன் வசப்படுத்துவதில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னணி வகிக்கின்றார்.
இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிலர் இந்த விடயத்தை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்போடு செயல் படுகின்றனர்.
இதற்கு பின்னால் புலம்பெயர் குழுக்களின் நிதி ஆதரவும் உண்டு. இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை செய்யலாம் என்னும் சூழலில்தான உலகத் தமிழர் பேரவையினர் சிங்கள மக்களோடு உரையாடும் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறுகின்றனர். ஜனநாயக அரங்கில் எவரும் தங்களின் கருத்துகளை முன்வைக்கலாம் – அதற்காக அவர்கள் செயல்படலாம்.
ஆனால், அவ்வாறானவர்கள் தமிழ் மக்களின் பெயரால் விடயங்களை முன்னெடுப்பதுதான் சிக்கலானது.
அது ஆபத்தானதும்கூட.
ஏற்கனவே, பல புலம்பெயர் அமைப்புகள் ஒன்றுபட்டு சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி செயல்பட்டு வருகின்றபோது – இதேவேளை, தாயக தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள இந்தியாவின் உதவியை கோரி வரும் சூழலில் தன்னிச்சையாக சிங்கள மக்களோடு உரையாடப் போகின்றோம் என்று சிலர் தென்னிலங்கையில் சந்திப் புகளை மேற்கொள்வதானது அடிப்படையிலேயே தமிழர் அரசியலை பலப்படுத் தும் செயல்பாடுகளாக அமையாது.
இவை அனைத்தும் தமிழ் அரசியலின் சீர்குலைவையே அடையாளப்படுத்தும்.
மற்றவர்களோடு உரையாட செல்வதற்கு முன்னர் தமிழத் தேசிய தரப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் அரசியலிலுள்ள சீர்குலைவை சரிசெய்ய வேண்டும்.   நன்றி ஈழநாடு 

No comments: