போட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு முள்ளானை வசந்தன்


போடவேணும் வாக்கொன்று வருகின்ற தேர்தலிலே
சூடவேணும்  வெற்றிவாகை  எங்களது கட்சிகள்தான்
அரங்கேறுது ஈழத்தில் அடுத்த தேர்தலொன்று
ஆளுக்காள் குற்றம்சொல்லி அதிக வேட்பாளர்கள்
ஐந்தாறு  வாக்கிருந்தால் ஆளுக்கொன்று போட்டிடலாம்
ஐயகோ  என்செய்வேன் ஒருவாக்கே எனக்குண்டு 
மக்களுக்குத்  தொண்டாற்ற மனமுவந்து நிற்கிறார்கள்
மாளிகையில் சென்றுதம் மக்களுக்காய்  பேசிடுவர்
பூரிப்பாய் இருக்குதையோ புதுச்செய்தி இதுஎமக்கு
யாரிங்கு கேட்பார்கள் நானிங்கே இதைச்சொன்னால்
அடிபட்டு நிற்கிறார்கள் ஆளுக்கொரு திக்காக  
யாருக்குக்கு போடவென நானிங்கு திகைக்கையிலே  
அபிப்பராயம் சொல்கிறார்கள் ஆளுக்கொரு எண்ணத்துடன்
போடவேண்டாம் வாக்குஎன்று பத்திரமாய் வைத்திருந்தால்
போடுகினம் வேறுஆட்கள் என்பெயரை தன்பெயராய்
அடிமையாக வாழ்வோரை  சமநிலைக்குத்  தூக்கிடவே  
அரசியலில் புகுந்துவிட  அன்றொருவர் முடிவெடுத்தார்
அடிமைநிலை களைவதற்கு அயராது அவருழைத்தார்
ஆபிரகாம் லிங்கனென்ற  புகழ்பெயர்தான்  அவர்பெயராம் 
மக்களால்  ஆளப்படும்  மக்களின் ஆட்சியது  
மக்களாட்சி என்றுகூறி  விளக்கமும் தந்துநின்றார்
மக்களை காப்பதே ஆட்சியின் நோக்கமென்றார்
அவருயிரை குண்டினுக்கு பரிசாகப்  பறித்தெடுத்தார்
காலத்தின் ஓட்டத்தில்   மக்களாட்சி திசைமாறி   
ஞாலத்தில் இன்றதுவோ பலமாற்றம் தான்கண்டு  
உள்ளதைச்  சொல்லப்போனால்  எங்களுக்கு  மக்களாட்சி
உன்னதமாய் மக்களினை உரிமையுடன் அடக்கிடவே
உரித்துப்பெற அனுமதிக்க விளைந்திட்ட நல்வரந்தான்
ஐந்தாண்டு ஆட்சிக்காலம் என்பதுவாய்  ஆரம்பித்து  
ஆயுள்காலம் முழுவதுமே அங்கிருக்கும் ஆசையுடன்  
கதிரைகளைப்  பிடிப்பதிலே கரிசனையாய் இருந்திடுவார்
எப்போதும் மக்களுக்கே உதவுவதாய் சொல்லிக்கொண்டு
எண்ணிடுவார் தங்களுக்கு ஏற்றங்களை தேடிக்கொள்ள
பாரினில் புகழ்பெற்ற  பெருமனிதர் ஆகிமேலும்
அவர்குரலே அவையெங்கும் ஒலிக்கின்ற வலிமைபெறும்
அனுப்பிவிட்ட மக்களெல்லாம் அடுத்ததேர்தல் பார்த்திருப்பார்
அப்போதும் அவர்குரல்தான் மேடையிலே முழங்கிநிற்க
தரையிலே அமர்ந்திருந்து கைதட்டல் எம்வேலை
இப்போதும்  அவர்கூட்டம் நாமென்று பெருமைகொள்வோம்
சின்னதொரு  வேலையினை நாம் தேடிப்போனாலோ
என்னவெல்லாம் தெரியுமென கேள்விகளைக்  கேட்டிடுவார்
முன்னர்நான்  வேலைசெய்தேன் என்றவர்க்கு உரைத்துவிட்டால்
அனுபவத்தைச் சொல்லென்று  விபரமாகக்  கேட்டிடுவார்
கொள்கையோ பட்டறிவோ   எதுவுமிங்கு தேவையில்லை
செய்திட்ட வேலைகளை  கேட்டிடவும் ஆட்களில்லை
வாய்வீச்சால் எழும்கூச்சல்  தரும்வெற்றி நிரந்தரமாய்
மக்களாட்சி தந்துவிட்ட வாக்கொன்று இருப்பதனால்
வந்துபார்ப்பார் எங்களையும் உயிருள்ள மக்களென்று
இதுதானே விதியென்று வெந்துநொந்து போகின்றோம்
காலம்தான் தராசுபடி கட்டாயம் மாற்றம்வரும்
மெலிதான குரலெனினும் உண்மை அதிலிருந்தால்
கடவுளைத் தேடாமல் கவனமாய் சிந்தித்து
நீண்டநெடிய வரலாறு உள்ளார்என்று எண்ணாமல்

புனைகதைகள் புதுக்கதைகள் கற்பனைகள் ஒப்புவித்து
அடிமைக்குணம் சிரமேற்றி சலுகைகளைச்  சொல்லிக்கொண்டு
ஆளுமினம் பெரிதொன்ற ஆர்ப்பரிப்பை  புறம்தள்ளி
எம்தேவை எதுவென்று தெளிந்தோரை கண்டறிந்து






No comments: