வசந்த மாளிகை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய படத் தயாரிப்பாளராகத்


திகழ்ந்தவர் டி . ராமாநாயுடு.தமிழிலும் படம் தயாரிக்கத் தொடங்கிய இவர் ஆரம்பத்தில் குழந்தைக்காக,நம்ம குழந்தைகள் ஆகிய படங்களை தயாரித்தார்.குழந்தைகளை அடிப்படியாக கொண்ட கதைகளை படமாக்கிய ராமாநாயுடு 1972ல் குடிகாரன்,பெண் மோகம் கொண்ட ஒருவனின் கதையை படமாக்கினார்.அந்தப் படம் தான் வசந்த மாளிகை.


ஆரம்பத்தில் தெலுங்கிலும்,பின்னர் தமிழிலும் வந்த இந்தப் படம் வசூலை வாரிவழங்கியது.நீண்ட காலம் ஓடித்தள்ளியது.சிவாஜி கணேசனின் வெற்றி பட வரிசையில் இணைந்தும் கொண்டது.

தேவதாஸும்,பார்வதியும் சிறுவயது முதல் ஒன்றாய்

வளர்ந்தவர்கள்.ஆடிப் பாடியவர்கள்.ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்த தேவதாசும்,ஏழை குடும்பத்தை சேர்ந்த பார்வதியும் காதலிப்பதை ஜமீந்தார் எதிர்க்கிறார்.பார்வதியோ தன்னை கை விட வேண்டாம் என கெஞ்சுகிறாள்.ஆரம்பத்தில் தன் தந்தைக்கு பயப்படும் தேவதாஸ் பிறகு பார்வதியை மணக்க தயாராகிறான்.ஆனால் வீண் அகம்பாவத்தால் , பிடிவாதத்தால் பார்வதி அவனை எடுத்தெறிந்து பேசி விடுகிறாள்.போதாக் குறைக்கு ஒரு வயோதிபனை மணந்தும் கொள்கிறாள்.காதல் தோல்விக்கு ஆளான தேவதாஸ் முழு நேர குடிகாரனாகிறான்.

இந்த கதையை மாற்றி யோசி,அதுதான் வசந்த மாளிகை.தேவதாஸில் காதல் தோல்விக்கு பிறகு குடிகாரன்,வசந்த மாளிகையில் ஆரம்பம் முதலே குடிகாரன்,பெண் பித்தன்.அங்கு பார்வதியின் ஆணவம் காதலுக்கு தடையானது,இங்கே லதாவின் ஆணவம் காதலை நிராகரித்து ஆனந்தை தற்கொலைக்கு தூண்டுகிறது. ஒரே சாயல் கொண்ட கதை என்றாலும் தங்க மூலம் பூசப் பட்டு வசந்த மாளிகை பளபளத்தது.படத்தின் தயாரிப்புக்கு ராமாநாயுடு பணத்தை வாரி இரைத்திருந்தார்.இதனால் பிரம்மாண்டமான படமாக உருவானது.

படத்திற்கு பலம் சேர்த்து சிவாஜியின் நடிப்பு.அலட்சியம்,ஆணவம்,கருணை,காதல்,துயரம் என்று பலவித குணச்சித்திரங்களையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி.அவருக்கு இணையாக வாணிஸ்ரீ தனது நடிப்பை வழங்கியிருந்தார்.படம் முழுதும் சேலை அணிந்து பாத்திரத்தின் தன்மை கெடாவண்ணம் வாணிஸ்ரீ படம் முவதும் வருகிறார்.நிறைவாக நடிப்பையும் வழங்குகிறார்.தனி அறையில் குளிருக்கு நடுங்கிய வண்ணம் அவரும் சிவாஜியும் இருக்கும் காட்சியில் இருவரும் காட்டும் முக பாவனை ரசிக்கத்தக்கது. அதே போல் மணப் பெண் கோலத்தில் இருக்கும் வாணிஸ்ரீயை சந்திக்கும் சிவாஜியின் விரக்தி,வேதனை கலந்து காட்டும் முக பாவம் நடிப்பின் உச்சம்.


நகைச்சுவை நாகேஷ்,வீ கே ராமசாமி,ரமாபிரபா மூவரிடமும் தடுமாறுகிறது. வசனங்களில் காணப்படும் விரசம் 50 ஆண்டுகளுக்கு பிறகும் விரசமாகவே ஒலிக்கிறது.படத்தில் ஜமீன்தாரிணியாக வரும் சாந்தகுமாரி பாத்திரத்துக்கு பொருந்துகிறார்.சிவாஜியின் அண்ணனாக வில்லனாக வரும் பாலாஜி தொழிலாளிகளை சவுக்கால் விளாசுவது,குடிசைகளுக்கும் தீ வைப்பது,என்று அட்டூழியம் செய்து தன் வில்லத்தனத்தை நிலை நாட்டுகிறார். இவர்களுடன் சுந்தரராஜன்,பண்டரிபாய்,ஸ்ரீகாந்த்,வி எஸ் ராகவன்,ராமதாஸ்,சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி ஆகியோரும் நடித்திருந்தனர்.தேவதாஸில் ஜமீந்தாராக வந்த ரங்காராவ் இதிலும் ஜமீன்தாராக சில காட்சிகளில் வருகிறார்.

இத்தனை பேர் நடித்த போதும் வசந்த மாளிகையை கட்டியவர்

அரங்க அமைப்பாளர் கிருஷ்ணராவ்தான்!ஆஹா அவருடைய கை வண்ணத்தில் காட்சி ஜோடனைகள்,அரங்க அமைப்புகள் எல்லாம் பிரம்மாண்டமாக காட்சியளித்தது.சபாஷ் கிருஷ்ணாராவ் காரு !

இதனை படமாக்கி அசத்திய காமரா மேன் ஏ வின்சென்ட் பாராட்டுக்குரியவர்.அவரின் கமரா அப்படியே அழகை அள்ளிப் பருகியது.
பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத திரை இசை திலகம் கே வி மகாதேவன் இசையமைத்தார்.இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்,யாருக்காக இது யாருக்காக , கலைமகள் கைபொருளே ,மயக்கம் என்ன இந்த மவுனம் என்ன பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக போய் சேர்ந்தது.அதே சமயம் சிவாஜி ஆலத்துடன் ஆடும் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலும்,ஏ சகுந்தலாவுடன் ஆடும் குடிமகனே பெரும் குடிமகனே பாடலும் ரசிகர்களை கிறங்க வைத்தது. டான்ஸ் மாஸ்டர்களான சின்னி சம்பத் இருவருக்கும் ஒரு சபாஷ்!


படத்தின் வசனங்களை எழுதியவர் பாலமுருகன்.சிவாஜியின் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள அவர் இந்தப் படத்திலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். சரின்னா யாரா இருந்தாலும் விடக் கூடாது,வேணாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்க கூடாது என்று சிவாஜி பேசும் பன்ச் வசனம் பிரசித்தம்!விஸ்கியைத்தான் குடிக்க வேணாம்னு சொன்னே விஷத்தை குடிக்க வேணாம்னு சொல்லலியே,இதுதான் இங்கே கௌரவம் இல்லை கர்வம்,இதைத்தான் அவங்க பாசம்னு சொல்றாங்க நீ மோசம்னு நெனெக்கிறே என்று படம் முழுதும் பாலமுருகன் வசனங்களில் பின்னி எடுத்திருந்தார். பல இடங்களில் பாலமுருகனின் வசனங்கள் நச் என்று அமைந்து காட்சிக்கு மெருகூட்டின.

நீண்ட காலம் டைரக்டராக பணிபுரிந்த கே எஸ் பிரகாஷ்ராவ் படத்தை காலத்துக்கு ஏற்றாற் போல் இயக்கி வெற்றி கண்டார்.50 ஆண்டுகளை கடந்தும் வசந்த மாளிகை இன்றும் கண்ணை பறிக்கிறது!

No comments: