உலகச் செய்திகள்


சிரியாவில் மூன்று மருத்துவமனைகள் மீது விமானதாக்குதல்

அரசியல்வாதிகள் தொடர் கொலை: ஒட்டுமொத்த பொலிஸாரும் கைது

மெக்சிகோ ரசிகர்கள் 16 பேர் சுட்டுக்கொலை

இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்

படகு மூழ்கியதில் 100 அகதிகள் பலி?

சென்னையில் உலக எம்.ஜி.ஆர் பேரவையின் மாநாடு



சிரியாவில் மூன்று மருத்துவமனைகள் மீது விமானதாக்குதல்


28/06/2018 சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மீது சிரிய அரசபடையினர் மேற்கொண்ட விமானதாக்குதல்களில் மூன்று  மருத்துவமனைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
சிரியாவின் டெராவில் உள்ள மூன்று நகரங்களில் இடம்பெற்ற விமானதாக்குதல்கள் காரணமாக மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன என மனிதஉரிமை மற்றும் மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சைடா நகரில் உள்ள மருத்துவமனை மீது நள்ளிரவில் இடம்பெற்ற விமானதாக்குதலை தொடர்ந்து அந்த மருத்துவமனை செயலிழந்துள்ளது.
இதேவேளை முசாய்பிரா நகரின் மீது ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த நகரின் முக்கிய மருத்துவமனை சேதமடைந்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் ஜிசா என்ற நகரில் உள்ள மருத்துவமனையும் ரஸ்ய தாக்குதலில் சேதமடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
சிரியாவின் உள்நாட்டுபோரில் மருத்துவமனைகள் மீது பல தாக்குதல்கள்  இடம்பெற்றுள்ள போதிலும் ரஸ்யாவும் சிரியாவும் அதனை நிராகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 









அரசியல்வாதிகள் தொடர் கொலை: ஒட்டுமொத்த பொலிஸாரும் கைது

26/06/2018 மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பெயரில் நகர பாதுகாப்பு செயலாளரை சிறப்பு படையினர் கைது செய்வதை தடுத்த .நகரல் உள்ள அனைத்து பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அடுத்த மாதம் முதாலம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது  இதில் அதிபர், செனட்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் அங்கு தொடர்ந்து அரசியல் கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் இது போன்ற அரசியல் கொலைகள் வழக்கமானது என்றாலும், சமீபத்தில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மிசோவ்கன் மாநிலத்தில் உள்ள ஒகாம்போ நகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட பெர்னாட்னோ ஜுவாரெஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குழுவுக்கும் நகர பாதுகாப்பு செயலாளர் ஆஸ்கர் கார்சியாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, ஆஸ்கரை கைது செய்ய சிறப்பு படையினர் ஒகாம்போ நகருக்கு விரைந்தனர். ஆனால், ஒகாம்போ நகர பொலிஸார், சிறப்பு படையினரை நகரினுள் அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, நகர காவல் பணியில் இருந்த 27 பொலிஸாரை சிறப்பு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 







மெக்சிகோ ரசிகர்கள் 16 பேர் சுட்டுக்கொலை

26/06/2018 உலக கிண்ண கால்பந்து போட்டியில் தென்கொரியாவை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடிக்கொண்டிருந்த  மெக்சிகோ ரசிகர்கள் மீது மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது, தென்கொரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி வெற்றிக்கொண்டது.. இப் போட்டியில் பெற்ற வெற்றியை மெக்சிகோ நாட்டில் ரசிகர்கள் பலர் வீதிகளில் கொண்டாடியுள்ளனர்.
அதே நேரத்தில் டெக்சாஸ்  எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் திருத்துமிடத்தில் 6 பேர் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்தனர். அதன்போது திடீரென காரில் துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள், 6 பேர் மீது சரமாரியாக துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
இதற்கிடையில், மற்றொரு பகுதியில் கடை ஒன்றில் போட்டியை கண்டுகளித்த கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேர் என, 5 ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. 
அதன்பின் நள்ளிரவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. மெக்சிகோ அணி வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் இடம்பெற்ற 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பொலிஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் கொலை குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  நன்றி வீரகேசரி 









இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்

25/06/2018 இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது   மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் பொலிஸாரால் மீட்புகப்பட்டுள்ளன. 
மீட்கப்பட்ட பெட்டிகளில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாகவும் இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள்  பயன்படுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் இன்று மாலை அவரது  வீட்டில்  கழிவு நீர் கிணறு தோண்டியுள்ளார்.  அப்போது சிதைந்த நிலையில் சுமார் 22 பெட்டிகள் கிடைத்துள்ளது.
சந்தேகமான முறையில் இருந்த பெட்டியால் அதிர்ச்சியடைந்த எடிசன் தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷமீனா தலைமையில் 22 பெட்டிகளை சோதனை செய்தனர்.
குறித்த பெட்டிகளில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருந்துள்ளது.  இந்த குண்டுகள் அனைத்தும் சுமார் 8 அல்லது 10 வருடங்களுக்கு முன் புதைத்து வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள்  பயன்படுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும் சம்பவ இடத்தில்   இராமநாதபுரம் பொலிஸார் வீட்டின் உரிமையாளர் எடிசனிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் ஜே.சி.பி மூலம் அந்த இடத்தை தோண்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







படகு மூழ்கியதில் 100 அகதிகள் பலி?


30/06/2018 லிபியா அருகே அகதிகள் சென்ற படகு மூழ்கியதில் 100 அகதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் பலர் உள்நாட்டு போர் மற்றும் பஞ்சத்தால் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரிய படகு ஒன்றில் ஏராளமான அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திரப்  பகுதி வெடித்துச் சிதறி நீரில் மூழ்கியுள்ளது.
இவ் விபத்தில் உயிரிழந்து சடலமாக மிதந்த 3 குழந்தைகளின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
விபத்து காரணமாக 100 அகதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் நீரில் தத்தளித்த 350க்கும் மேற்பட்டவர்கள் லிபிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி











சென்னையில் உலக எம்.ஜி.ஆர் பேரவையின் மாநாடு


30/06/2018 சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதியன்று உலக எம்.ஜி.ஆர் பேரவை மாநாடு நடைபெறவிருப்பதாக இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் பிரான்ஸ் நாட்டின் எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவருமான முருக பத்மநாபன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும். மனிதநேய ஐ.ஏ.எஸ் அகாதெமியின் தலைவருமான சைதை துரைசாமி, வேல்ஸ் பல்கலை கழகத்தின் இணை வேந்தர் கலாநிதி ஐசரி கணேஷ், நடிகை லதா மற்றும் முருக பத்மநாபன் ஆகியோர் பங்குபற்றினர். 
இவ்விழாவில் பேசிய சைதை துரைசாமி,
‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து முப்பது ஆண்டுகளாகியும் தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் வாழும் அவரது அபிமானிகள் இன்றும் எம்.ஜி.ஆருக்கு விழா எடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து மகிழ்கின்றனர். இன்று வரை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எம்.ஜி.ஆரின் புகழை பாடி வருகின்றனர். எம்.ஜி.ஆரை தங்கள் குடும்ப தலைவராக, வழிகாட்டியாக, குல தெய்வமாக மதித்து வணங்குகிறார்கள்.
இத்தகைய எம்.ஜி.ஆர் பக்தர்களை ஒருங்கிணைத்து கௌரவப்படுத்துவது அவரால் அடையாளம் காட்டப்பட்ட எங்களைப் போன்றவர்களின் கடமை. இதற்காக கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் உலக எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசியல் கலப்பின்றி முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் புகழ் பாடுவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். சமூக சேவையில் ஈடுபடும் ராமகிருஷ்ணா மடம், ரோற்றரி கிளப் போன்று உலக எம்.ஜி.ஆர் பேரவையும் பல்வேறு சமூக சேவைகளை வழங்கும்.
இந்த ஆண்டு இந்த பேரவையின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதன் போது உலக எம்.ஜி.ஆர் பேரவையின் பிரதிநிதிகள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக எம்முடைய தலைமையில் உயர்நிலை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த குழுவில் வி.ஐ.டி பல்கலைகழக இணை வேந்தர் ஜி விஸ்வநாதன், வைத்தியர் எம்.ஜி.ஆர் பல்கலைகழக கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ஏ.சி. சண்முகம், வேல்ஸ் பல்கலைகழக இணை வேந்தர் கலாநிதி ஐசரி கணேஷ், ஆம். எம். கே கல்வி நிறுவன குழுமத்தின் தலைவர் ஆர் எஸ் முனிரத்னம், மறைந்த இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ், வின்ஸ் கிறித்துவ பொறியியல் கல்லூரியின் தலைவர் நாஞ்சில் வின்சென்ட், சத்யபாமா பல்கலைகழக நிர்வாக இயக்குநர் மரியஜினா, நடிகை கலையரசு லதா, தமிழ் பல்கலை கழக பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
ஜுலை 15 ஆம் திகதியன்று காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலை கழக திறந்த வெளி அரங்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் சிறப்பு அதிதியாக பங்குபற்றவிருக்கிறார்.
இந்த மாநாட்டில் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்க்கும் வகையிலான பட்டிமன்றம், கவியரங்கம், வாழ்த்தரங்கம், இன்னிசை நிகழ்ச்சி என பல சுவராசியமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதன் போது எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள், பணியாளர்கள், முக்கிய பிரபலங்கள் என பலர் பங்குபற்றுகிறார்கள்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டான், மலேசியா, சிங்கப்பூர், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றுகிறார்கள்.’ என்றார்.
பின்னர் பேசிய ஐசரி கணேஷ்,
‘ இந்த நிகழ்வில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. அத்துடன் இதில் இலங்கையின் கல்வி துறையின் ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், மலேசிய நாட்டின் துணை பிரதமர் மொரீஷியஸ் நாட்டின் தலைவர் என பலரும் இந்த மாநாட்டில் பங்குபற்றவிருக்கிறார்கள்.’ என்றார்.  நன்றி வீரகேசரி 



No comments: