பலமிக்க தலைவரின் வருகையும் ஜனநாயகத்தின் தடம்புரளலும் - சமுத்திரன்

.


‘எக்காலத்திலும் ஜனநாயகம் பற்றிய மிகச்சிறந்த பகிடி என்னவெனில் அது தன்னை அழிக்கும் வழிவகையைத் தனது கொடிய எதிரிகளுக்குக் கொடுப்பதுதான்.’ Joseph Goebbels, ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் (1933-1945)
ஜனநாயகம் பற்றி ஹிட்லரின் பிரச்சாரப் பீரங்கியின் ‘பகிடி’ சமீபகாலங்களில் பல அரசியல் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் நினைவுகூரப்படுவதைக் காணலாம். தன்னை அழிக்கவல்ல அல்லது சீர்குலைக்கவல்ல விதைகளை ஜனநாயகம் தனக்குள்ளேயே கொண்டுள்ளது எனும் கருத்து மீண்டும் பலமாகவே கேட்கிறது. விசேடமாக டொனால்ட் ட்ரம்ப்  (Donald Trump) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மேற்கோள் மேலும் பரவலானது. ட்ரம்ப்பை ஹிட்லருடன் ஒப்பிடுவது பொருந்துமா என்பதல்ல முக்கியம். பலமிக்க அதிகாரவாத ஆளுமை கொண்ட ஒரு தலைவனாலேயே இன்றைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை விடுவிக்க முடியும் எனும் செய்தியை வலியுறுத்தும் வலதுசாரிக் கருத்தியல் பலநாடுகளில் மக்களின் ஆதரவுடன் எழுச்சி பெறுவதே அரசியல் விவாதங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது ஒருவகையான சீசரிசம் Caesarism எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் – அதாவது அரசியல் சிக்கல்மிகுந்த சமயத்தில் ஜூலியஸ் சீசர் போன்ற ஒரு இரும்பு மனிதன் பலரின் ஆதரவுடன் தலைவனாவது. Caesarism எனும் கருத்துருவை கிராம்சி உட்பட பல்வேறு சமூக விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். ட்ரம்ப்பை சரிவடையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எழுந்துநிற்க வைக்கும் வல்லமை உள்ள ஒரு சீசராக அந்த நாட்டின் மேனிலை வர்க்கத்தின் ஒரு சாரார் நம்புகின்றனர் போலும். இன்னொருபுறம் சமூக-பொருளாதாரரீதியில் பலவீனமாக்கப்பட்டோரின் ஒரு சாராரும் தமது பிரச்சனைகளைத் தீர்க்க வல்ல தலைவர் அவரென நம்புகிறார்கள்.  


அதிகாரவாதம் பிரதிநிதித்துவ மற்றும் நேரடி ஜனநாயகத்துடன் முரண்படுகிறது. ஆனால் அத்தகைய ஜனநாயக விரோத தலைமைக்குச் சாதகமான ஒரு கருத்தியல் பல நாடுகளின் தேர்தல் அரசியலில் மிதமிஞ்சிய செல்வாக்குப் பெற்றுள்ளதைக் காண்கிறோம். இன்றைய நடைமுறை ஜனநாயகத்தில் நம்பிக்கை இழப்போர் தொகை அதிகரித்தவண்ணமுள்ளது போலவே தெரிகிறது. தேர்தல்களுக்கூடாகவே வாக்காளர்கள் இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் ட்ரம்ப் என்றால் பிலிப்பைன்ஸ்சில் Duterte, துருக்கியில் எர்டோகான் (Erdogan), ரஷ்யாவில் புட்டின்  (Putin), பிராசிலில் பொல்சனாறோ (Bolsonaro), நமக்கு மிகவும் நெருங்கிய இந்தியாவில் மோடி. இவரைப் பிரபல ஆங்கில எழுத்தாளரான போல் மேசன் சமீபத்தில் எழுதிய நூலில்  (Paul Mason, 2019) ´Modi the Hindu Trump´ ‘மோடி இந்து ட்ரம்ப்’ என வர்ணித்துள்ளார். இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம் ஆனால் அதையும் விட முக்கியமாக நமது இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களில் 51 வீதத்திற்கும் மேலானேர் ஒரு ‘பலமிக்க தலைவனே’ இன்றைய தேவை எனும் முடிவில் கோட்டாபய ராஜபக்சவைத் தெரிவு செய்துள்ளார்கள். அவரை ஒரு பௌத்த பீடாதிபதி பெருமையுடன் ஹிட்லருடன் ஒப்பிட்டதை மறக்கமுடியுமா? ஜனாதிபதித் தேர்தலில் அவருக்குக் கிடைத்த சிங்கள பௌத்த வாக்காளரின் மிகப்பெரும் ஆதரவுக்கு இந்த ஒப்பீடும் உதவியிருக்கலாமோ எனப் பலர் எண்ணவும் கூடும். ஆனால் இலங்கையில் ‘பலமிக்க தலைவன்’ ‘தோன்றியது’ இதுதான் முதல் தடவையல்ல. 
சமகாலத்தில் பல நாடுகளில் இந்தப் போக்கினை அவதானிப்போர் இதற்கு ஒரு உலகரீதியான காரணப் பின்னணியை, இதன் சர்வதேச, பிராந்திய அரசியல் தொடர்புகளை அறிய முற்படுவது நியாயமானதே. அது அவசியமும் கூட.   இன்றைய உலக அமைப்பில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் இது ஏன் அல்லது எப்படி இடம்பெறுகிறது என்பதை அறிந்துகொள்ள அந்த நாட்டின் உள்ளார்ந்த முரண்பாடுகள், வரலாற்று நிலைமைகள் அடிப்படை முக்கியத்துவம் பெறுகின்றன.   இந்தக் குறிப்பில் உலகரீதியான  பின்புலத்தைப் பற்றிச் சில முக்கிய விடயங்களை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். அடுத்துவரும் கட்டுரைகளில் இவை பற்றி விரிவாக ஆராயப்படும்.  இந்த வகையில் நீண்ட உலகரீதியில் மேலாட்சி செலுத்திவந்த நவதாராள உலகமயமாக்கலின்நெருக்கடிகளும் அவற்றினால் வந்த சமூக, பொருளாதார மற்றும் சூழல் சார்ந்த விளைவுகளும் பிரதான முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் 2001ஆம் ஆண்டு ´9/11’ தாக்குதல்களுக்குப்பின் அமெரிக்க வல்லரசின் முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ கொள்கை,  தொடர்ந்து பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்திவரும்  ‘பாதுகாப்புமயமாக்கல்’ (securitization), மற்றும் விசேடமாக சமீப தசாப்தங்களில் புதிதாக எழுந்துவரும் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் உலக மற்றும் பிராந்திய அதிகார உறவுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் முக்கியத்துவம் மிக்கவை. 
இந்தப் புதிய வல்லரசுகளில் சீனா ஏற்கனவே உலக மட்டத்தில் கணிசமான பலமும் செல்வாக்கும் பெற்றுவருவது அமெரிக்க வல்லரசுக்குத் தலையிடியைக் கொடுக்கிறது.  ஆனால் இன்றைய உலக மாற்றப் போக்கில் சீனாவை எப்படி வகைப்படுத்துவதென்பது பெரிய கேள்வியாகும். சீனாவின் மாற்றங்களில் பலமிக்க தனிநபரின் தலைமைபற்றி நீண்டகாலமாக உலகரீதியில் பேசப்படுவதையும் எழுதப்படுவதையும் காண்கிறோம். ஆனால் அங்கே தனிநபர் வழங்கும் தலைமைக்குப்பின் ஒரு மிகப்பலமிக்க கட்சி  ‘நிரந்தரமாக’ அதிகாரத்தில் இருப்பதை மறந்துவிடலாகாது. சீனா நவதாராளக் கொள்கையை பின்பற்றுகிறதா இல்லையா என்பது ஒரு முடிவுறா விவாதமாகத் தொடர்கிறது. பலரின் அபிப்பிராயத்தில் சீனா நவதாராளக் கொள்கையின் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. தனது நோக்கிலான முதலாளித்துவ விருத்திப் பாதையையே அது தேர்ந்தெடுத்தது. இது ‘கிழக்காசியப் பாதை’ எனச் சில ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. அதாவது சீனாவின் பழைய எதிரியான ஜப்பான் தேசிய அரசின் தலைமைத்துவ பங்குடன் முதலாளித்துவ அபிவிருத்திக்கு வகுத்த வழியால் நவீன சீனா ஆகர்சிக்கப்பட்டது எனலாம். இந்தப் பாதையையே சீனாவுக்கு முன்னர் தைவானும், தென் கொரியாவும் பின்பற்றி முதலாளித்துவ விருத்தி பெற்ற நாடுகளாயின. 1990களிலிருந்து தனது பொருளாதார வளர்ச்சியின் முன்னுரிமைகளுக்கேற்ப வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவரும் நாடாகவும் சீனா விளங்குகிறது.  அரச அதிகாரத்தை முழுமையாகத் தன் கையில் வைத்திருக்கும் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் சோஷலிசத்தை நிர்மாணித்துத் தக்கவைப்பதில் தோல்வியடைந்தபோதும் அங்கே முதலாளித்துவத்தை விருத்தி செய்வதிலும் அந்த நாட்டை ஒரு உலக வல்லரசாக வளர்தெடுப்பதிலும் வெற்றியடைந்து வருவதை மறுக்கமுடியுமா?இன்றைய சீனாவின் முதலாளித்துவம் ஒரு கலப்புப் பொருளாதாரம் (mixed economy) என்பதே பலரின் கருத்து.  மறுபுறம் செல்வந்த நாடுகள் உட்படப் பெருவாரி நாடுகள் நவதாராளக் கொள்கையை அமுல்படுத்தியது சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் உதவியது.  சீனாவில் இருப்பது ஒரு ஒற்றைக் கட்சி அதிகாரவாத அமைப்பு. அங்கே எதிர்க் கட்சிக்கு இடமில்லை. முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களுமில்லை. கட்சியின் விதிமுறைகளுக்கமையத் தலைவர் தேர்வு இடம்பெறுகிறது. இது ஒரு உட்கட்சி விவகாரமே. இங்கு நான் குறிப்பிட்டுள்ள மற்றைய நாடுகளையும் விடச் சீனா வேறுபட்டதென்பதால் பின்வரும் கருத்துரைகள் பெரும்பாலும் சீனாவுக்குப் பொருந்தாது. சீனாவின் எழுச்சியும் அது ஒரு புதிய ஏகாதிபத்திய வல்லரசா இல்லையா என்பதும் வேறாக ஆராயப்படவேண்டும்.  
நவதாராள உலகமயமாக்கலின் பாதகமான சமூக-பொருளாதார விளைவுகளுக்கு எதிராகப் பல நாடுகளில் ஒருபுறம் வலதுசாரித் தேசியவாத, அதிகாரவாதப் பொப்பியூலிசப் போக்கும் மறுபுறம் சமூக ஜனநாயக அரச சீர்திருத்தங்களைக் கோரும் மற்றும் ஜனநாயகத்தை மக்கள் ஜனநாயகமாக மீட்டெடுக்கும் உலகளாவிய நோக்கிலான இடதுசாரிப் போக்குகளும் தோன்றியுள்ளன. இவற்றில் வலதுசாரிப்போக்கே தற்சமயம் பொதுவாகப் பலம்பெற்றுவருவதை அவதானிக்கலாம். சுயபோட்டிச் சந்தை, தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தகம், மூலதனச் சந்தையின் தாராளமயமாக்கல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு  கடந்த நான்கு தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த நவதாராளக் கொள்கையின் விளைவுகள் பெருவாரியான பொதுமக்கள் மத்தியில் நவதாராள உலகமயமாக்கலில் மட்டுமன்றி ஜனநாயகத்திலும் நம்பிக்கை இழக்க வைத்துள்ளன என்பதைப் பல சர்வதேசரீதியான ஆய்வுகள் காட்டுகின்றன.  ‘நடுத்தர வர்க்கங்கள்’ என ஆய்வறிக்கைகள் குறிப்பிடும் உழைப்பாளர்களின் மெய் ஊதியம் வளராமை அல்லது வீழ்ச்சியடைதல், வேலையில்லாமை, சமூகப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் மக்கள் தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கிறார்கள். சமூகத்தின் செல்வமும் வருமானமும் ஒரு அற்ப சிறுபான்மையினரிடம் குவிவது இதன் மறுபக்கம் என்பதையும் காண்கிறார்கள். தமது வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ் தமது வாழ்க்கைத் தரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் அநுபவம் அந்த ஆட்சிமுறையின் ‘ஜனநாயகத்தில்’ நம்பிக்கை இழக்க வைக்கிறது.  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி கடந்த 25 வருட காலத்தில் 2019 ஆண்டில் பல செல்வந்த நாடுகளில், விசேடமாக பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும், பெருமளவிலானோர் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்துள்ளனர். பல நாடுகளில் முன்னர் ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் மத்தியில் கடந்த பத்து வருட காலத்தில் பொதுவாக ஏமாற்றமே அதிகரித்துள்ளது என்பதை 154 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. இந்தப் பொதுவான போக்கிற்கு விலக்காகத் தொடர்ந்தும் ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கும் நாடுகளாக சுவிற்சலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் விளங்குவதாக அதே ஆய்வு காட்டுகிறது. 
சமூகத்தில் பரவலாயிருக்கும் அதிருப்தியை வலதுசாரி சக்திகளின் ஒரு சாரார் தமது அரசியல் மூலதனமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலைமைகளில் அகதிகளின் மற்றும் தொழிலாளர்களின் வருகையையும் மேற்கத்திய நாடுகளில் தேசியவாத, இன மற்றும் நிறவாத சக்திகள் தமது அரசியலுக்குப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் நவதாராள உலக மயமாக்கலால் இலாபமடைந்த முதலாளி வர்க்கத்தினர் (இவர்களில் பெரும் பயனாளிகள் நிதிமூலதனத்தால் இலாபமடைந்தோர், மற்றும் உற்பத்தி முதலீடுகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறைந்த ஊதியத்தில் தரமான தொழிலாளர்களை வழங்கும் சீனா, வியட்நாம் மற்றும் ஆசிய தென் அமெரிக்க நாடுகளுக்கு மாற்றிப் பெரும் இலாபமடைந்தோர்), உயர்மட்ட துறைசார் நிபுணர்கள், மற்றும் அரசியல் மேனிலையாளர்கள் இருப்பதுபோல் தோல்வியடைந்த அல்லது எதிர்பார்த்த பயனைப்பெறாது ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள், மேனிலையாளர்கள் மற்றும் தேசியவாதத்தை, இனவாதத்தை, மதவாதத்தைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றமுயலும் சந்தர்ப்பவாதிகளும் இருக்கின்றனர். இவ்வாறு தோல்வியடைந்த முதலாளித்துவ, மேனிலையாள, மற்றும் குட்டி பூர்ஷ்வாக் குழுக்களிடமிருந்தே வலதுசாரிப் பொப்பியூலிசத்தின் தலைமைச் சக்தியும் கருத்தியலும் உருவாகின்றன. இந்தக் கூட்டம் ஏந்தி நிற்கும் ‘தேசிய நலன்’ எனும் கவர்ச்சிகரமான கருத்தியல் பதாகையால் பொதுமக்கள், குறிப்பாக நவதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்டோரில் பலர், கவரப்படுகின்றனர்.  ஆழ நோக்கின் முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமிடையிலான உறவு முரண்பாடுகள் மிக்கது மட்டுமன்றி அதிகார வர்க்கக் கூட்டுகள் தமது நலன்களுக்காகத் ‘தேசியத்தின்’ பெயரால் அதிகாரவாத மற்றும் பாசிச அடக்குமுறையையும் நியாயப்படுத்தத் தயங்கமாட்டா என்பது புலனாகும்.  இது நவீனகால வரலாறு தரும் பாடமாகும். இன்றைய அரசியல் போக்குகளைப் பார்க்கும்போது இந்தப் பாடத்தைப் பலரும் மறந்துவிட்டனரா என எண்ணத் தோன்றுகிறது. 
இதுவரையிலான உலகமயமாக்கலின் சில விளைவுகளுக்கு எதிராக வலதுசாரி எதிர்வினைப் போக்குகள் பல நாடுகளில் எழுந்துள்ளமை இவற்றிற்கு ஒரு உலகரீதியான தோற்றத்தைக் கொடுக்கின்றது. ஆயினும் குறிப்பிட்ட தேசியமட்டங்களிலிருந்து பலமான தேசியவாதக் கருத்தியல்களின் உதவியுடன் எழும் இந்த எதிர்வினைகளுக்கு நவதாராளத் திட்டத்திற்கு இருந்தது போன்ற உலகரீதியான அதிகாரத்துடன் இணைந்த அரசியல், பொருளாதாரப் பொறிமுறைகள், மேலாட்சியைத் தக்கவைக்கும் கருத்தியல் பொறிமுறைகள் ஆகியன சர்வதேச மட்டத்தில் இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். அதேவேளை நவதாராளவாதத்தின் வீழ்ச்சி உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிகளின் வெளிப்பாடு என்பதோடு சர்வதேச அதிகார உறவுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஒரு குறிகாட்டியும்கூட.  தெற்கத்திய நாடுகளில் இந்த அதிகாரவாதப் போக்கிற்கு ஆகர்சமூட்டும் சக்திகளாகச் சீனா, இந்துத்துவ ஆட்சியின் கீழுள்ள இந்தியா, மற்றும் ரஷ்யா போன்ற எழுந்துவரும் வல்லரசுகள் விளங்குகின்றன. மறுபக்கத்தில் தேசிய மட்டங்களில் இன்னும் ஆதரவு குன்றிய நிலையிலிருக்கும் சமூக ஜனநாயக அல்லது மக்கள் ஜனநாயக எதிர்வினைப் போக்கிற்கு முற்போக்கு சக்திகளின் உலகரீதியான ஒருமைப்பாடு இருப்பதையும் சுட்டிக் காட்டவேண்டும். முதலாளித்துவத்தின் இதுவரையிலான வரலாற்றில் சமூக ஜனநாயகச் சீர்திருத்தங்கள் நீடித்த நாடுகளிலேயே மக்கள் நலன் மிகப் பரந்தளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது எனும் முடிவு ஆதாரபூர்வமானது. சமூக ஜனநாயகச் சீர்திருத்தம் முதலாளித்துவ அமைப்பிற்குள் பல அடிப்படையான சமூக நல உரிமைகளை மக்களின் உரித்துடைமைகளாக (entitlements ஆக)நிறுவனமயப்படுத்துகிறது. இது தொழிலாளர் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்களின் விளைவாகும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் சமூக ஜனநாயக சீர்திருத்தங்களை நீண்டகாலத்திற்குத் தக்கவைப்பது சுலபமில்லை என்பதும் வரலாறு தரும் அநுபவமாகும். மக்களைப் பொறுத்தவரை  பொதுவாக சமூக நலனை முன்னெடுக்க உதவும் சீர்திருத்தத்திற்கே குறுகிய காலத்தில் முன்னுரிமை கொடுப்பார்கள்.  இதற்கும் அப்பால் சிந்தித்துச் செயற்படும் சோஷலிச ஜனநாயகவாதிகள் சமூக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களை குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவை என்பதை அங்கீகரித்து நீண்டகால நோக்கில் ஆதரிக்கிறார்கள். 
செல்வந்த நாடுகளில் மட்டுமன்றி வளர்முக நாடுகளிலும் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெருமளவில் ‘பலவான்’ எனப் ‘பெயர்பெற்ற’ தலைவனைக் கொண்ட வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளையே ஆதரிக்கும் போக்கு இடதுசாரிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. இந்த நாடுகளில் செல்வந்த நாடுகளையும்விட அதிகாரவாதப்போக்குப் பலமாக இருப்பதைக் காணலாம். செல்வந்த நாடுகளில்  ஜனநாயக மரபைப் பேணப் போராடும் சக்திகள் இயங்கிய வண்ணமிருப்பதைக் காண்கிறோம். அதேவேளை பல்வேறு நாடுகளில் நவதாராள உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரில் பலர் பொருளாதாரத் தேசியவாத, இனவாத, நிறவாத, அடிப்படைவாதப் பிரச்சாரங்களாலும் வாக்குறுதிகளாலும் ஈர்க்கப்படுவதும் கண்கூடு.  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இருந்து சமீபத்தில் நடந்தேறிய பிரித்தானிய பொதுத் தேர்தல்வரை இதைக் காண்கிறோம். தன்மைரீதியான வேறுபாடுகள் இருப்பினும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவும் இந்தப் போக்கின் ஒருவகை உதாரணமாகிறது.  இந்த வலதுசாரிப் போக்கினால் மக்களின் மனித மேம்பாட்டிற்கு உதவமுடியுமா, உண்மையில் உள்நாட்டில் நடைமுறையிலிருக்கும் தனியுடைமையாக்கல் மற்றும் சந்தைமயமாக்கல், இவற்றின் விளைவுகளான ஏற்றத் தாழ்வுகள், தொழிலாளரின் மெய் ஊதியத்தின் வீழ்ச்சி, வாழ்வாதாரப் போதாமை, வேலையில்லாமை, சமூகப் பாதுகாப்பின்மை, சூழலின் சீரழிவு போன்றவற்றினை மாற்றமுடியுமா எனும் கேள்விகள் எழுகின்றன. அதாவது உள்நாட்டில் சமூக முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, பலரின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவத்தவறிய நவதாராளக் கொள்கையைக் கைவிட்டு மாற்றுக் கொள்கையைப் பின்பற்றமுடியுமா? இந்தக் கேள்விகள் வலதுசாரித் தேசியவாதத்தின் மேலாதிக்க அடையாள அரசியலால் மறைக்கப்படும் வர்க்க, மற்றும் பால்ரீதியான முரண்பாடுகள்மீதும், ‘தேசிய அடையாளம்’ ‘தேசிய பாதுகாப்பு’ எனும் சாக்கில் ‘சிறுபான்மையர்’ ‘புறத்தியார்’ எனும் பெயர்களால் வெளிவாரிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுவோரின் நிலைமைகள் மீதும் நமது கவனத்தைத் திருப்புகின்றன. 
டொனால்ட் ட்ரம்ப்பின் பொருளாதாரத் தேசியவாத நிலைப்பாட்டிற்கு ‘தேசியவாத நவதாராள வாதம்’ (´nationalist neoliberalism´) எனப் பெயரிட்டுள்ளார் ஒரு ஆய்வாளர் – அதாவது ஒருபுறம் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேசப் போட்டியைப் பொறுத்தவரை தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை மறுபுறம் உள்நாட்டில் நவதாராளப் பெருமப் பொருளாதாரக் (macroeconomic) கொள்கை. இந்த ஆட்சியில் நிறவாதமும் வெளிநாட்டவரின் அடிப்படை மனித உரிமை மீறல்களும் மோசமாக வளர்ந்துள்ளன. பாதுகாப்புமயமாக்கலும் தொடர்கிறது. ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு பரந்த எதிர்ப்புக்கள் எழுந்தவண்ணமிருக்கின்றன.  இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியைக் காணவில்லை. வேலையில்லாமை, சமூகப்பாதுகாப்பின்மை, மற்றும் சூழலின் சீரழிவு பெரும் பிரச்சனைகளாகத் தொடர்கின்றன. இவற்றை மறைப்பதற்கு இந்துத்துவ தேசியவாதத்தைப் பயன்படுத்தி அதிகாரவாதப் போக்கினை நியாயப்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசாங்கம். இந்துத்துவக் கருத்தியல் நேற்றுத் தோன்றியதல்ல. அதற்கு தொண்ணூறு வருடங்களுக்கு மேலான வரலாறுண்டு.  ஆயினும்  இந்திய அரசாங்கம் சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடளாவிய எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளன. அங்கே ஜனநாயக உரிமைகளுக்கான அணிதிரட்டல் இன, மத பிரிவுகளைத் தாண்டி முன்னேறுவதைக் காண்கிறோம். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வலதுசாரிப் பொப்பியூலிசம் ஏற்கனவே நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.    
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கை சிங்கள பௌத்த பேரின தேசியம், அதன் பாதுகாப்பு மற்றும் ‘அபிவிருத்தி’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது நீண்டகாலமாக பிரதிநிதித்துவ ஜனநாயகம் பேரினத்துவ மேலாதிக்கத்துவத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட்டநிலையில் அதிகாரவாதத்தையும் இராணுவமயமாக்கலையும்  இன்றைய உள்நாட்டு மற்றும் பிராந்திய அரசியல் சூழலில் தக்கவைக்கும் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைக் குறிக்கிறது.   ஜனாதிபதியின் அதிகாரத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் இலங்கை யாப்பின் 19ஆம் திருத்தத்திற்கு எதிராக மீண்டும் சர்வ அதிகாரத்தையும் ஜனாதிபதிக்குக் கையளிக்கும்வகையில் யாப்பிற்குத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என அறிவித்துள்ளார் கோட்டாபய. 
J. R. ஜயவர்த்தன போன்று முழு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாவதே அவருடைய அவா. அதை அவர் அடைய நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வரப்போகும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு கோரியுள்ளார். ஆனால் அவரின் விருப்பைத் திருப்திப் படுத்துவதாயின் பிரதம அமைச்சரின் அதிகாரம் 19ஆம் திருத்தத்திற்கு முன்பிருந்த நிலைக்குக் குறைக்கப்படவேண்டும். தற்போது பிரதமராக இருக்கும் அவருடைய அண்ணன் இதை ஏற்றுக் கொள்வாரா? ராஜபக்ச வம்சத்திற்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பான சுவராஸ்யமான கேள்வி!
2015இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோல்வியடைந்தபின் கோட்டாபய தனக்கென ஒரு அரசியல் பாத்திரத்தை வகுக்கும் முயற்சியை மேற்கொண்டார். புதிய அரசாங்கம்  திசைதெரியாது தடுமாறியபடி உள்ளார்ந்த பூசல்களில் மூழ்கித் தவித்த நிலையில் அதன்மீது மக்களின் அதிருப்தி வளர்ந்து  கொண்டிருந்த சூழலில் ராஜபக்ச குழுவினர் 2016இல் சிறீலங்கா பொது ஜன பெரமுன (SLPP) எனும் அமைப்பினைக் கூட்டிப் பலப்படுத்தினர். அதுவரை அவர்கள் தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) படிப்படியாக SLPP உடன் சங்கமித்தது. அதே காலத்தில் இதற்குச் சமாந்திரமாக, எதிராக அல்ல, கோட்டாபய தனது அரசியல் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு சில புதிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டார்.  அவருடைய திட்டத்திற்கு ஒரு தொழில்நுட்பவல்லுன (technocratic) தோற்றத்தைக் கொண்ட ‘வியத்மக’ (viyathmaga) எனும் அமைப்பினை அவருக்கு விசுவாசமான இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் உட்படப் பல்வேறு துறைகள் சார்ந்தோரின் உதவியுடன் உருவாக்கினார். நாட்டை நேசிப்பதுடன் அதை சுபீட்சமும் அமைதியும் மிக்க ஒன்றாக அபிவிருத்தி செய்வதற்குப் பங்களிக்க விரும்பும் துறைசார் வல்லுனர்கள், ஆய்வாளர்கள் மற்றும் முயற்சியாளர்களை ஒன்று கூட்டும் வலைப்பின்னலான வியத்மக ஒரு அரசியல் அமைப்பல்ல என அதன் நோக்கு, குறிக்கோள் பற்றிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒழுக்கவியல் மற்றும் ஆத்மீகரீதியான விழுமியங்கள் போன்ற வார்த்தைகளையும் காணக்கிடைக்கிறது. 2019ஆம் ஆண்டில் இலங்கையில் 5000த்திற்கும் அதிகமானோருடன் வெளிநாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களும் வியத்கமவில் இணைந்துள்ளனர் என அறியக்கிடைக்கிறது. ‘நம்மால் முடியும், சிறீலங்காவால் முடியும்’ (´We can and Sri Lanka can´) எனும் கோஷத்துடன் தொழிற்றுறை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், இளைஞரின் பங்கு, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் பிரச்சாரத்தை வியத்மக முன்னெடுத்தது. இதன் முன்னணியில் இயங்கும் துறைசார் வல்லுனர்கள்  கோட்டாபயவின் தலைமைத்துவத்தை புகழ்ந்து அவருக்குத் தமது விசுவாசத்தைக் காட்டியுள்ளனர்.
‘அரசியல் சார்பற்ற’ அமைப்பென அறிமுகப்படுத்தப்பட்ட வியத்மக உண்மையில் ஆரம்பத்திலிருந்தே ஒரு அரசியல் சார்ந்த அமைப்பென்பதில் சந்தேகமில்லை.  சிங்கள மக்கள் மத்தியில் பரந்த ஆதரவைப் பெற்றுள்ள மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செல்வாக்கும் பேரினவாதப் பொப்பியூலிசமுமின்றி கோட்டாபயவின் அமோக வெற்றியை விளங்கிக்கொள்ள முடியாது. அதேவேளை சிங்கள-பௌத்த தேசியத்தின் பாதுகாப்புடன் ‘அபிவிருத்தி’யைப் பிரதான இலக்குகளாக முன்னுரிமைப் படுத்தும் வல்லுனர்களின் விசேட அமைப்பாக அறியப்பட்ட வியத்மக கோட்டாபயவிற்கு ஏற்கனவே இருந்த ‘இரும்பு மனிதன்’ விம்பத்தை மெருகூட்டி மேலும் பலப்படுத்தி ஆளுமைரீதியில் அவரை அண்ணன் மகிந்தவிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும் உதவியுள்ளது. நடைமுறையில் உயர் பதவி நியமனங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாக கோட்டாவிற்கு நெருக்கமான வியத்மக குழுவிற்கும் SLPPயில் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றலாம். ஆனால் மகிந்தவின் தலைமையில் இயங்கும் SLPPதான் ஜனாதிபதி கோட்டாவின் வெகுஜன அரசியல் தளமென்பதையும் அவர் ராஜபக்ச வம்சத்தின் பிரதிநிதி என்பதையும் மறந்துவிடலாகாது.
2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் செயற்படுத்திய பகிஷ்கரிப்பின் உதவியுடன் சிறியளவிலான (180786) வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச 2009 போர் முடிவில் முடிசூடா மன்னனாகச் சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டார். ஆயினும் போரின் இராணுவ வெற்றியின் நாயகன் யார் எனும் போட்டியில் கோட்டாபயவுக்கே முதலிடம் கிடைத்தது. நீண்ட காலம் தொடர்ச்சியாக இராணுவத்தில் கடமையாற்றியவரும் இறுதிப்போரின்போது தளபதியாக இருந்தவருமான சரத் பொன்சேகா ராஜபக்சக்களினால் ஒரம் கட்டப்பட்டுச் சிறையிலிடப்பட்டார். போர்முடிவில் மிகச்சிறந்த தளபதி என ராஜபக்சக்களால் புகழ்மாலை சூட்டப்பட்ட பொன்சேகா தானும் ஜனாதிபதியாகத் தகுதியானவரெனும் அபிலாஷையை வெளிப்படுத்தியதே அவர் விட்ட பெருந்தவறானது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ‘கோட்டாவின் போர்’ (´Gota´s war´) எனச் சித்தரிக்கப்பட்டது.        
 வெற்றிக் கொண்டாட்டதின்போதே ஜனாதிபதி மகிந்த தமிழ் மக்களின் பிரச்சனை இனப் பிரச்சனையல்ல அவர்கள் வேண்டுவது அபிவிருத்தியே எனப் பிரகடனப்படுத்தினார். இன்று கோட்டாபயவும் அதையே மேலும் அழுத்தி சொல்கிறார். அதிகாரப் பகிர்வுக்குப் பெரும்பான்மை இனத்திடமிருந்து ஆதரவில்லை ஆகவே அதைச் செய்யமுடியாது என்பதே அவருடைய முடிவு. போருக்குப் பின்னான இலங்கையில் இராணுவம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விசேட அந்தஸ்துக்குரிய நிறுவனமாக உயர்த்தப்பட்டுவிட்டது. ஏற்கனவே நீண்ட காலமாக புனிதமயப்படுத்தப்பட்டு வணக்கத்துக்குரிய நிறுவனமாகத் திகழ்ந்த பௌத்த மதபீடத்தின் அரசியல் செல்வாக்கும் மேலும் வளர்ந்துள்ளது.  பெரும்பான்மை இனத்தைச் சார்ந்திருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் இராணுவத்தை விமர்சனங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கும், பௌத்தமதபீடத்திற்குத் தமது விசுவாசத்தைக் காட்டி ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் போட்டிபோடுகின்றன. இன்றைய இலங்கையின் தேர்தல் அரசியலின் போக்கின்மீது இந்த நிறுவனங்கள் பெரும் செல்வாக்கினைக் கொண்டுள்ளன. கோட்டாபய அதிகாரத்துக்கு வந்ததும் இராணுவத்தின் அந்தஸ்து மேலும் உயர்ந்துவிட்டது. ‘தேசிய பாதுகாப்பு’ எனும் பெயரில் இராணுவமயமாக்கல் உத்வேகத்துடன் முன்னேறுகிறது. 2020 சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி இராணுவப் பதக்கத்தை அணிந்தபடி தலைமைதாங்கி உரையாற்றினார்.  ஒரு ஜனநாயகக் குடியரசெனப்படும் இந்த நாட்டில் இது முதற் தடவையாக இடம்பெற்றது வெறும் குறியீட்டுக்கும் மேலான முக்கியத்துவமிக்கது. 
அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதியின் கொள்கை இன்னும் விரிவாகத் தெளிவாக்கப்படவில்லை. தற்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு சில பொப்பியூலிச முடிவுகள் செயற்படுத்தப்படுகின்றன. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைக்குவந்த நவதாராளப் பொருளாதாரக் கொள்கையை இதுவரையிலான அரசாங்கங்கள் தமது அரசியல் மற்றும் போர்க்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றங்களுடன் பின்பற்றி வந்துள்ளன.  போருடன் சேர்ந்து ஒரு போர்ப் பொருளாதாரமும் உருவாகியது. இராணுவம் நேரடியாகப் பொருளாதாரத் துறைகளில் முதலீட்டாளரானது. இலங்கையில் நவதாராளக் கொள்கை, போர்ப்பொருளாதாரம், அரச கூட்டுத்தாபனங்கள் பற்றி முன்னர் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.[1]
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இன்று நவதாராளக் கொள்கை உலகரீதியில் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. இலங்கையிலும் அதற்கு எதிர்ப்பு வளர்ந்துள்ளது. மாற்றுப் பொருளாதாரக் கொள்கைக்குச் சார்பான சூழல் இருப்பதை மறுக்க முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை ஒரு மாற்றுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் சாத்தியப்பாடுகள் உண்டு. தேசிய அபிவிருத்திக் கொள்கையின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான உறவுகளை மீளமைப்பது பற்றிப் பேசப்படுகிறது.  ஆனால் அது எத்தகைய கொள்கையாயிருக்கும் என்பதைச் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மாற்றுக் கொள்கை பெரும்பாலும் சீனா மீதான பொருளாதாரரீதியான தங்கிநிற்றலை அதிகரிக்கலாம் என்றே தோன்றுகிறது. இது தவிர்க்கமுடியாதபடி வல்லரசுகளின் இந்து சமுத்திரப் பிராந்திய மேலாதிக்கப் போட்டியுடன் தொடர்புபடுகிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிப்பதை விரும்பாத இந்தியாவும் தனது உதவியை அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.  சீனாவும் இந்தியாவும் மாத்திரமல்ல, அமெரிக்கா மற்றும் அதன் அணியைச் சார்ந்த மேற்கத்திய நாடுகளும் ஜப்பானும் சும்மா இருக்கப்போவதில்லை. தற்போது இந்த அணிக்கும் இந்தியாவுக்குமிடையே சீனாவுக்கு எதிரான பொதுப் புரிந்துணர்வுண்டு. உள்நாட்டு அரசியல் நிலைமை சீனாவுக்குச் சார்பாக இருப்பது தெளிவு. ஆயினும் வல்லரசுப் போட்டிமிகுந்த பிராந்திய சூழல் புதிய அரசாங்கத்திற்கு  அனுகூலங்களை மட்டுமன்றி கட்டுப்பாடுகளையும் கொடுக்கிறது. தற்சமயம் ஜனாதிபதியின் உடனடியான முன்னுரிமை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தன் விருப்பிற்கேற்ப யாப்பில் திருத்தங்களை கொண்டுவருவதே.  பொதுத் தேர்தல் முடியும்வரை நாமும் பொறுத்திருப்போம்.

No comments: