எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

ஒரு இளம் பெண் தன் பெயரின் சுமைதாங்காமல் தூக்கில் தொங்குகிறாள் அவள் உடலின் எடையைவிடவும் அந்த பெயரின் எடை ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது...
November 15, 2019






எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்
“அப்பா.. எனது பிரச்சினையே
எனது பெயர்தான்”
செல்போனில் வைக்கப்பட்டிருந்த
ஒரு பெண்ணின்
தற்கொலைக் குறிப்பின் வாசகம்
கண்ணில் விழுந்த ஒரு துரும்பைபோல
உறுத்துகிறது
உங்களுக்கு அது விசித்திரமாக இருக்கலாம்
ஒருவர் பெயர் அவரை
தற்கொலைப்பாதை வரை
அழைத்துச் செல்லுமா எனில்
ஆம், அழைத்துச் செல்லும்
அவளது பெயர்
குறுவாளின் பளபளக்கும் முனையாக
அவளை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது
பிறகு ஒரு நாள் அது
அவள் தொண்டையில் இறங்கியது
எனக்கும் அப்படி இருக்கிறது
ஒரு பெயர்
நான் அந்தத் துயரத்தை நீண்டகாலமாக
சுமந்துகொண்டிருக்கிறேன்
அந்தப் பெயரினால்
நான் சில இடங்களில்
வாசல்படியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறேன்
சில இடங்களில்
சகிப்புத் தன்மையுடன்
வரவேற்பரை வரைக்கும்
பாதுகாப்பு மிக்க
நுழைவாயில்களில்
காவலர்கள் எல்லோரையும்
ஒரு முறை சோதித்தார்கள் எனில்
என்னை மட்டும் மூன்றுமுறை சோதித்தார்கள்
என்னை ஒரு முறை
என் கடவுளை ஒரு முறை
என் பெயரை ஒரு முறை
என் பெயரினால்
எனது விண்ணப்பங்கள்
எல்லா இடங்களிலும்
கடைசிக்கு தள்ளப்படுகின்றன
சுங்கச் சோதனைகளில்
சந்தேகத்தின் பெயரில்
என் ஆசன வாயில் திறந்துபார்க்கப்படுகிறது
என் சிநேகிதி
உன் வீட்டில்
எப்போதும் இறைச்சி வாடையும்
மீன் கவுச்சியும் அடிக்குமா என்று கேட்கிறாள்
என் ரத்தத்தில்
வெடிமருந்து வாசனை இருக்கலாம் என
என் நண்பர்களே சந்தேகிக்கிறார்கள்
பிறர் தன் திறமையை
ஒருமுறை நிரூபித்தால்
நான் இருமுறை நிரூபிக்க வேண்டும்
பிறர் தன் விசுவாசத்தை
ஒருமுறை நிரூபித்தால்
நான் நான்குமுறை நிரூபிக்க வேண்டும்
பிறர் தன் தேசபக்தியை
ஒரு முறை நிரூபித்தால்
நான் நூறுமுறை
நான் என் பெயருக்காக
வேட்டையாடப்பட்டபோது
ஓடி ஒளிந்துகொள்ள முயன்றேன்
அவர்கள் என் பெயரின் வாசனையால்
நான் இருக்குமிடத்தை
எளிதில் தெரிந்துகொண்டார்கள்
நான் பிறகு
ஒரு தலைமறைவு குற்றவாளிபோல
வேறொரு பெயரை சூடிக்கொண்டேன்
அவர்கள் நள்ளிரவில்
என்னைத் தட்டி எழுப்பினார்கள்
என் சொந்தப் பெயரின் அடையாள அட்டையை
என் முகத்தில் விட்டெறிந்தார்கள்
நான் கடற்கரை மணலில்
வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன்
யாரோ ஒருவன்
என்னை உற்றுப்பார்க்கிறான்
” ஏன் இங்கிருக்கிறாய்..
அரேபிய பாலைவனத்திற்குபோ”‘ என்கிறான்
ஒரு இளம் பெண்
தன் பெயரின் சுமைதாங்காமல்
தூக்கில் தொங்குகிறாள்
அவள் உடலின் எடையைவிடவும்
அந்த பெயரின் எடை
ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது
அவள் இறக்கிறாள்
அவளது பெயர் இறக்கவில்லை
அது துடித்துக்கொண்டிருக்கிறது
காயம்பட்ட ஒரு பறவையாக





No comments: