இலங்கைச் செய்திகள்

இரட்டை குடியுரிமைக்கான கட்டணம் 2000 டொலர்கள்

மனித உரிமை என்ற போர்வையில் வன்முறை அராஜகத்துக்கு இடமில்லை

தமிழ் மக்கள் அனுபவிக்கும் அமைதி சூழலை மேலும் வலுப்படுத்த வேண்டும்

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவுப் பேருரையில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில்

இ.தொ.கா. முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

காலஞ் சென்ற முத்து சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு இ.தொ.கா. மரியாதை

யாழ். பல்கலையில் முதன் முதலாக கணனி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்

மன்னாரில் மாவீரர் தினம்; தடையுத்தரவு கோரிய வழக்கை வாபஸ் பெற்ற பொலிஸார்


இரட்டை குடியுரிமைக்கான கட்டணம் 2000 டொலர்கள்

டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுல்

வரவு-செலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், விசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விசேட அறிவிப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெறும் 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது.

குடியுரிமையின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைனில் மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கட்டணம் 50 டொலராகவும் வணிகங்களுக்கு 55 டொலராகவும் மாற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை விருந்தினர் திட்டத்தின் கீழ் கட்டணம் 200 டொலராக இருக்கும்.

வெளிநாட்டு கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைப் பெற்றோரின் பிள்ளைகளுக்கு வீசா வழங்குவதற்கான கட்டணத்தை அறவிடும்போது வயது குழு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை, அது 150 அமெரிக்க டொலர்களாக இருக்கும்.

இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணையை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான வீசா வழங்குவதற்கான கட்டணம் 150 டொலராக இருக்குமென்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.   நன்றி தினகரன் 


 



மனித உரிமை என்ற போர்வையில் வன்முறை அராஜகத்துக்கு இடமில்லை

- ஜனாதிபதி வலியுறுத்தல்

மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை  பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரி முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நேற்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் -

இந்த விடயத்தைப் பற்றி பேசுவதற்கு முன், நான் நேற்று குறிப்பிட்ட இரண்டு விடயங்களை ஞாபகமூட்ட வேண்டும். ஜனாதிபதியின் மனதில் மூன்று வித அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறினார். ஒரு நபருக்கு மூன்று வித அச்சம் ஏற்பட முடியாது என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். விசாலா நகரில் தான் மூன்று வித அச்சம் ஏற்பட்டது. நோய் பற்றிய அச்சம், அமானுஷ்ய அச்சம், மரண அச்சம் என்பன ஒரு சமூகத்தில் ஏற்படலாம். அந்த விடயத்தை தெளிவுபடுத்த ரதன சூத்திரத்தைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒரு மனிதனுக்கு எப்போதும் மூன்று வித அச்சங்கள் ஏற்படுவதில்லை. மரிக்கார் பயம் இருந்தாலும், ஹிருணிகா பயம் இருந்தாலும், ரோசி பயம் இருந்தாலும் அது மூன்று வித அச்சம் ஆகாது.

மேலும், போராட்டத்திற்கு புண்ணியம் கிடைக்க, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று போராட்டத்தை அடக்குகிறார் என நண்பர் விஜித ஹேரத் தெரிவித்தார். போராட்டத்தின் புண்ணியத்தால் அல்ல, இந்த நாட்டின் ஜனாதிபதி போனால், பிரதமர் அந்தப் பதவியை ஏற்க வேண்டும். அதுமட்டுமன்றி சட்டப்படி நான்தான் பதில் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறுமாறு கூறி எனது வீட்டுக்குத் தீ வைத்தார்கள். ஆனால் நான் விலகவில்லை, அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன்.

எமது எதிர்க்கட்சித் தலைவர், நான் இந்த ஜனாதிபதிப் பதவியை கேட்டு வாங்கியதாக, இன்று கூறினார். நான் இதைக் கேட்கவில்லை. நாட்டின் சூழ்நிலை காரணமாக இதை ஏற்றுக்கொண்டேன். மகாநாயக்க தேரர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். நானாக போய் கேட்கவில்லை. நான் கடிதங்கள் எழுதவில்லை. கடந்த மே மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தை அவர் இன்று மறந்து விட்டார்.

“ஜனாதிபதி அவர்களே, எதிர்க்கட்சியின் பிரதான கட்சியாக மக்கள் சக்தி கூட்டணியின் தலைமையில் குறுகிய கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பதவியை ஏற்க நான் தீர்மானிக்கின்றேன்.” என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனது உரையின் பின்னர், இந்த முழு கடிதத்தையும் ஹன்சார்டில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கோட்டாபய ராஜபக்சஷ எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டார். வேண்டுமானால் கட்சி யாப்பில் பார்க்கலாம். ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படலாம். என்னைக் குறை சொல்ல வேண்டாம் அவர்தான் கூறினார், குறைந்தபட்ச காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார்.

எனவே நான் சத்தியப்பிரமாணம் செய்து 02 மாதங்களுக்குப் பின்னர் அவர் பதவியில் இருந்து வெளியேறினார். நீங்கள் தான் அவரைப் போகச் சொன்னீர்கள், நான் அல்ல. அதற்கு நான் என்ன செய்வது?

இராணுவம் பற்றி பேசும் போது இராணுவத்தின் செலவு அதிகரித்துள்ளதாக சிலர் கூறினர். சிலரது கருத்துப்படி இராணுவத்தின் செலவை 24 மணி நேரத்தில் குறைக்க முடியாது. ஒரே நேரத்தில் 25,000 இராணுவ வீரர்களை வீதியில் விட முடியாது. நாங்கள் இப்போது ஒரு திட்டத்தை உருவாக்குகிறோம். அதன்படி செயற்பட வேண்டும். இம்முறை அதிக செலவுகளை இராணுவம் ஏற்க வேண்டியிருந்தது. அதை நம்மால் தடுக்க முடியாது. படையினரின் எண்ணிக்கை குறைந்தாலும் பதவி உயர்வுகள் அதிகரித்துள்ளன. இது போன்ற விடயங்களும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன.

இப்போது உணவுப் பாதுகாப்பு திட்டங்களுக்காக இராணுவத்தை நாம் களமிறக்கியுள்ளோம். அத்துடன் இராணுவப் பண்ணைகள் மூலம் எமக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. அந்தப் பொருட்களின் போக்குவரத்துக்கு, தேவையான அளவு இராணுவத்தை பயன்படுத்துமாறும் கூறியுள்ளேன். இராணுவத்தின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக ““Defense 2030"” என்ற அறிக்கையின்படி செயல்படுகிறோம். நமது பாதுகாப்பை நாம் திட்டமிட வேண்டும்.

உலகில் அச்சுறுத்தல் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த நிலைமைகள் மாறி வருகின்றன. 1971 இல் இருந்த அச்சுறுத்தல் அல்ல, 80களிலும் ஈஸ்டர் ஞாயிறன்றும் நடந்தது. இந்த அச்சுறுத்தல்கள் வெவ்வேறு வழிகளில் நடக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் பூகோள அரசியல் எம்மை மையப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து பெரும் வல்லரசுகளும் தலையிட்டுள்ளன. எனவே நாம் இந்து சமுத்திரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2030-க்குள் நமது கடற்படையை அதிகரிக்க வேண்டும்.இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும். விமானப்படையை அதிகரிக்க வேண்டும். ட்ரோனர் தொழில்நுட்பம் தேவை. 2040 இல் இத்தேவை இன்னும் அதிகரிக்கும். இதை எப்படி தொடர்வது என்று நாம் பார்க்க வேண்டும்.

நமது பாதுகாப்புச் செலவைக் குறைத்து அதனை 3% - 4% அளவில் பராமரிக்க வேண்டும். நம்மால் முடிந்தால், நமது பொருளாதார வளர்ச்சியை 8%க்கு கொண்டுவர வேண்டும். அப்போது எம்மிடம் போதுமான நிதி இருக்கும். சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக 8% பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்திருந்ததன் காரணமாகவே அவர்களால் இந்நிலைமைக்கு வரமுடிந்துள்ளது. நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். பழைய முறையில் சிந்திப்பதால் இவற்றைச் செய்ய முடியாது.

அத்துடன் இராணுவத்தில் இருந்து வெளியேறுபவர்கள் சமூகப் பணிகளுக்குப் பங்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும். தொழில்துறை சார்ந்தோர் இன்று நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். நமது இராணுவத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை அந்த இடங்களுக்கு அனுப்புவதன் மூலம் அதனால் உருவாகும் இடைவெளியை நிரப்ப முடியும். அதனால்தான் இராணுவப் பணியில் ஓய்வு பெறும் வயதை 22 இலிருந்து 18 ஆகக் குறைத்துள்ளோம். மற்றவர்களுக்கு இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் இவற்றை புதிதாக திட்டமிட வேண்டும். நாம் புதிதாக சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் புதிய போர்க்கப்பலைத் தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தப் பலம் நம்மிடம் உள்ளது. பணத்தை மட்டுமே திரட்டிக்கொள்ள வேண்டும்.


பிரித்தானியா 2035 வரை தமக்கு அவசியமான திட்டங்களை வகுத்திருப்பதைக் கண்டேன். நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். நாம் பாதுகாப்பு சபையை சட்டப்படி நிறுவுவோம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி மற்றும் தேசிய பாதுகாப்புச் செயலகம் ஆகியவற்றையும் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, அந்த அதிகாரிகளுக்காக முப்படைக் குழுவொன்றையும் நியமிப்போம். இவற்றை கலந்துரையாடி இந்த சபையில் முன்வைக்கிறேன். புதியதாக நல்லதொரு இராணுவத்தை இலங்கையில் உருவாக்க விரும்புகிறோம். இதை செயற்படுத்த, வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரம் ஒன்று தேவப்படுகிறது.

அதேபோன்று, நாம் பொலிஸ் பிரிவு தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் பொலிஸ் பிரிவை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அறிய "பொதுப் பாதுகாப்பு அறிக்கை" ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளோம். அது குறித்து அமைச்சரிடம் தெரிவித்தேன். தற்போது பொலிஸ் கட்டளைச் சட்டம் அருங்காட்சியகத்திற்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது. தற்போது கட்டளைச் சட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக நாம் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். போதைப்பொருள், ஆட்கடத்தல் போன்ற பல பிரச்சினைகள் இன்று உள்ளன. இவற்றிலிருந்து நாட்டை பாதுகாத்தபடி நாம் முன்னேற வேண்டும்.

அன்றைய தினம் இந்த பாராளுமன்றத்தை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாக்க உழைத்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நான் குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன். அன்று அவர்கள் இல்லாவிட்டால் இன்று இந்த நாட்டில் பாராளுமன்றமே இருந்திருக்காது. இப்படி உட்கார்ந்து கலந்துரையாட முடியாமல் போயிருக்கும்.

இறைமை மக்களுக்கே உரியது என்று எமது அரசியலமைப்பின் 03 ஆவது சரத்து கூறுகிறது. சட்டமியற்றும் அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம், சமயம், அடிப்படை உரிமைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை 04வது பிரிவு விளக்குகிறது . மேலும், மக்கள் நேரடியாக பங்கேற்கும் ஒரே வாய்ப்பு தேர்தல்தான். யாருக்கும் வீதியில் இறங்கி பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. வன்முறைக்கு இடமில்லை. இராணுவம் இருப்பது இந்த சட்டங்களைப் பாதுகாக்கவே ஆகும்.

அரசாங்கங்கத்தைக் கவிழ்க்க வரும்போது இராணுவம் ஒதுங்கி நிற்க முடியாது. எமது மகாநாயக்க தேரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்போது எம்மால் அமைதியாக இருக்க முடியாது. அரசியலமைப்பின் 09 ஆவது சரத்தின் பிரகாரம் அவர்களைத் தடுக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு உண்டு. இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமளிக்க முடியாது. மதகுருமார்களை வைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதை அனுமதிக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை.

இன்று சில தேரர்களை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துகின்றனர். பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். தேரர்களுக்கு மதச் செயல்பாடுகள் உண்டு. அந்த நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். இதில் பொதுமக்கள் ஈடுபடுகிறார்கள் என்பது வேறு விடயம்.

ஒரு பல்கலைக்கழக மாணவர் கூட தடுப்புக்காவலில் இல்லை என்பதை கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். வசந்த முதலிகே 8-9 வருடங்களாக பல்கலைக்கழக மாணவர். நான் 21 வயதில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினேன். முதலிகேவுக்கு வயது 31 என்றாலும் அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரே. ஒரு மாணவருக்கு ஒரு வருடமே மேலதிகமாக வழங்க முடியும். அதன் பிறகு நீங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நானும் மனித உரிமைகளை பாதுகாக்க விரும்புகிறேன். அராஜகமும் வன்முறையும் மனித உரிமைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. மனித உரிமைகளைப் பயன்படுத்தி வன்முறை மற்றும் அராஜகத்தை உருவாக்கவும் முடியாது. மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்துபவர்களை பாதுகாக்க முடியாது.

அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவு நமது அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் பாதுகாப்பு உள்ளிட்ட உட்பிரிவுகள் உட்பட, பொதுப் பாதுகாப்பிற்காக, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவை குறிப்பாக செயல்படுத்தப்படலாம். இவை அனைத்தும் 15/1, 15/2 சரத்துகளில் உள்ளன. இந்த வரம்புகளை மீற முடியாது.

மனித உரிமைகளை காப்பவர்கள் நாங்கள் என்று ஒரு சிலர் இன்று கூறுகிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? குறைந்த பட்சம் இவற்றை நாம் நடைமுறையில் செய்துள்ளோம். நாங்கள் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளோம். அதற்கு முந்திய அரசாங்கம் ICCPR சட்ட மூலத்தைக் கொண்டு வந்தது.

இவர்கள் மனித உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வாழ்கின்றனர். அதுதான் யதார்த்தம். யாராவது ஒருவர் சரி எழுந்து நின்று என்னிடம் சொல்லுங்கள் நான் அப்படிச் செய்யவில்லை என்று. இவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நான் தான் அவர்களைப் பாதுகாத்தேன். ஆனால் அவர்கள் இன்று என்னைப் பார்த்தே கூச்சலிடுகிறார்கள். இவ்வாறு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.

சட்டத்திற்கு உட்பட்டு எதையும் செய்யுங்கள். நான் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். நான் ஒத்திவைக்க  மாட்டேன். பாராளுமன்றத்தை ஒத்திவைக்க எனக்கு உரிமையும் இல்லை. வீதியில் கூச்சலிடுவதால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை. கூச்சலிடுபவர்களுக்கு பெரும்பான்மையும் இல்லை. பெரும்பான்மை உள்ளவர்கள்  மௌனமாக உள்ளனர். அவ்வாறு அமைதியாக இருக்கும் மக்களுக்கு வாழவும், அவர்களின் உரிமைகளைப் பெறவும் உரிமை உண்டு. அந்த உரிமைகளின்படியே செயல்பட வேண்டும்.

இப்போது மனித உரிமை என்ற போர்வையில் பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய முயல்கிறார்கள். பொலிஸார் மனித உரிமைகளை மீறியிருக்கலாம். அவ்வாறு செய்தவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்.

அவசரகாலத்தை உருவாக்கி, கலவரம் போன்றவற்றை ஏற்படுத்தி, அதை தடுக்க பொலிஸாரிடம் செல்லும் போது, பொலிஸார் மீது மனித உரிமை வழக்குகள் தொடரப்படுகின்றன. இது மனித உரிமைகளுக்காக செய்யப்படுவதில்லை, மாறாக பொலிஸாரின் தலையீட்டை நிறுத்துவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் ஆராயுமாறு நான் சட்டமா அதிபரிடம் கூறினேன். அப்படி செய்தால் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த விளையாட்டை எப்போதும் தொடர அனுமதிக்க முடியாது.

இராணுவ அதிகாரியாக இருந்தாலும் சரி, பொலிஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி, அனைவரையும் நாம் பாதுகாக்க வேண்டும். மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, எனது தலைமைப் பாதுகாப்பு அதிகாரியையும் பணி நீக்கம் செய்ய முயன்றனர். எனது வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. இதன் முக்கிய ஊடகம் சிரச ஆகும். நான் தான் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும். ஆனால் எனது முக்கிய மெய்ப்பாதுகாவலரை நீக்குமாறு அவர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்கின்றனர். அவர் என்ன தவறு செய்தார்? எனது பிரதான பாதுகாப்புப் பணிப்பாளரையும் நீக்க சிரச விரும்பியது. அவர் அந்த இடத்தில் சம்பந்தப்படவில்லை. எம்மிடம் இருப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பில் நான் அறிக்கை விடுத்த பின்னர் சிரச ஊடக நிறுவனம் என்னைத் தாக்க ஏழு பேரை அனுப்பியது. ஒவ்வொரு நபரிடமிருந்தும் அறிக்கைகள் எடுக்கப்படுகின்றன. துமிந்த நாகமுவ, விதர்ஷன கன்னங்கர, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி போன்றவர்களிடம் வாக்குமூலம் பெறுகின்றனர்.

என்னைப் பற்றி பேசுவதற்கு முன், பகிடிவதைகளிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாத்துத் தருமாறு நான் கூறுகின்றேன். பகிடிவதையை எதிர்க்க வேண்டும். அரசாங்கத்தைப் போலவே எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்றே நான் கூறுகின்றேன். அவ்வாறு செய்தால் மீண்டும் வீதிக்கு வந்து அரசாங்கத்தை கவிழ்க்கச் சொல்ல முடியாது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு சேவையில் உள்ள அனைவருக்கும் உள்ளது. இந்த நிறுவனங்களைப் பாதுகாக்க கோப்ரல் முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி தினகரன் 





தமிழ் மக்கள் அனுபவிக்கும் அமைதி சூழலை மேலும் வலுப்படுத்த வேண்டும்

TNAயின் தீர்மானத்தை வரவேற்று அமைச்சர் டக்ளஸ் அறிக்கை

அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களின் போது, நிலைமைகளுக்கு ஏற்ப கலந்தாலோசனை மூலம் தீர்மானங்களை மேற்கொள்வதென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பேசுகின்ற போது, இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வையே தீர்வாக வலியுறுத்துவதெனவும், பின்னர் பேச்சுவார்த்தையின் நிலமைகளுக்கு ஏற்ப, விடயங்களை கலந்தாலோசித்து தீர்மானிப்பதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

"யதார்தத்தை புரிந்து கொண்டு பேச்சுவார்த்தையின் போது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பினர் தயாராக இருக்கின்றனரென்ற செய்தியை கூட்டமைப்பினரின் அண்மைய தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது.

நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளூடாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈடேற்ற முடியுமென்று கடந்த 35 வருடங்களாக நான் கூறி வருகின்ற யதார்த்தத்தை கூட்டமைப்பினர் தற்போது புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது" என்று தெரிவித்தார்.

இந் நிலைப்பட்டில் கூட்டமைப்பினர் உறுதியாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அமைதியான சூழலை மேலும் வலுப்படுத்தும் வகையில் அனைத்து தமிழ் தரப்பினரும், தற்போதைய அரசியல் சூழலை கையாள்வதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

 



மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவுப் பேருரையில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில்

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (24) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் உரை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவம், மகா விகாரையின் இலங்கை ராமன்ய மஹா நிகாயாவின் அனுநாயக்க மினுவாங்கொட பத்தடுவன பிக்கு பயிற்சி நிலையத்தின் வண. நெதகமுவே விஜய மைத்திரி தேரர் தலைமையில் நடைபெற்றது.

மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சமித ஹெட்டிகே, “ஒரே திசை – ஒரே பாதை நிலைபேண்தகு அபிவிருத்திக்கான பாடங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

நினைவேந்தல் உரை உள்ளடங்கிய புத்தகமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் சிலைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க வண. முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், வண. வட்டினாபஹ சோமானந்த மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, இராஜாங்க அமைச்சர்களான டி.பி. ஹேரத், இந்திக அனுருத்த, ஷஷேந்திர ராஜபக்ஷ, ஜானக வக்கும்புர, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே, எஸ்.எம். சந்திரசேன, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட ஏனைய அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 


இ.தொ.கா. முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

- இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான முத்து சிவலிங்கம் காலமானார்.

இது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்,

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் காலமான செய்தி கேட்டு,மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர் 1943.07.20 ஆம் திகதியன்று உடபுசல்லாவ ரப்பானை தோட்டத்தில் பிறந்து, ஆரம்ப கல்வியை உடபுசல்லாவ வித்தியாலயத்திலும் பின்னர் உயர் கல்வியை நுவரெலியா புனித கிறிஸ்தவ கல்லூரியிலும் பயின்றார்.
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபாகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் கொள்கையை ஏற்று 1962 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி தலவாக்கலையில் தன்னை இ.தொ.காவுடன் இணைத்துக் கொண்டார்.
 
மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் கைக்கோர்த்து இ.தொ.காவை வெற்றி பாதையில் செல்ல வழிகாட்டி உள்ளார். இந்நாட்டின் வளர்ச்சிக்காக பல அமைச்சு பதவிகளை வகித்து பாரிய சேவைகளையும் முன்னெடுத்துள்ளார். 
 
எனது அரசியல் பிரவேசத்தின் போது அவரது அனுபவங்களின் ஊடாக பல அரசியல் பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளார். அவருடைய இழப்பு இ.தொ.காவிற்கு மாத்திரமல்லாது முழு மலையகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.
 
அவருடைய இழப்பால் துயரும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முத்து சிவலிங்கம் தனது 79ஆவது வயதில் இன்று (23) காலை காலமானார்.

1943ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி உடப்புஸ்ஸலாவை டலோஸ் தோட்டத்தில் இலக்கம் 17 தொடர் குடியிருப்பில் பிறந்த இவர், நுவரெலியாவில் தனது உத்தியோக பூர்வ இல்லத்தில் காலமானார்.

1962 முதல் அரசியலில் ஈடுபட்டு வரும் இவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சாணக்கியம் நிறைந்த தொழிற்சங்கவாதியாவார்.

அத்துடன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்த இவர் கடந்த எட்டாவது பாராளுமன்றத்திலும் அமைச்சராக இருந்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மாநில பிரதிநிதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் காலடி எடுத்து வைத்த இவர் காங்கிரஸின் நிதி காரியதர்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டுவரை இருந்து தனது சுயவிருப்பத்தின் பேரில் தனது பதவியை இராஜினாமா செய்து பின் காங்கிரஸின் போசகராக தொடர்ந்தும் இருந்துள்ளார்.

சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த இவர் இன்று (23) காலை உயிரிழந்ததாகவும், அமரரின் இறுதி கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

முத்து சிவலிங்கம் 1943 ஜூலை 20ஆம் திகதி உடப்புசல்லாவ டலோஸ் மேல் தோட்டத்தில் பிறந்தவர். இவர் உடப்புசல்லாவ றப்பானை தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் நுவரெலியா புனித திரித்துவக் கல்லூரியிலே உயர்கல்வி பெற்றார். துடிப்பான இளைஞராக இருந்த முத்து சிவலிங்கம் 1962 மார்ச் 15ஆம் திகதி தலவாக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய எழுதுவினைஞராகப் பதவி பெற்றார். அக்காலத்தில் அவர் பெற்ற ஆரம்ப சம்பளம் ரூ. 42.50 சதம் என அவர் தெரிவித்திருந்தார். தந்தை முத்தையாவின் ஆலோசனைப்படி அவர் அரசியலில் பிரவேசித்தார்.

முதன் முறையாக நுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 28 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.

பின் 1994ஆம் ஆண்டு நுவரெலியா, மஸ்கேலிய தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 86,500 வாக்குகளைப் பெற்று அன்றைய அரசில் விவசாய பிரதி அமைச்சரானார். இவ்வாறே இவரது அரசியல் பயணம் தொடர்ந்தது.

1994 முதல் 2010 வரை இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

முத்து சிவலிங்கம் 2015 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 45,352 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆ. ரமேஸ் - நன்றி தினகரன் 




காலஞ் சென்ற முத்து சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு இ.தொ.கா. மரியாதை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் போசகருமான  அமரர் முத்துசிவலிங்கத்தின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது அஞ்சலியை தெரிவித்துள்ளது.

இதன்போது, கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான்,  தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன்,பிரதி தவிசாளர் ராஜதுரை,பிரதி தலைவி அனுசியா,பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல் மற்றும் உப தலைவர் பிலிப் குமார் ஆகியோர்  முத்து சிவலிங்கத்தின் உடலுக்கு கட்சியின் கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர்.   நன்றி தினகரன் 





யாழ். பல்கலையில் முதன் முதலாக கணனி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்


- சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணனி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

கணனி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ. ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (26) சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கலாநிதி ஏ. ரமணன், கலாநிதி எம் சியாமளன் ஆகியோரின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த, மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள், நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், கணனி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ. ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோர் கணனி விஞ்ஞானத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணனி விஞ்ஞானத் துறை தாபிக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் முதன் முதலாக கணனி விஞ்ஞானத் துறையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்.விசேட நிருபர் 

நன்றி தினகரன் 





மன்னாரில் மாவீரர் தினம்; தடையுத்தரவு கோரிய வழக்கை வாபஸ் பெற்ற பொலிஸார்

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவுகூருவதற்கு எதிராக அடம்பன் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் (24) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நிலையில் நேற்றையதினம் (25) வெள்ளிக்கிழமை குறித்த வழக்கை அடம்பன் பொலிஸார் வாபஸ் பெற்றுள்ளனர்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் தின ஒழுங்கமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 27 திகதி ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினத்தை நினைவுகூருவதற்கு எதிராக அடம்பன் பொலிஸாரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (24) மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை நேற்றுமுன்தினம் வழங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கை அடம்பன் பொலிஸார் மீளப் பெற்றுள்ளனர்.

தமிழர் தாயக பகுதிகளில் உள்ள மாவீரர்களுடைய கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டு அங்கே திருத்த வேலைகள் இடம்பெற்று வந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திருத்தப்பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் மாவீரர் தினத்தை எதிர்வரும் தினங்களில் மன்னார் பிரதேச மக்கள் அனுஷ்டிக்க இருப்பதாகவும் இவ்வாறு பிரதேச மக்கள் இந்த மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் போது மீண்டும் ஒரு இனக்கலவரம் இனங்களுக்கிடையிலான முரண்பாடு இடம்பெறலாம் என்றும் எனவே அதற்கு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நேற்றுமுன்தினம் (24) அடம்பன் பொலிசாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 106 ஆம் பிரிவின் பிரகாரம் குறித்த வழக்கை ஏற்ற மன்னார் நீதவான், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு 24ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் உட்பட 6 நபர்களின் பெயரை குறிப்பிட்டு இடைக்கால தடை ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (25) மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அடம்பன் பொலிஸ் பொறுப்பதிகாரி இணைந்து நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து குறித்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் மாவீரர் தினத்தை நினைவுகூருவதற்காக வழங்கப்பட்ட தற்காலிக தடை உத்தரவு தளர்த்த ப்பட்டதோடு, குறித்த வழக்கின் இறுதி அறிக்கைக்காக இவ்வழக்கு இம்மாதம் 30ம் திகதி தவணை இடப்பட்டுள்ளது.

மன்னார் குறூப் நிருபர் - நன்றி தினகரன் 








No comments: