தமிழ் மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்கள் இறு­தியில் ஏமாற்­ற­ம­டைவர்


08/10/2019 எமது நாட்டில் ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்­பெற உள்­ளது.
இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்தல் களம் இப்­போது சூடு பிடித்­தி­ருக்­கின்­றது. நாட்டின் அடுத்த ஜனா­தி­பதி தொடர்பில் நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்பு மேலோங்­கிக்­கா­ணப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளையும் வழங்கி வரு­கின்­றனர். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும் கருத்­துகள் இப்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. தேர்தல் வாக்­கு­று­திகள் எந்­த­ள­வுக்கு சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தனை பொறுத்­தி­ருந்தே பார்க்­க­வேண்டி இருக்­கின்­றது.
பல்­வேறு புறக்­க­ணிப்­பு­களின் விளை­வாக எமது நாட்டில் யுத்தம் மேலெ­ழுந்­தது. சுமார் மூன்று தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக கொடிய யுத்தம் நில­வி­யதன் கார­ண­மாக நாடு பல்­வேறு துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது. நாட்டு மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நாட்டில் இரத்த ஆறு ஓடு­வ­தற்கும் யுத்தம் ஏது­வா­னது. யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பல்­வேறு இழப்­பு­க­ளுக்கும் மத்­தியில் சர்­வ­தே­சத்தின் பார்­வையும் இலங்­கையின் மீது ஆழ­மாகப் பதிந்­தி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட போதும் மனித உரிமை மீறல்கள் அதி­க­ளவில் நிகழ்ந்­துள்­ள­தாக விமர்­ச­னங்கள் இருந்து வரு­வதும் நீங்கள் அறிந்த விட­ய­மே­யாகும்.

இலங்­கையின் வர­லாற்றில் தமிழ் மக்கள் உரி­மை­க­ளுக்­காக பல சந்­தர்ப்­பங்­களில் குரல் எழுப்பி இருக்­கின்­றார்கள். எனினும் அள்ளிக் கொடுக்­கா­விட்­டா­லும்­கூட கிள்ளிக் கொடுக்­கவும் தயக்கம் காட்­டிய ஒரு நிலை­யி­லேயே ஆட்­சி­யா­ளர்கள் இருந்து வந்­தனர்.  தமி­ழர்­க­ளுக்கு சில வேளை­களில் சிற்­சில உரி­மை­களை வழங்க சில பெரும்­பான்மை அர­சி­யல்­வா­திகள் முனைந்­த­போ­திலும் இன­வா­திகள் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முற்­றா­கக்­கண்­டித்த ஒரு போக்கே இருந்து வந்­தது. தமி­ழர்­க­ளுக்­கான உரி­மை­களை மையப்­ப­டுத்தி 1957 இல் பண்­டா–­செல்வா உடன்­ப­டிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் பௌத்த பிக்­குகள் மற்றும் ஜே.ஆர்.ஜெய­வர்­தன ஆகி­யோரின் கடு­மை­யான எதிர்ப்பின் கார­ண­மாக உடன்­ப­டிக்கை கிழித்­தெ­றி­யப்­பட்­டது.
1965 டட்­லி–­செல்வா உடன்­ப­டிக்கை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் பௌத்த பிக்­கு­களின் எதிர்ப்­பினால் கைவி­டப்­பட்­டது. 1985 திம்பு பேச்­சு­வார்த்தை ஜே.ஆர்.ஜெய­வர்­தன தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஜே.ஆர்.ஜெய­வர்­தன தமிழ் மக்­களின் எழுச்­சிக்கு எந்­த­ளவு வலு சேர்த்­தி­ருக்­கின்றார் என்­பது தொடர்பில் இன்னும் விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன. அதி­காரப் பர­வ­லுக்கு அடிப்­ப­டை­யாக அர­சி­ய­ல­மைப்­பிற்கு 13 ஆம் திருத்­தச்­சட்டம் முன்­வைக்­கப்­பட்டு மாகாண சபை முறை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைந்த மாகாண ஆட்சி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழ் மொழிக்கு சம அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. ஸ்ரீல.சுதந்­தி­ரக்­கட்சி, ஜே.வி.பி. மற்றும் விடு­த­லைப்­பு­லிகள் போன்ற தரப்­பினர் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி இருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும். தமிழ் மக்­க­ளுக்கு சுயா­தீன அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்தல் என்ற அடிப்­ப­டையில் தயா­ரிக்கப்பட்­டி­ருந்த 2000 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு திருத்த யோச­னையை ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்­றத்தில் எரித்­தது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பான தென்­ப­குதி இணக்­கப்­பாட்டைக் காணும் நோக்­குடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சர்­வ­கட்சி பிர­தி­நி­திகள் குழு­வினை ஏற்­ப­டுத்தி இருந்தார். எனினும் இது ஒரு இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கை­யா­கவே அமைந்­தது. சர்­வ­கட்சி பிர­தி­நி­திகள் குழு இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் ஒரு காத்­தி­ர­மான முன்­வைப்­பினை வைக்­க­வில்லை என்­கிற கருத்து பல­ரி­டையே நிலவி வரு­கின்­றது.
திரு­மதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்ந்து செயற்­பட்டார். அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டைப் பிள­வு­ப­டுத்­தாமல் இருப்போம் என்ற முன்­மா­தி­ரியை முன்­வைத்தார். எனினும் இதனை சிலர் எதிர்க்கத் தொடங்­கினர். இந்­நி­லையில் அதி­காரப் பர­வ­லாக்கம் தொடர்பில் அறி­வில்­லாது எதிர்த்­த­வர்­களை சந்­தி­ரிகா கண்­டித்துப் பேசி­இ­ருந்தார். வடக்­கிற்கு அதி­கா­ரங்­களைக் கோரு­வது நியா­ய­மா­னதே என்ற நிலைப்­பாட்­டினை அவர் கொண்­டி­ருந்தார்.
நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரும் முயற்­சியில் கள­மி­றங்­கி­யது. இப்­பு­திய யாப்பின் ஊடாக சமஷ்டி முறையில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு எட்­டப்­படும் என்று தமிழ் மக்கள் நம்­பிக்கை கொண்­டி-­ருந்­தனர். எனினும் புதிய யாப்பு இன­வா­தி­களின் எதிர்ப்பின் கார­ண­மாகச் சாத்­தியப் படாத நிலையில் சமஷ்டி முறை குறித்தும் விச­னங்கள் வெளி­யி­டப்­பட்­டன. சமஷ்டி முறை சாத்­தி­ய­மா­கு­மி­டத்து அது தனி ஈழத்­திற்கு வலு­சேர்ப்­ப­தாக அமையும் என்றும் புர­ளிகள் கிளப்­பப்­பட்­டன. தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான உரி­மையும் கிடைத்து விடக்­கூ­டாது என்­பதில் இன­வா­திகள் எப்­போதும் குறி­யா­கவே இருந்­தனர். யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வு கிடைத்து விடப்­போ­கின்­றது என்று தமிழ் மக்கள் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தனர். சர்­வ­தே­சமும் இது தொடர்பில் வலி­யு­றுத்தி இருந்­தது. எனினும் யுத்த வெற்­றியை கொண்­டா­டு­வதில் காண்­பித்த கரி­சனை இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் காணப்­பிக்­கப்­பட்­டதா? என்று பலரின் நியா­ய­மான கேள்­வியும் எதி­ரொலிக்­கின்­றது.
இதே­வேளை சந்­தி­ரிக்கா அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் முன்­வைத்த தீர்வுத் திட்டம் தொடர்பில் அர­சியல் அவ­தா­னிகள் பலரும் வர­வேற்றுப் பேசி இருந்­தனர். இந்­தி­யாவின் முக்­கிய அதி­காரி ஒரு­வரும் இத்­தீர்வுத் திட்­டத்தை வர­வேற்றும் பேசி இருந்­த­மையும் நோக்­கத்­தக்க விட­ய­மாக உள்­ளது. இலங்­கையில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்றும் 13 ஐயும் விஞ்சும் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டு­மென்றும் வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. எனினும் 13 ஐயே முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தாத அர­சாங்கம் 13 ஐயும் விஞ்­சிய தீர்வு தொடர்பில் கவனம் செலுத்­துமா? என்­பது கேள்­விக்­கு­றி­யே­யாகும். இங்கு இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று காணப்­ப­டு­கின்­றது. இப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­க­ளுக்கும் மத்­தியில் இனப்­பி­ரச்­சினை இருப்­ப­தாகக் கூறு­வது அப்­பட்­ட­மான பொய் என்­கிற நிலைப்­பாட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிரித்­துரு ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ள­ரு­மான உதய கம்­மன்­பில இருந்து வரு­கின்றார். இந்த நாட்டில் தேசிய இனப்­பி­ரச்­சினை இருப்­ப­தாகக் கூறு­வதே அப்­பட்­ட­மான பொய்­யாகும். நாட­ளா­விய ரீதியில் மூவின சமூ­கத்­தி­னரும் ஒற்­று­மை­யு­ட­னேயே இருக்­கின்­றார்கள். கூட்­ட­மைப்­பினர் தங்­க­ளது கைகளில் அதி­க­ளவு அதி­கா­ரங்கள் இருக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே மக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சினை இருப்­ப­தாகச் சித்­தி­ரிக்­கின்­றார்கள் என்று உதய கம்­மன்­பில வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
உதய கம்­மன்­பி­லவின் நிலைப்­பாடு எந்­த­ள­வுக்கு நியா­ய­மா­னது என்று சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது.
நாட்டில் இனப்­பி­ரச்­சினை உண்­டென்ற பெரும்­பா­லா­னோரின் ஏற்­றுக்­கொள்­ள­லுக்கும் மத்­தியில் இப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்கில் ஆட்­சி­யா­ளர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். பாதிக்­கப்­பட்­டவர் களின் வலி­களைப் புரிந்­து­கொண்டு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். இந்­ந­ட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­ப­டவும் வேண்டும். எனினும் இது சாத்­தி­ய­மா­ன­தாக இல்லை என்­பது கசப்­பான உண்­மை­யா­கவும் வருந்­தத்­தக்க ஒரு விட­ய­மா­கவும் உள்­ளது. இன்னும் எத்­தனை காலத்­திற்குத் தான் இந்த இழுத்­த­டிப்­புகள் தொடரும் என்றும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை வைத்து அர­சி­யல்­வா­திகள் குளிர் காய்­வார்கள் என்றும் தெரி­ய­வில்லை.
இதற்­கி­டையில் அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் அர­சியல் தீர்வு எட்­டப்­படும் என்ற பாணியில் கருத்­தினை வெளிப்­ப­டுத்தி இருந்தார். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் இரண்டு ஆண்­டு­களில் ஆராய்ந்து ஒரு முடி­வுக்கு வர வேண்டும் என்றும் அதி­காரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்­பாட்டை எட்­டு­வ­தற்கு நெருங்கி விட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். பிர­த­மரின் கூற்­றின்­படி இரண்டு வரு­டங்­களில் அர­சியல் தீர்வு சாத்­தி­ய­மா­குமா? ஐ.தே.க இதனை நிறை­வேற்ற எந்­த­ளவு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படப் போகின்­றது? என்­ப­வற்­றை­யெல்லாம் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது.
இது ஜனா­தி­பதி தேர்தல் கால­மாகும். தேர்­தலை வெற்றி கொள்ளும் முனைப்பில் அர­சியல் கட்­சிகள் காய் நகர்த்­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. ஐ.தே.க.வின் வேட்­பாளர் தெரிவில் இருந்த இழு­பறி நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு சஜித் பிரே­ம­தாச ஐ.தே.க.வின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். இந்­நி­லையில் சிறு­பான்மைக் கட்­சிகள் பலவும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு தனது பூரண ஆத­ர­வினை வழங்­கப்­போ­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கின்­றன. எவ்­வா­றெ­னினும் தேர்தல் வெற்­றியில் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் கணி­ச­மான செல்­வாக்­கினைச் செலுத்தும் என்­பதே அர­சியல் அவ­தா­னி­களின் கருத்­தாக உள்­ளது. கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களின் ஆதிக்­கத்­தினை தெளி­வா­கவே புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இதே­வேளை தேர்­தலில் சஜித் மற்றும் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்­கி­டையில் கடு­மை­யான போட்டி நிலவும் என்றும் எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அத்­தோடு தேசிய மக்கள் சக்தி இம்­முறைத் தேர்­தலில் அதி­க­ள­வி­லான வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்டு ஒரு பலம்­மிக்க சக்­தி­யாக உரு­வெ­டுக்கும் என்றும் நம்­பப்­ப­டு­கின்­றது.
தேர்தல் என்றால் வாக்­கு­று­தி­க­ளுக்குப் பஞ்சம் இருக்­காது. ஜனா­தி­பதி தேர்­த­லிலும் நாம் இதனை தெளி­வா­கவே அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. வேட்­பா­ளர்கள் வாக்­கு­று­திகள் பல­வற்­றையும் அள்ளி வழங்­கு­கின்­றனர். எத்­தனை வாக்­கு­று­திகள் செயல்­வ­டிவம் பெறப்­போ­கின்­றன? எத்­தனை வாக்­கு­று­திகள் காற்­றுடன் கலந்து விடப் போகின்­றன? என்று தெரி­ய­வில்லை. நாட்டில் இனப்­பி­ரச்­சினை மேலோங்கிக் காணப்­ப­டு­கின்ற நிலையில் இணைந்த வட­கி­ழக்கில் சமஷ்டி முறையில் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்கப் போவ­தாக தேசிய மக்கள் சக்தி இயக்கம் அண்­மையில் யாழில் தெரி­வித்­தி­ருந்­தது. நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளுக்கும் பொது­வான பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆனாலும் தமிழ் மக்­க­ளுக்கு தனிப்­பட்ட பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­வ­தனை தேசிய மக்கள் சக்தி பூர­ண­மாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் பிரிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை மீளவும் இணைத்து சமஷ்டி முறை­யி­லான அதி­காரப் பர­வ­லாக்­கத்­துடன் கூடிய சுய­நிர்­ணய உரி­மை­யுடன் தீர்­வினைப் பெற்­றுத்­தர தாம் உத்­தே­சித்­துள்­ள­தாக தேசிய மக்கள் சக்தி மேலும் வலி­யு­றுத்தி இருக்­கின்­றது.
இதே­வேளை பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் அதி­யுச்ச அதி­காரப் பகிர்­வினை வழங்­கு­வ­தற்கு தான் உத்­தே­சித்­தி­ருப்­ப­தாக ஐ.தே.க வின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தி­ருக்­கின்றார். மாகாண சபை­க­ளுக்கு முதன்­மை­யான அதி­காரம் வழங்­கப்­ப­டாத ஒரு நிலை இங்கு காணப்­ப­டு­கின்­றது. இதனால் பல்­வேறு பிரச்­சி­னை­களும் மேலோங்கி வரு­கின்­றன.
எனவே மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்கி சக்­தி­யுள்­ள­தாக மாற்­றி­ய­மைத்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது என்றும் சஜித் தெரி­வித்­தி­ருந்தார். அர­சியல் தலை­மைகள் 13 பிளஸ் வழங்­கு­வ­தாக வெளி­நாட்­டிலும் 13 மைனஸ் தொடர்­பாக உள்­நாட்­டிலும் பேசி வரு­வ­தாகக் கூறும் சஜித் இதனை வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருக்­கின்றார். இடத்­துக்கு இடம் மாறு­பட்ட கதை­க­ளைக்­கூறி மக்­களை ஏமாற்றி அர­சியல் தலை­மைகள் காய் நகர்த்­தல்­களை மேற்­கொண்டு வரு­வது பிழை­யான செயற்­பாடு என்றும் சஜித் தெரி­வித்­தி­ருக்­கின்றார். தான் சொல்­வ­தனை செய்­பவர் என்றும் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றார்.
பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தனது ஆட்­சியில் சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் உரிய தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்று உறு­தி­படத் தெரி­வித்­தி­ருக்­கின்றார். தேசிய பாது­காப்பு தொடர்பில் கூடு­த­லான கவனம் செலுத்­தப்­படும் என்று தெரி­வித்­துள்ள அவர் பாதிப்­பற்ற தீர்­வினை வடக்கு மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார். உட­ன­டி­யாக வடக்கு மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­படும் என்றும் கோத்­த­பாய தெரி­வித்­துள்­ள­மையும் நோக்­கத்­தக்­க­தாகும். ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில் அவர்­களும் இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் தனது நிலைப்பாட்டினை விரைவில் தெளிவுபடுத்துவர்.
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே மேலெழுந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இந்தியா உரிய அழுத்தங்களை இலங்கைக்கு வழங்கி இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்தியா பார்வையாளராக இருந்தே நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இந்த நிலையில் இந்தியா முழுமையான பங்களிப்பினைச் செய்து தீர்வுகாண ஒத்துழைக்க வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம் பெற்ற எழுக தமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் வகிபாகத்தின் அவசியத்தை தெளிவாகவே வலியுறுத்தி இருந்தார். இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் விக்கி கேட்டுக் கொண்டிருந்தார்.
இனப்பிரச்சினைக்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க ஆட்சியாளர்கள் இதய சுத்தியுடன் செயற்படுதல் வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் அழுத்தமும் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு வலுச் சேர்க்கும். தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாற வேண்டிய நிலையே ஏற்படும்.
துரைசாமி நடராஜா - நன்றி வீரகேசரி 






No comments: