முதல் சந்திப்பு மே 22 – தெணியான் முதலாம் ஆண்டு நினைவு தினம் நினைவுகளில் வாழும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான் ( 1942 – 2022 ) முருகபூபதி


சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் (  1970 களில் ), மல்லிகை இதழில் தெணியானின் எழுத்துக்களை படித்துக்கொண்டிருந்தேன்.

1973 ஆம் ஆண்டு அவரது விடிவை நோக்கி நாவல், வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. அச்சமயம் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர்.

எமது இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த நாவலுக்கு எங்கள் ஊரில்


ஒரு அறிமுகவிழாவை ஏற்பாடு செய்வதற்கு , மல்லிகை ஜீவா மூலம் தெணியானுக்கு தகவல் அனுப்பியிருந்தேன்.

தெணியான் தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள்:  கிளார்க்கர் அய்யா என்ற இராஜேந்திரம்,  சதானந்தன் மாஸ்டர். எங்கு சென்றாலும் இவர்கள் மூவரும் ஒன்றாகத்தான் பயணிப்பார்கள் என்ற செய்தியையும் அப்போது அறிந்துகொண்டேன்.

வதிரியைச் சேர்ந்த அன்பர் சதாசிவம், எங்கள் ஊரில் பூட் எம்போரியம் என்ற பாதணிக்கடையை நடத்திவந்தார். வடமராட்சியிலிருந்து வந்த மூவரும் சதாசிவம் வீட்டில் தங்கியிருந்தனர்.

விடிவை நோக்கி அறிமுகவிழா, எங்கள் ஊரில்,  1966 இல் அண்ணி என்ற இலக்கிய இதழை நடத்திய,  உறவு முறையில் எமது மாமாவான அ. மயில்வாகனன்  தலைமையில் நடந்தது.

கொழும்பிலிருந்து இலக்கிய ஆர்வலர் எம். கிஸார், தனது காரில் மல்லிகை ஜீவா, மு. கனகராஜன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரை அழைத்து வந்தார்.

அந்த விழா வெகுசுவாரசியமாக நடந்தது.

அதனைப்பற்றி அடுத்த வாரம் வெளிவந்த தேசாபிமானியில்        ( கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு )  மு. கனகராஜன் எழுதியிருந்தார்.  இவ்வாறு தெணியானுடன் 1973 ஆம் ஆண்டு தொடங்கிய இலக்கிய நட்புறவு , சகோதர வாஞ்சையாக வளர்ந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அவர் மறைந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்ததினம் வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முடிந்தவரையில் அவருக்கு வாழ்த்துக் கூறுவதும் எனது கடமையாக இருந்தது.

கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டிருந்த  தெணியான்,  ஈழத்தின் மூத்த  இலக்கிய  ஆளுமை.
பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு          06-01-1942 இல் பிறந்த நடேசன் , இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி,  அதுவே நிலைத்துவிட்டது.



தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவரான தெணியான்,
  மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர்.


நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக் கட்டுரைத் தொகுதிகளையும் வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப் பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும்  இணைந்திருக்கிறது.


யாழ்ப்பாணத்திலிருந்து  வெளியான விவேகி  இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியானது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல்   உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர்.


இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி)

குடிமைகள் ( நாவல்)  என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச். மற்றும் கறுப்பு பிரதிகள்  முதலானவற்றின்   ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்   யாழ். கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது,  வடகிழக்கு மாகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு,  மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றவர்.

இலங்கை வானொலிக்காக பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான்,  பேராசிரியர் கா.  சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றிய நூல்களையும்  வரவாக்கியிருப்பவர்.


தான் கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும்,  மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.

தெணியானின் தம்பி நவம் கனடாவில் நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தெணியானின் மணிவிழாக்காலத்தில் ( 2003 ), இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலை எழுத்தாளர் கொற்றை கிருஷ்ணானந்தன்   தொகுத்திருக்கிறார்.


      தெணியானின்  பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் " தெணியானின் படைப்புகள் மீதான பார்வை"  - "  தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள் " ஆகியனவற்றை  யாழ். ஜீவநதி, 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே  விழா எடுத்து வெளியிட்டது.


இலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை,

இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன.
பொற்சிறையில் வாடும் புனிதர்களின்  விடிவை நோக்கிக் குரலெழுப்பியவர்.

வடபுலத்தில் அடிநிலை மக்களின் போராட்டங்களிலும் ஆலயப் பிரவேசப் போராட்டங்களிலும் பங்கேற்ற தெணியான், ஆலயத்துக்குள் எம்மால் பிரவேசிக்க முடியாத  மூலஸ்தானம் வரையும்  சென்று பூசை செய்யும்  ஐயர்களின் அவல வாழ்வையும்  தனது பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலில் சித்திரித்தவர்.

உளவியல் ரீதியாகவும்  அவரால் எழுத முடிந்திருக்கிறது.                             (  காத்திருப்பு, கானலில் மான்  ஆகிய நாவல்கள் )மல்லிகையில் பூச்சியம் பூச்சியமல்ல என்ற வாழ்க்கைச்சரிதத் தொடரை 24 அத்தியாயங்களில்  எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து படித்த பொழுதுதான் தெணியான், தனது அன்றாடச் சம்பவங் களையெல்லாம் திகதி குறித்துப் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

வடமராட்சியின் பொலிகண்டி கிராமத்தில் அந்தப் பனங்கூடல்களுக்கூடாக சைக்கிளிலும் கால்நடையாகவும் உலா வந்து கொண்டிருந்த  தெணியானின் மூச்சு, இன்னமும் அங்கே பரவியிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையுடன் கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி விடைபெற்ற எங்கள் தெணியானை நினைவுகூர்ந்து இந்தப் பதிவை எழுதுகின்றேன்.

---0---

No comments: