இலங்கைச் செய்திகள்


நுவரெலியாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நீதிபதி இளஞ்செழியனுக்கு குவியும் பாராட்டுக்கள்

தொல்பொருள் பாரம்பரியத்தை காக்க ஆலோசனை குழு நியமனம்

பொதுஜன பெரமுன தமிழ் பிரிவினால் பந்துல குணவர்த்தனவுக்கு ஆசீர்வாதம்

ராஜித, ரூமிக்கு எதிராக சட்ட மாஅதிபர் குற்றப்பத்திரம்

மொட்டு வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை

Jaffna Got Talent‌ 2020 இறுதிப் போட்டி நாளை



நுவரெலியாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ



பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று அங்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார். இ தொ. கா.பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க முத்தையா பிரபாகரன் உட்பட வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 









நீதிபதி இளஞ்செழியனுக்கு குவியும் பாராட்டுக்கள்




மனிதாபிமான மனிதரென புகழாரம்
நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டைப் பாராட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி ஹேமசந்திர என்பவர் உயிரிழந்தார். இப்பொலிஸ் அதிகாரி தகனம் செய்யப்பட்ட தினத்தன்று அவரது பிள்ளைகள் இருவருக்கும் தான் தந்தையாக இருப்பேன் என நீதிபதி இளஞ்செழியன் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நீதிபதி, இம்முறையும் பொலிஸ் அதிகாரியின் நினைவுத்தினமான கடந்த 23ஆம் திகதி சிலாபத்திலுள்ள அன்னாரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பிள்ளைகளின் கல்விக்கான தொடர்ந்தும் உதவிகளை மேற்கொண்டு வரும் நீதிபதி அவர்களது போக்குவரத்து வசதிக்காக ஸ்கூட்டர் ஒன்றையும் பொலிஸ் அதிகாரியின் மகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
நீதிபதியின் மனிதாபிமான செயற்பாடு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில் சிங்கள ஊடகங்கள் அதனை பாராட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் “இப்படியான ஒரு சிறந்த மனிதன் நாட்டிற்கு கிடைத்த அதிஷ்டம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 











தொல்பொருள் பாரம்பரியத்தை காக்க ஆலோசனை குழு நியமனம்




தொல்பொருள் பாரம்பரியத்தை காக்க ஆலோசனை குழு நியமனம்-20 Member Archaeological Advisory Council Appointed Including 9 Monks
9 தேரர்கள் உள்ளிட்ட 20 பேருக்கு பிரதமரினால் நியமனக் கடிதம்
நாடு முழுவதுமுள்ள தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு உதவும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.
தொல்பொருட் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களுக்கமைய, புத்தசாசனா கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சர் என்ற வகையில் பிரமர் குறித்த குழுவை நியமித்துள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த குழுவில் 9 தேரர்கள் உள்ளிட்ட 20 பேர் உள்ளடங்குகின்றனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (29) அலரமாளிகையில் வைத்து பிரதமர் வழங்கி வைத்தார்.
நாட்டின் தொல்பொருள் தொடர்பில் அதற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், விசேட திட்டங்கள் தொடர்பான வழிகாட்டல்களை பெறவும், கொள்கைகளை திட்டமிடவும், தொல்பொருள் தலங்களை கண்காணிக்கவும் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், இந்த ஆலோசனைக் குழுவிடமிருந்து ஆதரவு கோரப்படுகிறது.
நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு
  1. பொலன்னருவை சொலொஸ்மதான ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, மகா விகார வம்சிக ஷியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரியா மகா விகார பிரிவின் அநுநாயக்க சாஸ்த்திரபதி சங்கைக்குரிய வெண்டருவே தர்ம கீர்த்தி ஶ்ரீ ரத்தனபால உபாலி தேரர்
  2. தெற்கு இலங்கையின் பிரதான சங்கநாயக்க சாஸ்த்திரபதி பண்டித வண. மெட்டரம்ப ஹேமரத்ன தேரர்
  3. அநுராதபுர ருவன்வலிசாய விகாராதிபதி பேராசிரியர் வண. பல்லேகம ஹேமரத்தன தேரர்
  4. தொல்பொருள் சக்ரவர்த்தி வண. எல்லாவள மேதானந்த தேரர்
  5. வண. எலிக்வெல சீலானந்த தேரர்
  6. அஸ்கிரிய பிரிவின் பெலிகல் கோரளையின் தலைமை சங்கநாயக்க வண. யடிகல் ஒலுவே விமலரத்தன தேரர்
  7. சோமாவதி ரஜமஹா விகாராதிபதி பேராசிரியர் வண. பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர்
  8. பேராசிரியர் வண. இந்துராகரே தம்மரத்தன தேரர்
  9. பேராசிரியர் வண. மாதுருஓயே தம்மிஸ்சர தேரர்
  10. தொல்பொருள் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷிரான் தெரணியகல
  11. தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் டி.ஜி. குலதுங்க
  12. பேராசிரியர் காமினி விஜேசூரிய
  13. சிரேஷ்ட பேராசிரியர் நிமல் டி சில்வா
  14. வித்யஜோதி பொறியாளர் கெமுனு சில்வா
  15. சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க
  16. கட்டடக் கலைஞர் ஏஷ்லி டி வோஷ்
  17. சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ
  18. டபிள்யூ.எம்.எஸ். வீரசேகர
  19. சிறினிமல் லத்துசிங்க
  20. பேராசிரியர் முனிதாச பத்மசிறி ரணவீர 
நன்றி தினகரன் 











பொதுஜன பெரமுன தமிழ் பிரிவினால் பந்துல குணவர்த்தனவுக்கு ஆசீர்வாதம்




ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் அமைச்சர் பந்துல குணவர்த்தன, வெள்ளவத்தையில் பெரமுனவின் தமிழ்ப் பிரிவு இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அங்கு சர்வ மதத் தலைவர்களால் அமைச்சர் பந்துல ஆசீர்வதிக்கப்படுவதை படத்தில் காணலாம். படம் கொழும்பு கோட்டை நிருபர் - நன்றி தினகரன் 











ராஜித, ரூமிக்கு எதிராக சட்ட மாஅதிபர் குற்றப்பத்திரம்




- ஏனைய இருவரையும் சாட்சிகளாக அறிவித்து விடுவிக்க உத்தரவு
வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டிற்கும் எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில், ஏனைய இரு சந்தேகநபர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, நீதவான் நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த இருவரும் வழக்கின் சாட்சியாளர்களாக பெயரிடுமாறு  சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக, சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச தரப்பு சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.











மொட்டு வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை




மொட்டு வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை-SLPP Candidate Former MP Premalal Jayasekera Sentence to Death
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது, ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அமைய, முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 3 பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, இன்றையதினம் (31) அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரேமலால் ஜயசேகர, இம்முறை பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுகிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கூட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர், 'தொடங்கொட சுசில் பெரேரா' என அழைக்கப்படும் ஷாந்த தொடங்கொட என்பவராவார். கே. கருணாதாஸ வீரசிங்க மற்றும் எம். இல்ஷான் என்பவர்களே இச்சம்பவத்தில் காயமடைந்த ஏனையவர்களாவர்.   நன்றி தினகரன் 











Jaffna Got Talent‌ 2020 இறுதிப் போட்டி நாளை



Jaffna Got Talent‌ 2020 இறுதிப் போட்டி நாளை-Jaffna Got Talent 2020 Final
Jaffna Got Talent 2020 நிகழ்வின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு யாழ்‌. பாதுகாப்பு படைகளின்‌ கட்டளைத்‌ தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Jaffna Got Talent‌ 2020 இறுதிப் போட்டி நாளை-Jaffna Got Talent 2020 Final
யாழ்‌. தீபகற்பத்தில்‌ உள்ள தமிழ்‌ இளைஞர்‌ யுவதிகளின்‌ திறமைகளை உலகறியச்‌ செய்யும்‌ வகையில்‌ முதன்‌ முறையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நடன மற்றும்‌ பாடல் கலைத்திறமையினை வெளிக்கொணரும்‌ அரிய வாய்ப்பை வழங்கும் நோக்கிலேயே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, Jaffna Got Talent நிகழ்வின் மாபெரும்‌ இறுதிப் போட்டியானது நாளை (02) பிற்பகல் 3.30 மணியளவில்‌, சுகாதார நடமுறைகளுக்கு அமைவாக, யாழ்ப்பாணம்‌ தந்‌தை செல்வா மண்டபத்தில்‌ நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 








No comments: