சினிமா விமர்சனம் - வானம் கொட்டட்டும்

.


சினிமாவில் தங்கள் கலை திறமையால் ஆட்சி செய்து கொடி கட்டிப்பறந்தவர்கள் சில பேர். அதில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். தமிழ் சினிமாவுக்கு புது வடிவம் தந்தவர். இயக்குனர் என்பதை தாண்டி கதை பின்னணியிலும் பணியாற்றி வரும் அவரின் அடுத்த படைப்பாக தனா இயக்கத்தில் தற்போது வானம் கொட்டட்டும் படம் வெளியாகியுள்ளது. வானம் வசப்படுமா? திரைக்கதைக்குள் செல்வோமா...

கதைக்களம் :-

சரத்குமார் தேனியில் பெரிய ஆள், அவரின் அண்ணனுக்கு உயிர் ஆபத்து வருகிறது. இதனால் பலி வாங்கும் செயலில் இறங்கியவர் சிறைக்கு செல்கிறார்.
அவரின் மனைவியாக ராதிகா மகன், மகளை அழைத்துக்கொண்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிடுகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா இருவரும் சண்டைகள், பாசம் நிறைந்த அண்ணன் தங்கையாக வளர, இடையில் இருவருக்கும் ஒரு காதல் பின்னணியும் இருக்கிறது. மறுபக்கம் சுயதொழிலில் விக்ரம் பிரபு இறங்க கடைசியில் அவரின் உயிருக்கும் ஆபத்து பகையாக தொடர்கிறது.
தொழிலில் வெற்றி பெற்றாரா? 16 வருடங்கள் கழித்து வெளிவந்த சரத்குமார் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? ஆபத்தில் இருந்து இவர்களின் குடும்பம் மீண்டதா என்பதே இந்த வானம் கொட்டட்டும்.

படத்தை பற்றிய அலசல் :-

அண்ணனாக, மகனாக விக்ரம் பிரபுக்கு நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தின் மூலம் ஸ்கோர் செய்கிறார். செல்வா கேரக்டரில் வரும் அவரின் கேரக்டரும் சற்று முரட்டு பிடி தான்.


குறும்பு நிறைந்த தங்கையாக, மகளாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இயல்பான நடிப்பை பதிவு செய்கிறார். கனா, தர்மதுரை படங்களின் கிராமத்து மண்வாசம் இப்போது இந்த படத்திலும் அவருக்கு தொற்றி விட்டது. இருவருக்கும் இடையான அண்ணன் தங்கை சண்டை பலரும் ரசிக்கும் ஒன்று.
சரத்குமார் ஒரு எதார்த்தமான அப்பவாக பிள்ளைகளின் நலனின் அக்கறை கொள்வதும், மனைவியின் மீதான அதட்டலும், கண்டிப்பும், பாசமும் நேர்த்தியாக அமைந்துள்ளது. தென் தமிழ் மண்ணான தேனி மாவட்ட தமிழை அழகாக பேசி ஈர்க்கிறார்.
ராதிகா சரத்குமார் முக பாவனைகளிலே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். சரத்குமாருக்கும் இவருக்கும் இடையிலான நீண்ட நாள் பிரிவு, பல நாள் ஏக்கம் எல்லாம் எதார்த்தமாக அமைந்து விட்டது.
இதற்கிடையே குடும்ப உறவினராக ஐஸ்வர்யாவின் முறைப்பையனாக வரும் சாந்தனு சொல்ல முடியாமல் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவது கடைசி நிமிடம் கதையில் சற்று ட்விஸ்ட். ஜாலியாக சென்ற மடோனாவின் கதை சட்டென சோகம் நிறைந்த பின்னணியாக மாறுவதும், நண்பராக அறிமுகமாகும் விக்ரம் பிரபுவின் உதவியை நாடுவதும் கதையின் மற்றொரு பாதை.
வில்லனாக பார்வையாலேயே மிரட்டுகிறார் நந்தா.
இயக்குனர் மணிரத்னத்தின் ஸ்டைலை பின்பற்றி காட்சிகளை நிறைவாக்குகிறார் வானம் கொட்டட்டும் படத்தின் இயக்குனர் தனா. காட்சிகளை மெதுவாக நகர்த்துவதும், அப்பா பிள்ளைகள் இடையே பேச வேண்டிய விசயங்களை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதும் கவனத்தை ஈர்க்கிறது.
கதை, வசனத்தை இயக்குனர் மணிரத்னம் மனங்களை கவர்கிறார். இசை சித் ஸ்ரீராம். கண்ணு தங்கம் ராசாத்தி என தொடங்கி, சிங்கம் ராசா என படம் முழுக்க பின்னணி இசையாக பளிச்சிடுகிறார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். வாழ்த்துக்கள் ப்ரோ...

கிளாப்ஸ் :-

ராதிகா, சரத்குமாரின் எதார்த்தமான கெமிஸ்டரி ரியலான ஃபீல்.
ஐஸ்வர்யா, விக்ரம் பிரபுவின் இயல்பான நடிப்பு.
சித் ஸ்ரீராமின் மனம் ஈர்க்கும் குரல்...

பல்ப்ஸ் :-

இயக்குனர் காட்சிகளை சற்று நீட்டி வைத்திருப்பது போல இருந்தாலும் உணர்வாக மனதில் கதை படமாக ஓடுகிறது.

மொத்தத்தில் வானம் கொட்டட்டும் குடும்ப உறவுகளின் உணர்வுகளை கொட்டும் படம்.

No comments: