எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 65 இலக்கியப் பயணத்தில் இணைந்து வந்தவர்களும் ஊக்கமளித்தவர்களும் ! “ சுமையின் பங்காளிகள் “ சுகமான அனுபவம் ! ! முருகபூபதி


பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா  சென்று மெல்பன் திரும்பியபோது, அந்தப்பயணத்தில் சந்தித்த இலக்கிய அன்பர்களின் ஒரு வேண்டுகோளை கவனிக்கவேண்டியிருந்தது.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நான் இலக்கியவாதிகளையும் நூலகர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்தித்தபோது எனது வசம் எனது நூல்கள் எவையும் இருக்கவில்லை.

மாமனாரின் இறுதி நிகழ்வுக்கு சென்றமையால்,  இலக்கிய


அன்பர்களை சந்திக்கும் யோசனையுடன் புறப்படவுமில்லை.

எனது முதலாவது கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் தொகுதியின் பிரதிகளும் என்னிடமிருக்கவில்லை.

மலேசியா நண்பர் பீர் முகம்மது, அதன் இரண்டாவது பதிப்பினை அச்சிடுமாறு சொன்னார். முதல் பதிப்பிற்கு இலங்கையின் பிரபல ஓவியர் ரமணிதான் முகப்போவியம் வரைந்தார்.

அதனை அவர் எனக்கு வரைந்து தரும்போது கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அக்காலப்பகுதியில் அவர் பல எழுத்தாளர்களுக்கும் மல்லிகை ஜீவாவுக்கும் முகப்பு படங்கள் வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.

அவ்வேளையில் வெள்ளீய எழுத்து அச்சுக்கள் கோர்த்து,  ஓவியங்கள் புளக் செய்யப்பட்டு நூல்கள் அச்சிடப்பட்டன.

அந்த நடைமுறை காலப்போக்கில் இல்லாமல்போனதனால் உலகெங்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வீரகேசரியில் பணியாற்றிய பல அச்சுக்கோப்பாளர்கள், புளக் செய்பவர்கள், பக்க வடிவமைப்பாளர்கள் வேலை இழந்தனர்.

கணினியின் வருகை பலரது வயிற்றில் அடித்தது.  அவர்கள் வேறு வேறு தொழில்களை தேடிச்சென்றனர்.

1990 இற்குப்பின்னர் பத்திரிகைகளும் நூல்களும் கணினியை நம்பியிருக்கவேண்டியதாயிற்று.

1999 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது,  எங்கள் ஊரில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே வீரகேசரி பிரதேச நிருபராகவும் இயங்கிக்கொண்டிருந்த ஒருவர் என்னைத்தேடி வந்தார்.

வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் அச்சுக்கோப்பாளராகவிருந்த கான் என்ற நண்பரின் புதல்வன் ஷாஜகான்தான்  அவர்.

அவரது தந்தையார் எனது நல்ல நண்பர்.  நண்பர் கான், வீரகேசரியில் வேலையை இழந்ததும், மருதானையில் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தார்.

நண்பர் கான் , அங்கே தனது கடையையும் உயிரையும் இழந்தார். மருதானையில் நடந்த குண்டுவெடிப்பில் அவர் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் 150 பேருக்கும் மேல் பலியானார்கள்.  வீரகேசரியில் அச்சுக்கோர்த்துக்கொண்டு குடும்பத்தை கவனித்து வந்த நண்பர் கானின் புதல்வர் ஷாஜகான், தங்கள் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் பற்றி என்னிடம் சொன்னது 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்.


அதுவரையில் மருதானை குண்டுவெடிப்பில் அவரது தந்தையாரும் கொல்லப்பட்டார் என்ற செய்தி எனக்குத் தெரியாது.

அச்சம்பவம் பற்றி அற்புதன் முன்னர் எழுதிவந்த அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரையில் என்ற நீண்ட  அரசியல் தொடர் கட்டுரையில் படித்திருப்பீர்கள்.

பின்னாளில் இந்த அற்புதனும் பாராளுமன்ற உறுப்பினரானார். தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராகவுமிருந்தார். இவரும் பின்னாளில் சுட்டுக்கொல்லப்பட்டார். யாரால் கொல்லப்பட்டார்..?  என்பது இன்னமும் மர்மம்தான்.

இவ்வாறு மரணங்கள் மலிந்த பூமியாக எங்கள் தாயகம் விளங்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான்  நண்பர் கானின் புதல்வர் ஷாஜகான் என்னை வந்து சந்தித்தார்.

அவர் சிறந்த ஒளிப்படக்கலைஞருமாவார். 

அவரிடம் எனது முதல் நூல் சுமையின் பங்காளிகள் இருந்தது. 


என்னிடம் பிரதி இல்லை என்று அவரிடம் சொன்னேன். மறுநாளே அதாவது,  08-11 – 1999 ஆம் திகதி  நேரில் வந்து    நூலின் ஆசிரியருக்கே இந்த நூல் அன்பளிப்பு  - அன்புடன் கலா நெஞ்சன் ஷாஜகான் என்று கையொப்பம் இட்டுத்தந்தார்.

வாழ்க்கை எத்தனை வகையான அனுபவங்களை எமக்குத்தருகிறது பாருங்கள்.

ஷாஜகான் சிறந்த ஊடகவியலாளராகவும் ஒளிப்படப்பிடிப்பாளராகவும் தொலைக்காட்சி நிருபராகவும் பணியாற்றிக்கொண்டே ஒரு பாடசாலையில் தலைமை ஆசிரியாகவுமிருக்கிறார்.

இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இவரையும் சந்தித்துவிடுவேன்.


1999 ஆம் ஆண்டு இவர் எனக்குத்தந்த எனது சுமையின் பங்காளிகள் நூலின் பிரதியை  எனது இனிய நண்பர் ( அமரர் ) கலைவளன் சிசுநாகேந்திரனிடம்  கொடுத்து கணினியில் பதிப்பித்தேன். அவரது உதவியினால், இந்த நூல் இரண்டாவது பதிப்பு கண்டது.

எங்கள் ஊரில் சிறுவயதில் என்னோடு படித்த செல்வவேள் என்ற நண்பரின் தங்கை வள்ளி மருத்துவ தாதியாக பணியாற்றுகிறார். இவரது கணவர் நாகேந்திரன் ஒளிப்படக்கலைஞர்.  அவருக்கு தகவல் அனுப்பி, நீர்கொழும்பு கடற்கரைப்பிரதேசங்களில் படம் எடுத்து பெற்றுக்கொண்டேன்.

அவற்றை தெரிவுசெய்து சுமையின் பங்காளிகள் நூலின் இரண்டாவது பதிப்பிற்கு பயன்படுத்தினேன். கொழும்பில் இலக்கிய ஆர்வலர் நண்பர்  “ கிறிப்ஸ்  “ கிருஷ்ணமூர்த்தி  இதனை அச்சிட்டுத் தந்தார்.

முதல்பதிப்பு 1975 இல் வெளியானபோது, எனது முன்னுரையும், அதனை வெளியிட்ட நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் தலைவர் மு. பஷீரின் பதிப்புரையும், நூலின் பின்புற அட்டையில் எனது கதைகள் பற்றிய விமர்சனங்களை எழுதிய எம். ஶ்ரீபதி, மற்றும் சுலோ ஐயர் ( ரத்தினசபாபதி ஐயர் ) ஆகியோரின் சிறிய குறிப்புகளும் மாத்திரமே இடம்பெற்றிருந்தன.

2007 ஆம் ஆண்டு வெளியான இரண்டாவது பதிப்பு, எனதும்


பஷீரினதும் முன்னுரை – பதிப்புரைகளுடன், இரண்டாவது பதிப்பிற்கான எனது புதிய முன்னுரையும்,  எம். ஶ்ரீபதி, மற்றும் சுலோ ஐயர் ( ரத்தினசபாபதி ஐயர் ) ஆகியோரின் விரிவான  குறிப்புகளுடனும், வாமனன் ( செ. யோகநாதன் ) இலக்கிய விமர்சகர்கள் கே. எஸ். சிவகுமாரன், ஏ. ஜே. கனகரட்ணா, தமிழக பேராசிரியர் நா. வானமாமலை, மற்றும் சி. வன்னியகுலம், மல்லிகை ஜீவா ஆகியோரின் குறிப்புகளுடனும் வெளிவந்தது.

2016 ஆம் ஆண்டு வீரகேசரியில் பணியாற்றிய ஜீவா சதாசிவம், வாரவெளியீட்டில் சங்கமம் என்ற பகுதியை கவனித்துவந்தார். கலை, இலக்கிய ஆர்வமுள்ள இவர் எழுத்தாளர்களிடம் முதல் நூல் வெளியீட்டு அனுபவங்களை எழுதித்தருமாறும், சங்கமம் பகுதியில் இலக்கிய களத்தில் வெளியிடவிரும்புவதாகவும் கேட்டிருந்தார்.

அவர் கேட்டு நான்  எழுதியனுப்பியதை சுருக்காமல், குறைக்காமல் வெளியிட்டார்.

10-09-2016 ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீடு சங்கமம் பகுதியில் வெளியான அக்கட்டுரை பின்வரும் தலைப்பினைக் கொண்டிருந்தது.

வாழ்வின்  சுமைகள்  சுகமானது  என்பதை  உணர்த்திய இலக்கிய  வாழ்வின்  முதல்  அத்தியாயம்
எனது  முதலாவது  நூல் - சுமையின் பங்காளிகள் வெளீயீட்டு  அனுபவம்

 

கடலும்  கடல்  சார்ந்த  நிலமும்  நெய்தல்  என  அழைக்கப்படுகிறது. ஐந்து   திணைகளில்  ஒன்றென  நெய்தல்  கருதப்பட்டாலும்,            இந்தத் தொன்மையான  தகவல்  ஏதும்  தெரியாமல் -  மழைக்கும் பாடசாலைப் பக்கம்   ஒதுங்காமல்  உழைப்பும்,  பரிசுத்த  வேதாகமும்தான் வாழ்க்கை   என  வாழ்ந்த  மக்கள்  மத்தியில்  பிறந்தேன்.


 எங்கள்  ஊரை  நீர்கொழும்பு  என  அழைப்பார்கள்.   கடலின் அலையோசையை  தினம்  தினம்  கேட்டவாறே   வளர்ந்தேன்.   எங்கள் வீட்டிலிருந்து  பார்த்தால்  கடல்  தெரியும்.   சிறுவனாக இருக்கும்பொழுது   எனது  விளையாட்டு  மைதானம்  எங்கள் கடற்கரைதான்.


இந்துசமுத்திரத்தாயின்   அரவணைப்பில்  வாழ்ந்த                              கடற்றொழிலாளர் குடும்பத்துப் பிள்ளைகள்  எனது  பால்யகாலச் சிநேகிதர்கள். அவர்களின்  பேச்சுமொழியை   சிறுவயதிலேயே உள்வாங்கிக்கொண்டேன்.


சூரியன்   அஸ்தமிக்கும்  ரம்மியமான  காட்சியையும் அந்தக்கடற்கரையில்  நடு  இரவு  கடல்தொழிலுக்கு                           புறப்படவிருக்கும் அந்த   ஏழைச்செம்படவர்கள்  மீன்பிடி  வலையில்                              மீன்களினாலும் கடல்   பாறைகளினாலும்  அறுந்துபோன  நூல்களை இணைத்துக்கொண்டிருக்கும்  காட்சியையும்  ரசிப்பேன்.

எழுத்தாளனாக  1970   களில்   நான்  உருவானபொழுது,                   நீர்கொழும்பு பிரதேசத்தின்   வீரகேசரி  நிருபராகவும்  பணிதொடங்கினேன்.   ஒரேசமயத்தில்  ஊடகவியலாளனாகவும்                                                    படைப்பாளியாகவும்  என்னை வளர்த்துக்கொண்டமையால்   இன்றளவும்  இந்தப்பணிகள்               எனது ஆழ்ந்த   நேசத்துக்குரியன.


முதல்  கதை  கனவுகள்  ஆயிரம்.  யாழ்ப்பாணத்திலிருந்து                  வெளிவந்த மல்லிகை  இதழில்  1972  ஆம்  ஆண்டு  ஜூலை  மாதம்வெளியானது.    அக்கதை  நீர்கொழும்பு  பிரதேச  மீனவ  மக்களின் பேச்சுவழக்கையும்   அவர்களின்  வாழ்வுக்கோலங்களையும் சித்திரித்தமையால்   இலக்கிய  விமர்சகர்களின்  கவனத்தைப்பெற்றது.

எனது   கன்னிப்படைப்புக்கு   கிடைத்த  வரவேற்பினால்               மேலும்  சில சிறுகதைகளை   எழுதினேன்.   1975  ஆம்  ஆண்டிற்குள்  ஒரு தொகுதிக்குப்போதுமான   கதைகள்  எழுதிவிட்டேன்.


எனது   கதைகள்  பிரதேச மொழிவழக்கிற்கு  முக்கியத்துவம் தருவதாகக்கருதி,   பிற  பிரதேச வாசகர்கள்  அவற்றை புரிந்துகொள்வதற்கு  சிரமப்படுவார்கள்  என  நினைத்த              சில  பிரபல நாளேடுகளின்  வார  இதழ்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும்   சிற்றிதழ்களான  மல்லிகை,   பூரணி,  மற்றும்                       இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சி  இதழ்களான  புதுயுகம்,  தேசாபிமானி          என்பன அவற்றுக்கு   களம்  வழங்கியிருந்தன.
எனது   கதைகளைத் தொடர்ந்து  படித்து  ஊக்கமளித்த  மல்லிகை ஆசிரியர்   டொமினிக்ஜீவா,    ஒருநாள்  என்னை                                           சந்தித்தபொழுது சிறுகதைத்தொகுதியை   வெளியிடுமாறு  ஆலோசனை           வழங்கினார். ஆனால்,  அதற்குப்போதிய  பண  வசதி  என்னிடம்  இல்லை.

அச்சந்தர்ப்பத்தில்   நீர்கொழும்பில்  எனது  மாமா  முறையான மயில்வாகனன்  அவர்கள்  சாந்தி  அச்சகம் நடத்திக்கொண்டிருந்துவிட்டு,    சுகவீனம்  காரணமாக               அதனை  எனது நண்பர்கள்   யோகநாதன்,   நவரத்தினராசா  ஆகியோரிடம்      குத்தகை அடிப்படையில்   ஒப்படைத்தார்.
யோகநாதன்,    இலங்கை  சினிமாஸ்  லிமிடெட்டுக்குச் சொந்தமான  நீர்கொழும்பு  ராஜ்  சினிமா  தியேட்டரில்  இரவில்  ஓப்பரேட்டராக பணியாற்றிக்கொண்டு   சாந்தி  அச்சகத்தை  மேற்பார்வை  செய்தார். நவரத்தினராசாவுக்கு   அச்சுக்கோர்த்த  அனுபவம்  இருந்தது.

  அவர் கொழும்பில்   சிலோன்  தியேட்டர்ஸ்  நிறுவனத்திற்குச்சொந்தமான அச்சகத்தில்  பணியாற்றிய  அனுபவம்  மிக்கவர்.

இந்த   நண்பர்களுடன்  இணைந்து  நாம்  முன்னர்  கல்வி  கற்ற விஜயரத்தினம்   மகா  வித்தியாலயத்தின்  பழைய மாணவர் மன்றத்தையும் அந்தக்காலப்பகுதியில்  தொடக்கியிருந்தோம்.
நீர்கொழும்பின்   வீரகேசரி  நிருபராக                                                                     பணியாற்றிக்கொண்டே  நேரம் கிடைக்கும்   சந்தர்ப்பங்களில்   சாந்தி  அச்சகத்தில்  அச்சுக்கோர்த்துப் பழகினேன்.   அத்துடன்  அங்கு  பிரசுரங்கள்  இதழ்கள்,                         மலர்கள் அச்சாகும்பொழுது   ஓப்புநோக்கியிருக்கின்றேன்.

அந்த   நண்பர்களிடம்  எனது  நூல்  வெளியிடும்  விருப்பத்தைச் சொன்னபோது  அவர்கள்  அச்சிட்டுத்தருவதற்கு சம்மதித்தார்கள்.  சில  கதைகளை  நானே அச்சுக்கோர்த்தேன்.   அங்கிருந்த செல்வராஜா   என்ற  அச்சுக்கோப்பாளரும்  உதவினார்.                   அப்பொழுது அந்த    அச்சகத்தில்  திக்குவல்லை  எழுத்தாளர்  சங்கத்தின்           இளம் எழுத்தாளர்   ஒருவரின்  கவிதைத்தொகுப்பும்   புத்தளம் தில்லையடிச்செல்வன்   என்ற  எழுத்தாளரின்  விடிவெள்ளி              என்ற கவிதை    இதழும்  எழுத்தாளர்  சாந்தனின்  சிறுகதைத்    தொகுதியும் கவிஞர்   ஈழவாணனின்  அக்னி  புதுக்கவிதை   இதழும் அச்சாகிக்கொண்டிருந்தன.


அதனால்   எனது  தொகுதி  வெளிவருவதில்  சற்று  தாமதம்              ஏற்பட்டது. கொழும்பில்  கல்வி  வெளியீட்டுத் திணைக்களத்தில்  அப்பொழுது பணியாற்றிய  ஓவியர்  ரமணி  எனது  நூலுக்கு                                         முகப்போவியம் வரைந்து    தருவதற்கு  சம்மதித்தார்.  எனது  முதல்  கதை   கனவுகள் ஆயிரம்.  அதனைத்தொடர்ந்து,  தரையும் தாரகையும்,  நான்சிரிக்கிறேன்,   அந்தப்பிறவிகள்,   எதற்காக?,   நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன,    சுமையின்   பங்காளிகள்,  விழிப்பு, விடிவைநோக்கி,   பேரலைகள்  மடிகின்றன  முதலான                    சிறுகதைகளை 1972 - 1975   காலப்பகுதிக்குள்   எழுதியிருந்தேன்.    இதில் நம்பிக்கைகள்    நம்பிக்கையற்றன,    இலங்கை  வானொலி             சங்கநாதம்    நிகழ்ச்சியில்  நாடகமாக  நடிக்கப்பட்டு ஒலிபரப்பாகியிருந்தது.

 

வாழ்க்கை  அனுபவம்  மட்டுமல்ல,   சுமைகளும்                                        நிரம்பியதுதான். அந்தச்சுமைகளை  பங்கேற்றுக்கொள்பவர்கள்  பலதரப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்கள்.   எனது  சுமையின்  பங்காளிகள், கடலை  நம்பி   வாழும்  ஏழைக்குடும்பத்தின்  கதை.   கணவன்  தனது உழைப்பின்   வருமானத்தை  குடித்தும்   சூதாடியும்                                   சீரழிக்கின்றான்.   இரண்டு குழந்தைகளுடன்   குடும்பச்சுமையை  ஏற்று  பரிதவிக்கும்              அந்த மனைவி   வருமானத்திற்காக  கசிப்பு (கள்ளச்சாராயம்)  விற்பனையில் ஈடுபடுகிறாள்.   அந்த  வருமானத்தையும்  அந்தக்கணவன் சுரண்டப்பார்க்கின்றான்.   இதனால்  அந்தக்குடிசையில்                          சண்டை வருகிறது.    கணவனின்  சொற்பவருமானத்தை  நம்பி  தானும்  தனது குழந்தைகளும்   வாழவில்லை  என்ற  இறுமாப்புடன்  மனைவி சத்தம் போடுகிறாள்.    வீட்டில்  சட்டி  பானைகளும்  ஆயுதமாகின்றன. வீட்டை விட்டு    வெளியேறும்  குடிகாரக்கணவன்,  மனைவி  என்றும் பாராமல் ஆணவத்தினால்  அவளுக்கு  பொலிஸிடம்  தண்டனை தேடித்தருவதற்காக  பொலிஸில் மனைவியின் இரகசிய கள்ளச்சாராய விற்பனை பற்றி புகாரிடுகின்றான்.
பொலிஸ்  வந்து  அவளை  ஜீப்பில்  ஏற்றிச்செல்கிறது.                     ஊரே  வேடிக்கை பார்க்கிறது.  குழந்தைகள் மண்ணில்  விழுந்து  புரண்டு   அழுது புலம்புகின்றன.  

 விடிந்ததும்  குழந்தைகள் பசியில்   தாயைத் தேடுகின்றன.   குழந்தைகளின்  பசியைப்போக்க வழிதெரியாத   தந்தையான  அந்தக்குடிகாரக்கணவன்,                   ஆழ்ந்து யோசிக்கின்றான்.   தனது  தவறை  உணர்ந்து,   மனைவியை சரீரப்பிணையில்   எடுத்துவருவதற்கு  பொலிஸ்   நிலையம் செல்கின்றான்.
இக்கதை   உண்மைச்சம்பவம்.   எனது  வீட்டருகில்  நடந்தது. அந்தக்குழந்தைகளின்   கண்ணீரைத்துடைத்து,  கடையில்             பாண் வாங்கிக்கொடுத்திருக்கின்றேன்.

அந்தக்கதை   நண்பர்  ஈழவாணனுக்கு  நன்கு                                          பிடித்துக்கொண்டது. அதனையே   தொகுதிக்கு  தலைப்பாக  வைக்குமாறு                 சொன்னார். ஓவியர்   ரமணி  அந்தக்கதைக்கு  ஏற்ற  நவீன  ஓவியம்                          வரைந்து தந்தார்.    அந்த  ஓவியத்தை  கொழும்பில்  புளக்செய்து  நூலை அச்சிடக்கொடுத்தேன்.

கையில்   பணம்  இல்லாமல்  எப்படியோ  அந்த  நூலை வெளிக்கொணர்ந்தேன்.   நூல்  வெளியீட்டு  விழா  நடத்தினால்  பணம் கிடைக்கும்   என்று  நண்பர்கள்  ஆலோசனை  சொன்னார்கள். மண்டபத்திற்கு   கொடுப்பதற்கும்  வாடகைப்பணம்                     என்னிடம் இல்லை.


நீர்கொழும்பு   விஜயரத்தினம்  மகா  வித்தியாலயத்தின்                     அப்போதையஅதிபர்                                                                                                                             வ.சண்முகராசா  கலை,  இலக்கிய  ஆர்வலர்.   அவரிடம்  எனது நிலைமையைச் சொன்னேன்.   அவர்  பாடசாலை  மண்டபத்தில் நடத்துவதற்கு   முன்வந்ததுடன்,   நிகழ்ச்சிக்கும் தலைமைதாங்குவதற்கு    சம்மதித்தார்.    

அழைப்பிதழும்  அச்சிட்டேன்.
அவருடைய    தலைமையில்                                                                                    29-11-1975  ஆம்  திகதி  எனது  முதலாவது சிறுகதைத்தொகுதி   சுமையின்  பங்காளிகள்  வெளியீட்டு               விழா நடந்தது.  எனது  ஆரம்ப  வகுப்பு  ஆசிரியர்  அல்பிரட்  நிக்கலஸ் மாஸ்டர்,    அக்னி  ஆசிரியர்  ஈழவாணன்,   மல்லிகை  ஆசிரியர் டொமினிக்ஜீவா,   பூரணி  ஆசிரியர்  என்.கே. மகாலிங்கம்,   எமது நீர்கொழும்பு   இலக்கிய  வட்டத்தின்  தலைவர்                                          மு. பஷீர்  ஆகியோர் உரையாற்றினர்.


நண்பரும் பின்னாளில்  தினபதி,   சிந்தாமணி   பத்திரிகையாளராக பணியாற்றியவருமான   செ.செல்வரத்தினம்  வரவேற்புரையும் கொழும்பு   விவேகானந்தா  கல்லூரி  அதிபராக  இருந்த                         வ. நடராசா வாழ்த்துரையும்   நிகழ்த்தினர்.
எமது   ஊர்ப்பிரமுகர்கள்  ஜெயம்  விஜயரத்தினம்,   அ.வே. தேவராசா, பத்மநாதன்   செட்டியார்  ஆகியோர்  சிறப்புப்பிரதிகள் பெற்றுக்கொண்டு   வாழ்த்தினார்கள்.
அடுத்தடுத்த   வாரமே  மல்லிகை  ஜீவா  - யாழ்ப்பாணம்  வீரசிங்கம் மண்டபத்தில்   எனது  நூலுக்கு  அறிமுகவிழா  ஏற்பாடு  செய்து அழைப்பிதழும்    அச்சிட்டு  அனுப்பி  என்னை   வரவழைத்தார்.   நான்    1963  முதல்  1965  இறுதிவரையில்  யாழ்ப்பாணத்தில்   ஸ்ரான்லிக் கல்லூரியில்  ஆண்கள்  விடுதியில் தங்கியிருந்து    படித்திருக்கின்றேன்.   எனக்கு  அங்கு  சொந்த பந்தங்கள்   எனச்சொல்லிக்கொள்ள  எந்த  உறவும்  அன்று இருக்கவில்லை.


அதனால் Home sick  இல்   அங்கு  வாடிக்கொண்டிருந்துவிட்டு நீர்கொழும்புக்கு   திரும்பி  வந்து  படிப்பைத்தொடர்ந்தேன்.
1965இல்  வடபகுதியை  விட்டு ஒரு  மாணவனாக  வெளியேறிய  நான், 1975   இல் -  பத்து  ஆண்டுகளின்  பின்னர்  ஒரு  எழுத்தாளனாக திரும்பிவந்தேன்.

யாழ்ப்பாணத்தில்    எனது  நூலின்  அறிமுக  விழா  ஆசிரியர்   சு. இராசநாயகம் தலைமையில்  நடந்தது.   இவர்  ஈழத்தின்  மூத்த எழுத்தாளர்.   இவர்  கொழும்பு  தினக்குரல்  ஞாயிறு  இதழின்  ஆசிரியராகவிருந்த  பாரதியின்   தந்தை.    அந்த  விழாவில்தான்  பெரியவர் இராசநாயகத்தை   முதல்  முதலில்  சந்தித்தேன்.


அந்த  விழாவில்  மூத்த எழுத்தாளர்கள்  மௌனகுரு,  செம்பியன் செல்வன்   ஆகியோர்  உரையாற்றினார்கள். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த   பல  எழுத்தாளர்கள்  அன்று  வந்து  எனக்கு அறிமுகமானார்கள்.    இலக்கிய   விமர்சகர்   ஏ.ஜே. கனகரத்னா  எனது நூல்   பற்றி  அடுத்து  வந்த  மல்லிகை  இதழில்  விமர்சனம் செய்திருந்தார்

எனதுநூல்  வெளியிட்டிலிருந்து கிடைத்த   பணத்தை  அச்சகத்திற்கு கொடுத்தேன்.  அன்று  எனது  நூலின்  இலங்கை  விலை                 நான்கு  ரூபா. மொத்தம்  87  பக்கங்கள்.  

எனது  தொகுதி  வெளிவருமுன்னரே  எனது கதைகளைப்படித்திருந்த   சிலர்  இதழ்களில்  தமது                                         மதிப்பீட்டை எழுதியிருக்கிறார்கள்.
எனது   முதல்  குழந்தைக்கு  ஈழத்து  இலக்கிய  உலகில்  நல்ல வரவேற்பிருந்தது.   அதனைப் படித்திருந்த  தமிழ்நாட்டின்  பிரபல இலக்கியவிமர்சகர்   பேராசிரியர்  நா. வானமாமலையும்  சிலாகித்து விமர்சனக்குறிப்பு   எழுதியிருக்கிறார்.


1976   ஆம்   ஆண்டு  ஒரு  நாள்  மாலை  7  மணியளவில்  எனது  நண்பர் செ.செல்வரத்தினம்   தனது  சைக்கிளில்  ஓடி வந்து  சொன்ன  செய்தி எனக்கு   இன்ப  அதிர்ச்சி  தந்தது.
எனது   நூலுக்கு  அந்த  ஆண்டுக்கான  சாகித்திய விருது கிடைத்திருப்பதாக   சில  நிமிடங்களுக்கு  முன்னர்  இலங்கை வானொலி   ஆறு மணி   செய்தியில்  சொல்லப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.
என்னால்   அதனை  நம்பமுடியவில்லை.  

செய்தி  கேட்பதற்கும்  வீட்டில் வானொலிப்பெட்டி    இல்லாத  ஏழ்மை  தாண்டவமாடிய                 காலம்.   அன்று   இரவு  பக்கத்து  வீட்டுக்குச்சென்று,  இரவு             ஒன்பது  மணி செய்தியில்   எனது  நூலுக்கு  கிடைத்துள்ள  விருது  பற்றிய    செய்தியை கேட்டேன்.
சாகித்திய  விழா  எமது  ஊருக்கு  அருகாமையில்                                           அத்தனகல்லை தொகுதியில்   பத்தலகெதர  என்ற  ஊரில் ஆசிரியபயிற்சிக்கல்லூரியில்  நடந்தபொழுது,   அன்றைய இலங்கையின்   முதல்  ஜனாதிபதி  வில்லியம்  கொபல்லாவ  சாகித்திய விருதுக்கான  காசோலையை   வழங்கினார்.
அந்த   நிகழ்ச்சிக்கு  செல்வதற்கும்  என்னிடம்  பணம்  இருக்கவில்லை. எனது   அக்காதான்  பஸ்  செலவுக்கு  பணம்  தந்து                                 அனுப்பினார்.
கணினி,    மின்னஞ்சல்,   டிஜிட்டல்  அச்சுமுறை   இல்லாத அந்தக்காலத்தில்   எனது  முதல்  நூல்  ஒவ்வொரு                              எழுத்துக்களாகக் கோர்க்கப்பட்டு   வெளியானது.   ஆனால்,  இன்று  நிலைமை  முற்றாக மாறியிருக்கிறது.
இறுதியில்  சுமையின்  பங்காளிகள்  நூலின்  பிரதிகள்   எதுவும் கையில்   இல்லாத  நிலைக்கும்  நான்  வந்திருக்கின்றேன்.               சுமார்  500 பிரதிகள்தான்  அச்சிட்டேன்.   சில  பத்திரிகைகளுக்கும் விமர்சனத்திற்காக   கொடுத்தேன். ஆனால்,  எந்தப்பத்திரிகையிலும் அப்பொழுது   விமர்சனம்  வரவில்லை.   ஆனால்,  எனக்கு  சாகித்திய விருது   கிடைத்தவுடன்   பத்திரிகைகளில்  முன்பக்கத்தில்                விருது பெறும்    படத்துடன்   செய்திகள்  வெளியாகியிருந்தன.
1987   இல்  அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்து  சுமார் 11 வருடங்களின்   பின்னர்  நீர்கொழும்பு  திரும்பியபொழுது என்னைச்சந்திக்க  வந்திருந்த  ஊடகவியலாளர்  கலாநெஞ்சன் ஷாஜகானிடம்   என்வசம்  சுமையின்  பங்காளிகள்  நூலின்              பிரதிகள் எதுவும்   இல்லை  என்று  கவலை   தெரிவித்தேன்.   அவர்              மறுநாள் திரும்பி   வந்து  தன்னிடமிருந்த  பிரதியை -  "  நூலின்  ஆசிரியருக்கே இந்த   நூல்  அன்பளிப்பு"   என்று    எழுதி  ஒப்பமிட்டு                                தந்தபொழுது நெகிழ்ந்துவிட்டேன்.

இவ்வாறு வீரகேசரி வாரவெளியீடு சங்கமம் பகுதியில் எனது அனுபவம் வெளிவந்திருந்தது.

தற்போது இரண்டாவது பதிப்பும் என்வசம் இல்லை.

யாரிடம் கேட்பது…?

( தொடரும் )

No comments: